புதன், ஏப்ரல் 29

தள்ளுபடியல்ல?!




வாராக்கடன் தள்ளுபடியா?!!!!   

மல்லையா, மெகுல் சோக்சி உள்ளிட்ட பல கடன்தாரர்களுக்கு ரூ.68000 கோடி தள்ளுபடியென தவறான தகவல்கள் ஊடகங்களின் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் இது தள்ளுபடியல்ல. இது ஒரு வங்கியின் கணக்கியல் நடைமுறை

தள்ளுபடி என்றால்

வங்கியில் கடன் பெற்றோர் வாராக் கடன் காலத்திற்கு பின் ஒரு தீர்வை (settlement) அணுகும் போது அளிக்கும் சலுகையே தள்ளுபடி.  அதுபோல் எந்தவொரு மேற்கண்ட பெருமுதலாளிகளும் கடனை அடைக்க இக்கால கட்டத்தில் முன் வரவில்லை.  ஆக இது தள்ளுபடியல்ல. பிறகு……………..

சொத்தின் மதிப்பை குறைத்தல்

இங்கே சொத்து என்பது பணமாக கொடுத்த கடன் (Loan Advances). இந்த சொத்து வினையாற்ற வேண்டும் அதாவது வட்டியை ஈட்ட வேண்டும். இல்லையெனில் இது வினையாற்ற இயலாத சொத்து (Non Performing Asset) (NPA) என வகை மாறுபாடு செய்வர். அதன் பின் இதை ஒடுக்கப்பட்ட சொத்து என அழைப்பர் (Stressed Assets).   அதாவது தரமான (Standard Asset) சொத்து தரமற்ற சொத்தாக (Substandard Asset) வகைப்படுத்துவர்.

வங்கி தான் கொடுத்த கடன், வாரா கடன் என வகைப்படுத்திய முதலாண்டில் 15% த்தை வினையாற்ற இயலா சொத்து (NPA Amount) என வகைப்படுத்திய நாளன்று உள்ள நிலுவைத் தொகையில் கழிப்பர். அதாவது வினையாற்ற இயலாத சொத்தின் மதிப்பை குறைப்பர்.

எதற்காக மதிப்பு குறைப்பு செய்யப்படுகிறது

இது வங்கியின் நடைமுறை.  இந்த தொகை அந்த ஆண்டின் இலாபத்தில் கழிக்கப்படும்.  ஒரு வியாபாரம் பல்வேறு காரணங்களால் நொடித்து போகிறது. அதாவது அரசின் கொள்கை முடிவுகள் (சீனாவிலிருந்து இறக்குமதி), போட்டிகள் இன்னும் பல காரணங்கள்.  அந்த வியாபாரம் அல்லது அந்த நிறுவனம் திரும்பி எழ எவ்வளவு காலம் ஆகும் என்பதை கணிப்பது சற்று கடினம்.  அதனால் வாராக் கடனை மொத்தமாக கழிப்பதற்கு பதிலாக நான்கு ஆண்டுகளில் கழிக்கின்றனர். அதாவது
     முதலாண்டில்         15%
     இரண்டாமாண்டில்     25%
     மூன்றாமாண்டில்      40%
     நான்காமாண்டில்      முழுவதும்  

அதாவது மொத்த வாராக்கடனையும் ஒரே நாளில் இலாபத்தில் கழித்தால் வங்கி திவால் ஆனாது போல் ஒரு தோற்றம் ஏற்படும் அதை தவிர்க்கவே இதுபோன்றதொரு ஏற்பாடு அல்லது நடைமுறை.

வட்டியும் கடனும் என்னவாகும்

வினையாற்ற இயலா சொத்து என வகைப்படுத்திய நாளிலிருந்து கடனுக்கு வட்டி கணக்கிடமாட்டார்கள்.  ஆனால் ஒப்பந்த முறைப்படி வட்டி கணக்கிடுவார்கள். ஏனென்றால் வட்டி என்பது வருவாய்.  அசலே வாராதிருக்கும் போது வட்டி எப்படி வரும்.  எனவே வாராக் கடனுக்கு வட்டி கணக்கிட்டு வங்கி தன் சொத்து மதிப்பை உயர்த்தக் கூடாது என்பது உலகலாவிய ஒரு மதிப்பீடு. அந்த வட்டி Unapplied Interest  என தனியாக கணக்கீடு செய்து வைப்பர்.  ஒருவர் தன் கடனை அடைக்க வரும்போது நாளது தேதி நிலுவையாக, வினையாற்ற இயலா சொத்து என வகைப்படுத்திய நாளிலிருந்த தொகை மற்றும் Unapplied Interest கணக்கிடப்படாத வட்டி என இரண்டையும் கூட்டிதான் தெரிவிப்பர்.

