ஞாயிறு, டிசம்பர் 7

திரளழகு











திரளழகை தீபவொளி
திருத்தி எழுதிட
முரணேது முந்தானை
முகமன் கூறிட
மரகதவுடல் மச்சானை
மகிழ்ச்சியில் ஆழ்திட
சரசங்கள் பயின்றிட
சரணடை பேரழகே

நின்னசைவின் எழிலில்
நிலவும் நாணுதடி
பின்னலிடை, பின்னழகு
பிதற்ற விட்டதடி
என்னுறக்கம் கெடுத்தே
ஏகாந்தம் கொல்லுதடி
மன்னவனின் மடிசாய்திட
மாயங்கள் நிகழுமடி

இழுத்துப் பிடித்து
இமயமலை யாக்கினாலும்
தழுவும் தென்றலின்றி
தேகம் சிலிர்காதடி
கொழுநன் குதுகலிக்க
கொடுத்தால் சுகங்களடி
செழுமையான காதல்
சேர்ந்திருக்கும் வாழ்வுதானடி


அ. வேல்முருகன்


 

வெள்ளி, டிசம்பர் 5

பாரத் மாதா கீ ஜெய்

 


 










சிக்கந்தர் தர்கா தூணில்
சிவனின் மகனுக்குத் தீபம்
சி.ஐ.எஸ்.எப் சகிதம்
சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி

உளரல்கள் சட்டமாக
ஊர் வேடிக்கை பார்க்க
உடைந்தன மண்டைகள்
உதவாக்கரை மன்றங்களால்

கலவரத்தை தூண்டுவது
கயவாளிகள் என்றிருக்க
காவிகளுக்கு கட்டளையிடுவது
கருப்பு அங்கிகளா

சட்டங்கள் வளைவதால்
சாக்கடைகளின் நாற்றத்தை
சுத்திகரிக்க வேண்டியது
சமூகம்தான் சர்க்காரல்ல

பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரித்தானிய அடிவருடிகள்
பி.என்.எஸ் ஏவினாலும்
பின்வாங்காதே சமூகமே

அரசியல் சாசன பதவியில்
ஆடும் ஆட்டத்தை
ஆண்டவன் அறியாததால்
ஆரியம் வாழ்ந்திடுமோ

பொய்பொய்யா கதைகளை
பொதுவெளியில் கதைத்தாலும்
பொறிதனில் சிக்கி
பொய்மானின் பின் செல்லாதே

இராமனல்ல ஏமாற
சேவற்கொடிச் சேயோனின்
செந்தமிழ் உறவல்லவா
செகத்தினைக் காத்திடு

அ. வேல்முருகன்

சொக்கப்பனை









குன்றிருக்கு மிடமெல்லாம்
குமரனைத் தேடாத சுவாமி
குத்துக்கல்லின் தீபமேற்ற
குபீரென வருவானா

மச்சு பிச்சுவில்
மூச்சு வாங்குவதால்
முருகன் முடங்கினானா
திருப்பரங்குன்றத்தில்

ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில்
அரோகரா ஒலிக்க
இமயமலையில் எதிரொலித்திட
மதுரையம்பதியில் உத்திரவுகளா

விந்திய சாத்பூர மலைகளில்
விடிய விடிய தேடினாலும்
கார்த்திகேயேன்
கண்ணில் தெரிய மாட்டானா

ஏற்காடு, ஏலகிரியில்
எதிர்பட மாட்டாரா
ஏரவாடா சிறையில்
எவரேனும் அடைத்தார்களா

வயநாட்டில்
வாழாத தெய்வத்தை
மேகமலையில் தேடிட
தரிசனம் தருவானோ

சோதியா சொரூபமா தெரிவது
அப்பனா முருகனா
சாதி இந்து
சாமிநாத கூரய்யா

சொக்கப்பனைக் கொளுத்தி
சொக்கனை சோதியாய்
சோதித்த மக்கள்
மலையேறுவதில்லை

அக்கப்போர் அரஜாகம்
அதுவே தாரகமென
அயோதியாய் மாற்றிட
அணி திரண்டாலும்

ஆடு வெட்டத் தடையென்றால்
ஆர்பரித்தும்
கேடு கெட்டர்வர்கள் தீபமேற்ற
கோபத்தோடே எதிர்த்திடும் தமிழகம்

