ஞாயிறு, ஆகஸ்ட் 16

தென்றலா? வாடையா?.....


வீசும் திசையைக் கொண்டு ...



தென்றலிலும் வாடையிலும்
தெம்மாங்குப் பாடித்
திகட்டியிருக்கும் வேளையிலே
தேடித் தேடித் சொல்ல வந்தேன்

உயிராய்
உலகை இயக்கும் காரணியாய்
உலவும் காற்றை
ஊதிப் பார்க்க வந்தேன்

கொடி அசைந்ததும் …………
குழப்பம் வேண்டாம்
காற்று இருப்பதால்தான்
கொடி வளர்ந்தது, அசைந்தது

வாயுக் கலவையில்
79% நைட்ரஜனும்
21% உயிர் காற்றும்
3% கரியமில காற்றும்

விகிதங்களாய் கலவைகளாய்
வளி மண்டலத்தில்
விலையேதுமில்லாது
வலம் வருகின்றன

புவிச் சுழல்வதால்
சூரிய ஆற்றலால்
பருவ மாற்றங்களால்
காற்று உருவாகிறது

நீர் இயங்க
மின் காந்த ஆற்றல்
ஹைட்ரஜன் ஆக்ஸிஜனை
பிரித்தெடுக்கிறது

வெப்பநிலை வேறுபாட்டால்………………..
வெப்பக் காற்றுக்கும்
குளிர் காற்றுக்குமான
போட்டியில் உருவாவதுக் காற்று

எடைக் குறைவான
வெப்பம் மேலெழும்ப
குளிர் துரத்தக்
காற்றுகள் உருவாகின்றன

தாவரங்களின்
ஒளிச் சேர்க்கையால்
உயிர்  காற்று
உலகில் உருவாகிறது

நிலவு நேரத்தில்
நிலத்திலிருந்து
கடல் நோக்கி வீசிவது
நிலக் காற்று

இளவெயிலில்
ஆழியிலிருந்து
நிலம் நோக்கி வீசுவது
கடற் காற்று

வடகிழக்கிலிருந்து
நிலநடுக்கோடு நோக்கி
வீசுவது
வாணிபக் காற்று

எலக்ட்ரானும்,
புரோட்டானும்
நுண்துகளாய் வெளியேற
சூரியக் காற்று

புவியின் மேற்பரப்பில்
கிடைமட்டமாய் வரும் வாயுவை
செங்குத்தாய் ஆக்குவது
காற்றோட்டம்

வடகிழக்கும்
தென்மேற்கும்
எந்த திசையெனக்
கற்றுக் கொடுப்பதும் காற்றுதான்

வளி இயங்க
வாணிப, பருவ, கடல்
நிலக் காற்றென
வலம்வரக் கண்டோம்

இயற்பியலில் மட்டும்
காற்றில்லை என்றே
கட்டுரைத்து
வெற்றிடத்தை உருவாக்கினர்

அடர் கல்லில்
அவர்களின் கலவியில்
காற்றுக்கு இடமில்லையாம்
அஃது இயற்கையின் விதியாம்

இகலோகம் எங்கெங்கும்
இயற்கையாய்
நீக்கமற நிறைந்திருப்பது
காற்றுதான்

சூரியனிடம் ஹீலியமும்
வாகனங்களால் கார்பன் டையக்ஸைடும்
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பனும்
கடைமடையில் மீத்தேனும்

ஹைட்ரோ கார்பனின் வகைகள்
மீதேன், ஈதேன் , ப்ரோபேன் , பியூட்டேன்
நீர்கரிம வாயுக்கள்” என்றே
நினைவில் கொள்ளுங்கள்.

கடற்கரையில் அலையலையாக
கயத்தாற்றில் காற்றாலையாக
காதலனுக்கு தென்றலாக
கடுங்கோபத்தில் சூறாவளியாக

இளந்தென்றல் குழந்தையாக
ஆடிக்காற்றில் இளைஞனாக
புயற்காற்றில் புரியாதவனாய்
சூறாவளியில் சூன்யமாய்

எத்தனை வடிவங் கொண்டாலும்
ஏற்றுக் கொண்ட மனிதா
இருப்பதில்தான் – புதிய
இனம் தேடுகிறாய்

அடிவளி மண்டலத்தில்
தூசியும் நீராவியும் மிதக்க
வெப்ப மாறுபாடுகளால் - 90%
காற்றின் வகைகளைக் காணலாம்

புவி ஈர்ப்பு விசையால்
பூமியை நோக்கி இழுக்கப்பட்டு
பல்வேறு அடுக்குகளாய்
பூமியின் வளி மண்டலம்

வளிமண்டலத்திலுள்ள
காற்றுகளின் அழுத்தமே
தண்ணீர் - திரவமாய்
இருக்கக் காரணம்.

புற ஊதாக் கதிர்களை
உறிஞ்சுவதன் மூலமாக - நீர்
உறையாமலும் ஆவியாகமலும்
திரவ நிலையில் கிடைக்கிறது

சல்ஃபர் டையாக்ஸைடு
நைட்ரிக் ஆக்ஸைடு
நச்சு நாற்றமாய்
நாம்தான் காரணமோ?

இயற்கைக்கு
இடர் செய்ய
இனாமாக அளிக்கிறது
புற்று நோயை

நகரமாயமாக்கலின்
வாகனப் பெருக்கத்தாலும்
தொழில் மற்றும் கழிவுகளால்
காற்றுக் கறைப் படிந்தது

குளிர்பதனக் கருவிகளின்
கார்பன் வெளியிட்டால்
ஆர்டிக், அண்டார்டிக்காவில்
ஓசோனில் ஓட்டை விழுந்தது

சூரியக் கதிர் வீச்சு
ஓட்டை வழியாய்
உலகை வெப்பமாக்குகிறதா
உன்னைதான் தாக்குகிறதா

அடைப்பதற்கு வழி
“எம் சீல்” பயன்படுத்துவாயா
ஏமாந்துப் போவாயோ
ஏதோ முடிவு செய்

எண்ணெய் நிலக்கரியை
எரித்தால் நைட்ரஜன்
வாகனம் ஓட்டிட
வருவது கார்பன் டையாக்ஸைடு

கார்பன் முழுமையாக
எரியாது போனால்
கார்பன் மோனாக்ஸைடு
காற்றில் நச்சாய் வலம்வரும்

ஆவியாகும் கரிம சேர்வையோ
ஆக்ஸிஜனமேற்றமடைந்து
குளோரைன், சல்பர்
உள்ளடக்கியதாகும்

நிலையானக் கரிம வாயுக்கள்
மண்ணைப் பாதிக்கும்
பாலிவினைல் குளோரைடு
மருந்தாகவும உயிர் காக்கும்

ஓசோன்
மூடுபனிக்குக் காரணம்
புற ஊதாக் கதிர்களை தடுக்கும்
படை மண்டலமாகும்

தென்மேற்கிலிருந்து
தேடிவரும் ஈரக் காற்று
வாரி வழங்குவது
மாரியெனும் மழையை

மண்ணைத் தூய்மையாக்கி
மறுபடியும் உருவாக்கி
உயிரை வளர்க்கும் 
உலகைக் காக்கும்

கல்லும் மண்ணும்
கரையுமோக் காற்றால்
காலத்தின் கோலத்தை
கீழடியும் உரைக்குமோ?

நான்கடுக்கு
வளி மண்டத்தில்
மேலடுக்கு குளிர்
மீதி கதகதப்பு

அய்யாயிரத்து இருநூறு 
மில்லியன் மில்லியன்
காற்றின் எடை
கற்றவன் சொன்னது

உயர்மட்டத்தில் உலவும்
மூடுபனி முகில்கள்
முன்னறிவிக்கும் வானிலை
பொய்யாகும் சிலவேளைகளில்

காற்றின் எல்லை
காத தூரமா
கணக்கிட முடியுமா?
காலத்தால் மாறுமா?

நேற்றுவரை
நூறுக் கிலோமீட்டரென
நிருபித்தவன் – இன்று
நிலவைத் தாண்டியென ஆருடம்

ஜியோகரோனாப் பகுதியென
நாசா வரையறுக்க
லைமான் ஆல்பா போட்டான்களின்
கூறுகளால் உறுதி என்கின்றனர்

மீத்தேன், அம்மோனியா
நிலக்கரியின் கலவையை கொண்ட
பூமியின் மேற்பரப்பு
மாறி நாளாகி விட்டது

நீர் நீராவி, கார்பன் கலவைகள்
ஹலோஜன் அமிலங்கள்
போரிக் அமிலங்கள்
நுழையத் தொடங்கி விட்டன

காலநிலைக்கும்
நில அமைப்பிற்கும்
வளரும் தாவரங்கள்
காற்றின் காரணங்கள்

காற்றை எங்கே தேடுவது
வெட்ட வெளியிலா
அறிவியல் கூடத்திலா – நாம்
சுவாசிக்கும் உலகில்

க்ளோரோபாம் மயக்கநிலைக்கு
சையனைடு மரண நிலைக்கு
ஹைட்ரஜன் சையனைடு
புல்பூண்டு முளைக்காதிருக்க 

காற்றின் வகைகள்
கடவுள் வகையல்ல
சிலருக்கு தீண்டாமை – ஆயினும்
சாத்தானின் வகையல்ல

சாதிய அடுக்காய்
கட்டண தரிசனங்களை
கோயில்கள் தீர்மானித்தாலும்
காற்றே உன்னிருப்பை தீர்மானிக்கும்


காற்றுக்கு வேலியிட்டு
காசுக்கு விற்பாயோ
கனவான்களுக்கு மட்டுமென
தனிச் சரக்காய் மாற்றுவாயோ

சகலரும் சுவாசிக்க
சமுகத்தை நேசிக்க
சகாயம் செய்ய வேண்டாம்
மாசுக்குச் சாமரம் வீசாதிருங்கள்

வளி இல்லையெனில்
வலிமை நிறைந்த
வாழ்வில்லை – வாழ
வளிக் காப்போம்



திங்கள், ஆகஸ்ட் 3

ஊடகம்


  

ஜனநாயகத் தூணா
பணநாயகக் கோணலா
அதிகார மோதலில்
அவர்கள் பலிகடாக்களா…….!!!!!!

அச்சு
காணொளி
சமூகம் என
வகையிருந்தாலும்

வியாபாரம் ஆகுமென்றால்
நிர்வாணக் கும்பமேளாவையும்
அத்திவரதனையும் நேரடி ஒளிபரப்பி
பக்தி வளர்த்த ஊடகம்

இலாப இலக்கு என்பதால்
இரசனை முன்னே நிற்க
இலட்சியம் பின் என்றாக
இன்றைய இழப்புகள்

ஊடகம்
ஊசலாடிக் கொண்டிருக்கிறது
இடம் வலமென்றாலும்
வளவள என்றிருக்கிறது

அச்சுறுத்தல்கள்
ஆங்காங்கே அனைத்திலும்
ஆம் – “இடம்” இல்லையென
“வலம்” வருகின்றனர்

சிந்தனைகளுக்கு
இடம் கொடுத்ததால்
தேச விரோதியென
தீர்த்துச் சொல்கிறார்கள்

சிந்திக்காதவர்களின் கவசம்
கந்தனிடம் நம்பிக்கை
பகுத்தறிவாளர்களின் கவசம்
பற்றற்றக் கேள்விகள்

அடையாளம் காட்டப்பட்ட
ஊடகவியலாளர்களின்
உளவியல்
உயிர் பயம்தான்

இஸ்லாமிய ஊடகவியலாளர்
இங்குமங்கும் அலைந்து
நான் அவனில்லை – என
நிருப்பிக்கப் பட்டபாடு

வேலையிழைப்பை
வேறு வழியில்
நிவர்த்திச் செய்யலாம்
உயிர்………………………..

களையெடுப்பென
காயடிக்கப்படுவதால்
கார்ப்பரேட் சிறைக்குள்
கருகுமோப் பகுத்தறிவுகள்

கலாநிதி
வீரபாண்டியனை
வெளியேற்றியப் போது
வாளா யிருந்து விட்டு

இந்து
ஆனந்த விகடன்
நியூஸ் 18 என
தொடர்கதையானப் போதும்

உத்திரபிரேசத்தில்
தோட்டா வெடிக்க
ஊமையிருந்தவர்கள்
தமிழகத்தில் தப்புவார்களா?

உழைத்துக் கொடுத்தவர்கள்
ஓரம் கட்டப்படுவதால்
உண்டான எழுச்சியோ - உணர்வால்
உயிர் பெற்றக் காட்சியோ?

தன்னைக் காக்க
தனித்தனியான முயற்சிகள்
நான் அவனில்லையென
அவசரச் சமர்பிப்புகள்

“பால் பாக்கெட்” சேகர்
எச்சு ராஜா
நாராயணன்களுக்கு
சிம்மசானம் கொடுத்து

வலதுக் கருத்துக்கு
வடிகட்டிய முட்டாள்களை
வரவேற்றக் காரணத்தால்
வந்த வினைகள்

நடுநிலைச் செய்திகள்
நக்கிப் பிழைப்பவர்களுக்கு
உள்ளது உள்ளவாறா
ஊமை ஊடகங்கள்

கனக வேலோ
கழக தோழர்களோ
காணாது இருந்தனர் – அவர்களின்
கவலை ஓட்டு மட்டுமே

அம்பானி அடித்தாலென்ன
அய்யர் குதித்தாலென்ன
பொய்யரை இனங்காட்டு
பொதுவாய் இனங்கூடு

அச்சத்தைத் தோற்றுவிக்க
அவனால் முடியுமென்றால்
அடிமைகள் பிரிந்திருக்கின்றன - அவை
இணையாதென அறிந்திருக்கிறான்

அணிதிரள்
மாற்றத்திற்கானச் சங்கம்
குறைகளை தீர்ப்பதற்கா
கொள்கைகளை வளர்ப்பதற்கா

வலுவற்று இருப்பதினால்
வலதுகளின் சர்வாதிகாரமா
வலுபெற வழியென்ன
வாழ்வை இழப்பதுவோ

கழக நண்பர்களோ
கட்சி தோழர்களோ
காப்பார்களோ – அங்கனமாயின்
எதுவரை?

ஓட்டு பொறுக்குவது
உனது நலனுக்கல்ல
ஆட்சி அதிகாரத்திற்கு
அதைத் தக்க வைப்பதற்கு

ஒற்றைத் தேசமாய்
உருமாற்றத் தயாரிப்புகள்
ஒத்தூதும் ஊடகங்கள்
உணர்வற்றக் கழகக் கட்சிகள்

ஹை கோர்ட்டாவது
………….. என்ற போதே
அந்த போலீசும், மன்றமும்
அவர்களுக்கானது என்றானது

சட்டம் தெரிந்தாலும்
சார்போடு இருப்பது
சனநாயகம் என்று
போலீஸ் அறியும்

இரத யாத்திரையில்
இரத்த களறியாக்கி
இராம ராஜ்ஜியத்தை அளிப்பதாய்
சம்புகனை கொல்ல வருகிறார்கள்

கொலைமிரட்டல் விடுப்பது
தரக்குறைவாய் பேசுவது
கேள்விகளுக்குப் பதிலில்லை என்றால்
கோவேறுக் கழுதையாய்க் கணைப்பது

இது வாடிக்கையானப் பொழுது
இந்துக்கள் புண்பட்டதாய்ப் புலம்ப
பார்பனத்திகளும்
பகிரங்கமாய் மிரட்ட

பக்திக்கு எதிராய்
பகுத்தறிவுக் கேள்விகள் 
பார்ப்பனன் நெளிய
பாமரன் குழம்ப

ஓட்டு வேட்டைக்கு
உலை வைக்கும்
உதவாத ஊடவியலாளர்களை
டி ஆர் பி க்காக பாதுகாக்கவா முடியும்

நட்டத்தை
நாட்டாமை சரி செய்வார்
நாவண்மைக் கேள்விகளால்
நாடாளும் வாய்ப்பல்லவா போகும்

கைத்தட்டி விளக்கேற்றி
மலர்தூவிப் பாடைக்கு அனுப்பும்
கொரோனாக் காலமிது
கொள்கைக்கு அல்ல

கறுப்பர் கூட்டம்
களப் பலியானது
காவிகள்
கறுப்பாய்தான் இருந்தனர்

புதிய இந்துக்கள்
இறை மறுப்பாளனை
எதிர்ப்பு தெரிவி என
அழுத்தம் கொடுக்கிறார்கள்

கூடுதல் விலைகொடுத்து
ரபேல் விமானம் வாங்குவதும்
கஷ்மீரை முடக்கி வீரமென்பதும்
தேசபக்தி நாடகக் காட்சிகள்

சுற்றுச்சுழியல் கருத்துருக்கு
மாற்றுக் கருத்துரைத்த
பத்மபிரியாவையும்
பதர வைத்தனர்

கருத்துக் கேட்பு
கண்துடைப்புதான்
காவுக் கேட்போமென
காவிகள் எச்சரிக்கின்றனர்

பெரியாரின் மண்ணென்று
பேசாதிருந்தால்
காவி மாலைகள் காத்திருக்கும்
சிலைகளும் சேதப்படும்

பெண்ணைக் கொச்சையாய்
முகநூலில் எழுதியவனை
பிணையில் விடுவித்து
விசுவாசத்தைக் காட்டுது போலீஸ்

செருப்பு மாலை அணிவித்தவனை
ஓராண்டு சிறைக்கு அனுப்புது
பார்பனனுக்கும், சூத்திரனுக்கும்
பேணப்படும் மனுநீதி ஆட்சியல்லவோ

ஆதாரமோ
அவமானமோ
கிஷோர் கே சாமிக்கும்
மாரிதாசுக்கும் இருக்கிறதா என்ன?

சமூக ஊடகம்
வெற்று ஆரவாரமும்
பொய்களை தாங்கும்
சனநாயக தூணாக விளங்க

நகர்புற நக்சல்கள்
நாட்டின் எதிரிகள் என
மண்ணை மக்களை
நேசிப்பவர்களுக்கு பட்டம்

போக்கிரிகள்
பொய்யான பெயரில்
பொய் பரப்பும் – நவீன 
செப்பேட்டு ஆவணங்கள்

வரலாறு அவர்களை
வகை பிரிக்கும்
அதுவரை
அமைதிக் காக்காது

சகலரும் சமமென்ற
சங்கை ஊதுங்கள்
சாமான்யனும்
சரியென்றே பின் வருவான்

ஞாயிறு, ஜூலை 19

புண்பட்ட மனமே

 

ழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்

ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல

அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்

தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா

இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்

இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்

இந்து  எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்

அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்

சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?

வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்

கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா

தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை

நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ

கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை

சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு

வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்

ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்

சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது

சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்

எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை           


சனி, ஜூலை 4

நந்தனார்

tut-temple.blogspot.com: திருநாளைப் போவார் ...



கல்பனாக் கதையென்று
காமகோடிக் கதைகட்டியப் பிறகு
கடைகோடிச் சூத்திரன் நான்
கதைச் சொன்னாக் கேட்பேளா

கோபாலக் கிருஷ்ண பாரதியின்
கோணல் வரிகளால்
திருநாளைப் போவார் நாயனார்
திருப்புகழ் திரிக்கப்பட்டதாக

அவாள் உரைத்தாலும்
அறுபத்து மூவரில்
அவனொரு நாயனார் - அவன்
அனலில் எரித்ததை கேளுங்கள்

கொள்ளிடக் கரையினிலே
ஆதனூர் சேரியிலே
புலையராய் வகுத்த
பெருஞ்சாதியில் பிறந்தவன்

நமச்சிவாயனை
நாளெல்லாம் நினைத்து
புறத் தொண்டுப்
புரிந்த நாயகன்

ஆடுதல் பாடுதலோடு
அர்ச்சனைக்கு கோரோசனை
பேரிகைகளுக்காகப் போர்வைத்தோல்,
விசிவார் கொடுத்தவர்

குலப் பிறப்பிற்கேற்றக்
குறுந் தொண்டெனக்
கோயில் கொண்டவன்
குளிர்ந்தான் மகிழ்ந்தான்

திருப்புன்கூர் திருத்தலத்தில்
தெருவில் நின்று
எம்பெருமானை
இசைப்பாடி வேண்டுகிறான்

வந்தவனை
வாவென உள்ளழைக்காது
நந்தியை நகர்த்தி
நல்லதொரு தரிசனம் அளித்தான்

ஆனந்த கூத்தாடியை
அனுதினமும் நினைத்திருக்க
அவ்வாடலரசனைச் சிதம்பரத்தில்
அவன்தலத்தில் காண நினைத்திட்டான்

ஆயினும்
அவன் குல நிலையெண்ணி
நாளைப் போவேமென
நாட்களைக் கழித்தான்

இன்னல் தரும்
இழிப் பிறப்பன்றோ
இறைவனைக் காண
இடைஞ்சல் என மருகினான்

எந்நாட்டுடையோன்
ஏக்கம் அறிந்து
என்று வந்தாயென
கனவில் கேட்டார்

தீ முழ்கி வந்தால்
திவ்ய தரிசனமென
தீர்த்துச் சொல்லி
திரை மறைந்தான்

தீட்சிதர்கள் கனவிலும்
திரிபுரம் எரித்தவன் தோன்றி
தீவார்த்து அனுப்பென
தீர்ப்பெழுதியதால்