உதாரணத்திற்கு (தோராய மதிப்பு)

2015 ல் மல்லையாவின் கடன் அனைத்து வங்கிகளுக்கும்   ரூ.6000 கோடி
2020 ல் மல்லையாவின் கடன் அனைத்து வங்கிகளுக்கும்   ரூ.9000 கோடி

இங்கே கணக்கிடப்படாத வட்டி Unapplied Interest  ரூ.3000 கோடி. இந்த கணக்கிடப்படாத வட்டி ஒவ்வொரு கடனுக்கும் தீர்வு (settlement) ஏற்படும் வரை தொடரும்.

தீர்வு ஏற்படுமா அப்படியெனில் எப்படி

1.   Normal Recovery
2.   One Time Settlement
3.   RDDBFI Act
4.   SARFAESI ACT
5.   NCLT

சாதாரண கடன் வசூல் (Normal Recovery)

கடன் பெற்றவர் நிலுவைத் தொகையை மட்டும் செலுத்தி கடனை முறைபடுத்தி கொள்வார் இல்லையெனில் எவ்வித தள்ளுபடியும் பெறாமல் மொத்த கடனையும் செலுத்தி வெளியேறி விடுவார்.

ஒரு முறை தீர்வு (One Time Settlement)

தான் பெற்ற கடனை ஒரே முறையிலோ அல்லது ஒரு குறுகிய காலத்திலோ மொத்தமாக செலுத்துவது.  இது

Ø  தானாக முன்வந்து தீர்வு காண்பது
Ø  அந்தந்த வங்கிகள் அளிக்கும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது
Ø  மத்திய வங்கி (RBI) அறிவிக்கும் திட்டத்தின் மூலம் தீர்வு காண்பது

மேற்கண்ட வழிகளில் பெரு நிறுவனங்கள், குறுந்தொழில்கள் மற்றும் தனி நபர்கள் சலுகை அதாவது தள்ளுபடி பெறுவர்.  வெகுசில நேரங்களில் அசல் நிலுவை தொகையில் 50% வரை தள்ளுபடி கிடைக்கலாம்.  குறித்த காலத்தில் கடனை செலுத்தவில்லையெனில் வங்கிகள் தள்ளுபடியை திரும்ப பெற்று முழுத் தொகையும் வசூலிக்க சட்ட நடவடிக்கையை தொடருவர்.

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் நிலுவை வசூல் சட்டம் 1993 (RDDBFI Act 1993)
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்காக ஏற்படுத்தப்பட்டது கடன் வசூல் தீர்ப்பாயம் எனப்படும் நிறுவனங்கள்.  தமிழ்நாட்டில் சென்னையில் மூன்றும், கோவை மற்றும் மதுரையில் ஒன்றும் செயல்படுகிறது.

இந்த தீர்ப்பாயம் மூலம் இந்த நிறுவனம் அல்லது இன்னார் இவ்வளவு கடன் வட்டியுடன் தரவேண்டும் என ஒரு தீர்பாணை வாங்கி வைத்துக் கொள்ளலாம். தற்போது ரூ.20 இலட்சத்திற்கு மேலுள்ள கடன் நிலுவைக்கு இத் தீர்ப்பாயத்தை வங்கிகளோ அல்லது நிதி நிறுவனங்களோ அணுகலாம்.

இந்த தீர்ப்பாணையின் படி அடமான சொத்தை தீர்ப்பாயம் விற்று பணத்தை வங்கிகளுக்கு அளிக்கும்.  மீதமுள்ள தொகைக்கு கடன்தாரரின் மற்ற வில்லங்கமில்லாச் சொத்தை தீர்ப்பாயத்தின் மூலம் இணைத்து (Attachment(ABJ) தீர்வு காணலாம்.  மேற்கண்ட தீர்ப்பாயத்தின் ஆணை 12 ஆண்டுகள் செல்லுபடியாகும்

