புதன், மே 21

நளினம்

 













கற்றைக் கூந்தலில் பூச்சூடி
கட்டுடலில் ஆடைச் சூடி
சிற்றிடை தன்னில் சிறையிட்டு
சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே
பற்றற்று வாழ்ந்த பாமரனை
பரிதவிக்க விட்ட பாவைநின்
கொற்றத்தில் ஆட்பட்ட என்னை
கொஞ்சிட தடைகள் ஏனடியோ


நளின அசைவுகளில் அதிர்ந்தது
நாடோ நிலமோ அல்ல
ஒளியின் அழகை ஒய்யாரி
ஒருத்தியால் பெற்ற நானே
களிறும் காளையுங் கடக்க
காதல் கொண்ட நானோ
துளிரு மன்பால் வேண்டுகிறேன்
துணையாய் வாடி வாழ்ந்திடவே

                                     அ. வேல்முருகன்


சனி, மே 10

அடையாளம்






ஆதி மனிதர்கள்
ஆதாம் ஏவாள் போல
அவர்கள் வாழ நினைத்தனர்

தேர்ந்தெடுக்க
தேவனுக்கும் தேவிக்கும்
வாய்பில்லாமலிருந்தது

ஆளுக்காருத் திசையில்
அவர்களின் பயணங்கள்
ஆயினும் சந்திப்பார்கள்

ஆக, அடையாளங்கள்
அநாகரிமென்று
அவர்களுக்குப் பட்டதால்

மோதிரமும் தாலியும்
மோதலின் போது
முன்னிருத்தும் ஆயுதமானதாலும்

மோகன இராகத்தில்
சட்ஜமும் பஞ்சமும் ரசித்தவர்கள்
அபசுரங்கள் கூடாதென்கிறார்கள்

கட்டுப்பாடுகளற்ற
காருண்யவாதிகள்
கலந்திருக்க நினைத்தனர்

கற்பனாவாதிகளுக்கு
காரியங்கள் சலிப்பூட்ட
கடையடைப்புச் செய்தனர்

சனாதானம் ஏற்படுத்தியச்
சடங்குகள்
சல்லி சல்லியா நொறுங்கியது

பொருளாதாரச் சுதந்திரம்
பொருட்சுவையைக் கூட்டாது
பொருட்சிதைவைக் உண்டாக்க

பொருந்தாமை உருவானது
பொருட்படுத்தாதோர் சிலர்
பொங்கியெழுந்தவர் சிலர்

அச்சமென்ன என
உச்ச நீதிமன்றம் சென்று
துச்சாதனன் அவனென்று

வழக்கான்றைத் தொடுத்து
வகை மோசத்திற்கு
வலி நிவாரணம் கேட்க

பொருள் ஆதாரமாக
இருளகற்றும் அறிவு
இல்வாழ்வை முறிக்குமோ

ஆட்சேபனையின்றி
அதிகரித்து வரும் போக்கை
ஆராய்சிதான் செய்ய முடியுமா

குறுக்கு விசாரணையில்
கிடுக்கிப்பிடிக் கேள்விகள்
சிறந்த தீர்ப்புக்கு வழிவகுக்குமா

தனக்கானப் பாதையை
தெளிந்த அறிவில்
வகுக்கத் தெரிந்தவர்கள்

எதற்கும் சம்மதமென
எடுக்கும் முடிவில்
ஏமாற்றப் பட்டால்

இரண்டாண்டுக்குள்
இடறுகிற போது
எடுக்கும் முடிவுகள்

பிரிவுதான் வழியென
அரிய வாழ்வுதனை
எரித்திடாது காத்திடவும்

திருமணம்தான் இலக்கெனில்
தீர்த்துச் சொல்லிக்
காத்திருங்கள்

அன்பு பிணைப்பில்
ஆண்டாண்டு காலம்
அன்றிலாய் வாழ்ந்திடலாம்

பலகாலம் வாழ்ந்தவர்
நிலவோடு உலவுவர்
ஓலமிடுவதில்லை

கண்ணே அமுதே என்றரற்றி
கனியுடன் பழமுண்டு
கசக்குதே என

பூவை நசுக்குவதும்
வண்டை மிதிப்பதும்
பொல்லாப்பில்தானே முடியும்

கற்பழிப்புக் கதையெழுதி
கட்டளை வேண்டுமென்றால்
கடைச்சாரக்கா நீதி

வியாழன், மே 8

பேரண்டத்தின் பேரழகி

 