தெற்கு வாசலில்
தீ மூட்டி காத்திருந்தனர்
திருநாளைப் போவோம் வந்தார்
திருசிற்றம்பலம் என்றார்

அந்தணர் கண்களுக்கு
ஆலகாலனிடம் போவது தெரிந்தது
அவனுடனருந்தோருக்கு - அவன்
சென்றவிடம் காணாதுத்  தவித்தனர்

தெற்கு வாசலுக்கு
தீட்டு என்பதால்
எழுப்பியச் சுவர் – நாளதுவரை
திறக்கப்படவே இல்லை

இந்துவாய் இருக்கலாம் நீ
இனமானம் இருப்பதாய் – வேண்டாம்
மனிதன் என்றுரைத்தாலும்
மாட்சிமை தங்கிய நீதிமன்றம்

உத்திரவு வழங்காது
மடச் சுவரை இடிக்காது
காத்திருப்போம்
காலங் காலமாய்  தோழனே 

வியாழன், ஜூலை 2

சம்புகன்










மகேசனைக் காண
மாதவம் செய்தனன் சம்புகன்
மாட்சிமை தங்கிய மன்னனாய்
மானுட இராமன்

பார்பணன் மகன்
பரலோகப் பதவியடைந்ததால்
பாராள்பவனைப் பார்த்து
பலகேள்விக் கேட்டனர்

அதர்மம் அளவிடமுடியாததால்
அவன் மகன் மரணமெய்தியதாய்
அற்புதக் குற்றச்சாட்டை
அவனிடம் வைத்தனர்

சூத்திரச் சம்புகன்
சாத்திரங் கடந்து
சிவக் கடாட்சத்தை
அடைந்து விட்டால்

ஆலோசித்தான்
ஆரண்யம் சென்றான்
சூத்திரன் தவம் செய்ய
ஆத்திரத்தில் தலைக் கொய்தான்

மாண்ட பிராமணன் 
உயிர் பெற்றான்
கோசல ராமனின்
கொற்றம் சிறந்தது

உத்திர ராமாயணம்
உண்மையில்லை
வல்மீகி எழுதவில்லை
கதைகள் பலபல

சொர்க்கம் செல்ல
சனாதன தர்மம் மீறி
தவஞ் செய்ததால்
தலை யிழந்த வரலாறு

பார்வதி மீது
பாய்ந்த காதலால் என
விக்கிப்பீடியாவில்
விவரம் தெரிஞ்சவன் எழுதியுள்ளான்

சமஸ்கிருத
மொழிப் பெயர்ப்புப் பிழையால்
பெரியார் இராமனை
பெருங் குற்றம் சுமத்தினாராம்

ஆக கட்டற்ற கலைக்களைஞ்சியமென
ஆதாரமாய் கொள்ளாது
அறிவின் துணைக் கொண்டு
அணுகு விக்கிபீடியாவை

உன்னால






உன்னால 
ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா 
அதிகாரப் போட்டியில் 
அவர்கள் உதிர்த்த வார்த்தையா 

சனநாயம் எதுவென்று 
தேடுபவர்களுக்குத் 
தேடாதே என 
உணர்த்தும் வார்த்தையா 

அக்ரகாரம் 
அஃதொரு மையம் 
அவர்களின் அடிபொடி 
அப்படிதான் என்கிறாயா 

அரசு 
அப்பாவி மக்களை 
அப்படி சொன்னதாய் 
சொல்லிப் பாருங்களேன் 

பெட்ரோல் டீசல் 
சர்வதேச சந்தையில் 
விலை குறைய – இங்கு 
தலை குனிகிறாய் 

நீட் தேர்வுக்கு 
அனிதாவை பலி கொடுத்தும் 
அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாமென 
பழகி கொண்டாய் 

பண மதிப்பிழப்பு 
சரக்குச் சேவை வரி 
வேறவழியில்லை என 
நீதானே மாறிக் கொண்டாய் 

நீதிபதிக்கே 
இதுதான் என 
உனக்கு நீயே 
சமாதனம் சொல்லிக் கொண்டாயா 

அதிகாரத்தை எதிர்த்து 
அதுவும் பாசிசத்தை எதிர்த்து 
அதன் கட்டமைப்பை எதிர்த்து 
நீதான் கேட்டுப் பாரேன்?!!! 

கேட்க கேட்கதான் 
கேள்விகள் பெருகும் 
அச்சம் மறையும் 
அணி திரள்வாய்

திங்கள், ஜூன் 29

அர்ஜுனன்

மகாபாரதத்தில் பெண்கள்' – உரையை ரத்து ...



குருசேத்திரப் போரில்
குலம் கெடுமேயெனக்
கோகுலக் கிருஷ்ணனிடம்
கோரிக்கை வைத்தவன்

தூரோணணிடம் கற்றாலும்
ஏகலைவனைக் காட்டிலும்
ஓருபடிக் கீழான
அர்ஜுனன் கதையிது

சுயம்வரப் போட்டியில் வென்று
பாஞ்சாலியை அழைத்து வர
வென்றது யாதென அறியா- குந்தி
ஐவரும் பகிர்க என்றதனால்

ஆண்டுக்கு ஒருவரிடமென
ஐவரோடு வாழ்ந்த
திரெளபதியின்
மூன்றாவது மணாளன்

குந்தியின் மகனா
இந்திரன் மகனா
இயம்பினால்
பாண்டு கோபிப்பானோ

குடும்பம் விடுப்போம்
குருசேத்திரம் வருவோம்
குலப் பெண்களின் – கற்புக்கு
கவலைப்பட்டக் கதை பார்ப்போம்

பேராசைப் போரால்
அதர்மம் பரவும்
சாதிக் கலப்பால்
குல நாசமாகுமன்றோ என்றான்

சிக்கலுக்குப் பதிலுரைக்காது
ஆன்மா இறப்பற்றது – ஆக
கர்மம் செய்
கலங்காதே என்கிறான் கிருஷ்ணன்

கற்பும் சாதியும்
அர்ஜுனனின் கவலையா
கீதாசிரியனின் கவலையா
பார்ப்போம் வாருங்கள்

வனவாசத்திற்குப் பின்
யாதவக் குல நகரான
துவாரகா விஜயம்
சுபத்திராவைக் காண - காதல்

பலராமனோ சுபத்திரையை
துரியோதனுக்கு நிச்சயித்து
ஏற்பாடுகள் நடக்க
ஏமாற்றத்தோடு அர்ஜுனன்

வாட்டம் போக்க
வழியைச் சொன்னான் கிருஷ்ணன்
சன்னியாசி வடிவெடுத்து
சுபத்திரையைக் கவர்ந்தான்

ஆனது ஆனதென
அவளோடு மணம்புரிய
அபிமன்யு பிறந்தான்
அத்தோடு முடியவில்லை

ஓராண்டுக்கு ஒருவர்
விதிமீறினால் ஓராண்டு வனவாசம்
விதிவசம் விதிமீறினான் அர்ஜுனன்
உலூப்பியைச் சந்தித்தான்

