புதன், ஜூலை 30

இதுவுமொருத் திருமணம்

 

















நட்டநடு வீதியில்
நாட்டிலுள்ளோர் கூடிட
நாயகன் நாயகியை
இணையாய் ஏற்றுக் கொண்டான்

இட்டத்தோடு
இச்சடங்கு என்றாலும்
எதிர்ப்புகள்
இல்லாமலில்லை

அலங்கார மாளிகையில்லை
ஆங்கொரு கோயிலுமில்லை
மங்கல இசையுமில்லை
மக்கள் சாட்சியாயிருந்தனர்

புத்தாடை அணியவில்லை
அத்தரும் ஜவ்வாதுமில்லை
புழுதிப் படிந்த கூந்தலோடு
கசங்கிக் கிழிந்த சட்டையோடும்

அவர்கள் அன்னியமில்லை
அங்கு வளர்ந்தவர்கள்தான்
ஆயினும் ஈன்றவள்
அழுகிறாள், மகளை அடிக்கிறாள்

வலிகளுக்கிடையே
மகிழ்ச்சி - எனினும்
மயான அமைதி
மாலை மாற்றிக் கொண்டனர்

திலகமிட
குலுங்கி அழுகிறாள் தாய்
கண்ணீரோடு நாயகி
அமைதி சாட்சியாய் ஊர்

அவளுக்கும் அவனுக்கும்
ஈர்ப்பு இருந்ததால்
ஊர் சாட்சியானது
ஒரு காதல் வாழ்வானது


                                     அ. வேல்முருகன்

நட்பின் மேன்மை

 













இழப்பின் பொழுது இன்னலைக் களைந்து
பழகும் மானிடன் பகலவன் ஆவான்
குழப்பம் இருப்பின் குந்தகம் தவிர்த்து
வழக்கைத் தீர்த்து வாட்டம் போக்கி
அளாவி மகிழும் அன்பர் யாரோ
வளர்ப்பர் நட்பை வாழ்நாள் முழுதுமே


அ. வேல்முருகன்


அகங்கார ஆட்டம்

 
















அதிகாரம்
அகங்காரத்தில்
ஆட்டம் போடுகிறது

எல்லையற்ற
எத்தேசதிகாரத்தால்
எதிரியை அடக்க நினைக்கிறது

இழப்பதற்கு
ஏதுமில்லாததால்
எதிரியோ எதிர்த்து நிற்பர்

வீரனைக் கோழையென்று
விவாதித்து
வீணில் மகிழ்வர்

ஊரெல்லாம் தூற்றினாலும்
உறுத்தல் இல்லாது
உலா வருவர்

நடுக்கத்தை
நாற்காலியில் அமர்ந்து
நகையாடி மறைப்பர்

வேதத்தை துணைக்கழைத்து
கொலைக்கானத் தண்டணை
இல்லையெனத் தீர்ப்பெழுதுவர்

பரிபாலினத்தை
பக்கச் சார்புடன்
பகிரங்கமாய் செய்வர்

இயற்கை நீதியின்
இறக்கொடித்து
இறைத் தீர்ப்பென்று கூறுவர்

இத்தனையும் யாதென்று
இங்கிருப்போர் கேட்போரானால்
இதுதான் நாட்டுநடப்பு என்பேன்

அ. வேல்முருகன்

வியாழன், ஜூலை 10

சூட்சமம்

















காதல் சொல்ல வந்தேன்
காதுக் கொடுக்க மறுப்பதேன்
வாதம் செய்து வதைப்பது
வாகைச் சூடி மகிழவா
மோத லென்றும் தொடர்வது
மோகம் கொண்டக் காரணமா
மாதம் மும்முறை வருத்தினாலும்
மாயங்கள் செய்வது முத்தமா

ஆசையாப் பேச வந்தால்
அலட்சியம் காட்டு மன்பே
மீசைக் காரனின் பேச்சு
மீட்டும் வீணையா இல்லையா
ஓசை யின்றி இருந்தால்
ஓய்ந்து போக மாட்டேனடி
பூசைக் குரியது நானல்ல
பூவுல கெங்கும் தேடுமன்பே

ஏங்கும் என்னை வருத்தவா
ஏதோதோ சொல்லி வாட்டுற
தாங்கும் மனது என்றாலும்
தாக்குதலில் வீழ்த்திப் பாக்குற
எங்கும் எதிலும் வெற்றி
என்றே கனவில் மிதக்குற
பொங்கும் அன்பு இல்லாது
புன்னகை முகத்தில் மலராது

எதிர்த்துக் கேள்வி கேட்டிட
ஏனடி முகத்தச் சுருக்குற
அதித அன்பில் அப்படி
அதட்டி வைப்பேன் என்கிற
பதித்த பாவன சீதாராம்
பழகிக் கொள்ளப் பார்க்கிறேன்
சுதியினி சேர்ந்திசையில் மாறாத
சூட்சமம் அறிந்தே நடக்கிறேன்

புறக்கணிப்பு

 