கெண்டைக் கண்கள்
தண்டைக் கால்கள்
அண்டை அயலார்
அண்ட நினைக்கும்
பேரண்டத்தின் பேரழகி


சிவந்த அதரங்களால்
சிந்தியச் சொற்கள்
அட்சரச் சுத்தமாய்
ஆலாபனைச் செய்திட
ஆனந்தத் தாண்டவமாடினேன்

அலங்காரமா பிறையிலிட்ட
அத்திலகமும் நீரும்
அழகுதனைக் கூட்டவா
உலகம் மறந்து
உன்மத்தம் ஆக்கிடவா

எட்டு மடிப்பும் கலையாத
பட்டுச் ஜரிகைச் சேலையில்
கட்டுக் குலையாதவள்
கட்டுத்தறிக் காளைதனை
கட்டுப் படுத்திட

கால் கையசைத்து
கன்னக்குழி விழ
புன்னகையுடன் கதைக்கும்
கவித்துவ அழகை
கண்ணிமை மூடாது ரசித்திட

இளமையின் வளமையால்
களவுபோன எம்மனதை
கொள்ளைக் கொண்டவள்
உள்ளத்தில் உள்ளதாவென
ஊடுறுவிப் பார்த்திட

கலம்பகம் எழுதி
கலகங்கள் செய்து
காதலாய் பார்த்திட
செயற்கை நுண்ணறிவு
செதுக்கியச் சிற்பமாம்

 


ஞாயிறு, மே 4

கிழவி
















குமரனா நீ
கோபத்துடன்
கோமளவல்லி கேட்க

சுருக்கம் விழுந்ததாவென
சுறுசுறுவென
கண்ணாடியை தேடினவள்

பாட்டி வைத்தியத்தை
பலமுறைத் தேடி
பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தாள்

பப்பாளி, பாசிப்பயிறு
கசகசா என
எக்கச்சக்கமா சோதித்து

மாற்றம் தெரியுதா?
மறுவாரம் கேட்கிறாள்
என் கிழத்தி எனக்கு கிழவிதானே


                                         அ. வேல்முருகன்

முனீர் அகமது -மீனல்

 


மாநிலம் அறியா
மறைக்கப்பட்டத் திருமணம்
மாய வித்தைகளால்
கண்டங்கள் கடந்து அறியப்பட்டது

மாதராய் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமா
முனீரின் மீனல்
முத்தாய்ப்பாய் சொல்வாளா

பாரதியைக் கொண்டாடும்
பாரதப் புதல்வர்கள்
பாகிஸ்தான் பெண்ணை மணந்ததால்
பணிநீக்கம் செய்தனர்

பார்வைகள் பரிமாறி
பாரதத்தின் மருமகளாய்
பலதேசத்து மகளிர்
பாங்குடன் வாழ்ந்திட

பாகிஸ்தான் பகையானதால்
“பாரா மிலிட்டரி”க் காரன்
பாவம் செய்ததாய்
பஞ்சாயத்து முடிவு செய்தது

தாய்வழிச் சொந்தமென்றும்
தகுந்த ஆதாரத்தை
தக்கச் சமயத்தில் பகிர்ந்திருந்தும்
தண்டணை உறுதி செய்யப்படுகிறது

தேச அச்சுறுத்தலென
தேச பக்தர்கள்
தேசிய பத்திரிக்கைகள்
தேம்பி அழுதப்பின்

“பாரா மிலிட்டரி”க் காரனின்
பணிநீக்க உத்தரவு
பாரெல்லாம் அறிந்தபின்
பாதிக்கப்பட்டவனுக்கு அளித்தனர்

2017 -ல் பணியில் சேர்ந்து
2022 -ல் தகவல்கள் அளித்து
2024 -ல் அனுமதிப் பெற்றதாக
2025 -ல் போபாலில் கூறுகிறான்

வயிராற உண்ணவே
"பாரா மிலிட்டரி" பணி 
உயிர் போகுமென்றிந்து
ஒப்படைத்தவனின்  

தீராக் காதலை
தீவிரவாதிகளைப் போல்
தீர்த்து விடாதீர்கள்
தீர்ப்புகள் மாறட்டும்

தீவிரவாதம்
தேசத்தை மட்டுமா சீர்குலைத்தது
மேவிய காதலையும்
மூழ்கடிக்குதே

முனீர் – மீனலை
முடக்கி
மானுடத்தைக் கொல்லாதீர்
மனுநீதியென பிதற்றாதீர்


                                  அ. வேல்முருகன்

ஞாயிறு, ஏப்ரல் 20

தேடல்

 
















