திங்கள், டிசம்பர் 20

கன்னிகாதானம்


 

தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட

தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே

இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை

மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு

கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்

ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற

வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்

கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே

புதன், டிசம்பர் 8

கடவுள் சொத்து – வளர்ச்சிக்கா



உலகளந்து
ஓடியாடி உழைத்து
பிட்டுக்கு மண் சுமந்து
சேர்த்தச் சொத்துக்கள்


மாட மாளிகைகள்
வணிக வளாகங்கள்
விவசாய நிலங்கள்
கல்லூரிப் பள்ளிச் சாலைகள்


வேர்வை முத்துச் சிந்தி
பார்வைக்குக் கட்டணம் வாங்கி
பலகாலம் சேர்த்தச் சொத்தில் - பங்கு
அரசின் வளர்ச்சிக்கா

சொத்து
வாரிசு உரிமைக்கு உட்பட்டது
வாரிசு இல்லையெனில் - அரசுக்கா
ஒன்று விட்ட உறவுக்கா


மரித்த கடவுளின் சொத்துக்களை
வாரிசு உரிமை கோரும்
வகையறா
நீதிமன்றம் வருமோ


இந்திரன் சோமன்
இவர்கள் மாஜி கடவுள்கள்
கிரேக்கத்திலும்
இந்தப் பட்டியல் உண்டு

வகை நான்கு
வழிபட தேவபாஷை - என
வகுத்த கடவுளை
வார்த்தெடுத்த நீதி அரசர்கள்


புதிய காரணங்களை
புனைந்து எழுதுவதால்
கடவுளின் இருப்பை
நீட்டிக்க முயல்கிறார்களோ?


அப்பாவி பக்தர்கள்
அளித்தக் கொடைகள்
தங்க கோபுரமாக
தகதகவென மினுக்க


மினுக்கும் அழகில்
தனது கடவுளென மதிமயங்கி
எந்நாடுடைய சிவனேயென
ஏற்றிப் போற்றிட

கனவில் வந்தே
காப்பாற்று என் சொத்தை
நீதியரசருக்கு
கட்டளையிட்டிருப்பாரோ

அரசின் வளர்ச்சிக்கு
அடிப்படை வருமானம்
திருவிடந்தை பெருமாள் மட்டுமல்ல
திக்கெட்டும் காரணமாக கூடாதாம்


இந்து கோயில் வருமானத்தில்
கல்லூரித் திறப்பதா
கல்விக்கண் திறப்பதா
வேதம் கற்கட்டும்

வேதம் கேட்ட காதுகளில்
ஈயம் ஊற்றியவர்கள்
சூத்திரனிட்ட பிச்சையில்
வேதம் ஓதுகிறார்கள்

ருத்ர பூமி -சிவனுக்கு
பட்டாப் போட்ட இடமா
மானுடம் அமைதிக் கொண்டமிடமா - அல்ல
வீட்டுமனைகளாய் மாறியமிடமா


மலைகள் ஓடைகள்
மாயமாய் மறைய
அரசு ஆவணங்களும்
காசுக்கு மாறும் காலத்தில்

குலநாசமென
கூக்குரலிட்டாலும்
கூசாது மனைகளாய் மாற்றுவான்
கூத்தன் வரவே மாட்டானென்பதால்


சொத்துவரி
தொழில் வரி
மூலதன ஆதாய வரி - இன்னப் பிற
வரிகள் செலுத்துகிறாரா கடவுள்

அறிவுக் கூர்மையால்
அள்ளிச் சேர்த்த வருமானத்தில்
30% அரசு வசூலித்ததா?
முழு விலக்கு அளித்ததா


நீதிமன்றங்கள்
நேர்மையில் விலகுது
மானுடம் காப்பதை மறந்து
மதங்களை காக்க தீர்ப்பெழுதுகிறது


மதங்கள்
மானுடத்தை பிரித்து வைக்க
இயற்கை
இணைத்து வைக்கிறது


இணைவோம்
இறைவனை காணவல்ல
இறைவனின் இருப்பை நீட்டிக்கும்
இ.பி.கோவை மாற்றி எழுதுவோம்

வியாழன், நவம்பர் 18

திருடர்கள்

 



இருவகை இவர்கள்
இல்லாமையால்
இத்தொழிலா – அல்ல
இதில்தான் வளம் கொழிக்குமா

தனியுடமைதனை
தக்கச் சமயத்தில்
தட்டிப் பறிப்பது
சாதாரணத் திருடன் செயல்

எதைக் களவாடுவது
யாரிடம் களவாடுவதென
தீர்மானிக்கும் திருடன்
சாதாரணத் திருடன்

இழப்பெனில்
செல்வத்தை பாதுகாக்க
எதிர்த்து போராடுவோம்
சாதாரண திருடனிடத்தில்

இழந்ததை மீட்க
இ.பி.கோ. வை நம்பி
சிலர் மீட்பர் – சிலர்
இருப்பதையும் இழப்பர்

வளமான எதிர்காலத்தை
உழைக்கும் வாய்ப்பை
கற்கும் கல்வியை
கருணையின்றி பறிப்பர்

வியாபாரத்தை இழப்பாய்
ஆரோக்கியத்தை இழப்பாய்
யாரால் – எந்த திருடனால்
என்றாவது யோசித்தாயா?

திருடனை
திருவாளர் பொதுசனம்
தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல
ஆதரித்துப் பாதுகாப்பது அவரே!!!

சனநாயக கடமையில்
தேர்ந்தெடுக்க அதிகாரமுனக்கு
சாக்கடை நமக்கெதற்கென
ஒதுங்கியிருந்து ஆதரிப்பதும் நீயே

தேர்ந்தெடுத்தவனின் – வீரத்
தீர பெருமையுரைத்து
திருட்டில் பங்குப் பெற்று
பாதுகாப்பதும் நீயே

மலைகள் – ஆறுகள்
குவாரிகளாய்
கிரானைட் பலகைகளாய்
காணாமல் போகும்

கடற்கரை தாதுமணலாய்
கடல் கடந்து செல்லும்
கடலோரம் புதைகுழியாகும்- உன் வாழ்வு
என்னவாகும்

போடாத சாலைகள்
பளபளக்கும்
பொருத்தாத விளக்குகள்
ஒளிவிட்டு எரியும்

கூடங்குளம், ஸ்டெர்லைட்
காவு கேட்கும்
வாடியபோதெல்லாம் வாடியதாய்
வசனம் பிறக்கும்

காடு கழனிகள்
இறால் வளர்ப்பென
களர் நிலமாகும் – வாழ்க்கை
களையிழந்து போகும்

மீத்தேன், ஹைட்ரோகார்பன்
எட்டு வழிச் சாலைகள்
வளர்ச்சியின் வேடத்தை
கச்சிதமாய் ஏற்கும்

நாட்டின் வளங்களை கொள்ளையிட்டு
நமது மகிழ்ச்சியையும் – உடல்
நலத்தை பறிப்பதை
வேடிக்கை பார்க்கிறோம்


பொதுத் துறை நிறுவனங்கள்
பொன் முட்டையிட – அறுத்து
தனியாருக்கு தாரை வார்க்க
நட்ட கணக்கு நம்பப் படுகிறது


அவமானகரமான
கேலிக்குரிய – இச்செயலை
என்ன செய்யலாம்
சிந்தித்தாயா?