பிணைக்காப்பு, நிதி சொத்து, மறுசீரமைப்பு மற்றும் பிணைக்காப்பு செயலாக்கச் சட்டம் 2002 (SARFAESI Act 2002)
இந்த சட்டப்படி கடன் பெற்ற ஒருவர்  கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனில், வங்கியே அடமான சொத்தை விற்று கடனை நேர் செய்து கொள்ளலாம். குறைந்தபட்ச கடன் ரூ.100,000 மேல் இருக்க வேண்டும்.  வங்கியில் அடமானமாக வைத்த விவசாய நிலத்தை வங்கி இச் சட்டத்தின் கீழ் விற்க இயலாது.  ஆனால் கடன் வசூல் தீர்ப்பாயம் மூலம் விற்கலாம்.

தேசிய நிறுவன சட்ட தீர்பாயம்
2012 ஆண்டிற்கு பிறகு பெரு நிறுவனங்களுக்கு வழங்கிய கடன் பெருமளவில் வாராதிருக்க, அரசு இச்சட்டத்தை 2016 ஆண்டு அறிமுகப்படுத்தியது.   குறைந்தபட்ச கடன் ரூ.100,000 மேல் இருக்க வேண்டும்.  இந்த ஊரடங்கு காலத்தில் இதை தளர்த்தி உள்ளதாக ஒரு செய்தி குறுந் தொழில்களை பாதுகாக்க என்பதற்காக.
இச் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தை நொடித்த நிறுவனமாக அறிவித்து அந்நிறுவனத்தை கலைத்தோ, சொத்துக்களை விற்றோ, வேறு ஒரு நிறுவனத்தோடு இணைத்தோ அதில் கிடைக்கும் பணத்தை அந் நிறுவத்திற்காக கடன், பொருள் வழங்கியவர்கள், பணியாற்றிய தொழிலாளர்கள், அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைகள் ஆகியவற்றை கலைப்பு அதிகாரி வழங்குவார்.
உதாரணத்திற்கு
எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனத்தை ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்திற்கு கலைப்பு அதிகாரி எவ்வாறு கைமாற்றினார் என்பதை ஆராய்வோம்.  பல்வேறு நிறுவனங்கள், கடன் கொடுத்தோர் தங்களுக்கு வரவேண்டிய தொகையென நிறுவன கலைப்பு அதிகாரியிடம் உரிமை கோரிய தொகை ரூ.82000 கோடி அவர் ஏற்றுக் கொண்டது ரூ.69,192 கோடி ஆனால் நிறுவனம் கைமாறிய தொகை ரூ.42000 கோடி.  இந்த ரூ,42000 கோடியை அவரே இறுதி செய்த  ரூ.69192 கோடிக்கு பிரித்துக் கொடுக்க வேண்டும்.  இதன் மூலம் 60% கடன் திருப்பி அளிக்கப்படும். மீதத் தொகை தள்ளுபடி செய்யப்படும். 

'Total debt payable to ‘Financial Creditors’ & ‘Operational Creditors’


1. Financial Creditors                      Rs. 4,94,73,00,00,000/-
2. Operational Creditors                  Rs. 1,97,19,20,90,980/-
Total                                     Rs. 6,91,92,20,90,980/-   

Against                                 Rs. 6,91,92,20,90,980/-,

Arcelor Mittal Ltd offered            Rs. 4,20,00,00,000/-.

Therefore %age wise, the amount will be – 4,20,00,00,00,000 * 100 = 60.7% (approx.)

இந்த கலைப்பு நடைமுறை 6 அல்லது 9 மாதங்களுக்குள் முடிக்க சட்டம் சொல்கிறது.  ஆனால் குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகிறது.

இந்த தள்ளுபடி பெருமுதலாளிகளுக்கு மட்டுமா இதர கடன்தாரர்களுக்குமா

இந்த மதிப்பு குறைப்பு என்பது வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அளிக்கும் அனைத்து வகையான கடன்களுக்கு பொருந்தும்.

அடமான கடன், கல்வி கடன், வாகன கடன், சிறு வணிக கடன், பெரு நிறுவனங்களுக்கான கடன். ஆக எந்த வகையான கடன் என்றாலும் இந்த நடைமுறையை பின்பற்றிதான் ஆக வேண்டும்.

என்ன, ஒரு பெரு முதலாளிக்கு கொடுக்கும் கடனை ஒரு லட்சம் நபர்களுக்கு விவசாய கடனாக பகிர்ந்தளிக்க முடியும்.  ஆனால் ஒரு நிறுவனம் 1000 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கமுடியும்.