இருவருக்குள் இன்னும்
ஏதோதோ தேடல்
எனவே
இணைந்தே இருக்கிறோம்

அன்பிருக்கிறது
ஆயினும்
கொடுபடாதது கொஞ்சமிருப்பதால்
கொஞ்சல்கள் தொடர்கின்றன

அதுபோலவே
எடுப்பதற்கு இன்னுமிருப்பதால்
எதிர்பார்ப்புகள்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது

குறையொன்றுமில்லை என
கூடிக் களித்தப்பின் தோன்றினாலும்
கூட்டாஞ்சோறு
கூவி அழைக்கிறது

தேடலுக்கானத் தேவை
உன்னிடம் எனக்கும்
என்னிடம் உனக்கும்
முற்றுப் பெறாமல் தொடர்கிறது

நிறைவான வாழ்வென்று
நரைபருவத்தில் தோன்றினாலும்
குறையாத காதலே
கூட்டணியின் அச்சாணியானதே

திங்கள், ஏப்ரல் 14

தானமும் தர்மமும்


 






ஏற்றத் தாழ்வுகள்
ஈகைக்கு காரணமா
மாற்றும் நிகழ்வுகள்
மாயத்தில் நடக்குமா

உயர்வும் தாழ்வும்
உழைப்பில் என்றால்
வியர்வை சிந்தியும்
விடியல் இல்லையே

குவியும் சொத்து
கொடுத்துச் சிவக்கவா
புவியின் ராசாவென
புன்னகை பூக்கவா

ஆண்டா னடிமை
ஆண்டாண்டாய் தொடரவா
வேண்டா வெறுப்பா
விதியென் றிருப்பதா

கிடைத்தவன் பிழைக்கவா
கீழானோன் மரணிக்கவா
படைத்தவன் செயலென
பாமரன் ஏற்பதா

மரணத்தின் வாசல்
மாறச் சொல்லுதா
இரக்கத்தின் குணமா
இங்கவை வாழுதா

ஏற்பது இகழ்ச்சியென
எடுத்தியம்பிய ஆத்திசூடி
ஆற்றார் இல்லாத
அகிலம் வேண்டியே

தானமும் தர்மமும்
தரணியில் இல்லையெனில்
மானமும் அறிவும்
மாநிலத்தில் பரவுமே



                                 அ. வேல்முருகன்






செவ்வாய், ஏப்ரல் 8

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்


 









கேலிக் கூத்துக்கள்
காலிப் பெருங்காயமாச்சு
புலிச் சிங்கமில்லை
மலிவான மனிதனென்றே

உச்ச நீதிமன்றம்
எச்சரித்து விட்டப் பின்னும்
எச்சமாக ஏனின்னும்
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாய்

காவிச் சாயத்தில்
கல்வியை மாற்ற
கூவிக் கொண்டிருந்த
ஆர் என் இரவிக்கு

அரசியலமைப்புச் சட்டம்
அறைந்தே சொன்னது
ஆராய்ந்து கொண்டிருக்க
ஆகமமல்ல - மசோதாக்கள்

ஏற்புடையதில்லையெனில்
எடுத்தியம்பு முப்பது நாட்களில்
ஏவலாளிதான் நீயெனில்
என்னவென கேட்டுச்சொல்

வரையறைதனை வழங்கியதால்
வல்லூறுகளின் மூக்குடைந்தது
திரைமறைவு நாடகங்கள்
தெருவுக்கு வந்தது

திராவிடத் திருநாட்டில்
திரவியம் தேடி வந்தவர்கள்
ஆரியம் பயிற்றுவித்தால்
சூரியன் பகுத்தறிவைப் போதிக்கும்

வள்ளுவரோடு
வள்ளலாரையும் வைகுந்தரைவும்
வலிந்து வருணாசிரமத்திற்குள்
வரையறுத்த வஞ்சகத்தையும்

வெல்லும் தமிழ்நாடு
சொல்லும் சூத்திரங்கள்
எல்லா மாநிலத்திற்குமென
துல்லியமானது பாரடா