நாடு பின்னோக்கிச் செல்கிறது
பார்வையாளனாக – நீண்ட
அமைதிக் கொள்வாயா
பதைப்பதைத்து எழுவாயா

அரசியல்
அது சாக்கடைதான்
எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பாய்
சுத்தம் செய்ய இறங்கு

சாக்கடையில் இறங்கி
சுத்தம் செய்ய
சாதாரணன் தயங்கியதாய்
சரித்திரமில்லை

வேண்டாத வேலையென்று
ஒதுங்கி நிற்காதே
விழுங்கி விடும்
வேலெடு - வீச்சோடு வா

நமது எண்ணிக்கையில்
அவர்கள் இல்லை
ஆயினும் அச்சமேன் - வெற்றிக்கு
ஆர்பரித்து இறங்கு

இல்லையெனில்
பெரும் கார்ப்பரேட்டுகள்
எல்லாத் தொழிலையும் செய்யும்
ஏமாளியாய் வாழ்வாய்

ஆம்…. ஒவ்வொரு
தேசப் பற்றாளனும்
தேசத்தை தூய்மையாக்க நினைத்தால்
தேசம் மக்களுக்கானது

புதன், நவம்பர் 3

எது இந்தியா

 




565 சமஸ்தானங்களை
ஒரு குடையின் கீழ்
மாட்சிமை தங்கிய
மகாராணி ஆண்டதா


இரும்பு மனிதனின்
இஷ்டத்திற்கு பரோடா
இன்னபிறத் தேசங்களை - 1956 வரை
இணைத்த கதையா


அசோகர் பேரரசு,
கனிஷ்கர் பேரரசு
குப்த பேரரசு
ஓளரங்கசீப் பேரரசுகளா

குஜராத்தின்
சோலாங்கி, வகேலா அரசா
மைத்திரக 
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசா

ராஜபுத்திர
சௌகான்கள்
சந்தேலர்கள், தோமர்,
பரமார் பேரரசுகளா


இரத்தோர்கள் வழிவந்த
இராஷ்டிரகூடர்கள்
ஹொய்சாளர்கள்
காகதீயர்களின் அரசா


கிருஷ்ண தேவராயரின் 
விஜயநகரப் பேரரசா
மேலைச் சாளுக்கியர்கள் அரசா
கீழைச் சாளுக்கியரின் வேங்கி நாடா

கஜினி முகமது
கோரி முகமது
தில்லி சுல்தான்களின் அரசா
அடில்ஷாக்களின் பாமினி பேரரசா

சேர சோழ பாண்டிய
பல்லவ மன்னர்கள்
கடையெழு வள்ளல்கள்
கட்டியெழுப்பிய தேசமா

ஜான்ஸிராணி லக்குமிபாய்
சித்தூர் ராணி பத்மினி
ராணி மங்கமாள்
கட்டபொம்மன், மருதுவின் பூமியா

வேணாடு வர்மாக்கள்
மைசூரு மகாராஜாக்கள்
தஞ்சை பேஷ்வாக்கள்
தவறவிட்ட தேசமா?

பௌத்தம் உதித்த பகுதியா
பாலப் பேரரசா
காமரூப பேரசா - இதில்
எது இந்தியா?


மன்னர் மானியங்களால்
வடிவமைக்கப்பட்ட தேசம்
இன்றும் நிலைத்திருந்து
இந்தியா என்றிருப்பது


தமிழனாய் இருப்பதால்
இந்தியானாய் ஆக்கப்பட்டது போல்
வேற்றுமையில் ஓற்றுமையென
விருப்போடு இணைந்த மக்களால்

பல்வேறு பண்பாட்டுச் சுவடுகளை
பல்வேறு இனங்கள்
பசுமையாய் பதித்திருக்கும் தேசத்தில்
ஏன் இந்து இந்தியா


கடாராம் கொண்டான்
இலங்கை, மாலத்தீவு  
மலேயா, சுமத்ரா, கம்போடியா, 
இந்தோனேசியா, மியான்மாரையும் வென்றான்

அகண்ட தேச கனவுக்கு
முப்பாட்டன் வென்ற தேசத்தை
மூன்று நொடியில் இணைத்தாலென்ன
இலங்கையை மட்டுமாவது கொண்டலென்ன

இணையத்தை முடக்கி
கைப்பேசி சேவையை
கட்டுப்படுத்தி – வென்றதாய்
கதைப்பவனே உன்னால் முடியுமா

குடியாட்சில்
சுயாட்சி வேண்டுமென
விதையிட்டது
திராவிட மண்தானே

சுடலையும் கருப்பனும்
சுப்ரமண்யன் ஆகமாட்டான்
முனியும் பச்சையம்மாளும்
மூலஸ்தானத்திற்கு வரமாட்டார்கள்

பத்ம விருது நிகழ்வில்
பாரம்பரிய  ஆடையணிந்து
பண்பாடு இதுவென்று - இன்று
பறையறிவித்தது புரியலையா?

படிநிலைகளின்
பாரத தேசத்தை
பார்த்து மாற்றுவோம்
பாரினில் மானுடத்தை காத்தே

செவ்வாய், ஜூன் 22

கடை

 





வருமானத் திற்குவழி வாழ்வழிக்கும் கள்ளோ
பெருமான் கடைத்திறக்கப் போராட்ட மில்லையோ
தீர்க்கமா மூடாது திக்கெட்டும் விற்கவா
தேர்ந்தெடுத் தாய்புது தேர்


எதிரணியாய் கேள்வி ஏகமாய் கேட்க
அதிகார நாற்காலி ஆட்பட்டக் கையோடு
அத்தனையும் மறந்து அரசு நடத்திட
நித்தமுமுண் டென்றார்இந் நீர்


பெருந்தொற்றுக் காலத்தில் பொய்யான பிம்பம்
பொருளோ டாயிரம் போட்டுக் கொடுக்க
இருளகற்றும் தேவனென்று இச்சகம் பேசும்
பெருங்கனவில் ஏமாற்றம் பார்!

