ஞாயிறு, ஏப்ரல் 5

இலக்கு - 9 மணி விளக்கு




கொள்ளை நோய்
நூறிலிருக்க
மருத்துவ சேவகனுக்கு
கைத்தட்டு

ஆயிரத்திலிருக்கும்போது
அல்லாவை வணங்குபவனால்
அக்கம்பக்கம்  தொற்றுதென
அவதூறு பரப்பு

நாளைய செய்தியன
எதிர்பார்ப்பை உருவாக்கி
இருக்கும் விளக்கணைத்து
இரவில் தீபமேற்று

நக்கலடிப்பாய்
நன்றாக தெரியும்
விளக்கமாய் விளக்கை
விளக்கிக் கொண்டிருப்பாய்

பகுத்தறிவு சுடர்களை
மடை மாற்றியதற்கு
எக்காளமிட்டல்ல
மௌனமாக சிரிப்பர்

அவர்களின் இலக்கு
முட்டாள் தலைவனென
முச்சந்தியில் உனை
பேச வைப்பது

இங்கேயும் முட்டாள்கள்
மதராஸாவில் கூடுவார்கள்
தென்காசி பக்கம்
திருவிளக்கை திருப்புவார்கள்

நீயோ
அயோத்தி என்பாய்
ஈஷா என்பாய்
இருக்கட்டும் என்பானவன்

ஆக
நீயும் விளக்கேற்று
அந்த இரவிலல்ல
இந்த பகலில்

பகலென்றாலும் - நீ
இருட்டிலிருக்கிறாய்
இலக்கோடு இருப்பவன்
விளக்கேற்ற சொல்கிறான்

வீழ்ந்த பொருளாதாரத்தை
விளக்கச் சொல்
மீட்டெடுக்கும் வழியை
மேய்பரிடம் கேள்

கச்சா எண்ணெய்
100 டாலாராயிருந்த போது
76 ரூ      பெட்ரோல் - இன்று
22 டாலராச்சு கச்சா

4 ல் ஒரு பங்கு
விலை வீழ்ந்தபின்
குறையாத விலைக்கு
விளக்கேற்று

கொள்ளை நோயின்
எல்லை எதுவென்று கேள்
ஒதுக்கிய நிதியின்
பயன்பாட்டை விளக்கச் சொல்

அன்றாடங் காய்ச்சிக்கு
அடுப்பெரிய விளக்கேற்று
அடுத்தநாள் வேலையில்லை
அங்கு விளக்கேற்று

ஓரிரவில் ரூபாய் மதிப்பழித்தாயே
ஓர் ஊரடங்கிற்கு
இரண்டு மாதம் ஏனென
விளக்கேற்று

உண்டு உறங்க
உறைவிடமில்லாது
நீண்ட பயணங்கள் - அங்கே
விளக்கேற்று

ரூ 1000 ரேஷனில்
ரூ 5000 ஓட்டுக்கு
ஒப்பிட்டு உளராதே
விளக்கேற்று

வாராக் கடனும்
வங்கியும் காணாது போகுது
வக்கத்தவனல்ல - வாக்காளன்
விளக்கேற்று

பங்கு சந்தையில்
12000 புள்ளிகள் இறங்க
பல இலட்சம் கோடிகள் காணவில்லை
சென்றவிடம் தேடி விளக்கேற்று

காவலும் கட்டுப்பாடும்
கண்காணிக்கதான்
கசையடிக்கல்ல
விளக்கேற்று

உலகமெல்லாம் இயங்கையிலே
உன்வீட்டு விளக்கணைக்க
ஒளிந்து கொள்ளுமோ வைரஸ்
விளக்கேற்று

மின்சார விளக்கணைக்க
மின் தடுமாற்றம் ஏற்படுமாம்
உன் தடுமாற்றத்திற்கே உதவாதவன்
மின் தடுமாற்றத்திற்கா கவலையுறுவான்

தொகுதிக்கொரு கூட்டம்
இந்துவாகி விளக்கேற்றும்
பக்திக்கெதிராய் பதுங்காதே
கொதித்தெழு கூக்குரலிடு

பஞ்சமனும் சூத்திரனும்
இந்துவென ஒருங்கிணைக்கிறான்
தஞ்சமென்று செல்பவரிடம்
விளக்கேற்று

கிண்டலும் நக்கலும்
கிளர்ச்சியை உருவாக்காது
வெகுண்டெழு - எழுச்சியோடு
விரட்டும் வேலையைசெய்

பிரித்தாளும் சூழ்ச்சிக்கெதிராய்
பகுத்தறிவு சுடரேற்று
உரிமையுண்டு உயிர்வாழ
உனக்கது புரிய விளக்கிவிட்டேன்






5 கருத்துகள்:

Kasthuri Rengan சொன்னது…

அற்புதம் தோழர்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மனதில் நினைத்ததை அப்படியே நயமாக சொல்லி விட்டீர்கள்...

தருமி சொன்னது…

என்னமோ போங்க......

Yarlpavanan சொன்னது…

சிறப்பான வரிகள்
சிந்திப்போம்

http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

அ. வேல்முருகன் சொன்னது…

கருத்துரை வழங்கி அனைவருக்கும் நன்றி

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...