அ. வேல்முருகன்

செவ்வாய், டிசம்பர் 2

சிறப்பு தீவிர திருத்தம் (S I R)

 














ஓட்டுப் போட்டு ஆவதென்ன
ஒட்டுறவு இந்நாட்டில் என்பதுவோ
நாட்டில் தேர்தல் நடப்பது
நயவஞ்சக அரசியலின் நாடகமோ
காட்டாட்சிக் கட்சிகளின் கரங்களை
கடவுளும் கண்மூடி ஆதரிக்குமோ
கூட்டாட்சி தத்துவங்கள் மடியுமோ
கூழைக் கும்பிடே ஜனநாயகமோ

நோய்வாய் பட்ட குடியரசியல்
நோட்டாவால் நிலமை மாறுமா
மாய்ந்து மாய்ந்து போட்டவோட்டு
மக்களாட்சியை கொண்டு வருமா
வாய்ப்பு மொன்றும் இல்லை
வாக்குத் திருட்டை தடுப்பதற்கே
ஆய்ந்து பாருங்கள் மக்களே
ஆட்சி ஆதிகாரம் அதானிக்கே

குடிமகனென குறிப்பெடுத்து போடுமோட்டு
குறியிடும் மையோடு மறையுமோ
அடிப்படை உரிமையென அணிமாறும்
அவ்வுறுப்பினன் பதவிதனைப் பறித்தால்
துடிப்பாகுமோ ஜனநாயகம் - நாட்டில்
துவண்ட வளர்ச்சிகள் மலருமோ
கடினமென கண்காணாப் போனாலும்
கண்முன்னே புல்டோசர் வருமோ

ஓட்டைச் செலுத்தி உரிமையை
உலகிற்கு உணர்த்திய உத்தமர்களே
கட்சிகளை உடைத்து கணக்கை
கூட்டும் வித்தையில் உன்கடமை
வேட்டைக்குத் தகுந்த அணிகளில்
வெள்ளாட்டில் கறுப்பாட்டைத் தேடுவதா
கூட்டணியில் கொள்கை என்பது
கோட்டையில் கொள்ளை அடிக்கதானே

சாமியும் கோமியமும் சக்திமிக்க
சர்க்காரை அமைக்க உதவினாலும்
பூமியில் இவர்களாட்சி மலாந்திட
பூக்குழியில் இறங்கும் ஆணையர்கள்
தாமிரப் பட்டயத்தில் ஆளுநராய்
தமிழகத்தை ஆட்சிபுரியும் பேறுபெற
யாமிங்கு அளித்த ஓட்டு
யமனாய் ஏமக்கு வந்ததிங்கே


அ. வேல்முருகன்

ஜனநாயகத் தூண்கள்

 













நீதிகள் விற்கப்பட
நீங்கள் ஏற்பீரோ
சேதிகள் திரிக்கப்பட
சோர்ந்து இருப்பீரோ
பிரதிநிதிகள் விலைபோக
பேச்சற்றுப் போவீரோ
அரசமைப்பு நிறுவனங்கள்
அடிமையாக ஆமோதிப்பீரோ

தூண்கள் நான்கும்
தூக்கில் தொங்கட்டும்
மாண்புகள் மறைந்து
மானம் போகட்டும்
வீணென்று நினையாது
வினாக்காள் பிறக்கட்டும்
கூட்டோடு மாற்றிட
கூக்குரல் எழுப்புங்கள்


அ. வேல்முருகன்

ஞாயிறு, நவம்பர் 30

காதலின் இராகங்கள்














வேண்டாம் என்பது
வேதவாக் கல்ல
வேள்வியைத் தொடர
வேண்டுகோள் என்றே

மோகன இராகத்தில்
மௌனமாய் சுரங்களை
ஆனந்த பைரவியாக்கி
ஆவலைத் தூண்டினேன்

ஏகாந்த வேளையில்
எதிரிசையின் எதிரொலியில்
எதிர்பார்ப்பின் இராகங்கள்
எதுவென அறிகிறேன்

சேர்ந்திசையில் ஓத்திசைவு
சேட்டைகள் சங்கதிகள்
சிறுசிறு அலங்காரங்கள்
சிறப்பென அளிக்கிறேன்

அரோகணம் அவரோகணம்
அத்தனையும சஞ்சரித்து
அப்பாடா என்றே
ஆனந்தத்தில் திளைத்திருக்க

மோகனத்தில் முகிழ்ந்திருந்தவள்
விழித்தெழுந்து வேண்டுகிறாள்
கிழக்கு வெளுக்கும்வரை
கீர்த்தனைகள் பாடிட

மனநிலை அறிந்து
மச்சங்கள் ஆய்ந்து
சுரங்களின் சுரங்கங்களை
சுருதியில் தேடிட

கல்யாணி இராகத்தில்
கரகரப் பிரியாவை
கலந்து இசைத்திட
கண்ணாட்டி கண்ணயர்ந்தாள்

இந்நாட்டில் ஏதுவேண்டும்
என்னவள் எனைத்தூண்டி
ஏதோதோ இராகத்தை
எனையறிய வைத்தாளே….!!!!


அ. வேல்முருகன்  



சனி, நவம்பர் 15

ஆனந்த முத்தம்














அதிர்வில்லா முத்தத்தில்
ஆனந்தம் ஏதடி
எதிர்பாரா வேளையில்
எத்தனைச் சுகமடி
உதிரம் கொதிக்க
உதடுகள் துடிக்க
கதிகலங்கும் முத்தத்தை
கண்ணே வழங்கடி

வழங்கிட பெறுவது
வாடிக்கை என்றிருக்க
வழக்கொன்று தொடுத்து
வாய்தா கேட்பது
அழகல்ல என்றே
ஆட்சேபனை செய்கிறேன்
இழப்பெனக்கு என்பதால்
இழப்பீடும் கேட்கிறேன்

கோரிக்கை என்றாலும்
கொடுப்பது கடமையடி
ஓரிடம் உதடென்றால்
ஒவ்வொரு அங்கமும்
போரிடும் நிலையாகுது
பொழுதை கழிக்காதே
பீறிடும் ஆசைகளை
பிறைபோல மறைக்காதே

மறைத்திட மறுத்திட
மனமது மருகுது
திறைச்செலுத்த தினம்தினம்
தித்தித்து திகட்டுது
முறையான முத்தத்தில்
மூழ்கிட மூலதனமாகுது
நிறைவென நின்முத்தம்
நினைவில் நிலைக்குது

அ. வேல்முருகன்

இல்லாள் மகிழ.....




கட்டியவளைக்
கட்டியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டு
காதலடி எனச் சொல்

கவளச் சோறெடுத்து
காயும் நிலவொளியில்
காதலாய் ஊட்டிவிட
அறிவாய் அரிவையின் பார்வை

புன்னை வனத்தில்
புன் சிரிப்புடன்
புதுபுது கதைகளை பேசு
புகலிடமாவாள் உன்னிடம்

கீச்சு கீச்சென்று பேசுவதை
கீரவாணி என்று சொல்
கிச்சு கிச்சு மூட்டுவதை
கிழப் பருவத்திலும் தொடர்

தங்கமே என
தாங்கிப் பிடி
தத்தையெனக் கொஞ்சு
தாரளமாய் அணைத்துக் கொள்

கவிதை வாராதென்றால்
கடிதம் எழுது
காதல் ரசம் சொட்ட சொட்ட
கண்டிப்பாய் கவனிக்கப்படுவாய்

அங்காடிக்கு அழைத்துச்செல்,
ஆச்சரியப் படுத்த
அவள் விரும்பிய
ஆபரணத்தை வாங்கு

அவள் அழுகையை
அலட்சியப்படுத்தாது
அவளோடு சேர்ந்தழுது
ஆதரவாய் இரு

ஒற்றை ரோசாவோ
உனக்குப் பிடித்த ஜாதிமல்லியோ
ஒரு முழமாவது வாங்கி
உன் கையால் சூட்டிடு

ஏழேழு பிறவியும்
என்னிணை நீயேதானென
எண்ணிலடங்கா காரணங்களை
எடுத்துச் சொல்

வடதுருவமோ
தென்துருவமோ
எங்கு வேண்டுமானாலும் செல்
எனினும் திரும்பிவா அவளுக்காக

இத்தனைக்குப் பிறகும்
ஏதோதோ குறைகளை
எண்ணி காண்பிப்பாள்
எனினும் புன்னகையோடிரு

அ. வேல்முருகன்


வெள்ளி, நவம்பர் 7

குறுநகை புரிந்திடு




 











நீ என்னை சந்திக்கும் போதெல்லாம்
இறகுகள் முளைத்து பறக்கிறேன்
உன்னருகாமையில் - நான்
உயிரோடிருப்பதை உணர்கிறேன்

என்றென்றும் எனதானவன் நீ
எனது பகலும் எனது இரவும்
எனது நிழலும் எனது இசையும்
எல்லாமே நீயானதால்

சொல்லிலும் செயலிலும்
சொல்லாத காதலை
என்னில் இருப்பதை
எப்படி அறிய வைப்பேனடா

கோடையில்
கொட்டித் தீர்த்த மழைக்குப் பின்
வானமேடையை அலங்கரிக்கும்
வானவில்லாய்

உன்விழிப் பார்வை
உருவாக்கும் அற்புதங்கள்
என்னில் ஏற்படுத்திய
அதிர்வுகளால் மீளாதிருக்கிறேன்

மனதை நோகடிக்கும் -உன்
மௌனம் கனமானது
குறுநகை புரிந்திரு
குதுகலமாய் நானிருப்பேன்

அ. வேல்முருகன்

வியாழன், அக்டோபர் 9

H1B










H₂O
HbA1c
இதுபோல
H1B இருக்குமோ

கடவுச் சீட்டு அல்லாது
கனவு தேசத்தில் நுழைய
அடிமை ..... அல்ல அல்ல
அனுமதிச் சீட்டாம்

அறிவாளிகளுக்கென
அந்நாளில் வடிவமைத்ததை
அடிமைகளுக்காகவென
மாற்றியமைத்தவர்கள் யார்?

டி. சி. எஸ்., எச். சி. எல்,
இன்போசிஸ், விப்ரோ
இன்னும் சில
மென்பொருள் விற்பன்னர்கள்

2000-3000 டாலருக்கு
சல்லிசாக கிடைக்கும்
சரக்கை வேண்டாமென
ட்ரெம்ப் உரைப்பதேன்

வளரும் இந்தியாவின்
வனப்பைக் குறைக்கவா
வாழும் அமெரிக்கனின்
வாழ்வைச் சிறப்பிக்கவா

ஒராண்டு உழைப்பை
60000-80000 டாலருக்கு
இறக்குமதி செய்ய - கூடுதலாக
90000 டாலரென்றால்

"குய்யோ முய்யோ" வென
கூவாது
"கப்சிப்" என்றிருப்பது
"கார்ப்ரேட் தந்திரமோ"

வந்தேறிகளின் தேசத்தில்
வாழ்வில்லை என்பதால்
வயிறெறிந்தவர்கள்
இருக்கதான் செய்தனர்

அமெரிக்காவை வளப்படுத்தவா
அவதார மெடுத்தாய்
அரிகரன் இல்லையென்றாலும்
அவனவன் தேசம் வளரும்தானே

 

அ. வேல்முருகன்

வியாழன், செப்டம்பர் 25

அறிவேணி ஆசிரியர்

















அறிவேணி ஆசிரியர்
அகரத்தில் ஆரம்பித்து
அறிவியல் ஆயிரம்
அதனுடன் அறநெறி
சிறியோர் நெஞ்சில்
சிறப்புடன் பதித்திட
செறிவுற்ற மாணவனாய்
செயலாற்ற மகிழ்வாரே

கற்போர் யாவரிடமும்
கனவுகளை விதைத்து
பிற்போக்கு எண்ணங்களை
பிழையெனச் சுட்டி
நிற்காதப் பயணத்தில்
நின்நிலை யுணர்த்தி
உற்சாக மளித்திடும்
உறவுதானே ஆசிரியர்

தக்கதொருக் கல்வியை
தாராது தடுத்தே
திக்கற்ற சமுகமா
திருமாலும் வைத்திருக்க
ஏக்கமுற்ற ஏழை
எளியோரின் கல்வியை
சக்தியால் சாதித்தது
சாவித்திரிபாய் பூலேவே

. வேல்முருகன்


ஞாயிறு, செப்டம்பர் 14

நேபாளம்

 









இப்படியெல்லாம்
இந்தியாவின் அண்டை நாட்டில்
இருப்பார்களா மக்கள்

இலங்கை, பாக்கிஸ்தான்
வங்கதேசம் என்றிருந்தது
நேபாளம் வரை வந்து விட்டது

மாடமாளிகைகள்
மந்திரிகளின் வாரிசுகளின்
மகோன்னத வாழ்வு

எளிய மக்களிடம்
ஏன் தீப்பற்ற வைத்தது
சமூக ஊடகங்களை தடுத்ததாலா

அடுத்தாத்து
அடுப்பங்கரையில்
ஏதேனும் புகை…………

மணிப்பூரில்
மாதக்கணக்கில் புகைந்திருக்க
மானுடம் மயங்கிதான் கிடந்தது

அத்தனை அமைப்புகளும்
அடிபணிந்து கிடக்கும் போது
புகையாவது? புடலங்காயாவது?

மக்கள் எழுச்சி
மகுடம் தரித்தவர்களை
மட்டுமா மாற்றும்

மாற்றுச் சிந்தாந்தம்
மக்கள் ஒவ்வொருவரையும்
வாழ்விக்க வாராதோ?

அ. வேல்முருகன்

வெள்ளி, செப்டம்பர் 5

ஓணம்

















ஆயிரமாண்டுகள் கடந்தும்
அத்தப்பூக் கோலமிட்டு
அறுசுவை உணவு படைத்து
அம்மாமன்னனை வரவேற்கின்றனர்

அண்டச் சாரச்சரமும்
அவன் காலடியில் என்றிருக்க
அவனோ மூன்றடி மண்ணிற்கு
அவதாரம் எடுத்தானாம்

மேகக் கூட்டத்திலும்
மாமன்னன் தலையிலும்
மண்தேடிய கதையா?
மக்கள் தலைவனை கொன்ற புனைவா?

பாதாளம் சென்றவன்
பணிந்து கேட்டதனால் விழாவா
பரிதவித்த மக்கள்
பரிவட்டம் கட்டியதாலா

இராவணன், பத்மாசுரன்
நரகாசுரனை அழிக்க
நடமாட விட்ட
நயவஞ்சக கதைகள்

பேரரசனின் பேரன்பில்
பெயர்ந்து போனதால்
மகா பலி என்றானதோ
மாமன்னன் வருவானோ

காலமெல்லாம் நினைவில்
மகாபலியை கொண்டதனால்
ஞாலமெங்குமுள்ள மக்கள்
களிக்கொண்டு விழாவாக்கினரோ

அ. வேல்முருகன்

டொனால்டு டிரம்ப்








கூறையேறி
கொக்கரிக்கும் கோழியை
நிமிர்ந்து பார்த்தாலும்
கடந்துச் செல்வர் மக்கள்

சீனாவிற்கு 100%
இந்தியாவிற்கு 50%
கூடுதல் வரியென்றவனை
குட்டியது உள்ளூர் பஞ்சாயத்து

வானளாவிய அதிகாரமென
வரிந்துக் கட்டியவர்கள்
சரிந்து போனதை
சரித்திரம்காட்டியதை போல

சீனா, இரஷ்யா
இந்தியா வடகொரியா
அணித் திரண்டவுடன்
அஸ்திவாரம் ஆட்டம் கண்டது

ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அயலக மாணவர்களுக்கானதென
அதன் நிதியை மறுக்க
நீதி காத்துக் கொண்டிருக்கிறது

அமெரிக்காவை
அகில உலக வசூல் மயமாக்கிய
ஐந்து இந்தியர்கள்
அமெரிக்காவிற்குத் தேவை

இந்தியக் கடல் உணவுகள்
ஆடை, தோல் பொருட்கள்
கூடுதல் வரியால் தடுப்பது
இந்தியா வளரக் கூடாததாலா

சுந்தர் பிச்சையும்
சத்திய நாடெல்லாவும்
இந்திரா நூயியும்
இன்னும் பலரும்

அமெரிக்காவை வளமாக்கினாலும்
இந்தியாவிற்காக
குரல்கொடுக்க முடியாதவர்களாயினும்
இங்கிருக்கும் நீங்கள் குரலற்றவர்களா



அ. வேல்முருகன்

திங்கள், செப்டம்பர் 1

வீதிக்கொரு கோயில்


 









வீதிக்கொரு கோயிலுண்டு
வீணாக மக்களை பிரித்துக்கொண்டு
சாதிக்கொருச் சாமியுண்டு
சட்டமாக்கி வைத்துக் கொண்டு
ஆதிக்கச்சாதி அத்தனையும்
அவர்களே உயர்ந்தவர்களென்று
சாதிக்க நினைப்பதை
சமாதிக்கு, என்று அனுப்புவதென்று

கேள்விகேட்டது யார்யார்?
கேட்காது முட்டாளாய் வாழ்வதுயார்?
நாளும் நட்சத்திரமும்
நடமாடுமுனை பாதிக்குமென சொன்னவரா?
மீளும்வழி இதுவென்று
மேடைதோறும் முழங்கிய பெரியோரா?
ஏளனசாதி என்பதற்கு
ஏன்உன் சாமியும் அடையாளமாகுதையா!!