அம்மா





தன்நலங் கருதாது தோன்றலின் வாழ்வினை
என்நாளும் வேண்டுவது ஏற்றமிகு அன்னை
கனவை விதைப்பதும் கற்றுத் தருவதும்
அன்பைப் பொழிவது மவள்


சேய்வளர்ந்து செல்வச் சிறப்போடு வாழ்ந்தாலும்
தையலால் மாதாவை தீயாய் வதைத்தாலும்
சேய்க்கு நோயென்றால் சோர்ந்தே அரற்றும்
நேயம் மிகுந்தவள் தாய்


அற்புத வாழ்வினிலே அம்மா எனிலன்பு
பொற்பாதம் பின்தொடர பொன்னான வாழ்வு
உறவென ஓராயிரம் உன்னைத் தொடர்ந்தாலும்
சிறந்தவள் தாயென எண்

சனி, ஜூன் 19

உழவன்

 






உலகம் உயர்வுற ஊனுறக்க மின்றி
நிலத்தைப் பயிரிட் டுணவை நிதமும்
சகலருக்கும் ஈபவனைச் சாக்காட்டில் வீழா
மிகிழ்வுறச் செய்வதே மாண்பு

செவ்வாய், ஜூன் 15

நாணமற்ற மாந்தன்

 


புல்லறிவாண்மை

குறள் 846:

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.



ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்


திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே

கற்றும் கல்லார்

 






புல்லறிவாண்மை


குறள் 845:


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.


அறியாததை அறிந்ததாய்
….. அறிவில்லார் உரைத்திட
அறிந்ததை அறிந்தாலும்
…… அய்யுறுவர் உலகத்தவர்
அறியாததைப் பிழையுடன்
….. ஆங்கே பொழிந்திட
நெறியிலார் இவனென
….. நினைவூட்டி காட்டிடும்


கற்றதைக் கசடற
…… கற்று இருந்திட
மற்றதை அறிந்ததாய்
….. மயக்கிப் பசப்பிட
கற்றவர் ஒப்பிடார்
….. கல்லாமை உணர்வரே
வெற்றியை விரும்பிட 
….. வேண்டாம் பொடிதலே

சனி, ஜூன் 12

நட்பு அறி








நட்பாராய்தல் : 
குறள் எண்:792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்



குற்றம் ஆய்ந்து
.....குணமும் ஆய்ந்து
சுற்றம் கொள்ள
.....சுகமே பெருவாய்
முற்றும் அறியா
.....முதிரும் நட்பில்
முற்றல் மட்டும்
.....முகாரி ஆகும்



பிறக்கும் போதே
.....பின்தொடரும் உறவா
சிறக்கும் நட்பை
.....சீர்தூக்கிப் பார்த்தே
உறவோர் ஆக்கு
.....உவரை ஏற்றால்
பிறகோர் துயரம்
.....பிணக்கா டுவரும்

அன்பா அறிவா






சாதகப் பறவைகள்
.....சாசனம் எழுத
காதக தகப்பன்
.....காதலை முறிக்க
நூதன வழியில்
.....நுண்ணிடைத் தப்ப
மாதவ மாதம்
.....மாறனை மணந்தாளே


காதல் இணைகளுக்கு
.....கனவு சுமையாக
வாதம் வம்பாக
.....வஞ்சியும் குறும்பாக
ஆதன் என்றாள்
.....ஆர்வலன் பழித்தான்
பேதம் பிறக்க
.....பெரும்பிழை என்றானே


அன்புடை நெஞ்சத்தை
.....அறிவியல் விளக்கா
அன்பினை அறிவால்
.....அளந்திட விளங்கா
ஒன்றிட வேண்டில்
.....உயர்தவர் துலையர்
அன்றிலில் இலையென்று
.....அறிவது அழகே

வியாழன், ஜூன் 10

ஒன்றியத்தில் தமிழ்நாடு







அகம்பலக் கொண்ட
....அருமை நாடு
சகலரும் ஒன்றே
.....சட்டம் பாரு
சிகரமாய் வென்ற
....சிங்காரத் தமிழுக்கு
அகரமாய்த் தமிழ்நாடு
....ஆகட்டும் வளநாடு


ஒன்றியம் என்றால்
....உனக்கேன் கவலை
அன்றிலாய் வாழ
....அடித்தளம் அதுவே
அன்றியும் அழைக்க
..... அடிமையா தமிழன்
குன்றிடா ஒன்றியத்தில்
....கூடிடு தமிழனென்றே

கன்னல் தமிழ்








கன்னல் தமிழை
.....கண்ணாய்ப் போற்று
இன்னல் வந்தால்
.....இறந்து காப்பாற்று
என்னில் தாயே
.....எனவே வணங்கு
உன்னில் மொழியே
.....உறவைத் தொடங்கு


அம்பலம் ஏறா
.....அன்னைத் தமிழை
அமணர் வகுத்த
.....அற்புத வழியில்
கம்பன் அல்ல
......காளையர் காப்பர்
நம்பன் முருகன்
.....நம்பி யாருமில்ல


மும்மொழியை வேண்டுவர்க்கு
......முக்கனியின் இனிமையை
செம்மொழியாம் தமிழின்
.....சுவையை கூறிடுவாய்
எம்மொழிக்கும் ஈடில்லை
.....என்னினத்தின் அடையாளம்
அம்மொழியே தமிழாம்
.....அதனால் வாழியவாம்

வெள்ளி, ஜூன் 4

எம்மை இயக்கும் ???.............

 



எம்மை இயக்கும் இறைவன்
யாரோ சிலரறிவார் போலும்
தம்மைத் தூற்றும் நாத்திகனை
தடுதாட் கொள்ளும் நாயகன்
அம்பலத்தில் அடையாள மாகிடவே
அவர்கள் ஆம்மென்று ஆவாரோ
கம்பளம் விரித்தேக் காத்திருக்கும்
கிறித்து அல்லா இந்துவல்ல

நாத்திக வாதத்தில் நாவாய்
நர்த்தன மிடுபவனும் அவனே
ஆத்திகர் அற்புதமாய் ஏய்க்க
அளித்த விளக்க மிதுவே
நித்தமும் காக்கும் இறையெனில்
நிற்கதியாய் மாளும் நிலையேனோ
துதித்தாலும் பக்தியில் லையென
துணையாய் வாரா திருந்தாரோ

இந்திரன் வருணன் என்றே
இல்லாதார் பட்டியல் நீளும்
இந்த வரிசையில் கிரேக்க
ஹீரா ஜுயஸ் தொடரும்
உந்திப் பெருக்க ஏமாற்றி
உதிரம் குடிக்கும் கூட்டத்தை
சந்தியில் நிறுத்திக் கேட்டால்
சூதாய் நம்பிக்கை என்றிடும்