புறக்காரணிகளைச் சொல்லி
புறக்கணிப்புக்குப்
பொழிப்புரை எழுதுகிறாய்
புகலிடம் கேட்டவனிடம்

முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு
அன்பை
ஆய்வுக்கு உட்படுத்துகிறாய்
ஆட்சேபனைகள் கூடாதென்கிறாய்

மென்னிதயம்
என்பொருட்டா மாறியது
அன்பை ஆறறிவால் பார்க்க
கல்லாக்கிக் கொள்ளச் சொன்னதோ

ஏனெதெற்கென
ஏதும் கேட்கமால்
ஆம் போடுவதாயிருந்தால்
ஆகட்டும் பார்க்கலா மென்கிறாய்

உடனிருக்கவும்
ஊர்ச் சுற்றவும்
உத்தரவுகளை நிறைவேற்றவும்
உமா பதியாயிருக்க வேண்டுகிறாய்

அசலனமற்று
அஞ்சலி செலுத்த
ஆயுத்தமாகிறாய்
அடைக்கலமும் மறுக்கிறாய்

கடந்துச் செல்லக்
காரணங்கள்
கண்டுப் பிடித்தப் பிறகு
காதலாவது கத்திரிக்காயவது


                                            அ. வேல்முருகன்  








திங்கள், ஜூலை 7

அரோகரா...................









சங்கிகளுக்கு
சளைத்தவர்களில்லை என
பழனியில் பட்டம் பெற்றவர்கள்
பதவிகாலம் முடிவடைவதால்

பதினாறு ஆண்டுகள் கழித்து
பக்தக் கோடிகளை
பரவசப் படுத்தப்
பரபரப்பாய் திருச்செந்தூரில்

அரோகரா...................
அவனென்னச் சொல்வது
அறநிலையத் துறை - அதிகாரம்
அடியேனிடமிருக்க

கோடிகளைப் புரளவிட்டு
கொள்கை வெங்காயத்தை
கொற்றவன் புறந்தள்ளி
கோஷத்தை மாற்றினான்

புனித நீரைத் தெளித்து
பாவப் பட்ட மக்களை
இரட்சிப்பதன்றோ ஆட்சியாளர்களின்
பகுத்தறிவு

அறுபடையில்
முதலாம் படை வீட்டை
முருக பக்தர்கள்
முற்றுகை யிட்டதால்

இரண்டாம் படைக்கு
இன்று குடமுழுக்கு
மற்றபடை வீட்டில்
மசூதியில்லை அவர்களுக்கு

குடமுழுக்கு
யாகசாலைகள்
தடங்கலின்றி ஆட்சியைத்
தக்க வைக்குமோ

பொற்றாமரைக் குளங்களும்
ஆறுகால பூஜையும்
ஆழித் தேரோட்டமும்
பொற்காலமென எழுதிட

திராவிட மாடலில்
இறங்காத விலைவாசியை
புறந்தள்ளி பம்மாத்தாய்
குமரனுக்கு அரோகரா .............


                                 அ. வேல்முருகன்

மண்ணாசை மரணங்கள்













பாலஸ்தீனக் குழந்தைகள்
பசியாறத் துடிக்கும்
ஓலமின்னும் ஞாலத்து
மக்களுக்கு கேட்கலியோ?

இஸ்ரேலிய ஏவுகணைகளின்
இரக்கமற்றக் கொலைகளை
ஆசீர்வதிப்பீரோ?... ஐயோவென
ஆர்ப்பரித்து எதிர்ப்பீரோ

மாண்ட மக்களுயிர்
அண்டை நாடுகளை
ஏனடாவெனக் கேட்காது
மோனநிலையில் வைத்தது யார்?

உதவிக் கரம்தனை
ஒடுக்கும் நெதன்யாகுவைத்
தடுக்கும்வழித் தெரியலையோ
தடுமாறித்தான் நிற்குரியோ

அமெரிக்காவின் ஐ. நா. வும்
ஆயுளோடிருப்பதாக அரற்றுது
ஹமாஸும், ஈரானும்
அவர்களிருப்பதாய் காண்பிக்குது

யாரிருந்து என்னசெய்ய
ஒருவேளைச் சோற்றுக்குப்
பெண்டுப் பிள்ளைகள்
போராடிச் சாகுதே

பட்டினிக் கொடுமைதனை
பதறும் காணொளிகளாய்
பாரெல்லாம் சுற்றினாலும்
பதறாமல் விடிகிறதே

அகதி முகாம்களும்
மருத்துவ மனைகளும்
கொலைகள இலக்காக
கூசும் பொய்களோடு

தொண்டு நிறுவனங்களின்
தொடர் உதவிகள்
தொடரக் கூடாதென
இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க

பிழைப்போமா எனவறியா
பின்னொரு விடியலில்
உழைக்கவும் கற்கவும்
உயிரைக் காக்குதே

மண்ணாசை மரணங்கள்
மகுடங்களை தக்கவைக்க
மரணங்கள் மகுடங்களை
மண்ணில் புதைக்காதோ

                                    அ. வேல்முருகன்

பாரத் மாதா கீ ஜெய்

    சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...