ஞாயிறு, ஏப்ரல் 20

தேடல்

 
















இருவருக்குள் இன்னும்
ஏதோதோ தேடல்
எனவே
இணைந்தே இருக்கிறோம்

அன்பிருக்கிறது
ஆயினும்
கொடுபடாதது கொஞ்சமிருப்பதால்
கொஞ்சல்கள் தொடர்கின்றன

அதுபோலவே
எடுப்பதற்கு இன்னுமிருப்பதால்
எதிர்பார்ப்புகள்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது

குறையொன்றுமில்லை என
கூடிக் களித்தப்பின் தோன்றினாலும்
கூட்டாஞ்சோறு
கூவி அழைக்கிறது

தேடலுக்கானத் தேவை
உன்னிடம் எனக்கும்
என்னிடம் உனக்கும்
முற்றுப் பெறாமல் தொடர்கிறது

நிறைவான வாழ்வென்று
நரைபருவத்தில் தோன்றினாலும்
குறையாத காதலே
கூட்டணியின் அச்சாணியானதே

திங்கள், ஏப்ரல் 14

தானமும் தர்மமும்


 






ஏற்றத் தாழ்வுகள்
ஈகைக்கு காரணமா
மாற்றும் நிகழ்வுகள்
மாயத்தில் நடக்குமா

உயர்வும் தாழ்வும்
உழைப்பில் என்றால்
வியர்வை சிந்தியும்
விடியல் இல்லையே

குவியும் சொத்து
கொடுத்துச் சிவக்கவா
புவியின் ராசாவென
புன்னகை பூக்கவா

ஆண்டா னடிமை
ஆண்டாண்டாய் தொடரவா
வேண்டா வெறுப்பா
விதியென் றிருப்பதா

கிடைத்தவன் பிழைக்கவா
கீழானோன் மரணிக்கவா
படைத்தவன் செயலென
பாமரன் ஏற்பதா

மரணத்தின் வாசல்
மாறச் சொல்லுதா
இரக்கத்தின் குணமா
இங்கவை வாழுதா

ஏற்பது இகழ்ச்சியென
எடுத்தியம்பிய ஆத்திசூடி
ஆற்றார் இல்லாத
அகிலம் வேண்டியே

தானமும் தர்மமும்
தரணியில் இல்லையெனில்
மானமும் அறிவும்
மாநிலத்தில் பரவுமே



                                 அ. வேல்முருகன்






செவ்வாய், ஏப்ரல் 8

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்


 









கேலிக் கூத்துக்கள்
காலிப் பெருங்காயமாச்சு
புலிச் சிங்கமில்லை
மலிவான மனிதனென்றே

உச்ச நீதிமன்றம்
எச்சரித்து விட்டப் பின்னும்
எச்சமாக ஏனின்னும்
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாய்

காவிச் சாயத்தில்
கல்வியை மாற்ற
கூவிக் கொண்டிருந்த
ஆர் என் இரவிக்கு

அரசியலமைப்புச் சட்டம்
அறைந்தே சொன்னது
ஆராய்ந்து கொண்டிருக்க
ஆகமமல்ல - மசோதாக்கள்

ஏற்புடையதில்லையெனில்
எடுத்தியம்பு முப்பது நாட்களில்
ஏவலாளிதான் நீயெனில்
என்னவென கேட்டுச்சொல்

வரையறைதனை வழங்கியதால்
வல்லூறுகளின் மூக்குடைந்தது
திரைமறைவு நாடகங்கள்
தெருவுக்கு வந்தது

திராவிடத் திருநாட்டில்
திரவியம் தேடி வந்தவர்கள்
ஆரியம் பயிற்றுவித்தால்
சூரியன் பகுத்தறிவைப் போதிக்கும்

வள்ளுவரோடு
வள்ளலாரையும் வைகுந்தரைவும்
வலிந்து வருணாசிரமத்திற்குள்
வரையறுத்த வஞ்சகத்தையும்

வெல்லும் தமிழ்நாடு
சொல்லும் சூத்திரங்கள்
எல்லா மாநிலத்திற்குமென
துல்லியமானது பாரடா

                                                அ. வேல்முருகன்


சிந்தித்துச் செயலாற்று














சிந்தித்துச் செயலாற்று
சிக்கலைச் சந்தித்தால்
சந்தித்த மனிதரில்
சான்றோனை நாடு

நாடும் யாவையும்
நன்மை கொடுக்கட்டும்
கொடுக்கும் தன்மையால்
கொஞ்சலும் மிஞ்சட்டும்

மிஞ்சும் வஞ்சியிடம்
மீளத் தஞ்சமோ
தஞ்சமெனில் தலையாட்டும்
தஞ்சாவூர் பொம்மையா

பொம்மையா மக்கள்
போக்கிரிகளை நம்பிட
நம்பிதான் ஏமாறுவர்
நாயகன் வருவானென

வருகின்றத் தலைவனோ
வரியால் வருத்திட
வருத்தத்தை மக்கள்
வாக்கால் மாற்றுவர்

மாற்றத்தை உருவாக்கும்
மக்களின் சீற்றம்
சீற்றம் அறிந்து
சிந்தித்துச் செயலாற்று

அ. வேல்முருகன்

சனி, ஏப்ரல் 5

பனிவிழும் மலர்வனம்















பனிவிழும் மலர்வனம்
பரிதியெழ மனங்கவரும்
இனியன நிகழும்
இணையென நீயாக

எனினும் ஏந்திழையே
எங்குனைக்  காண்பேன்
கனிவுடன் வந்தென்
கரம்தனைப்  பற்றுவாயா

தனித்திருக்கும் தலைவனோடு
தாம்பூலம் தரிப்பாயா
நுனிநாக்குச் சிவந்ததை
நுட்பமாய்  சொல்வாயா

பனிக்காலம் உன்மேனி
பரிபாலிக்க நானாச்சு
வேனிலான் வேட்கையுடன்
விளையாடிட விழாவாச்சு

பொழிப்புரை ஒன்றை
பொருட்சுவை யுடனுரைக்க
விழியோ வினவியது
விடைதனை அறிந்ததும்

செழித்த அதரங்கள்
செருக்குடன் சினந்து
பழிக்கும் அழகினை
பார்த்தால் பரவசமே!

                    அ. வேல்முருகன்


கிழவி

குமரனா நீ கோபத்துடன் கோமளவல்லி கேட்க சுருக்கம் விழுந்ததாவென சுறுசுறுவென கண்ணாடியை தேடினவள் பாட்டி வைத்தியத்தை பலமுறைத் தேடி பரிசீலித்துப...