நம்பிக்கை என்றே நால்வர்
நாலுச் சுவற்றுள் துதிக்க
அம்பிகை, அல்ல அவரவர்
ஆண்டவனை தடுப்பர் யாரோ
சம்புகன் ஏகலைவன் ஏமாந்த
சரித்திரம் தொடருமென நினைப்பில்
வம்பிழுக்க நாத்திகனை இயக்குவது
வரனருள் என்று ரைப்பவரோ

மற்ற இறையை மறுதலிக்கும்
மாண்புறு நாத்திகர் இவரே
முற்றும் மறுக்கும் நபரை
முட்டாள் என்றவரும் இவரே
வற்றும் அறிவால் தூற்றி
வழங்கும் பட்டங்கள் பலவே
சீற்றம் தனிந்தே சிவனருள்
சேரட்டும் என்றதனால் வாழ்கவே

வியாழன், ஜூன் 3

இரங்கல் எழுதாத நாளில்லை

 

 


 

இரங்கல் எழுதாத நாளில்லை

     இகலார் என்று யாருமில்லை

அரசன் ஆண்டி பேதமில்லை

     அய்கோ கண்ணில் நீரில்லை

தரணியில் தீராநோய் ஒன்றில்லை

    தீநுண்  மிக்கோத் தீர்வில்லை  

மரணம் ஒன்றும் புதிதில்லை

    மனதிற்குத் தாங்கும் திடமில்லை   

 

பிரம்மனும் பரமனும் துணையில்லை

    பேதையர் நம்பிக்கைக் காக்கவில்லை

அரற்றும் நிலைக்காணத் தாளவில்லை

     ஆதரவாய் அவர்களுக்கு ஒன்றுமில்லை

கிராமம் நகரமென எல்லையில்லை

     காற்றில் பரவத் தடையில்லை

சீரான வாழ்வு திரும்பவில்லை

     சோராதிரு வேறு வழியில்லை

 

ஊரடங்கு நீடிக்க விருப்பமில்லை

      உழைத்து பொருளீட்ட வாய்ப்பில்லை

பாரங்கே தடுப்பூசிக் கிட்டவில்லை

      பலகாலம் காத்திருக்க மனமில்லை

நெருங்கிப் பழகிய உறவில்லை

      நேற்று இருந்தார் இன்றில்லை

சுருங்கி போனது உலகமில்லை

      சுற்றித் திரிந்த நாமன்றோ


திங்கள், மே 31

கன்னக்குழி அழகி






கன்னக்குழி அழகி
......கரம்பற்ற மகிழ்தேனடி
அன்னநிறத் தழகி
.....ஆசையில் தொட்டேனடி
மின்னும் கண்கள்
......மீறச் சொல்லுதடி
சான்றாய் இச்சொன்று
.......சத்தமின்றிக் கொடடி
தென்றல் வருடியதாய்த்
......தேகம் குறிக்குமடி


நன்னாளின் ஆனந்தம்
......நாற்புறம் பரவட்டும்
பொன்னாள் என்றே
........பொன்னேடு எழுதட்டும்
மேன்மையுற இணைந்த
......மொட்டுக்கள் என்றே
சான்றோர் வாழ்த்தும்
.......சம்சாரக் கடலிலே
இன்பமாய் முத்தெடுக்க
........இட்டமாய் வாயேன்டி

வியாழன், மே 27

வசந்தகால வானம் பாடிகள்

 


இளவேனிற் காலத்தில்
…… இளஞ்சோடிப் பாடித் திரிய
தளர்வற்ற ஊரடங்கில்
…… தத்தளித்தேத் தேடி வாட
இளமை முறுக்கில்
…...இதயம் தேடிச் செல்ல
விளக்கம் கேட்டு
……. வீதியில் காவலர் தடுக்க


ரோசாப்பூ வாசம்
…… ராசாத்தி நினைப்பக் கூட்டுது
நேசத்தின் வேகம்
…… நொடிநேரம் ஒளியாண் டானது
வசந்தத்தை தேடும்
……. வசந்தகால வானம் பாடிகளை
தேசத்தின் பெருந்தொற்று
…… தேவை யின்றி வாட்டுது

அன்பு

 


அன்பென அவளை நெருங்க
…… அத்தான் என்றே மயங்க
அன்னமே அன்பன் நானாக
….. அச்சாரம் கொள்க என்றேன்
ஆனையோ ஆநிறையோ அல்ல
….. அன்பின் கணையாழி கண்ணே
ஆனிப்பொன் அணிகள் வேண்டா
….. அத்தான் அருகிருக்க வேண்டும்


அனுதினம் அந்தாதி பாடும்
…… அபிராமி நானாக வேண்டும்
ஆனந்த நிலையில் அன்பே
……. அனைத்தும் ஒன்றாக வேண்டும்
அன்றில் இவர்கள் என்றே
……. ஆன்றோர் வாழ்த்த வேண்டும்
அந்தம் நீயின்றி வெறுமை
……. ஆயினும் நீவாழ வேண்டும்

புதன், மே 26

காற்று

 



காற்றைத் தென்றலாகப் புயலாகக் 
.....கண்டிருந்த காலச் சூழலிலே 
முற்றத்தின் நிலவொளியில் எம்மை 
......முனைந்துப் பாடிடலாம் என்றதனால் 
கற்றறிந்த தமிழ் துணையிருக்கக் 
......கவிதையில் கேட்டு வைத்தேன் 
இற்றைத் தினத்தில் இறக்குமதி 
......இனத்தில் காற்றிருப்ப தெதனாலே? 

தொற்றால் பற்றாக் குறையா 
......தூய்மை இல்லா முறையா 
வற்றா வளியை வரம்பற்று 
......வஞ்சிக்க வந்த வினையா 
காற்றில் லையென்றுக் கதைப்பர் 
......கற்ற இயற்பியலின் காரணத்தில் 
காற்றில் லையென்றுக் பதறுபவர் 
......கொரானாத் தொற்றின் மரணத்தில் 

வளிநான்கில் குளிர் மேலடுக்கு 
.....வகைமீதிக் காற்றின் கதகதப்பு 
துளிக்காற்றின் விலையை அறிவாய் 
.....தீநுண்மி பரவி யிருக்க 
வளியின் எடையை அறிவாயா 
.....வளர்ந்த விஞ்ஞானம் உதவ 
அளந்தேன் ஐந்தாயி ரதிருநூறு 
......மிலியன் மிலியன் என்றே

எரிக்கும் எண்ணெய் நிலக்கரியால்
.....ஏற்படுவது நைட்ரசன் காற்றாகும்
கரிம வாயுக்கள் நிலைத்திருக்க
.....காடுகள் நிலத்தைப் பாதிக்கும்
கார்பன் எரியா திருக்கக்
.....கார்பன் மோனாக்சைட் உருவாகும்
மருந்தாய் பாலிவினைல் குளோரைட்
.....மானுட உயிரைக் காக்கும்