கடன் வசூலானல் நிலை என்ன?

கடன் வாங்கிய ஒருவர் தொடர்ந்து 4 வருடங்கள் செலுத்தவில்லை என்றால் அவருடைய கடன் முழுவதும் வங்கியின் விதிகளின் Writeoff செய்திருப்பர்.  அவர் தன்னுடைய கடனை தீர்க்க செலுத்தும் தொகை தற்போது இலாபத்தில் காண்பிக்கப்படும்.  கடந்த நான்கு ஆண்டுகளில் நட்டத்தில் காண்பிக்கப்பட்ட தொகை தற்போது இலாபத்தில் காண்பிக்கப் படுகிறது. அவ்வளவுதான்

வசூல் தொகை எவ்வாறு கணிக்கப்படுகிறது

வங்கிக்கு வரவேண்டிய தொகை நாளது தேதி வரையான வட்டியுடன் கடன் வசூலிப்பது என்பதாகும்.  ஏனெனில் வங்கி பொது மக்களிடம் பெறும்   நிலையான வைப்புத் தொகைக்கு (Fixed Deposit) வட்டி வழங்க இயலாது என சொல்ல இயலாது அவ்வங்கி நொடிந்து போகும் வரை.

கடனுக்கு தீர்வு ஏற்படும் நேரத்தில்தான் பேரம் ஆரம்பிக்கப்படுகிறது. வங்கி நாளது தேதிவரையான நிலுவைத் தொகையை கணக்கில் கொள்ளும் மற்றும் அடமான சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் கொள்ளும்.

உதாரணம் நிலை ஒன்று

கடன்                      ரூ.6000 கோடி
கணக்கிடப்படாத வட்டி      ரூ.3000 கோடி
மொத்தம்                  ரூ.9000 கோடி

சொத்தின் மதிப்பு           ரூ.15000 கோடி

இந்த சூழலில் தள்ளுபடி வழங்க வாய்ப்பு மிக குறைவு ரூ. 9000 கோடி வாங்க வங்கி நினைக்கும். அசாதாரண சூழலில் கணக்கிடப்படாத வட்டியில் ஏதாவது தள்ளுபடி வழங்கலாம்

உதாரணம் நிலை இரண்டு

கடன்                      ரூ.6000 கோடி
கணக்கிடப்படாத வட்டி      ரூ.3000 கோடி
மொத்தம்                  ரூ.9000 கோடி

சொத்தின் மதிப்பு           ரூ.5000 கோடி

இங்கேயும் வங்கி மொத்த கடனை வசூலிக்க நினைக்கும் குறைந்தது அசலை வசூலிக்க நினைக்கும்.  ஆனால் இந்த சூழலில் கடன் பெற்ற நிறுவனம் தள்ளுபடி கோரும். சொத்து மதிப்பிற்கு  குறைவாக கடன் தீர்வு ஏற்படுவது மிக கடினம்.

ஆக ரூ68000 கோடி தள்ளுபடியல்ல அதுவொரு வங்கியியல் நடைமுறை. ஆயினும். கடன் தொகை அளவுக்கு அடமானச் சொத்து இல்லையெனில் தள்ளுபடிகள் சாத்தியமே.

ஏதேனும் விளக்கம் வேண்டுமெனில் கேள்விகள் எழுப்பவும்


திங்கள், ஏப்ரல் 27

மார்க் அம்பானி




பாஷாவின்
மார்க் அன்டனியல்ல
பணம் படைத்த
மார்க் - அம்பானி

ஒரேயாரு
பாஷா அல்ல
தேவையெனில் - இவர்கள்
கூட்டணி வைத்துக் கொள்பவர்கள்

ஜோதிகாவின்  பொன்மகள் வந்தாள்
திரையரங்கில் வாராது
"அமேசானில்" வெளிவருவதால்
100 அரங்கம் பாதிக்கப்படலாம்

ரூ.287,505 கோடி கடனடைக்க
சவுதியின் ஆராம்கோவை நாடினார்
மார்க் மாட்டிக் கொண்டார்
மக்களே நமக்கென்ன?!!!