சாதிகுல பெருமையெல்லாம்
சரித்திரத்தில் வீழ்ந்து கிடக்குதையா
மேதினியில் மேனிமறைக்கும்
மேலாடைக்கு வரிவிதித்தது யாரய்யா
நீதிவேண்டு மெனில்
நீதுறக்க வேண்டியது சாதியல்ல
ஆதிகுலச் சாமிகளை
அபகரித்த அவதாரக் கடவுள்களை

புத்தனை ஓழித்ததேன்
புத்தியை தீட்டு என்றதனாலே
பித்தான நம்பிக்கையால்
பிறமதக் கடவுளை வெறுத்ததேன்
முத்தான உடன்பிறப்பு
முப்பாட்டன் சாமியை மறுத்திட
தத்துவம் எதுவென்று
தள்ளாடல் வந்தால் நீமானுடனே

மொழியால் உன்னின
முகவரி போதுமென நினைத்தால்
வழிவழி வந்த சாமியும்
வாமனனாய் விரிந்த சாதியையும்
குழித்தோண்டிப் புதைத்திட
கூட்டுறவில் மனிதம் வாழ்ந்திடும்
அதைத்தாண்டி ஆதிசங்கரன்
அவதரித்தாலும் அன்புதான் செழித்திடும்


அ. வேல்முருகன்

வெள்ளி, ஆகஸ்ட் 29

விடியலை நீட்டிக்க

 












துடிக்கத் துடிக்கத்
துவளச் செய்து
கொடியிடைத் தன்னில்
கொட்டும் அடித்து
வடிவழகே வசந்தமே
வசனம் படித்து
அடிமனதில் நங்குரமாய்
அமர்ந்த வேலவா

படிக்கப் படிக்கப்
பசலைத் தீருமோ
முடிவல்ல என்றே
முகக்குறிக் கூறுமோ
விடிவிளக்கு விழிபிதுங்கி
வெட்கத்தில் நாணுமோ
விடியலை நீட்டிக்க
விண்ணப்ப மெழுதுமோ

கடிப்பட்டக் கழுத்தின்
காயத்தை மறைத்து
கொடிபிடித்து குறைத்தீர்க்க
கொழுநனைக் கேட்டவுடன்
அடிமட்டத் தொண்டனாய்
ஆட்சேபனை எதுமின்றி
நொடியில் முத்தத்தை
நூதலில் பதித்திட

செடிதனில் செங்கதிர்
செய்திடும் மாயத்தை
மடிதனில் வீழ்ந்த
மச்சானும் புரிந்திட
நெடிய பயணத்தில்
நேசன் இவனென்று
அடியவள் மனதில்
அச்சாணி ஆனதின்றே


அ. வேல்முருகன்  




வியாழன், ஆகஸ்ட் 28

நாயகன்


 







காளையை அடக்கி
இளவட்டக்கல் தூக்கி
காதலியை கைப்பிடித்தது
கற்காலம்

நஞ்சையும் புஞ்சையும்
தோப்பும் துரவும்
நாயகன் இவனென
நாடியது ஒருகாலம்

மழையோ வெயிலோ
மாதம் ஒன்றானால்
கைநிறையச் சம்பளம்
இதுவும் கடந்தகாலம்

கற்றக் கல்வியால்
ஏற்றப் பணியில்
கற்றைக் கற்றையாய்
கண்மணி ஈட்டுவதால்

இருக்க இடமும்
உடுக்கத் துணியும்
இன்னும் பிறவும்
எவர்தயவும் வேண்டாததால்

அன்றைய நிகழ்வுகளை
ஆற்றாமையில் பரிமாற
ஆம்மென்றோ அல்லவென்றோ
ஆற்றுப்படுத்துபவனே

தன்நிலைக்குத்
தக்கத்தொரு துணையாய்
பொன்மாலைப் பொழுதில்
கைப்பிடித்து வருபவனே


வியாழன், ஆகஸ்ட் 14

வரட்சி

 