பாம்புருவக் காரிகை
நீரினங்களில் நாயகி
போர்கலைகளில் வல்லவள்
மோகங் கொண்டாள் அர்ஜுனனிடம்

கங்கைத் தீரத்தின்
நாகமன்னனின் மகளவள்
சம்மதிக்கச் செய்து - அர்ஜுனனை
பாதாளம் கொண்டுச் சென்றாள்

பாதாள உலகில்
பார்த்தனோடு உலூப்பி
அரவான் என்றொரு மகனை
அர்ஜுனனுக்காக ஈன்றெடுத்தாள்

பரந்த உலகில்
பலவூர்ச் சுற்றிய அர்ஜுனன்
மணிப்பூரில் மாலையிட்டான்
சித்திராங்கதை என்பவளுக்கு

அவ்வூர் நியதிப்படி
அவளையோ அவள் வாரிசையோ
அர்ஜுனன் அழைத்துச் செல்ல முடியாது
அதற்குடன்பட்டேப் பாப்புருவாகனன் பிறந்தான்

பாப்புருவாகனனுக்குப் போர்கலையை
உலுப்பிக் கற்பிக்க
தொடுத்தனன் அம்பை
அர்ஜுனன் நோக்கி

ஊருகொன்றுக் குலத்திற்கொன்றென
உல்லாசமாய் இருந்தவனா
குலம், கற்பெனப் பேசினான்
கொஞ்சம் சிந்தியுங்கள்

பகவத் கீதை
பம்மாத்து
பார்த்துப் படியுங்கள்
பல உண்மைப் புரியும்

ஞாயிறு, ஜூன் 28

பஞ்ச பாண்டவர்கள்



 




பாரதமாம்
பஞ்சப் பாண்டவர்களாம்
பக்தி இலக்கியமாம்
பாராய்!! கதை கேளாய்!!

மானிரண்டு மையலிலே
மன்னன் பாண்டுவோ
காட்டில் வேட்டையிலே
கொன்றனன் ஆண்மானை

கட்டற்றக் கலவிக்காக
கடுந்தவ வலிமையால்
கிண்டமா முனி இணையோடு
கலைமானாய் இணைந்திருக்க

மாண்டது மானென
மன்னன் நினைக்கையில்
பக்கம் சென்றனன்
பார்த்தால் கிண்டமா முனி

இட்டான் சாபம்
இச்சையோடு இல்லாளை
இப்பிறவியில் அணுகினால்
இகலோகமன்றுப் பரலோகமென

இட்ட சாபம் கேட்டு
இடிந்து கலங்கி
அத்தினாபுரம் செல்லாது
ஆரண்யத்தில் வாசம் செய்கிறான்

மன்னனாக நீடிக்க
மகன் இல்லையே என
மருகி நிற்க
சுவேதகேது முனியின் நியதிப்படி

காதல் சுகம் அறியாதவன்
காதலோடு தொட்டால்
மரணமென
மாமுனி உரைத்ததால்

கொண்டவன் விரும்பும்
குணாளனோடு கூடிக்
குழந்தைபெறக்
குந்தியிடம் வேண்டினான்

அன்றே துர்வாச முனி
பிற்காலச் சிக்கல் அறிந்து
தேவர்களோடுக் கூடும் வரம்
குந்திக்கு அளிக்க

சோதிக்கச் சூரியனை அழைக்க
கர்ணனை ஈன்றாள்
கங்கையில் விட்டு
கன்னியாய் இருந்தாள்

முனியோடுக் கூடுவதா
தேவர்களிடம்
தேவையைக் கூறினால்
தேடி வாராரா என்றாள்

தர்மத்தின் தலைவன்
தயை கொண்டான்
யமனை அழைத்தாள்
யுதிஷ்ரன் பிறந்தான்

வாயுப் பகவானோ
வசதியாய்
தன் சக்தி தர
பீமன் பிறந்தான்

தேவர்களின் தலைவன்
தேர்ந்த அழகன் இந்திரன்
தேவையறிந்து
தந்தனன் அர்ஜுனனை

மாற்றொரு இணை
மாத்ரி தேவி
மழலை வேண்டுமல்லவா
குந்தியே வேண்டுகிறாள்

அஸ்வினித் தேவர்கள்
இரட்டையர் அவர்கள்
நகுலனும் சகாதேவனும்
நலமுடன் பிறந்தனர்

பாதி தேசம் வேண்டிய
பாண்டவர்கள் பிறந்தது
தேவாதித் தேவர்களுக்கு
தேவையா இப்பாரதம்

சனி, ஜூன் 27

வேண்டுதல்



 

களைகட்டும் அழகில் சொக்கி
   கண்டாங்கிச் சேலைக் குமரிய
இளவட்ட கல்லத் தூக்கி
   இணையாக ஏற்ற வாழ்வில்
பளபளத் தங்கத்தைத் தேடாது
   பக்குவமாக் கடமைய முடிச்சு
தளர்ந்த வயதில் வேண்டுதல்
    தலம்பலக் கண்டிட வந்தோம்



வேண்டி வந்த இடத்தில்
    வேண்டி நின்றாள் வேடிக்கை
ஆண்டு பலவுங் கடந்தாலும்
   அந்நாள் நினைவு வந்திடவே
தொண்டுக் கிழவ னானாலும்
   துணைக்கு உதவி செய்தலே
ஈண்டு நன்மை பயக்கும்
   இனிது நிறைவேற மகிழ்ச்சி


வெள்ளி, ஜூன் 26

விஸ்வரூபம்



கலை  நாயகன் 
காட்டிய  ரூபம் அன்று
வேதமூர்த்தியான விஷ்ணுவின் 
விஸ்வரூபத் தரிசனம்

பிறப்பு இறப்பு - இன்னும்
பிற இரகசியங்களையும்
அரியே உந்தன்
அழிவற்றப் பெருமையும் கேட்டேன்

உன்வண்ணம் இதுவென
எவ்வண்ணம் வர்ணித்தாயோ
அவ்வண்ணமே உணர்ந்தேன்
அவ்வாறுக் காணத் தகுதியிருப்பின்

அழிவற்ற அவ்வடிவை
அடியேனுக்கு காட்டிடு
மனமயக்கம் நீக்கியவனே
மாரூபத்தைக் காட்டிடு

திருதிருப் பார்வையால்
தெய்வத்தைக் காணமுடியுமோ
தெய்வப் பார்வை அருள்கிறேன்
திருமேனியை பார் பார்…….

அனைத்தையும் பார்
அசைவதையும் அசைவற்றதையும்
எதைஎதைப் பார்க்க விரும்புகிறாயோ
எல்லாவற்றையும் பார்

வசுக்களையும் உருத்திரர்களையும்
அசுவினி தேவர்களையும்
ஆதித்தியர்களையும்
அவர்தம் பரிவாரங்களையும் பார்

பல நிறங்களாய்
பல வடிவங்களாய்என்
தெய்வத் தன்மை பொருந்திய
உருவங்களைப் பார்

நூறாக ஆயிரமாக
பெருகும் வடிவத்தை
பார்த்ததில்லையே?!
பார்த்தனே பார் பார்

அங்ஙனம் கண்டதை
அவ்வாறே திருதராஷ்டிரனிடம்
சஞ்ஜயன் உரைத்திட்டு
மேலும் தொடர்ந்தான்

ஆயிரம் சூரியனின்
அளவற்ற ஒளி
அம்மகா புருஷனின்
அற்புத முகவடிவாகும்

ஆயுதம் பலவும்
ஆபரணம் பலவும்
அஃதுடன் முகம் பலவும்
அர்ஜுனன் கண்டிட

பெருமானின் உலகத்தை
பெருவுருத்தில் கண்டதால்
பெருமகிழ்ச்சிக் கொண்டே
தலைவணங்கிக் கூறினான்

உன் தேகத்தில்
உயிர்கள் பலவும்
பிரம்மனையும் ரிஷிகளையும்
சர்பங்களையும் கண்டேன்

எல்லையற்றவனே
எங்கும் நிறைந்திருப்பவனே
அடி முடியையும், நடுவையும்
அடியேன் காணவில்லை

வானுக்கும் மண்ணுக்கும்
இடைப்பட்ட வெளியை
உன்னால் நிறைந்துள்ளது
அதனால் மூவுலகமும் நடுங்குகிறது

உன் உருவம் கண்டு
உலகம் நடுங்க
யானும் நடுங்கத்தைரியமும்
மன அமைதியும் அகலுகிறதே

அளவற்றத் தோள்களோடு
அக்னியை வாயாக உடையோனே
ஆதிநடுவந்த மில்லாதவனேநீயே
ஆதிபுருஷன் என நம்புகிறேன்

முப்பத்து முக்கோடி தேவர்கள்
வியந்து பார்க்கும் இறைவா
திறந்த நின்வாய்க் கண்டு
திக்குதிசை நான் காணவில்லை

விட்டிற் பூச்சிகள்
வீழும் ஒளி நோக்கி
அங்ஙனமேத் திருதராஷ்ரானின்
தவப்புதல்வர்கள் நின்வாயில்

உன் செய்கையை
உணரவில்லை நான்
உண்மையில் யார்நீ
உரைப்பாயா! உன்னை வணங்குகிறேன்

உலகழிக்கும் காலன்
நீயில்லாமலும்
நின் எதிரிகள் வீழ்வார்கள் - ஆக
நீ எழுந்திரு

துரோணன், பீஷ்மன்
கர்ணன் மற்ற வீரர்களும்
என்னால் ஏற்கனவே
கொல்லப் பட்டவர்கள்

கலங்காதே
காரணமாய் நீயிருப்பாய்
கொன்றது நானாயிருப்பேன்
வெற்றி உனதேப் புறப்படு

இடது கையால்
அம்பெய்தும் அர்ஜுனா
பகைவர்களை வென்று
புகழை அடை, பாராள்

உனது புகழைப் பேசிட தேவா
உலகம் ஆனந்தமடைகிறது
ராட்சசர்கள் நடுங்குகின்றனர்
சித்தர்கள் வணங்குகின்றனர்

மீண்டும் மீண்டும் வணக்கங்கள்
நீயே, வாயு, யமன், அக்னி
வருணன், சந்திரன், பிரஜபதி
ஆக ஆயிரம் வணக்கங்கள்

அடே கிருஷ்ணா
அடே யாதவா
அடே நண்பா - என்று
அன்பினால் அழைத்திருப்பேன்

மதிப்பு குறைவாக
அவமதிப்பாய் நடந்திருந்தாலோ
அளவிடுதற்கரிய பெருமையுள்ளவனே
மன்னித்தருள வேண்டுகிறேன்

மகனைத் தந்தையும்
நண்பனை நண்பனும்
காதலியைக் காதலனும்
பொறுத்தருள்வது போல

போற்றுதலுக்கு உரியவனே
வீழ்ந்து வணங்குகிறேன்
எனை ஏற்று
பொறுத்தருள வேண்டுகிறேன்

காணாததைக் கண்டேன்
கண்டதால் நடுக்கமுற்றேன்
பழைய உருவை காட்டி
பயத்தைத் தெளிவிப்பாயா

மகிழ்ச்சிக் காரணமாக
யோகச் சக்தியால்
யாரும் காணாததை
யாம் உனக்கு காட்டினோம்

பெருந் தவத்தாலோ
வேத யாகங்களாலோ
தானத்தாலோ படிப்பாலோ
பூமியில் காண இயலாது

கோர உருவங்கண்டு
குழப்பம் வேண்டாம்
பயம் நீங்கி
பழைய உருவத்தை பார்

இங்ஙனம் சொல்லி
இனிய உருவத்தை காட்டி
அர்ஜுனனை தேற்றியதை
சஞ்ஜயன் திருதராஷ்டனிடம் உரைத்தான்

அர்ஜுனா, ஆயினும்
ஒருமுகப்பட்டப் பக்தியால்
உள்ளபடி அறியவும்
எனை காணவும் அடையவும் முடியும்

எனது பக்தன்
எனை கதியாகக் கொண்டவன்
எவ்வுயிரையும் வெறுக்காதவன்
எனக்காக வேலை செய்பவன்

எவன் பற்றற்றவனோ
எது நடந்தாலும் - தனக்கு
எதிரானதல்ல நினைப்பவன்
என்னை அடைகிறான்

பகவத் கீதையின்
பதினொராவது அத்தியாத்தை
பக்தியில் விளக்கி விட்டேன்
பகுத்தறிவோடு இப்போது

தெய்வத்தை காண
தெய்வப் பார்வையா  
தேவனின் மகிழ்ச்சியா
பட்டிமன்றம் வைத்திட்டான்

ஒரு சூரியனின் - 100 டிகிரியில்
வதங்குது தேகம்  
1000 சூரியனின் ஒளியை
பார்த்தன் பார்த்தது உண்மையா

உலகின் எல்லாமே
அவனாக இருந்திட - நாம்
காரணம்தானே
கவலை எதற்கு

கொல்வது அவன்
கொற்றம் நமதெனின்
குதுகலிக்கலாம்
புழல் ஜெயிலென்றால்

யாரும் காணாத உருவத்தை
யாரும் காணாது சஞ்ஜயன்
கண்டு கூறுவது
திருதராஷ்ரனின் அருள்தானே

மூவுலம் நடுங்கலாம்
மைத்துனர் நடுங்கலாம்
நாம் பக்திக் கொண்டாலும்
நமை யொன்றும் செய்யார்

கொரோனாவில்
கோவிந்தாவானாலும்
குடிக்கக் கஞ்சியில்லை என்றாலும்
எவ்வடிவிலும் வாரான்







செவ்வாய், ஜூன் 23

பூரி ஜெகந்நாதா


தங்கத் துடைப்பத்தால்
மன்னர் பெருக்கப்
பலபத்திரர், சுபத்திரையோடு
ஜெகந்நாதர் ரதத்தில் புறப்பட்டார்

உச்சநீதி மன்ற நீதிபதிகளை
அச்சுறுத்தியத் துடைப்பக்கட்டைகளை
ஆருக்கும் தெரியவில்லை
அவரும் கண்டுக் கொள்ளவில்லை

கொரோனாத் தொற்றால்
கூட்டத்தைப் பெருக்க வேண்டாமென
கும்மியடித்த சங்கராச்சாரி - இன்று
எதிர்பதனால் இந்த அனுமதியோ

மகாகனம் பொருந்திய
மக்கள் வழக்கறிஞ்ஞர்களால்
கூடாது என்ற தீர்ப்பை
கூடி மாற்றினர்

நாம் நம்புகிறோம்
சமூக இடைவெளியோடு
பக்தர்கள் இன்றி
பாங்கோடு நடத்துவீர்களென

பொய், பிறழ் கண்டவர்கள்
பொதுவாய் சொல்லி
ஒதுங்கிக் கொள்ள
ஒரு கூத்து ஆரம்பமானது

ஜராவின் (வேடன்) அம்பால்
ஜடமானான் கிருஷ்ணன்
அதாவது மரமானான்
மரணமெய்தினான்

இந்திரத்துய்மன் கனவில்
இறைவன் தோன்றி
ஆழிநீரில் மிதந்து வருவதில்
அற்புதசிலை வடித்திட வேண்டினான்

பூரிக் கடலில்
மிதந்து வந்ததோ மரக்கட்டை
பூஜைகள் செய்து
பெருமாளை வடிக்க உத்திரவு

உளி கொண்டு செதுக்க
உடைந்தது உளி
வயோதிக வடிவில்
வந்தனன் ஒரு தச்சன்

21 நாள்
அறைக் கதவை
ஆரும் திறக்கக் கூடாதென
ஆரம்பித்தான் வேலையை

15 நாட்கள்
தச்சன் உளி தடதடத்தது
அடுத்த 3 நாட்கள்
அமைதியாய் இருந்தது

பொறுக்காத மன்னன்
அறையை திறந்திட
சினந்தே உரைத்தான் - இனி
சிலைகள் அரைகுறைதானென

மூன்று சிலைகள்
முகம், கை மட்டுமே
அங்ஙனமே நிறுவி
அனைவரும் வழிபட்டனர்

இந்திர தையுமா
மன்னர் மரணத்திற்கு பின்
கோயில் பாழ்பட - பின்னர்
கடல்கோள் கொண்டது

இன்றைய கோயில்
கிபி 1200 -ல் முடிக்கப்பெற்றது
ஆயினும் இராமனும்
பாண்டவர்களும் வணங்கிய தலம்

நம்பிக்கையில்
கேள்வி எழுப்பாது
நழுவுவது நலம்
நம் நீதிபதிகளைப் போல்


திங்கள், ஜூன் 22

கற்றல்


 

வில்லின் நாணா
வனிதை யானா
வளை-வில் அழகு
வளைத்துப் பழகு

நாணைப் பூட்டி
நாணமற்று விளையாடு
நாழிகை யென்ன
நாள் முழுக்கத் தேடு

ஏழுலகம் காட்டவா
எனதெடைப் பார்க்கவா
ஏனிந்த கேள்வியடி - நீ
எந்தன் வெற்றியடி

இதழெனும் மதுவிருக்க
ஏனிந்தக் கோப்பையடி
தாகம் தீர்ந்தாலும்
தவிப்பாய் அதற்காகடா

மங்கையிடம் மற்போரா 
மன்மதக் கலைதானடா
தீரா மோகத்திலே
தடையேனடி வேகத்திற்கு

ஓய்யார அழகினிலே
ஓய்வறியா மனசு
ஓடம் கரைசேர
ஓர் உயிராய் ஆவோமே

சனி, ஜூன் 20

சென்னை வெறுத்ததோ

chennai celebrates Madras Day how this name came– News18 Tamil





வந்தேறிகளால்
விரிந்தச் சென்னை   
வாழ வழியில்லையென
நம்பிக்கையைக் குலைத்ததா

பனியாக் குஜராத்திக்கும்
“பவன் புரோக்கருக்கும்”
பாதைக்காட்டிய சென்னை
தமிழனுக்குத் தடுமாறுதோ

புறாக் கூண்டாயினும்
இரை இல்லையெனில்
சிறகடித்துத் தேடவேண்டும்
சிறையிலடைந்து சாக வேண்டுமோ

உச்சிமீது வானிடிந்தப் போதிலும்
அச்சமில்லை என்றவன்
ஆகாரத்திற்காகப் பாண்டிச்சேரி
திருவல்லிகேணியென அலைந்திருக்கையில்

உதிரிகள் நாங்கள்
உதவ யாருமில்லாததால்
கிராமத்திற்குப் பயணிக்கிறோம்
கால்வயிறு நிறையுமென

“ஆட்டோ/டாக்ஸி” ஓட்டுநராய்
கட்டிடத் தொழிலாளியாய்
தினக் கூலிகளாய்
திக்கற்று போகிறோம்

கொரோனாவால் மடிவதா
பசியால் சாவதா
ஏதும் அறியாததால்
திரும்பிச் செல்கிறோம்

நகரக் கட்டமைப்புக்கு
நாங்கள் தேவைப்படுவோம்
அப்போதுத் தேடுவீர்
அதுவரை நன்றி

வெள்ளி, ஜூன் 19

சீன எல்லை


என்ன நடக்கிறது என விளக்குங்கள் ...



தேசப் பக்தி
திரும்பியப் பக்கமெல்லாம்
சீன எதிரியை
சீக்கிரம் அழித்திட

உயிர்கள் 20
உலகை விட்டு மறைந்தது
ஊர்சுற்றி
ஒரு வார்த்தை சொல்லவில்லை

உலக நாடுகள்
உம் என்றிருந்தன - ஏன்
ஊர் சுற்றியை
உலகம் கைவிட்டது

சீனத் தயாரிப்புகளை
தவிர்க்கச் சொல்லி
தேசப் பக்தர்கள்
கோரிக்கை வைக்க

ஆம் என்றே
ஆமோதிக்க
அச்சம் உண்டா
அமைதி தவழ்கிறதே

அரசுதான்
அறிவிக்க வேண்டும்
இறக்குமதிக் கொள்கையை
ஆகட்டும் என்றொரு வார்த்தையில்லை

குறைந்த விலை
குறைந்தக் கூலி
குவிந்தக் கூட்டத்தை
குறையாதுப் பார்த்துக் கொண்டான்

உலகமயமாக்கலில்
உள்ளூர் தொழில்கள்
ஊனமாயினப் போட்டியில்
ஊமையாய் அமைதிக் காத்தனர்

அமெரிக்க ஐபோன்
இந்தியாவில் விற்க
சீனம் தயாரித்தது
சினமெதற்குப் பக்தர்களே

கொரோனாவின் தாக்கத்தால்
பன்னாட்டுத் தொழில்கள்
சீனாவிலிருந்து புலம்பெயருமென
கனாக் கண்டாய்

ஐரோப்பிய மக்களுக்கு
ஆசிய மக்களுக்கென
தரம்பிரித்து தயாரிப்பவன்
வீழ்வான் என நினைத்தாயோ