பங்கு சந்தை
பாதாளத்தை நோக்க
அம்பானியின் மதிப்பு
அரோகரா ஆவதற்குள்

கைத்தூக்கி விட
கார்ப்ரேட் தரகர்கள்
கண்டுபிடித்த வழி
10 %  க்கு ரூ.43,574 கோடிகள்

ஜியோவின் 10%  பங்கு
விற்பனையால்
ரிலையன்ஸின் கடன்
குறையலாம்

அதனால் ஆபத்தா?
அது அவர்களின் வணிகம்!!
உலகமாயக்கலின் உன்னதமென
ஊமையாய் இராதே!!!

இந்த இணைவால்
இங்கிருக்கும் 
சிறு குறு வணிகன்
சிக்குற்று மாள்வான்

நடுத்தர வர்க்கம்
நன்மை பயக்குதென
நாலுகால் பாய்ச்சலில்
பின் தொடரும்

முகநூல், வாட்ஸ்அப்
மார்க்கினுடையது
ஜியோ - ஜியோ மார்ட்
அம்பானியுடையது

மார்க்கின் கனவு - இந்தியாவின்
60 மில்லியன் வணிகம்
அம்பானிக்கோ
3 கோடி சிறுகுறு கடைகள்

இடையில் யாரிவர்கள் 
என்றாவது யோசித்தாயா?
என்ன செய்து விடுவார்களென
வாளாயிராதே

தூண்டிலில் சிக்க
கோழியை இரையாய் வைப்பர்
கோவணமும் இல்லாது
சிந்தித்து கொண்டிருப்பாய்

புதிய வேலைவாய்ப்புகள்
புயல் வேக டெலிவரிக்காக
பொறியியல் படித்தவன்
பொறியில் சிக்குவான்

சிறுதுளி பெருவெள்ளம்
சிறு வணிகனுக்கா
கணினியில்உன்னை 
கண்காணிப்பவனுக்கா

நாளொன்றின் இலாபம்
கடையொன்றுக்கு ரூ.100 எனில்  
3 கோடி கடைகளுக்கு
ரூ.300 கோடி

கணினியின் நுண்ணறிவு
காட்டிக் கொடுக்கும் - நீயோ
ஆபத்பாந்தவனென
ஆர்பரிப்பாய்

மின்ணணு தொழில்நுட்பம்
ஒருவனுக்கா
ஒவ்வொருவனுக்கா - லாபம்
ஒருவனுக்கு மட்டுமே

அருகில் உள்ள கடையில்
அவசர தேவைகளுக்கு
அவனில்லாது - மக்களே
இயங்க முடியாதா

இலாப நட்டம்
உனதருகில் இருப்பவனுக்கா
உனக்கானதா
உடனே முடிவெடு

வீதிக்கு வா
வேண்டியதை வாங்க
வீணாய் கொடுக்காதே
இடையில் இணைபவனுக்கு

ஞாயிறு, ஏப்ரல் 26

ஜோதிகா



ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
அடிமைகளால்
அமைத்த கோயில் - இன்றும்
அழகாயிருக்கிறது

அருகிருக்கும் மருத்துவமனையோ
அலங்கோலமாய்! அருவருப்பாய்!!
அது எப்படியோ
ஆனால் நன்றாயில்லை

நடிகையென்பதாலோ
நாக்கிருக்கிறது என்பதாலோ
நாலுபேரிடம் கூக்குரலிடவில்லை
மனதிருப்பதால்

கடைநிலையை கண்டு
கண்கலங்குவது
கனவுலகில்  அல்ல
கண்ட இடத்தில்

ஆட்சியர் வருகையும்
அவலம் நீங்குதலும்
அவர் பொருட்டெனில்
அதை வரவேற்போம்

கோயிலுக்கோ
உண்டியலுக்கோ
கொடுக்க வேண்டாமென்ற
குரலல்ல

மருத்துவத்திற்கும்
கல்விக்கும்
கொடுவென்றே
கோடிட்ட குரல்

குரலிட்டவன் கொடுப்பதுதானே
5 கோடி முதலிட்டு
9 கோடிக்கு விற்றதில்
கொடுப்பார்கள் என கேலிகள்

சமூக தளங்களில்
இரண்டு மூன்று பிரிவுகளாய்
விமர்சனங்கள் - அவர்
பேசியதை கேட்காமலே

ஆம், அவை
அப்படிதான் இயங்குகிறது
ஆயினும் அதை மாற்றிட
என்ன செய்யலாம்?