மெளனம்
மெல்லியாளிடம்
மொழிவதற்கு ஏதுமில்லை
மன்னனிடமும்

நாட்கள் கடந்தன
இணையர்கள் எதிரெதிர்
நடமாடிக் கொண்டாலும்
நட்பொன்றுமில்லை

காரணமொன்றுமில்லை
வாக்குவாதம்
தாக்குவாதமானாதால்
தாமரையிலைத் தண்ணீரானது

பிடிவாதம்
வாய்ப்புகளை
வாய்தா வாங்கிக் கொண்டிருக்க
வரட்சியே நிலவியது

நீயா நானா என்று
தீண்டாதிருந்த போது
வேண்டா விருப்பாக
ஏதோவொரு விசாரிப்பு

பற்றிக் கொண்டது
பஞ்சும் நெருப்பும்
பார்க்கலாம் - அடுத்த
அமர்களம் எப்போதென

அ. வேல்முருகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 10

ஆணவத்தின் அடிச்சுவடு

 


 













ஆணவத்தின் அடிச்சுவடு
அச்சனாதன சாதியடுக்கே
ஊனமாக்கிய உன்மனதை
உலுக்கலியே கொலைகளும்

நாணமின்றி மனிதனென
நாட்டில் சொல்லாதே
வீணானச் சாதியை
விட்டொழிய வெல்வாயே

கலப்புமணம் கலகமா
கவர்திழுப்பது பாலினிமா
குலப்பெருமை சிதையுமா
குறத்தியின் முருகனாகிட

உலகெங்கு மில்லா
உயர்சாதி இங்குமட்டும்
விலங்காக இருப்பதேன்
விழித்தெழு மனிதனே

ஆண்டப் பரம்பரை
ஆண்டாண்டு பெருமையா
மாண்ட மன்னரெல்லாம்
மதங்கொணடு திரியலையா

ஊணின்றி உழைத்திட
ஊருவிட்டுப் போகயில
பூணுகின்ற வேடம்
பூரிப்பைத் தருகிறதோ

முறுக்கு பிழிந்து
மூணுவேளைச் சாப்பிட
உறுத்தலில்லை உனக்கு
உழைப்பு என்பதனால்

கிறுக்கா மாறுகிறாய்
கீழ்சாதி அவனென்கிறாய்
இறுகியக் கட்டமைப்பை
ஈடுகாட்டில் எரித்திட்டால்

ஆண்டிகள் அரசனில்லை
அனைவரும் அன்புடையோர்
தீண்டாமை மதங்களில்லை
திருச்சிற்றபலத் திருச்சபையின்

வேண்டாத வேற்றுமைகளை
வெறியாட்டை வேரறுத்து
தோண்டிப் புதைத்திடுவோம்
தோழமையுடன் வாழ்ந்திடுவோம்



அ. வேல்முருகன்

கரிசக் காட்டு காதலி















கரிசக் காட்டுக்
கருத்தம்மா, கனவில்
பரிசம் போட்டேன்
பக்கம் வாயேம்மா

உரிமைக் கோரும்
ஒசந்த மச்சானே
அரிவை வேண்டுவது
அன்பு மட்டுமே

மனசில் நிறைந்தவளே
மாநிறத்து மயிலே
அனல்பேச்சு ஆகாது
அன்பென்றும் மாறாது

அக்குத் தொக்கு
ஆருமில்லை என்றே
சொக்குப்பொடிப் போட்டாலும்
சொக்கிட மாட்டேன்

பருத்தியிலப் பஞ்செடுத்து
பதமாக நூலெடுத்து
ஒருத்தி உனக்கென
ஒருசீலை நெய்தேனடி

முருகன் அழகென்பதும்
முன்கண்ணன் மகனென்பதும்
நெருங்கிடத் தகுதியில்லை
நெஞ்சமதும் ஏற்பதில்லை

உழைத்துக் காத்திட
உறுதியுண்டு நெஞ்சிலே
தழைத்து வாழ்ந்திட
தாரமாய் வாயேன்டி

அழைத்த அன்பனே
ஐந்திணை வாழ்வுதனை
வாழைப்போல் தொடருமெனில்
வாரேன் இணையாக


அ. வேல்முருகன்

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...