வெள்ளி, ஆகஸ்ட் 29

விடியலை நீட்டிக்க

 












துடிக்கத் துடிக்கத்
துவளச் செய்து
கொடியிடைத் தன்னில்
கொட்டும் அடித்து
வடிவழகே வசந்தமே
வசனம் படித்து
அடிமனதில் நங்குரமாய்
அமர்ந்த வேலவா

படிக்கப் படிக்கப்
பசலைத் தீருமோ
முடிவல்ல என்றே
முகக்குறிக் கூறுமோ
விடிவிளக்கு விழிபிதுங்கி
வெட்கத்தில் நாணுமோ
விடியலை நீட்டிக்க
விண்ணப்ப மெழுதுமோ

கடிப்பட்டக் கழுத்தின்
காயத்தை மறைத்து
கொடிபிடித்து குறைத்தீர்க்க
கொழுநனைக் கேட்டவுடன்
அடிமட்டத் தொண்டனாய்
ஆட்சேபனை எதுமின்றி
நொடியில் முத்தத்தை
நூதலில் பதித்திட

செடிதனில் செங்கதிர்
செய்திடும் மாயத்தை
மடிதனில் வீழ்ந்த
மச்சானும் புரிந்திட
நெடிய பயணத்தில்
நேசன் இவனென்று
அடியவள் மனதில்
அச்சாணி ஆனதின்றே


அ. வேல்முருகன்  




வியாழன், ஆகஸ்ட் 28

நாயகன்


 







காளையை அடக்கி
இளவட்டக்கல் தூக்கி
காதலியை கைப்பிடித்தது
கற்காலம்

நஞ்சையும் புஞ்சையும்
தோப்பும் துரவும்
நாயகன் இவனென
நாடியது ஒருகாலம்

மழையோ வெயிலோ
மாதம் ஒன்றானால்
கைநிறையச் சம்பளம்
இதுவும் கடந்தகாலம்

கற்றக் கல்வியால்
ஏற்றப் பணியில்
கற்றைக் கற்றையாய்
கண்மணி ஈட்டுவதால்

இருக்க இடமும்
உடுக்கத் துணியும்
இன்னும் பிறவும்
எவர்தயவும் வேண்டாததால்

அன்றைய நிகழ்வுகளை
ஆற்றாமையில் பரிமாற
ஆம்மென்றோ அல்லவென்றோ
ஆற்றுப்படுத்துபவனே

தன்நிலைக்குத்
தக்கத்தொரு துணையாய்
பொன்மாலைப் பொழுதில்
கைப்பிடித்து வருபவனே


வியாழன், ஆகஸ்ட் 14

வரட்சி

 









மெளனம்
மெல்லியாளிடம்
மொழிவதற்கு ஏதுமில்லை
மன்னனிடமும்

நாட்கள் கடந்தன
இணையர்கள் எதிரெதிர்
நடமாடிக் கொண்டாலும்
நட்பொன்றுமில்லை

காரணமொன்றுமில்லை
வாக்குவாதம்
தாக்குவாதமானாதால்
தாமரையிலைத் தண்ணீரானது

பிடிவாதம்
வாய்ப்புகளை
வாய்தா வாங்கிக் கொண்டிருக்க
வரட்சியே நிலவியது

நீயா நானா என்று
தீண்டாதிருந்த போது
வேண்டா விருப்பாக
ஏதோவொரு விசாரிப்பு

பற்றிக் கொண்டது
பஞ்சும் நெருப்பும்
பார்க்கலாம் - அடுத்த
அமர்களம் எப்போதென

அ. வேல்முருகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 10

ஆணவத்தின் அடிச்சுவடு

 


 













ஆணவத்தின் அடிச்சுவடு
அச்சனாதன சாதியடுக்கே
ஊனமாக்கிய உன்மனதை
உலுக்கலியே கொலைகளும்

நாணமின்றி மனிதனென
நாட்டில் சொல்லாதே
வீணானச் சாதியை
விட்டொழிய வெல்வாயே

கலப்புமணம் கலகமா
கவர்திழுப்பது பாலினிமா
குலப்பெருமை சிதையுமா
குறத்தியின் முருகனாகிட

உலகெங்கு மில்லா
உயர்சாதி இங்குமட்டும்
விலங்காக இருப்பதேன்
விழித்தெழு மனிதனே

ஆண்டப் பரம்பரை
ஆண்டாண்டு பெருமையா
மாண்ட மன்னரெல்லாம்
மதங்கொணடு திரியலையா

ஊணின்றி உழைத்திட
ஊருவிட்டுப் போகயில
பூணுகின்ற வேடம்
பூரிப்பைத் தருகிறதோ

முறுக்கு பிழிந்து
மூணுவேளைச் சாப்பிட
உறுத்தலில்லை உனக்கு
உழைப்பு என்பதனால்

கிறுக்கா மாறுகிறாய்
கீழ்சாதி அவனென்கிறாய்
இறுகியக் கட்டமைப்பை
ஈடுகாட்டில் எரித்திட்டால்