ஆடிக்காற்றில் காற்றாலை மின்சாரம்
.....ஆனால் தனித்திருக்கும் சம்சாரம்
ஆழிக்காற்றில் கிழத்தியுடன் சஞ்சாரம்
.....ஆனந்த இலக்கியப் பண்பாடும்
கொடியசையக் காற்று வந்ததா
.....காற்றி ருப்பதால் அசையுமே
கொடிகளின் ஒளிச்சேர்கை உயிர்காற்றை
.....கணக்கின்றி உருவாக்கித் தருமே

எலக்ட்ரான் புரோட்டான் நுண்துகள்
....எதிரிடச் சூரியக் காற்றாம்
உலவும் ஓசோன் அகப்புற
.....ஊதாக் கதிரைத் தடுத்திடுமாம்
மழைக்கு ஈரக் காற்றுதென்
......மேற்கில் புறப்பட்டுப் பொழிந்திடும்
கீழடி நாகரிகம் புதையக்
.....காற்றும் புயலுமெனப் புரிந்திடும்


செவ்வாய், மே 25

பொற்காலம்

 

 

குப்தர் சோழர் காலமும்

    குடிகளின் வாழ்வின் முறையும்

ஒப்புவமை இல்லாக் காரணத்தால்

    ஒப்பினர் பெற்காலம் என்றே

அப்பத்தைப் பிட்டு அளித்து

    அன்பைப் போதித் திருந்தாலும்

சப்பாத்தி முள்ளைக் கீரிடமாய்

    சூட்டியதால் புனிதக் காலமானது

 

காமராசர் ஆட்சிப் பொற்காலம்

    கழக ஆட்சி நிகழ்காலம்

கோமளவல் லியாட்சிக் கடந்தகாலம்

    “கார்பரேட்” ஆட்சி இருண்டகாலம்

ஏமாளி மக்கள் எண்ணுவது

     என்று மீளும் பொற்காலம்

சீமான் சீமாட்டி ஆண்டாலும்

    சந்திப்பது என்னவோ கற்காலம்

திங்கள், மே 24

வினை விதைத்தால்

 



குறள் 207

 

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

 

  

பகையுடை வேந்தனுக்கு

  ………  பலவழி  உண்டு மீள்வதற்கு

பகைதனை அஞ்சாது

   ……… பழிபாவச் செயலைச் செய்திட

வகைவகையாய்த் தீவினை

   ……… வழமையாய்த் தொடரும் மானிடனை

மிகையானத் பகையே

   ………  மடியும்வரை தொடர்ந்து அழித்திடும்

 

 

தீயதுச் செய்தவனை

   ……… திரும்பித் தாக்கிக் கொல்லும்

ஆய்ந்தால் அவன்செயல்

   ………. அவனுக்கு என்றே புரியும்

வீயாது என்பது

   ………. வினைக்குத் திணையல்ல என்பதாம்

மாய்க்கும் வரையில்

   ………  மானுடனைத் தொடரும் தீவினையாம்  


ஞாயிறு, மே 23

திருநங்கையர் வாழட்டும்





அர்த்தநாரி ஆண்டவனால்
       ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
       உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
       கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
       புலரியோ ஒன்றுமில்லை


இடப்பக்க உமையவளே
       இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
       மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
       தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
       பலப்படி உயர்ந்திடுவர்


இலக்கின்றிச் சென்றவர்
       இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
       இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
       இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
       நெடும்பயணம் சென்றனர்


பெற்றோர் புறந்தள்ள
       பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
       பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
       அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
       வெஞ்சமரில் வென்றவளே


திருநங்கை வாழட்டும்
       திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
       பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
       உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
       பந்தத்தில் சேர்த்தே


வெள்ளி, மே 21

கொரானா தேவி

     

குற்றுயிராய்க் கொலையுயிராய்
     கொரானாவில் தத்தளிக்க
கற்றறிவு இல்லாத
     கோவைக் குடிசில
தோற்றமுறச் செய்தனராம்
     தேவிக் கொரானாவை
காற்றில் பரவி
     ககனம் நிறைப்பாளோ


நூற்றாண்டு கடந்தும்
     நூல்பலக் கற்றும்
கற்காலக் பிளேக்கை
     கருமாரி விரட்டியதால்
தற்காலத் தற்குறிகள்
     தந்தத் தேவிதான்
முற்றாக ஒழிக்குமோ
     மூச்சைதான் காக்குமா?


இட்டசித்தித் தேவிக்குபின்
     ஈசுவரனும் தோன்றலாம்
தட்டநீட்டிக் காசுபார்க்கும்
     துட்டர்களைக் காணலாம்
மொட்டுவிடும் மூடதனம்
     முளையிலேக் கிள்ளுவோம்
கட்டுப்படும் தடுப்பூசியால்
     கலக்கமின்றி வாழ்வோம்

செவ்வாய், மே 18

என்கண்ணில் இருந்து தப்பாது உலகம்

 


 

என்கண்ணில்  இருந்து  தப்பாது  உலகம்

      ஏமாறப் பிறப்பது எங்கெங்கும் கலகம்

புன்கண் புவனத்தில் ஈராண்டுக் கடந்தும்

    பன்மடங்கு ஆனதே பல்லார் விழுங்குதே

மேனாட்டு அரசு தடுப்பூசியில் தடுக்க

     மேதமைக் கொண்டோர் கோமியத்தை அளிக்க

இந்நாடோ ஓர்ஊசிக்கு பலவிலை நிர்ணயிக்க

      இங்ஙனமே நற்கதியாய் கங்கையில் மிதந்தோம்

    

கைத்தட்டி ஒளியேற்றி விரட்டிட முனைந்தோம்

         கைக்கொட்டி உலகம் சிரித்திடக் கண்டோம்

கொத்துக் கொத்தாய் மடிந்தக் காரணங்கள்

           காற்றை உயிர்காற்றைத் தேடியென அறிந்தோம்   

கற்றுக் கொள்வோம் அவரவரைக் காத்திட

           கட்டுகோப்பும் மூச்சுப் பயிற்சியும் முககவசமும்

இற்றைத் தினத்தில்  இன்றி அமையாததென

           இருக்கும் யாவருக்கும் இனிதாய்ச் சொல்லுவோம்

 

