ஆயிரமாண்டுகள் கடந்தும்
அத்தப்பூக் கோலமிட்டு
அறுசுவை உணவு படைத்து
அம்மாமன்னனை வரவேற்கின்றனர்
அண்டச் சாரச்சரமும்
அவன் காலடியில் என்றிருக்க
அவனோ மூன்றடி மண்ணிற்கு
அவதாரம் எடுத்தானாம்
மேகக் கூட்டத்திலும்
மாமன்னன் தலையிலும்
மண்தேடிய கதையா?
மக்கள் தலைவனை கொன்ற புனைவா?
பாதாளம் சென்றவன்
பணிந்து கேட்டதனால் விழாவா
பரிதவித்த மக்கள்
பரிவட்டம் கட்டியதாலா
இராவணன், பத்மாசுரன்
நரகாசுரனை அழிக்க
நடமாட விட்ட
நயவஞ்சக கதைகள்
பேரரசனின் பேரன்பில்
பெயர்ந்து போனதால்
மகா பலி என்றானதோ
மாமன்னன் வருவானோ
காலமெல்லாம் நினைவில்
மகாபலியை கொண்டதனால்
ஞாலமெங்குமுள்ள மக்கள்
களிக்கொண்டு விழாவாக்கினரோ
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக