திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

டி.எம். கிருஷ்ணா

  கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...