இவரை  போல் - அங்கிருந்து
இன்னும் சிலர் - அரங்கத்தில்
கூக்குரலிட்டால் - ஏதும்
விமோசனம் கிட்டுமோ?!

ஞாயிறு, ஏப்ரல் 19

காதல் குளம்



மூழ்கி மூச்சடக்கி
முத்தெடுக்க
ஏற்றதொரு குளமோ

பழகி பார்த்தே
பருவ பாடங்களை
படைத்திட உதவும் குளமோ

அழகி நீ அச்சாரமா
அத்தானை முத்தமிட
அருச்சுனையா பொங்கும் குளமோ

குழவி செய்ய
குலம் தழைக்க
குயவருக்கு ஏற்ற குளமோ

தேகமிருக்கும் வரை
மோகமுண்டு என
தாகந்தீரச் சொல்லும் குளமோ

வழிவழியாய்
வாழும் காதலை
வடிவமைத்த வண்ண குளமோ

மலரும் காதலெல்லாம்
மானுட இயற்கையடி - மானே
இப்பொய்கையும்  அப்படிதானடி

வெள்ளி, ஏப்ரல் 17

ஆனந்த் டெல்டும்டே



அதிகாரத்தின்
அடுத்த பலிகடா
அம்பேத்காரியவாதி
ஆனந்த் டெல்டும்டே

அரசு நிறுவனத்தின் - முன்னாள்
தலைமைச் செயல் அதிகாரி - மத்திய
மேலாண்மை கல்வி நிறுவனத்தின்
இந்நாள் பேராசிரியர்

அறிவு ஜீவி
ஆராய்சி கட்டுரைகள்
30 புத்தகங்கள்
அதனாலென்ன

சமூக செயற்பாட்டாளர்
யாருக்கு என்பதில்தான் பேதம்
ஏழைகளுக்கு என்பதனால் -அவர்
அரசுக்கு எதிரானவர்

எங்கும் ஆனந்த்
எதிலும் ஆனந்த்
என்றொரு புனைவு
ஏகமனதாக ஏற்க

பஞ்சன்யாவில் செய்தி
முதல் தகவல் அறிக்கையாக
இந்திய ஊடக நிறுவனங்களோ
மலடனாது

பீமா கோரேகான்
பிரிடிஷ் ஆதிக்கத்தின் போர்களம்
பார்வையிட்டார் அம்பேத்கார்
ஓரு நூற்றாண்டிற்கு முன்பு

பேஷ்வாக்களை வென்ற மகர்கள்
பொதுவாக கூடுவர் ஆங்கே - அது
200 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
பற்றியது மராத்தாக்களின் கோபம்

யாருமில்லாத வீட்டில்
யாருடுடைய அனுமதியின்றி
எதையோ கைப்பற்றியதாக செய்தி
ஆதாரங்கள் ரகசியமானது

சான்றுகள் - மூடி
முத்திரையிடப்பட்ட உறையிலே
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு - ம்
சாட்சியை கலைத்துவிடுவார்கள்

பேசுங்கள்
உங்கள் முறைக்காக
காத்திராது என்கிறார்
ஊமையானது சமூகம்

பெருங் கட்சிகள்
பேதலித்து கிடக்கின்றன
சொத்துக்களை காக்க
சோதனைகளை தவிர்திட

தேசத்தையும் மக்களையும்
நேசிப்பவன் தேசவிரோதியாய்
அடையாளப் படுத்தப் படுகிறான்
விதைகள் வேர்விட கூடாதென்பதற்காக

எதிர்குரல்கள்
ஒடுக்கப்படுகிறது
மனித உரிமைகள்
மறுக்கப் படுகிறது

இந்திய ஜனநாயம் என்பது
எதிர் கட்சிகள் வாய் மூடியிருக்க
நீதிமன்றங்கள் கண்காது மூடியிருக்க
ஆட்சியாளர்கள் ஆள்வதாகும்

தனி நபர்கள், கலைஞர்கள்
சிறு அமைப்புகள்
குரல் கொடுக்க
குரல்வளை  நெறிக்கப்படுகிறது

தேசிய பாதுகாப்பு சட்டம்
தேச பிதாவை கொன்றவர்கள்
எப்படி கையாள்வார் எனவறிவாய்
ஆயினும் குரல்கொடு தோழனே


குறிப்பு:  பாஞ்சன்யா  RSS பத்திரிக்கை



வியாழன், ஏப்ரல் 16

குத்தமில்ல?!!