இஞ்சி மஞ்சள்  மிளகு நோயெதிர்ப்பென

           இகலோரும் எடுத்தியம்ப இந்நேரம் கண்டேன்

அஞ்சியரோ  “ஹார்லிக்ஸ்”  “காம்ப்ளான்” பண்டங்கள்

          அந்நோய்க்கு உதவாதென அமைதிக் காத்தனரோ

செஞ்சீனம் தீநுண்மியின் துவக்கம் என்றார்

         செம்மையாய் கையாண்ட அரசு கண்டேன்

அஞ்ஞானங் கொண்ட அந்நாளைய அதிபர்

      அரற்றியப் பலகதைக் கேட்டும் நொந்தேன்

 

 அலட்சியமோ அவசியமோ அவரவர் சுற்றுவது

         ஆயினும் நோயும் வாயும் விரட்டுதே

இலக்கின்றி  இல்லத்தில் அடைப்பட்டுக் கிடந்திட

       ஏற்படும்  மனச்சிக்கலை யார்தான் போக்குவது

கலங்கி நிற்குதே ஒருகூட்டம் பணமின்றி

         கால்தேய நடந்ததே மறுகூட்டம் உறவின்றி

கல்லாது ஒருநிலை தாண்டும் கல்விநிலை

          காலத்தால் வீழ்ந்தோம் கவனிப்பார்  யாருமின்றி

 

 

            

 

திங்கள், மே 17

இயற்கையோடு நீ


 




மண்ணில் விதை முளைக்கும்
மனசில் நீ முளைச்ச
காற்றில் மகரந்தம் பரவும் - நின்
கண்ணில் காதல் பரவும்


மேகமோத் திசை மாறும்
பேதையின் மனம் எனதாகும்
மோகம் கொண்ட மாமனுக்கு - நின்
முகதரிசனமே மருந்தாகும்


மலரும் கொடியும் உயிராகுமே
சிலம்பும் நடையும் உயிரோட்டமே
வளரும் காதலும் இயற்கையாகும் – நின்
வரமே எனது வாழ்வாகுமே


மழையால் மண் செழிக்கும்
மறவன் கண் மயங்கும்
உழைப்பே உயர்வாகும் – நின்
உறவே உன்னதமாகும்

ஞாயிறு, மே 16

என்னாசை மச்சானே….!!

 


என்னைப் பாரும்
     ஏரோட்டும் மச்சானே
புன்னை நிழலில்
     பொழுதுக்கும் பேசலாமா
தென்னை அருகில்
     தெளிந்தச் சுனையில்
மீனாய் நீந்தலாமா
     மன்மதனைக் காணலாமா

அண்டை வெட்டும்
     ஆளா வாரேன்
கெண்டை மீனையும்
     கொண்டு தாரேன்
கண்டாங்கிச் சீலையும்
     கழுத்துத் தாலியும்
கொண்டு வாருமய்யா
     கைத்தலம் பற்றுமய்யா

காட்டைத் திருத்தி
     கருங்குறுவை பயிரிடுவோம்
மாட்டைப் பூட்டி
     மளமளவென நீரைப்போம்
போட்டிக்கு வாருமய்யா
     பொழுதுக்குள் கதிரறுக்க
இட்டம் கொண்டே
     இச்சொன்று தாருமய்யா

வீட்டைப் போல
     வீதியை பாருங்க
ஓட்டைக் குடிசை
     உறவையும் கூப்பிடுங்க
திட்டம் போட்டு
     திரவியம் தேடுவோம்
வாட்டம் இன்றி
     வளமையாய் வாழுவோம்

சனி, மே 15

புதிய கல்வி கொள்கை

 


அறியாததை அறியவும்

     ஆதியைத் தேடி ஓடவும்
அறிந்ததை அகிலத்தில்
     ஆலம் விழுதாய்ப் பரப்பவும்
அறம்தனை வகுத்து
     ஆறறிவு உயிராய் உயரவும்
அறுதியிட்டுக் கூறுவோம்
      ஆகச் சிறந்ததுக் கல்வியென

சுனாமி வந்துச்
      சொத்தைச் சுருட்டி சென்றாலும்
வினாக்களில் விடைதனை
      விரிவாய்த் தேடி படைப்பாய்
கனாக்களில் நிலவை
      காதலியாய்ப் பாடி திரிவாய்
நனவாக்க நாசாவில்
     நிகழ்ச்சி நிரல்தனை வரைவாய்

வள்ளுவன் வகுத்த
      வளமான நீதி நெறிகளை
கள்ளன் வடவன்
      காரியமா மாற்ற முயல்வான்
பொல்லா வேதத்தை
      புதிய கல்வி என்றிடுவான்
கல்வி அழியுமோ
      காப்பாற்றக் கூக்குர லிடுமோ

அழியாதது கல்வி
      ஆயினும் அமைதி காப்பாயா
பழியேதும் அண்டாத
      பொதுவான கல்வி கேட்பாயா
தழலாய்க் குலகல்வி
      தவிர்திடு நினது ஞானத்தால்
விழலாய் ஆகாது
      விதைத்திடுக் கல்வி அழியாது

சனி, மே 8

கண்டாங்கி சீலக்காரி







கண்டாங்கிச் சீலக்காரி
      காத்திருக்கேன் வாயேன்டி
திண்டாடிப் போவேண்டி
       திருமுகம் காணாட்டி
ஆண்டியானா அப்பழி
       ஆத்தாடி உனக்கடி
பொண்டாட்டி ஆகிட
      புதுசுகம் தேடலாமடி


கெண்டைக் காலு
      கழனிக் காட்டிலே
தண்டைக் கொலுசில்
       தாளம் போடுது
அண்டச் சொல்லுது
       அத்தானின் வயசு
தாண்டி வந்தால்
      தாசன் ஆவேன்


வக்கணையா பேசும்
      வேலனே தாசனே
அக்கறையா வாரும்
      அச்சாரம் போடும்
பாக்கு வெத்திலை
      பக்குவமா தாரேன்
தாக்குப் பிடிச்சு
      தாராளமா விளையாடும்


வண்டின் நிலையறிந்து
      வழங்கடித் தேனைத்தான்
தொண்டின் பொருள்புரிய
     தீண்டலை ரசிக்கணும்தான்
பண்டுக் காலம்போல்
     பாமரனாய் எண்ணாதே
ஆண்டு அனுபவிப்போம்
    ஆயுளை நீட்டிப்போம்


செவ்வாய், மே 4

நந்தவனமோ?