                                                அ. வேல்முருகன்


சிந்தித்துச் செயலாற்று














சிந்தித்துச் செயலாற்று
சிக்கலைச் சந்தித்தால்
சந்தித்த மனிதரில்
சான்றோனை நாடு

நாடும் யாவையும்
நன்மை கொடுக்கட்டும்
கொடுக்கும் தன்மையால்
கொஞ்சலும் மிஞ்சட்டும்

மிஞ்சும் வஞ்சியிடம்
மீளத் தஞ்சமோ
தஞ்சமெனில் தலையாட்டும்
தஞ்சாவூர் பொம்மையா

பொம்மையா மக்கள்
போக்கிரிகளை நம்பிட
நம்பிதான் ஏமாறுவர்
நாயகன் வருவானென

வருகின்றத் தலைவனோ
வரியால் வருத்திட
வருத்தத்தை மக்கள்
வாக்கால் மாற்றுவர்

மாற்றத்தை உருவாக்கும்
மக்களின் சீற்றம்
சீற்றம் அறிந்து
சிந்தித்துச் செயலாற்று

அ. வேல்முருகன்

சனி, ஏப்ரல் 5

பனிவிழும் மலர்வனம்















பனிவிழும் மலர்வனம்
பரிதியெழ மனங்கவரும்
இனியன நிகழும்
இணையென நீயாக

எனினும் ஏந்திழையே
எங்குனைக்  காண்பேன்
கனிவுடன் வந்தென்
கரம்தனைப்  பற்றுவாயா

தனித்திருக்கும் தலைவனோடு
தாம்பூலம் தரிப்பாயா
நுனிநாக்குச் சிவந்ததை
நுட்பமாய்  சொல்வாயா

பனிக்காலம் உன்மேனி
பரிபாலிக்க நானாச்சு
வேனிலான் வேட்கையுடன்
விளையாடிட விழாவாச்சு

பொழிப்புரை ஒன்றை
பொருட்சுவை யுடனுரைக்க
விழியோ வினவியது
விடைதனை அறிந்ததும்

செழித்த அதரங்கள்
செருக்குடன் சினந்து
பழிக்கும் அழகினை
பார்த்தால் பரவசமே!

                    அ. வேல்முருகன்


வெள்ளி, மார்ச் 28

விவசாயம் காப்போம்















காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு

வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்

சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்

இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே

கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு

கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்

வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க

மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க


                      அ. வேல்முருகன்







களவுமணம்

 















களவுமணம் கலக்கமே
காதல்களம் காண்போர்க்கு
காண்போர் யாவரும்
காதுபட பேசவே

பேசும் செய்திகள்
பெற்றோர் அறிந்திட
அறிந்தும் அறியாததாய்
அரண்தனை பலப்படுத்திட

பலப்படுத்திய செய்தியை
பரிதவிப்பாய் தெரிவித்திட
தெரிந்த தலைவன்
தேவியை மீட்டிட

மீட்டிய இராகத்தில்
மேளதாளம் முழங்கிட
முழங்கிய வேகத்தில்
முத்தங்கள் பரிமாறிட

பரிமாறிய முத்தங்கள்
பாற்கடலாய் உருமாற
உருமாறிய உத்தமி
ஊணுறக்கம் மறந்தாள்

மறக்க முடியுமா?
மன்னவன் பரிசை
பரிசின் காரணம்
பற்றிய களவுமணமே!


                     அ. வேல்முருகன்


செவ்வாய், மார்ச் 11

மெல்லியலாள் மேதினியை ஆளட்டும்






விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் சிறந்திட

சிறந்த கல்வியால்
சிந்தனை பெருகட்டும்
அறத்தின் வழியே
அன்பு பரவட்டும்

பரவும் செய்தியால்
பந்தங்கள் உருவாகட்டும்
அரசும் விழித்து
ஆற்றலை மெச்சட்டும்

மேச்சிடவே மெல்லியலாள்
மேதினியை ஆளட்டும்
அச்சாணி அவளென்றே
ஆன்றோர் வாழ்த்தட்டும்

வாழ்த்தில் மயங்காது
வாழ்க்கை தொடரட்டும்
ஏழ்மையை எதிர்கொள்ள
எல்லையை வகுக்கட்டும்

வகுக்கும் திட்டங்களால்
வாழ்வை மாற்றிடு
மகுடமாகும் உனக்கது
மகிழ்ச்சியாகும் மக்களுக்கு