குல தெய்வத்திற்கு
காப்பு கட்டிட
குத்தமென - கிராமத்து
எல்லை தாண்டுவதில்லை

எல்லை கடந்து
தொல்லை தரும்
கொரோனாவோ - உலகை
குற்றுயிர் ஆக்குதே

உயிரை காக்க
தேவையை சுருக்கு
ஊரைச் சுற்றாது
உடல்நலம் பேணு

மருந்து இல்லாததால்
மனதை கட்டுப்படுத்து
மனைக்குள் அடங்கு - அல்ல
மயானத்தில் முடுங்குவாய்

காற்று வாங்க போனால்
கொரோனா வாங்கி வருவாய்- அதை
கேட்டு வாங்கி போனால் - விடை
சொல்லிக் கொண்டு போவாய்

நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
இழப்புகள் கூடுவதால்
இங்குமங்கும் சுற்றாதே

வாழும் மக்களின்
வாழ்வாதாரம் - மேலும்
ஓரு வாரம்
தள்ளி போகலாம்

ஊரை காத்திட
முக கவசமும்
தலைகவசமும் போடு - அது
உனையும் காத்திடும்

பசி பட்டினிக்கு
பஞ்சை பராரியோடு
பாமரனுக்கும் உதவி செய்
உன்னையும் பாதுகாத்து


புதன், ஏப்ரல் 15

எங்கே கடவுள் - மார்கண்டேய கட்ஜு



தீர்க்கமான கேள்வி
தீர்க்க வேண்டியதுதானே
தீர்த்த கோமியத்தாலே

வேதனை தீருமென்றால்
விஷத்தை அருந்த - உன்
பிள்ளைகள் காத்திருக்கையில்

எங்கே சென்றாய்
என் கடவுளே
ஏன் கதவடைத்தாய்

எழுப்பியவன் நீதிபதி
எனினும் - ஆண்டவனிடம்
அடிபணிந்து ஆக வேண்டுமோ

அரங்கன்
அவதாரமெடுக்கலாம்
அதுதான் இதுவென்று கதைக்காது

அரன்
அரம்பையோடா - அல்ல
மயானத்தில்லா

மாயவனை
மோகினி வடிவடுக்க  சொல்லி
புணர சென்றிருக்கிறான்

ஏனா? !! வந்த மருத்துவனை
வாயிலேயே திருப்பியவனை
எப்படிச்  சொல்ல

சொர்க்க வாசல் திறக்குமென
சோம்பி கிடக்காதே
சோறு தண்ணிக்கு வழியில்லை

"தெய்வத்தால் ஆகாதெனினும்"
தீர்த்துச் சொன்ன
திருவள்ளுவன் வழியில்

முயற்சி செய் மானுடமே
மர்கண்டேயேனாக வாழவல்ல
கொத்துக் கொத்தாய் சாகாதிருக்க

செவ்வாய், ஏப்ரல் 14

கைத்தட்டாதே





இரண்டு தெரு தள்ளியிருக்கும்
எனை ஈன்ற அன்னையை
பார்க்க சென்றேன்
பார்த்தாளோ என்னவோ
   
நில் அங்கேயென
உள் அனுமதியாது
பார்க்க வந்தவளை
பாதையிலே திருப்பினாள்

இருக்கும் நிலையில்
இனி வராதே என்றாள்
கைபேசியில் நலம் விசாரி
புறப்படு என அனுப்பிவிட்டாள்

மருத்துவர் மாண்டார்
மாண்டவர் யாராயினும்
மானுட நியதி  
நல்லடக்கம்

கார்ப்பரேட் மருத்துவமனை
கருணை கொண்டு
இடுகாட்டின் வாசலில்
வீசி சென்றது

உற்றார் உறவினர்
உடனில்லை ஒருவரும்
கற்ற படிப்பும்
கவைக்கு உதவவில்லை

அரிச்சந்திரன் கதை படித்து
அய்யகோ என மாரடித்து
அழ யாருமில்லை - இடுகாட்டு
ஊழியனும்  ஓடிவிட்டான்