 



சமரசம் உலவுமிடம்
    சச்சரவுகள் தொடருமிடம்
சமயங்கள் பிரிந்தவிடம்
    சாதியும் சம்மணமிடும்
சமமில்லாச் சமுகத்தை
    சாக்காடும் சொல்லுமிடம்
சமர்புரிந்த மானுடம்
    சமரசம் ஆனவிடம்

நெருக்கடி நகரத்தில
    நேரெதிரா நந்தவனம்
நெருடல் ஏதுமில
    நேரடியாச் சொர்க்கமில
ஆறடி நிலமுமில
    அங்கேச் சாம்பலுமில
கூறடிக் கோலமெங்கே
    கூப்பிட்டப் பெயரெங்கே

நல்லதொரு நந்தவனமோ
    நாலுபேருக் கூடுமிடமோ
அல்லல்படு மக்களுக்கு
    அதுவொரு இடுகாடோ
புல்லர் புலையருக்கு
    போகும்வழி இடரிருக்கு
மல்லருக்குக் கடற்கரையில்
    மாடமாளிகைக் கட்டிருக்கு


வெள்ளி, ஏப்ரல் 30

ஒரே இந்தியா

 




ரூ.150
ரூ.400
ரூ.600
ரூ.1000

கட்டளைதாரர் உபயமல்ல
கடவுளைக் காண்பதற்கான
படிநிலைக் கட்டணமுமல்ல
கட்டணம் தடுப்பூசிக்கு

பயன்நிலை ஒன்று
பயன்படுத்துவோரும் ஒன்று
படிநிலை ஏனென்றால்
பக்தனில்லை எதிரி ஆவாய்

பொது சிவில் சட்டம்
இந்தி இந்தியாவின் மொழி
இதை நோக்கும் தேசத்தில்
ஏனிந்தப் பிரிவினை

பிரிவினையின் படிப்பினைகள்
சாதிமதப் பேதமின்றி
பஞ்சைப் பராரிகள்
பரலோகம் செல்வது

பங்கு போட வசதியாக
பார்மசி கம்பெனிகளின்
பங்கு மதிப்பு – சந்தையில்
பலமடங்கு ஏறுது

இழவு வீட்டில்
இத்தனை இலாபமா
இருக்கட்டும்……
இந்த கொரோனாத் தொடரட்டும்

வியாழன், ஏப்ரல் 29

சுடலையாண்டி

 




கால் பணம்
முழத் துண்டு
வாய்கரிசி
ஏதுமில்லை

எரிக்கவோ
புதைக்கவோ
உடன் பாலோ
யார் அறிவார்

வீட்டிற்குள் வரவில்லை
வீதிவழிச் செல்லவில்லை
காடுவரை யாருமில்லை
கடைசி வரை???????

அலங்காரப் பாடையில்லை
அழுவதற்கு நாதியில்லை
அதன் பெருமையுரைக்க
ஓர் ஒப்பாரியுமில்லை

ஊர் மெச்ச வாழ்ந்தவன்
உலக விட்டுப் போகையில
உற்சவமாய் கொண்டு செல்ல
ஒருவரும் ஒப்பவில்லை

ரேஷனில் காத்திருந்தான்
தியேட்ரில் காத்திருந்தான்
ஒட்டுப்போடக் காத்திருந்தான்
ஒய்யாமாரி இடுகாட்டிலும்…………………….

அய்யகோ
அரிசந்திரன் கதையில்லை
ருத்ர பூமியில்
உறங்கவும் இடமில்லையே

திங்கள், ஏப்ரல் 26

மயிலக்காள மச்சானே





கூரை வேய்ந்த
   குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
    யாத்திரை வந்த
கூரைச் சீலை
    கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
    கைப்பிடித்து வாரேன்


அஞ்சாறு நாளா
    அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
    படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
    சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
     நிலவும் காயுதடி


மயிலக்காள மச்சானே
    மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
    தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
   அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
    ஞாபகம் கொள்வாயா


வாழும் வாழ்க்கையில்
    வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
    பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
    புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
    விசால உலகிலே


ஞாயிறு, ஏப்ரல் 25

திடீர் செல்வம்

 


குறள் 837

 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

 


ஆய்ந்தறியும் திறனில்லா
     அறிவிலியின் செல்வத்தை
வாய்ப்புக் கிடைப்போர்
     வாரிவாரிச் செல்வர்
ஏய்ப்பது அறியா
     ஏமாறும் பேதையர்
தேய்ந்துக் கிடக்கும்
     தோழமைக்கு உதவார்


பெருஞ்செல்வம் படைக்கும்
    பாதையை அறியாதவன்
திருவருளால் கிடைத்ததை
    தீயவர் புசித்திருக்க
வெற்று மனிதனாய்
    வேடிக்கைப் பார்ப்பான்
சுற்றமோ வாடிடும்
    சூழ்நிலையில் வருந்திடும்

சனி, ஏப்ரல் 24

கல்லறையிலிருந்தா கற்பீர்

 



தொன்மையான நாகரிகம்

     தோண்டிக் கிடைப்பதென்ன

இன்பமான வாழ்க்கை

     இன்னும் இருக்கிறதே

துன்பமதுக்  கோவிடாய்

      துரத்தலாம் பிரமிடாய்

பொன்னுடலைக் காத்திட

      போட்டிடுக்  கவசந்தனை


வெள்ளி, ஏப்ரல் 23

கல்நெஞ்சம்




கண்ணில் அம்பொன்று
கணையாய்த் தொடுத்தே
காதலைப் பெருக்காதே
கண்ணா அமைதியில்லையே

காட்சிகள் விழியில்
காதலைக் கூட்டும்
கண்ணின் விழித்திரை
கதவடைத்துக் கொள்ளடி

தங்குத் தடையின்றி
தாமிரபரணி நீரோட்டமாய்
தமிழ் பேசுமழகில்
தட்டுத் தடுமாறினேன்

சொல்லும்....
சொல்லும் அழகும்
சொல்லச் சொல்ல
சொக்கிதான் போனேனடா

கனிய கனியப் பேசி
காதலின்பம் கூட்டி
காணாது போனவனே
காதல் பேச வாடா

மௌனம் காத்து
மனதை வதைத்தவளே
கோவை இதழில்
கொஞ்சி பேசடி
 
இளங்கன்றுக்கு
இட்ட வாய்பூட்டோ
இள மயிலே
இளகாதோ நின் மனமே

போதிமரப்  போதனையோ
பேசாதுப் போனாயே
பொடா-தடா சட்டமோ
போட்டால் வாட்டமே

கண்மூடிக்
காட்சியை மறைக்கலாம்
வாய்மூடி காதல்
வசனத்தை நிறுத்தலாம்

கண்ணே எப்போதும்
கண்டபடி நினைக்கும்
கல்லான மனதை
கட்டளையிட்டு மூடுவியோ        

வெள்ளி, ஏப்ரல் 16

வித்தகனே! மன்னவனே!






அருகில் நீயிருக்க
அத்தனையும் மறந்திடுமே
அஞ்சுகமே உனையணைக்க
ஆனந்தம் பெருகிடுமே


சிந்தையில் ஏதுமில்லை
சித்தார்தன் நிலையுமில்லை
சுந்தரப் பாண்டியனாய்
சந்தேகம் ஒன்றுமில்லை

கொத்துமலர் கொடுத்தவனே – நின்
சித்து விளையாட்டை நானறிவேன்
கற்றலில் நீயொரு வித்தகனே
முற்றுமோ என்காதல் மன்னவனே?!


