
வந்தேறிகளால்
விரிந்தச் சென்னை
வாழ வழியில்லையென
நம்பிக்கையைக் குலைத்ததா
பனியாக் குஜராத்திக்கும்
“பவன் புரோக்கருக்கும்”
பாதைக்காட்டிய சென்னை
தமிழனுக்குத் தடுமாறுதோ
புறாக் கூண்டாயினும்
இரை இல்லையெனில்
சிறகடித்துத் தேடவேண்டும்
சிறையிலடைந்து சாக வேண்டுமோ
உச்சிமீது வானிடிந்தப் போதிலும்
அச்சமில்லை என்றவன்
ஆகாரத்திற்காகப் பாண்டிச்சேரி
திருவல்லிகேணியென அலைந்திருக்கையில்
உதிரிகள் நாங்கள்
உதவ யாருமில்லாததால்
கிராமத்திற்குப் பயணிக்கிறோம்
கால்வயிறு நிறையுமென
“ஆட்டோ/டாக்ஸி” ஓட்டுநராய்
கட்டிடத் தொழிலாளியாய்
தினக் கூலிகளாய்
திக்கற்று போகிறோம்
கொரோனாவால் மடிவதா
பசியால் சாவதா
ஏதும் அறியாததால்
திரும்பிச் செல்கிறோம்
நகரக் கட்டமைப்புக்கு
நாங்கள் தேவைப்படுவோம்
அப்போதுத் தேடுவீர்
அதுவரை நன்றி
1 கருத்து:
பலரின் நிலை மிகவும் சிரமம்...
கருத்துரையிடுக