                                  அ. வேல்முருகன்



தன்னிலை மயக்கமேன்














தன்னிலை மயக்கமேன்
தண்ணீரில் மிதப்பதேன்
உன்நிலை மறக்கவா
உயிரைதான் மாய்க்கவா

இன்னிலை வாடாதோ
இளங்குருத்து கருகாதோ
நன்னிலை உயர்வன்றோ
நாநிலமும் மதிக்குமன்றோ

ஈட்டிய வருமானம்
ஈரற்குலை எரிக்கவா
வேட்டி அவிழ்ந்திட
வெட்கமின்றி சரியிற

நாட்டியம் ஆடுற
நாயோடு உறங்குற
போட்டியான உலகில்
பொறுப்பின்றி திரியுற

ஆறுகால பூசையிலே
அயர்ந்துறங்கும் கடவுளும்
ஊருலகம் உறவுமுறை
உன்நலம் காக்காது

கருவூலம் நிறைந்திட
கப்பம்தனை கட்டாதே
அருமையான வாழ்வுதனை
அறைகுறையா வாழாதே

                             அ. வேல்முருகன்

புதன், மார்ச் 5

விழித்தெழு பெண்ணே











விழித்தெழு பெண்ணே
வித்தைகள் பழகிட
பழகிடும் வேளையில்
பகுத்தறிவை வளர்த்திடு

வளர்ந்திட்ட அறிவால்
வானத்தை களமாக்கு
களத்திலே சனிதனை
கோளென கொண்டாடு

கொண்டாட ஏழரை
கோலெடுத்து தண்டிக்கலாம்
தண்டிக்க எதிர்திடு
தரவுகளால் நிறுவிடு

நிறுவிட இராகுகேது
நிலவிற்குள் உறங்காது
உறங்கும் யாரையும்
உணர்வுட்டி எழுப்பிடு

எழுந்தால் சோதிடம்
எங்கும் வாழாது
வாழாத எதுவும்
வழக்கொழிந்து போகும்

போனபின் அறிவியலாய்
போலிகள் சான்றிடுவர்
சான்றுகள் சாட்சியின்றி
சாக்காட்டை நோக்கட்டுமே


அ. வேல்முருகன்



திங்கள், மார்ச் 3

விழித்தெழு பெண்ணே

 


விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் வெல்லடி

ஊழியல்லக் கண்ணே
உளவுறுதிக் கொள்ளடி
வாழியென வையகம்
வாழ்த்தும் பாரடி

கற்பெனப் பெண்மையை
கடைவீதிச் சரக்காக்கி
விற்பனைக் கென்றே
விதவிதமாய் அலங்கரிப்பர்

அற்பமென ஒதுக்கிடு
அறிவின் துணைகொண்டு
கற்பனையை விலக்கிடு
காரியத்தில் சிறந்திடு

பேரண்டப் பால்வீதியில்
பேரிளம் பெண்வசிக்க
ஆரத்தில் முத்தொன்றை
ஆசையா கேட்பாயோ

தாரமாகி தாம்பத்தியம்
தக்கதென இருப்பாயோ
பூரணமாகி பூவுலகின்
புலரியா ஒளிர்வாயோ

சூழ்ந்திடும் சூழலின்
சூட்சமத்தை அறிந்திடு
வாழ்வு ஒன்றென
வாய்மையுடன் இருந்திடு

வீழ்வதோடு முடிவதல்ல
விருப்பமுடன் எழுந்திரு
வாழ்வதற்கு வழியுமுண்டு
வானமதை பிடித்திடு


                                அ. வேல்முருகன்


ஞாயிறு, பிப்ரவரி 23

முத்தத்தில் முழ்கடிடா













மோகத்தில் திளைப்போமடா
மெய்மறந்து கற்போமடா
ஏகாந்த வேளையில்
ஏழிசைதனை இசைத்திடடா

தாகத்தினைத் தணித்திட
தண்ணிலவா குளிர்ந்திட
யாகத்தினை நடத்திடு
யௌவனம் விழிக்குமடா

சொற்சுவை தன்னில்
சொக்கிட வைத்தவனே
பொற்புடை அரிவையை
போற்றத் தெரியாதோ

காற்றின் மொழிதனில்
காதலை அறியலையோ
பாற்கடல் அமுதத்தை
பரிமாற விரும்பலையோ

சித்தத்தில் நிறைந்தவளை
சிணுங்க வைக்காதே
புத்தனாகிப் புலனொடுக்கிப்
பூவையை வருத்தாதே

பித்தம் தெளிவதற்குள்
பிரபஞ்சம் முடிவதற்குள்
மொத்தத்தில் கைப்பற்றி
முத்தத்தில் முழ்கடிடா


                                 அ. வேல்முருகன்

திங்கள், பிப்ரவரி 17

மும்மொழிக் கல்வி












மும்மொழிக் கல்வி
மூத்தக்குடி தமிழனுக்காம்
முட்டாள்கள்
முகாரி பாடுகிறார்கள்

ஏட்டுக் கல்வி
இந்தி பேசுபவர்களுக்கு
இரண்டா? ஒன்றா?
கேட்பது யார்?

அமெரிக்காவில்
அகன்ற மார்புள்ளவர்களின்
அறிவார்ந்த பதில்களை
அகிலமே வேடிக்கை பார்த்தபின்

கயமையோடு
கல்விக்கு காசு மறுப்பவன்
காட்டுமிராண்டியா
கல்வித் துறைக்கு ............

