ஞாயிறு, நவம்பர் 30

காதலின் இராகங்கள்














வேண்டாம் என்பது
வேதவாக் கல்ல
வேள்வியைத் தொடர
வேண்டுகோள் என்றே

மோகன இராகத்தில்
மௌனமாய் சுரங்களை
ஆனந்த பைரவியாக்கி
ஆவலைத் தூண்டினேன்

ஏகாந்த வேளையில்
எதிரிசையின் எதிரொலியில்
எதிர்பார்ப்பின் இராகங்கள்
எதுவென அறிகிறேன்

சேர்ந்திசையில் ஓத்திசைவு
சேட்டைகள் சங்கதிகள்
சிறுசிறு அலங்காரங்கள்
சிறப்பென அளிக்கிறேன்

அரோகணம் அவரோகணம்
அத்தனையும சஞ்சரித்து
அப்பாடா என்றே
ஆனந்தத்தில் திளைத்திருக்க

மோகனத்தில் முகிழ்ந்திருந்தவள்
விழித்தெழுந்து வேண்டுகிறாள்
கிழக்கு வெளுக்கும்வரை
கீர்த்தனைகள் பாடிட

மனநிலை அறிந்து
மச்சங்கள் ஆய்ந்து
சுரங்களின் சுரங்கங்களை
சுருதியில் தேடிட

கல்யாணி இராகத்தில்
கரகரப் பிரியாவை
கலந்து இசைத்திட
கண்ணாட்டி கண்ணயர்ந்தாள்

இந்நாட்டில் ஏதுவேண்டும்
என்னவள் எனைத்தூண்டி
ஏதோதோ இராகத்தை
எனையறிய வைத்தாளே….!!!!


அ. வேல்முருகன்  



சனி, நவம்பர் 15

ஆனந்த முத்தம்














அதிர்வில்லா முத்தத்தில்
ஆனந்தம் ஏதடி
எதிர்பாரா வேளையில்
எத்தனைச் சுகமடி
உதிரம் கொதிக்க
உதடுகள் துடிக்க
கதிகலங்கும் முத்தத்தை
கண்ணே வழங்கடி

வழங்கிட பெறுவது
வாடிக்கை என்றிருக்க
வழக்கொன்று தொடுத்து
வாய்தா கேட்பது
அழகல்ல என்றே
ஆட்சேபனை செய்கிறேன்
இழப்பெனக்கு என்பதால்
இழப்பீடும் கேட்கிறேன்

கோரிக்கை என்றாலும்
கொடுப்பது கடமையடி
ஓரிடம் உதடென்றால்
ஒவ்வொரு அங்கமும்
போரிடும் நிலையாகுது
பொழுதை கழிக்காதே
பீறிடும் ஆசைகளை
பிறைபோல மறைக்காதே

மறைத்திட மறுத்திட
மனமது மருகுது
திறைச்செலுத்த தினம்தினம்
தித்தித்து திகட்டுது
முறையான முத்தத்தில்
மூழ்கிட மூலதனமாகுது
நிறைவென நின்முத்தம்
நினைவில் நிலைக்குது

அ. வேல்முருகன்

இல்லாள் மகிழ.....




கட்டியவளைக்
கட்டியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டு
காதலடி எனச் சொல்

கவளச் சோறெடுத்து
காயும் நிலவொளியில்
காதலாய் ஊட்டிவிட
அறிவாய் அரிவையின் பார்வை

புன்னை வனத்தில்
புன் சிரிப்புடன்
புதுபுது கதைகளை பேசு
புகலிடமாவாள் உன்னிடம்

கீச்சு கீச்சென்று பேசுவதை
கீரவாணி என்று சொல்
கிச்சு கிச்சு மூட்டுவதை
கிழப் பருவத்திலும் தொடர்

தங்கமே என
தாங்கிப் பிடி
தத்தையெனக் கொஞ்சு
தாரளமாய் அணைத்துக் கொள்

கவிதை வாராதென்றால்
கடிதம் எழுது
காதல் ரசம் சொட்ட சொட்ட
கண்டிப்பாய் கவனிக்கப்படுவாய்

அங்காடிக்கு அழைத்துச்செல்,
ஆச்சரியப் படுத்த
அவள் விரும்பிய
ஆபரணத்தை வாங்கு

அவள் அழுகையை
அலட்சியப்படுத்தாது
அவளோடு சேர்ந்தழுது
ஆதரவாய் இரு

ஒற்றை ரோசாவோ
உனக்குப் பிடித்த ஜாதிமல்லியோ
ஒரு முழமாவது வாங்கி
உன் கையால் சூட்டிடு

ஏழேழு பிறவியும்
என்னிணை நீயேதானென
எண்ணிலடங்கா காரணங்களை
எடுத்துச் சொல்

வடதுருவமோ
தென்துருவமோ
எங்கு வேண்டுமானாலும் செல்
எனினும் திரும்பிவா அவளுக்காக

இத்தனைக்குப் பிறகும்
ஏதோதோ குறைகளை
எண்ணி காண்பிப்பாள்
எனினும் புன்னகையோடிரு

அ. வேல்முருகன்


வெள்ளி, நவம்பர் 7

குறுநகை புரிந்திடு




 











நீ என்னை சந்திக்கும் போதெல்லாம்
இறகுகள் முளைத்து பறக்கிறேன்
உன்னருகாமையில் - நான்
உயிரோடிருப்பதை உணர்கிறேன்

என்றென்றும் எனதானவன் நீ
எனது பகலும் எனது இரவும்
எனது நிழலும் எனது இசையும்
எல்லாமே நீயானதால்

சொல்லிலும் செயலிலும்
சொல்லாத காதலை
என்னில் இருப்பதை
எப்படி அறிய வைப்பேனடா

கோடையில்
கொட்டித் தீர்த்த மழைக்குப் பின்
வானமேடையை அலங்கரிக்கும்
வானவில்லாய்

உன்விழிப் பார்வை
உருவாக்கும் அற்புதங்கள்
என்னில் ஏற்படுத்திய
அதிர்வுகளால் மீளாதிருக்கிறேன்

மனதை நோகடிக்கும் -உன்
மௌனம் கனமானது
குறுநகை புரிந்திரு
குதுகலமாய் நானிருப்பேன்

அ. வேல்முருகன்

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...