நீத்தார் பெருமையோ
நிறைய சம்பாதித்த கதையோ
கொரோனோவிற்கு முன்
ஒன்றுமில்லை

சமூகம் சமத்துவமானது
மருத்துவனோ ஈன்றவளோ
மரணத்தின் எவ்விளிம்பிலும்
நீ தேவையற்றவன் 

வெள்ளி, ஏப்ரல் 10

புலம் பெயர்தல்




தத்தி தவழ்ந்து
புத்தி தெளிந்த
என் நாட்டை விட்டு
ஏகாந்த தேசம். புறப்ப

சுயம்வர தேடலில்
சோதிடப் பொருத்தத்தில்
சிந்தை கவர்ந்தவனோடு
சென்னை செல்கிறேன்

கொட்டாரத்தில் ஆடியதும்
குளத்தில் நீந்தியதும்
எட்டாது என்றாலும்
எனக்கவன் கிட்டுவானென்றால்

சிட்டாக பறப்பேனே
மொட்டாகக மலர்வேனே
கட்டியம் கூறுவேனே
கண்ணாளன் இவனென்று

முட்டத்து மீனும்
கிட்டத்து தோழியும்
எட்டாது போவர்
என்னத்தான் என்கைபிடிக்க

வெள்ளிமலை முருகனும்
தெருக்கோயில் காவடியும்
விட்டுவிட்டு சென்றாலும்
வேலவன் என்னுடனே

திண்ணியன் என்அத்தான்
திருமுகம் போதுமே
திகட்டாத அன்பை
தினம்தினம் தருவானே

ஏழுகாத தூரமென்றாலும்
எனக்கது கூப்பிடு தூரம்தான்
என்னுறவும் தோழியரும்
எனை புரிந்தவர்தாம்

எண்ணியவுடன் எழுந்தருள
என்னத்தான் கண்ணசைப்பார்
எந்தையும் என்று வருவேனென
எதிர் பார்த்து காத்திருப்பார்

மானமிகு மதிப்பீடு






அணிவகுத்து நின்றன
ஐக்கிய நாடுகள்
ஐயம் கொண்டேன்
எதிரி யாரென்று

எதிரி போர் பிரகடணத்தை
எல்லோருக்கும் அறிவித்து
மாதங்கள் ஐந்து கடந்துவிட்டன
மரணங்கள் 90000 கடந்தன

வல்லரசுகள்
வேடிக்கை பார்த்தன
ஊரடங்கென ஊளையிட்டனர்
உடனே திரும்ப பெற்றன

வெற்றி மட்டும் கிட்டவில்லை
கொத்துக் கொத்தாய் மரணங்கள்
விதிர்த்து நிற்கின்றன வல்லரசுகள்
மூன்றாம் உலகம் கைத்தட்டுகிறது

எதிரிக்கு முன்னே நிறுத்த
பீரங்கி கவசமல்ல
முக கவசம் தட்டுப்பாடு – அய்யோ
மூச்சிறைக்கிறதே

வெடிமருந்துகளென்றால்
வேண்டுமளவு தயாரிப்போம்
ஹைட்ராக்ஸி குளோரோகுயின்
சந்தையில்லை – இருப்புமில்லை

இந்தியா தரவேண்டும்
இல்லையெனில் என்கிறான்
தடைகளை நீக்குகிறோம்
தயாளமாயிரு சீனாவே என்கிறான்

ஆங்காங்கு நிலைகொண்டு
அகிலத்தை அச்சுறுத்தியவர்கள்
கை கூப்புகிறார்கள்
கொரோனோ விலகென்று

அணு ஆயுதங்கள்- அபத்தம்
உதார் விடுவதற்கு மட்டுமே
ஒன்றுக்கும் உபயோகமில்லை
எனவே வீட்டுக்குள் முடங்கு

பட்டினிச் சாவு – பரவாயில்லை
அடுத்தவேளை உணவு
ஆகட்டும் பார்க்கலாம்
அகிலத் தலைவன் - ட்ரெம்ப்

காசு இல்லையெனில்
கதவடைக்கப்படும்
காப்பீடு இல்லையெனில்
காலனை சந்திக்க வேண்டும்

காப்பீடும் கதவடைத்ததே
சேமிப்பும் கரைந்ததே
காலனிடமிருந்து காப்பாற்ற
மதிப்புகு தேசத்திற்கோ வழியில்லை  

லாபம் மட்டுமே குறியென்பதால்
பாவப்பட்ட மக்களை காக்க
பரமபிதாவும் வரவில்லை
பாராள்பவரும் வரவில்லை



தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...