தேசியக் கல்விக் கொள்கை
தேசிய இனத்தை அழிக்கவா?
தேமதுரத் தமிழை
தேசங் கடத்தவா?

சிங்கப்பூர், மலேசியா
இலங்கை, மொரிசியஸ்
இங்கிலாந்து கனடா - என
சிறக்கும் தமிழை

இங்கிருக்கும் கட்சிகள்
இனவுணர்ச்சியற்று
இராமா இராமா - என
இறைஞ்சுவார்களா?

மொழியொரு கருவியே
எனினும் வழிவழி வந்த
இனத்தின் அடையாளமே
எனவே உரிமையுமானதே

அறிவல்ல
அத்தனை மொழி அறிவது
நெறியல்ல
நெற்றிகண் திறப்பினும்.....

கற்பது நன்றென
கயவர்கள் கதைத்தால்
வீழ்வது தமிமெனில்
வேடிக்கைப் பார்ப்பாயா?

தமிழனாய் இருப்பதனால்
தரணியில் இந்தியனானாய்
இந்தி படிப்பதனால்
இங்குநீ யாராவாய்?

தேவையெனில் - எவரும்
தேர்ச்சியுறுவர்
ஜெர்மன், ஜப்பான்
சீன, கொரிய மொழிதனில்

செயற்கை நுண்ணறிவு
சில நொடிகளில்
பெயர்க்கும் மொழிதனை
சிரமத்திலேன் கற்க வேண்டும்

புரணாங்களையும்
வரலாற்று திரிபுகளையும்
புதிய கல்வி என்றால்
புறம் தள்ளுவோம்

கழுத்தறுத்துக் கொண்டே
காருண்யமிக்கவானாய்
கபடநாடகம் நடத்துவது
காசி தமிழ் சங்கமமன்றோ

நிதி மறுத்து
நிராதரவாய் நிறுத்தினாலும்
நிராகரிப்போம்
மும்மொழித் தாக்குதலை

கூட்டாட்சியில்
கூழைக் கும்பிடுபவனுக்கும்
உரிமைக் குரலெழுப்பவனுக்கும்
நீதி வேறு வேறானால்

ஒன்றியத்தில்
உனக்கென்ன வேலை
உம்மென்று இருப்பாயா?
உலகம் கவனிக்க ஓங்காரமிடுவாயா?

சனி, பிப்ரவரி 15

அழகெனும் மாயை

 












கட்டழகு என்றே
காளைகள் தடுமாற
தொட்டுப் பழகிட
தொலைந்தன மாயை

வெண்ணிலவு அழகென்ற
விளக்கவுரை கற்பனையே
எண்ணங்களில் ஏற்படும்
எழில்யாவும் சொற்சுவையே

நிறத்தில் தேடுவதும்
நிகரென உரைப்தும்
அறமென அறியாது
அழகை ஆராய்வது

மாயப் பிசாசென்று
மாதரை பழித்து
காயம் பொய்யென
கதைத்ததை மாற்றிட

மானமும் அறிவும்
மனிதருக்கு அழகென
ஊனச் சமூகத்தில்
ஊட்டிய பகுத்தறிவால்

விழைவு ஏதென்று
வீதியில் காணீர்
அழகெனும் மாயை
அகன்றது பாரீர்

                                    அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 14

பிப்ரவரி - 14















ஐம்பதிலும் ஆசை வரும்
அந்நாளில் பாடியதை
அத்தான் "ஐ லவ் யூ" என்றாள்
அத்தியாயம் தொடரட்டுமென்றேன்

பிப்ரவரி - 14
பிரபஞ்சத்தின் பிரமோற்சவமென
பிரகடனப்படுத்த
பிராட்டியின் கோரிக்கை

ஆகட்டும் தேவி
அடியேனின் காதல்
ஆயுள் உள்ளவரை
அர்பணிக்கப் பட்டதென்றேன்

காதல் மட்டுமா
கட்டியவள் கண்நோக்க
கன்னத்தில் முத்தமொன்று
கமுக்கமாய் வைத்தேன்

பற்றாக்குறை கணக்கொன்றை
பட்டியலிட்டாள்
தீர்க்க கூடியதுதான் - ஆயினும்
திருப்தி அடைவாளா?