புதன், ஏப்ரல் 14

விழிபேசும் மொழியென்ன கேட்கிறேன்



விழிபேசும் மொழியென்னக் கேட்கிறேன்
    விடுகதையா, விடையா வினவுகிறேன்
மொழிபெயர்க்க அகராதித் தேடுகிறேன்
    மொழிகளின் வகைதனை அறிகிறேன்
பொழிகின்ற அன்பைதான் காண்கிறேன்
    பொல்லங்கு ஆகுமோ புரியலையே
வழிவழியாய் வந்தவர்களை நாடுகிறேன்
    வாலிப வயதென வாழ்த்துகின்றார்

ஆழிப் பேரலையாய் மனமுறிவு
    ஆதலினால் வந்தது மணமுறிவு
பழிபேசும் சமுகத்தைக் காண்கின்றேன்
    பகல்கனவா வாழ்க்கை யோசிக்கிறேன்
இழிவோ மறுவாழ்வு இவ்வுலகிலே
    இணையாய் வருவதற்கு இடைஞ்சலோ
வாழியகா தலென்று வருவாயோ!
    வழியில்லை எனகத வடைப்பாயோ?

ஏழிசையில் ஆரோகணம் அவரோகணம்
    எப்படி இசைத்திடவும் இனிமையே
பழிப்பரென இளமையை இழக்கலாமோ
    பாரென வாழ்வது இலக்கணமே
தோழியாய், இணையாய் இணையலாம்
    தோற்பது நம்முடைய இலக்கல்ல
வீழ்வது விதிவசமென முடங்காது
    வாழ்ந்துக் காட்டுவோம் வாழ்க்கையை

திங்கள், ஏப்ரல் 5

நெஞ்சுகுள் நீயே



நிலவைக் காதலிப்பாய்
    நதியை வர்ணிப்பாய்
உலவும் தென்றலை
    உயிரெனக் கதைப்பாய்
மலரை அழகென்பாய்
    மங்கையை மறந்திடுவாய்
கலந்திடும் நேரத்தில்
     கல்நெஞ்சில் நானென்பாய்

இளமைக் குன்றா
     என்னினிய தமிழென்பாய்
குளத்தின் ஆம்பலை
     குவலய அழகென்பாய்
வளமைக் கொண்டவளை
     வந்தணைக்க மறந்திடுவாய்
வெள்ளை நெஞ்சத்திலே
     வேண்டியவளை நினைக்கலையோ


கிழத்தி நானொருத்தி
     கிடக்கும் நினைவின்றி
யாழிசைச் சிறப்பை
     யாமத்தில் பாடுகிறாய்
அழகழகாய் பேசிடும்
     அத்தானின் நெஞ்சத்திலே
ஆழ்ந்து கிடப்பது
      அடியவள் மட்டும்தானே……????

நெஞ்சத்தில் நீயேதான்
      நேசமுள்ள இணையேதான்
வஞ்சியுணை கண்டிட
      வாராதோக் கற்பனைகள்
மிஞ்சிடாது நிலவை
      மலரைக் காணுகையில்
அஞ்சுகமேக் கலங்காதே
       ஆசையுடன் வாழ்வோமடி


செவ்வாய், மார்ச் 30

தேரா மன்னர்களே

 


 



எரியும் கொள்ளியில்
எதுச் சிறந்ததென
ஏமாளிகள்
எடுத்தியம்பப் போகிறார்கள்

உரிமை உனக்கிருப்பதாக
உத்தமர் காலந்தொட்டு
உசுப்பேற்றிக்
குளிர் காய்கிறார்கள்

தேர்தல் பாதை
திருடர் பாதை என்றவர்கள்
திருத்திக் கொண்டார்களாம்
தேவை கருதி

போலி கம்யூனிஸ்ட்டுகள்....
அஃமார்க் ஆகிவிட்டதாகவும்
அன்று விமர்சித்ததற்கு - இன்று
சுய விமர்சனமேற்கிறார்கள்

”தேரா மன்னர்”களே
தேர்ந்தெடுவத்தவனை
திருப்பி அழைக்கவியலா – இத்
தேர்தல் ஜனநாயகமா?

ஒட்டுப் போடாதே
புரட்சிச் செய் என்றவர்கள்
ஊமையாகிப் போனார்கள்
ஒப்புக்குக் கதை கட்டுகிறார்கள்

அணிகள் இரண்டாய்
அவரவர் வசதிக்கேற்ப
லாவணிப் பாடுகின்றனர்
ரசிப்பதற்குக்  கூடுதலாய் ஒன்று

நிபந்தனையற்ற ஆதரவு
தேவையானச் செல்வாக்கு
புதிய ஜனநாயகப் புரட்சிக்கு
திரட்ட இயலாததால்

முப்பதாண்டுகள்
கட்டி எழுப்பிய
மக்கள் திரள் அமைப்புகளை
மடை மாற்றிய மருதையன்

அரசியலமைப்பை மாற்ற
ஆய்த்தமானவர்கள் - மக்களை
நிற்கதியாய் விட்டுவிட்டு - தரகு
முதலாளிக்கு ஓட்டு கேட்கிறார்கள்

லீனா மணிமேகலை போல்
மார்க்சியத்திற்கு வியக்கானம்
தேர்தல் பங்கெடுப்பும் – 2 ம் உலக
போரும் உதாரணங்களாயின

தேமுதிக, நாம் தமிழர்
மறுமலர்ச்சி, மய்யம்
மாற்றத்தை தேடிய பாமக
காலி பெருங்காய டாப்பாக்களாயின

பெட்ரோல் டீசலுக்கு
மதிப்புக் கூட்டு வரி - மற்றவைக்கு
சரக்குச் சேவை வரி
…..ஒற்றைத் தேசியமாம்

இற்றை நாளில்
இதுபற்றி பேசிட
இந்திய எதிரியாவாய் – தமிழனாய்
தனித்து விடப்படுவாய்

பலமடங்கு ஏறிய
விலைவாசியை
பத்தாண்டு ஆட்சியில் இல்லாதவன்
பட்டென்று குறைப்பானா

“நோட்டா” ஜெயித்தால்
நாயகன் யாரென
சட்டமியற்றிய
நாடும், சனமும் அறியாது

ஆயிரமோ
ஆயிரத்து ஐந்நூறோ
ஆருடைய பணமென
அறியாதவனா நீ

ஆகட்டும்
அதை வாங்க
அற்புத சனநாயகத்தைக் காக்க
ஓட்டுப் போடு


தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...