ஆண்டிகள் அரசனில்லை
அனைவரும் அன்புடையோர்
தீண்டாமை மதங்களில்லை
திருச்சிற்றபலத் திருச்சபையின்

வேண்டாத வேற்றுமைகளை
வெறியாட்டை வேரறுத்து
தோண்டிப் புதைத்திடுவோம்
தோழமையுடன் வாழ்ந்திடுவோம்



அ. வேல்முருகன்

கரிசக் காட்டு காதலி















கரிசக் காட்டுக்
கருத்தம்மா, கனவில்
பரிசம் போட்டேன்
பக்கம் வாயேம்மா

உரிமைக் கோரும்
ஒசந்த மச்சானே
அரிவை வேண்டுவது
அன்பு மட்டுமே

மனசில் நிறைந்தவளே
மாநிறத்து மயிலே
அனல்பேச்சு ஆகாது
அன்பென்றும் மாறாது

அக்குத் தொக்கு
ஆருமில்லை என்றே
சொக்குப்பொடிப் போட்டாலும்
சொக்கிட மாட்டேன்

பருத்தியிலப் பஞ்செடுத்து
பதமாக நூலெடுத்து
ஒருத்தி உனக்கென
ஒருசீலை நெய்தேனடி

முருகன் அழகென்பதும்
முன்கண்ணன் மகனென்பதும்
நெருங்கிடத் தகுதியில்லை
நெஞ்சமதும் ஏற்பதில்லை

உழைத்துக் காத்திட
உறுதியுண்டு நெஞ்சிலே
தழைத்து வாழ்ந்திட
தாரமாய் வாயேன்டி

அழைத்த அன்பனே
ஐந்திணை வாழ்வுதனை
வாழைப்போல் தொடருமெனில்
வாரேன் இணையாக


அ. வேல்முருகன்

முத்தக் கோளாறு

 


 

















அன்பை வெளிப்படுத்த

அனுமதிக்கப் பட்ட – ஓர்

அனிச்சை செயல்

முத்தம் கொடுப்பதே

 

அங்கீகாரத்திற்குப் பின்

அவளிடம் அவனோ

அவனிடம் அவளோ

அனுமதிக் கேட்பதில்லை

 

ஆசையைச் சொல்ல

அதன் போக்கில்

அழுத்தமாய் பதிப்பது

அந்த முத்தம்

 

கோபத்தின் உச்சியில்

கொண்டவன் குளிர

கொடுத்தாலும் மறுத்து

கோளாறு செய்பவன்

 

கொஞ்சி மகிழ்ந்து

கொஞ்சம் விலகினாலும்

கொசுறு கேட்டு

கொட்டமடிப்பது முத்தத்திற்கே

 

கடுந்தவ மிருந்தாலும்

காத்திரு என்றே

கவனித் திருப்பாள்

காய்ச்சல் உச்சமாகிட

 

காரண மாயாமல்

கனப்பொழுதும் கடத்தாமல்

காற்றும் புகுந்திடாமல்

கடையேழு வள்ளலாவர்

 

                              அ. வேல்முருகன்

 


திங்கள், ஆகஸ்ட் 4

முழுநிலவு காயுதடா
















முழுநிலவு காயுதடா
முகங்காட்டிப் போயேன்டா
எழுமாசை கோடிகளடா
என்னவென்று கேளடா

எழுபிறப்பும் என்னுடன்
எழுந்தருள வேண்டுமடா
மழுப்பாமல் மாலையிட
மன்மதப் பயணமடா

பேரின்ப வேள்வியில்
பேதங்கள் ஏனடா
கோரிக்கை வைத்தால்
கொண்டாடிச் செய்திடு

பூரிப்பைக் கண்டு
புதியனத் தேடிடு
பாரியாளை வள்ளல்
பாரியாய் உணர்ந்திடு

அத்தானின் வித்தைகள்
ஆய்வுக் களமாகிட
பித்தான என்மேனி
பிணியைத் தீர்ப்பாயா

ஒத்திசைவா நாமிருக்க
ஒவ்வொரு நாளும்
முத்தத்தில் மூழ்கி
முத்தெடுக்க வருவாயா

                         அ. வேல்முருகன்


பாரத் மாதா கீ ஜெய்

    சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...