மணக்கும் மல்லிகை
மன்னவனின் ஆசையென்றாலும்
மந்தைகளின் தேர்வாக
ஒற்றை ரோசா

நிலவரம் தானறிந்து
நிபுணர்கள் பலரிணைந்து
நினைவு பரிசென்று
நிறைத்திருந்தனர் நாளங்காடிதனை

அது இதுவென்று
அத்தனையும் வேண்டுமென்று
அட்டவணை தயாரிக்க
அனாதிகாரணம் அறிவாயா?

பித்தாக நானிருக்க
புதிராக அவளிருக்க
முத்தாய்ப்பா வர்த்தகம்
முன்னேற்றம் காணுது

ஓவ்வொரு நாளும்
ஒன்றாய் அமர்ந்து
ஓராயிரம் கதை பேசி
ஒட்டி உறவாடுதன்றோ காதல்

இன்றினிய நாள் மட்டும்
இலக்கணப் போலியாய்
ஏனிந்த ஏற்பாடு
ஏக்கத்துடன் வாழவா

காசிருக்கோ இல்லையோ
கண்மணி - நின்
கண்ணசைவில் பிறக்கும்
காதல் தினம் தினமே

                                அ. வேல்முருகன்

வியாழன், பிப்ரவரி 6

ஊழ்துணை










வாட்டி வதைக்கும்
வஞ்சிக் கொடியே
ஆட்டிப் படைக்க
அஞ்சி இருப்பேனோ
ஈட்டிச் சொற்கள்
ஈர்க்கம் பாகிட
நீட்டிக்குமோ உறவு
நீயே கூறடி

பாட்டின் இராகம்
பாடுபவர் அறிவர்
ஏட்டின் கருத்தை
எவரும் தெளிவர்
ஊற்றின் கண்ணில்
ஊசியை நுழைக்காதே
கூட்டின் இனிமையை
கூத்தாடி உடைக்காதே

ஊழ்துணை நீயென
உலகம் அறியும்தானே
வாழ்வின் சுவையை
வர்த்தகமா பார்க்காதே
தோழனின் துணையை
தொடுதலோடு இணைக்காதே
சூழல் எதுவாகினும்
சூன்யத்தை நாடாதே


அ. வேல்முருகன்

காரணங்கள்
















காதல் வேண்டி
கட்டியவளிடம் கோரிக்கை
காதில் வாங்கவில்லை

ஆண்டு முழுதும்
ஆண்டனுபவிக்க
அருள் கேட்க

பட்டத்தரசி
பட்டியலிட்ட காரணங்கள்
பட்டினிக்கே வழி வகுக்க

எட்டூர் பஞ்சாயத்தார்
ஏதேனும் தீர்த்திருந்தால்
எடுத்தியம்ப சரிசெய்யலாம்

ஆடிக்கொன்று
அம்மாவாசைக் கொன்றென
ஆபத் பாந்தனவள்தான்

ஆயினும் பால்நிலவு
ஆசையை தூண்டுவதால்
ஆறுகால பூஜையை வேண்டினேன்

அவளோ, ஆசைக்கு
அளவு வைத்து
ஆட்டிப் படைக்கிறாள்

வேண்டாம் என்று
வேடிக்கைக்காக அல்ல
வேண்டுமென்றே உரைக்கிறாள்

அயர்வாக இருக்கிறதென
அந்தபுரத்திற்கு
அனுமதி மறுக்கிறாள்

ஊதக் காற்று வீசுகையில்
உறக்கம் வருகிறதென
உருட்டுகிறாள்

ஆலாபிக்க ஆரம்பித்தேன்
அர்த்த சாமமாகி விட்டதென
ஆட்சேபிக்கிறாள்

அமுதகானம் பாடி
ஆலிங்கனம் செய்ய
ஆர்வமில்லை என்கிறாள்

எப்போது பார்த்தாலும்
இதே ஞாபகமாக
எட்டி நில்லென எச்சரிக்கிறாள்

வெண்சாமரம் வீசி
விண்ணப்ப மெழுதினேன்
வெக்கையா இருக்கென வெகுள்கிறாள்

என்ன அவசரம்
இவ்வளவு சீக்கிரம்
இம்சை ஆரம்பம் என்கிறாள்

இன்பம் துய்க்க
இத்தனை தடைகளை
எங்ஙனம் தகர்ப்பது

ஒன்றா, இரண்டா
உண்மைதானென உணர்ந்து
ஒதுங்கிச் செல்ல

அடுக்கும் காரணங்களுக்கு
ஆம் என்றிருந்தால்
அடங்கி போவதாகாதா

ஆயினும், அன்பு கிடைக்குமெனும்
அந்த நம்பிக்கையில்தான்
அகிலம் இயங்குது

சனி, பிப்ரவரி 1

தடுதாட்கொள் புராணம்







 

தனித்தீவா நானிருந்தேன்
தடுத்தாட் கொள்ளவந்தாய்
இனியென்ன என்றபோது
இதயமதை தந்தாய்
பனிபடர்ந்த பொழுதிலும்
பாற்கடல் அமுதளித்தாய்
எனினும் ஏனின்று
ஏசிச் செல்லுகிறாய்

அன்பிலே விளைந்ததை
அறிவினால் ஆய்திடாதே
துன்பத்திலே வீழ்வதற்கு
தூபத்தை போடாதே
இன்னலில் விடுபட
இசைவோடு வாழ்ந்திட
கன்னலே கனிவோடு
கண்ணாளனை காத்திடு
 
ஆழிப் பேரலையாய் நீவந்தாய்
ஆடிய தாண்டவ தானறிந்தேன்
ஆழி விரலிட்ட கணையாழியை
ஆலகால மென்றே வீசுகிறாய்
நாழிகை நாளென்ன தேவி
நற்றுணை நானுனக்கு வாராய்
வாழிய தலைவி என்றே
வையம் வாழ்த்திட வாழ்ந்திடவே


                                      அ. வேல்முருகன்


வெள்ளி, ஜனவரி 31

செயற்கை நுண்ணறிவு




செயற்கை நுண்ணறிவு
செல்லாக் காசாக்கியது
செருக்குடனிருந்த அமெரிக்காவை

51 இலட்சம் கோடி
அங்கு காணாமல் போனது
ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை

கொள்ளை நிகழவில்லை
எல்லைக்கு வெளியில்
ஏதோவொரு கண்டுபிடிப்பு

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தை
உடைத்துப் போட்டது

தென்னையில் தேள் கொட்ட
பெரும்பண்ணை அமெரிக்கா
பேயறைந்தது போல் தடுமாறுது

"டீப் சீக்"
டிராகன் தேசத்து
திடீர் வெளியீட்டால்

திருக்குறளாய்
திக்கட்டும் தீர்க்கமானதால்
உலகப் பொதுமறையானது

உள்ளூர் சரக்கைக் காட்டிலும்
உசத்தி யனாதால்
உச்சி மோந்தனர்

அறிவை
அள்ளியணைக்க
அமெரிக்கர்கள் முன்வரிசையில்

"டீப் சீக்" செயலி
தீப்பற்றி எறிய
சிலிக்கான் வேலி உருகியது

எவரும் அறிந்திடவும்
எளிய வழிகளால்
வடிவமைக்கப்பட்டதாலும்

கொள்ளும் சிலவு
கொஞ்சம் என்பதாலும்
கொஞ்சுகிறது அகிலம்

மானுட உழைப்பு
மனிதரில் சிலருக்கு மட்டுமல்ல
பேரண்டத்திற்கும் அல்லவோ?!

வியாழன், ஜனவரி 30

அழிவற்றதோ ஆன்மா

 



அழிவற்ற ஆன்மா
அகிலத்தில் உண்டோ
எழில்மிக்க மானுடத்தில்
எதுவென்று உரைப்பீரோ
மொழியற்று இருக்குமோ
மெய்யற்று வேறாகுமோ
வழிவழியாய் ஆன்மா
வந்ததை யாரறிவார்

உலராது எரியாது
உன்புத்திக்கு எட்டாது
புலன்கள் அறியாதது
புவனத்தில் நிலையானது
கலங்கிட வேண்டாம்
கண்டிப்பாய் மறுமையில்லை
புலம்பாதே புண்ணியாத்மா
பூநாகமா யிருக்கலாம்

புல்பூண்டின் ஆன்மா
புவியில் உண்டுறங்குமோ
அல்லலுடை நரகத்தின்
ஆயுதங்கள் சிதைக்காதோ
சொல்கேட்டு இயங்குமோ
சொர்கத்தில் தங்குமோ
வல்லுனர் எவருண்டு
வகுத்து சொல்லிட

சாந்தி அடைந்தால்
சாதுவாக இருக்குமோ
ஏந்திழையின் ஆன்மா
ஏமாந் திருக்குமோ
வேந்தன் என்றால்
வேற்றூரில் சஞ்சரிக்குமோ
சீந்து வாரின்றி
சீவனை இழக்குமோ

பூதஉடலில் நீங்கிட
புகலிடம் கொடுப்பதாரோ
ஆதாமின் ஆன்மா
அன்றிருந்த வாரிருக்மோ
சாதனையா நியூட்டனை
சந்திக்க வழியுண்டா
ஆதார மில்லையென
ஆருடம் சொல்வோமா

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...