ஆயுதமின்றி வீழ்ந்தது
அவனல்ல - நம்
புதல்வர்கள் - ஆக
அரசியலைப் புரிந்து கொள்


புதன், ஜூன் 17

கறுப்பு







வல்லினமா
மெல்லினமா
கறுப்பா – கருப்பா
நிறமா – சினமா

கறுப்பெனில் சினம்
காயம் படபட
ஆறாது………
ஆறாகப் பெருகும்

ஜார்ஜ் ப்ளாயெட்
இயலாது போனான்
ஆயினும் மூச்சு
ஆறாது ஓடுது

நிறம் அவனா
நீங்கள் உயிரா
மாய்வது இனமா
வாழ்வது நீங்களா

பிரெடரிக் டக்லஸ்
ரோசா பர்க்ஸ்
மார்டின் லூதர் கிங்
மாறாத்  தொடர்கதையாய்

அழகற்றவர்கள்
நாகரீகமற்றவர்கள்
வெள்ளை உலகின்
உளவியல் உருவாக்கங்கள்

ரோமனியனுக்குத் துக்கமாக
பெரியாருக்கு எதிர்ப்பாக
அறிவியலாளருக்குக் கருந்துளையாக
வெள்ளையனுக்கு வெறுப்பாக

நீதியின் சின்னமாய்
பகுத்தறிவு வண்ணமாய்
எதிர்பின் அடையாளமாய்
கன்னிச் சாமியாய்

கருப்பு பணமாய்
கறுப்பு ஆடுகளாய் 
கறுப்பு நிறுவனங்களாய் 
கறுப்பின் பட்டியல் நீளலாம்

கருப்பு எதுவென
கதை நாயகி
வரிசைப் படுத்த
பிடித்ததோ கருப்பு

வலியைப் போக்க
புனைந்து எழுதியதால்
பிடித்த நிறமென
பிதற்றி திரிகிறோம்

கருப்பே அழகு
காந்தலே ருசி
கவைக்கு உதவாது
களத்தில் படும் அவமானங்கள்  

சிவப்புப் பச்சையோடு
நீலம் கூடினால்
வெள்ளையாம் – ஏதும்
இல்லையெனில் கருப்பாம்

வண்ணங்களுக்கு இலக்கணம்
வடித்த மனிதனோ
இனங்கள் இயற்கையென
ஏனோ ஏற்க மறுக்கிறான்

அடர் கருப்புக்கு
அந்த நிறம் எடுபடாதென
வெள்ளையை
தேர்ந்தெடுப்பாய்

ஊதா கதிர் வீச்சில்
உடலைக் காக்குமாம்
உள்ளம் தாங்கலியே
உதவாதப் பேச்சில்

கருப்பச்சாமி - எங்கள்
குலத் தெய்வம்
குறத்தி வள்ளியோ
சுப்புணிக்குத் துணை 

வக்கற்றுப் போனால்
வாழ்வில் சங்கரன்
பிச்சை ஏற்றிட
தாழ்ந்துப் போவதில்லை

குல நியதியென
வேத முரைப்பதால்
மேன் மக்களாய் – மற்றோர்
மண் மக்களாய்

கருமை நிறக் கண்ணன்
களவாடினாலும்
கன்னியர்களால்
காதலிக்கப்படலாம்

மைக்கேல் ஜாக்சனின்
பிளாஸ்டிக் முகம் – நீங்கள்
குதுகலித்திருக்கலாம் – ஆயினும்
அவனை கொன்றது

ஆப்பிரிக்க அமெரிக்கர்கள்
இந்தியப் பூர்வகுடிகள்
இனவெறியின்
இலக்குகள்

ஃபேர் அன்ட் லவ்லியால்
நிறத்தை மாற்றலாம்
வெறுப்பவனை
வீழ்த்துவதெப்படி

அழகர்
கள்ளழகரான
தல புராணம்
தமிழனின் வரலாறு

மரபணு மாறுமா
மனங் கலந்தால் – ஆம்
இனங்கள் இணைய
இழிவுகள் மறையலாம்

நிறத்தால் மேம்பட்டவன்
நிலமதில் யாரிங்கே
குணத்தால் அநீதிகண்டு
கொதிப்பாயெனில் மனிதனாவாய்

கருப்போ மஞ்சளோ
எதுவாகவும் இருக்கட்டும்
எனகிங்கு உரிமையில்லையா
நானிங்கு மனிதனில்லையா

உளவியல் மாற்றமும்
பண்பாட்டு ஏற்றமும்
பொருளாதாரச் சமச்சீரும்
சமூகத்தைச் சமத்துவாக்கும்

அதுவரை
வெறுப்பவனை நேசிக்கச் சொல்லும்
வேதங்களை ஒதுக்கிடு
வேரறுக்கப் போராடு



வெள்ளி, ஜூன் 5

பன்றி கறி







வேணுகோபலனுக்கும்
இராகவேந்திரனுக்கும்
பன்றிக் கறிப் படைத்திட
பதைபதைத்தது கோவை

கண்ணப்பன் நாயனாரானார்
ஹரி என்கிற
ராம் பிரகாஷ் நாயனாராவதை
இந்துக்கள் தடுத்து விட்டனர்

வராக அவதாரமெடுத்து
பூமியைக் காப்பாற்ற
ஆயிரமாண்டுகள் போர் செய்து
அசுரனை வென்றவர்

ஐந்து மணி நேரத்தில்
மறைகாணியில்(CCTv)
படையிலிட்டவனைக் கண்டுபிடிக்க
மலைத்து நிற்கிறார்

பகவான் மலைக்கலாம்
பலரறியப் படையிலிட்டால்
பாரத் ரத்னா
பட்டம் அளித்திருக்கலாம்

யாருமறியாததால்
இஸ்லாமியர் கலங்கினர்
ஆட்டுக் கறிக்கே
அக்லக் அல்லாவிடம் சென்றதனால்

நன்றிகள்
நகர காவல் ஆணையருக்கு
சொன்னது இஸ்லாமியர்களா
நாம் மனிதர்கள்







ஞாயிறு, மே 31

அண்டமெல்லாம் நந்தவனமோ




அண்டமெல்லாம் அமைதி
ஆனந்தம் ஐம்பூதங்களுக்கு  
ஆறறிவு அடைந்து கிடக்க
அவை வாழத் தொடங்கின 

வரிகுதிரைகள் மான்கள் 
புனுகு பூனை - இன்னபிற 
வனவிலங்குகள் 
நகர்வலம் வந்தன 

இரவு பகலென்று
இடித்து நகர்ந்து
இயங்கிய வாகனங்கள்
எங்கேச் சென்றன

நந்தவனம் ஆனதோ
தாய் திருநாடு - அல்ல
புதிய இந்தியா
பிறந்து விட்டதோ? 

நைட்ரஜன் டையாக்சைட் 
வாகனங்களின் நச்சுவாயு
மரணத்தை முன்கூட்டியும்
ஆஸ்மாவையும் அளிக்குமாம்

தொழிற்சாலைகள் மூடியிருக்க
வாகனங்கள் ஓடாதிருக்க
வானம் வெளுத்திருப்பதாய்
செயற்கைகோள் செய்தி

செயற்கைக் கோள்கள் 
விண்வெளி மையங்கள் 
வானுர்திகள், ஏவுகணைகள் 
ஓசோனைத் துளையிட்டன 

உலகை கைக்குள்ளடக்க
விண்ணில் செலுத்தியக் கலங்களின் 
குப்பைகள் 7000 டன்
என்று விழுமென அறிவாயா

மாசறுப் பொன்னேயென
மாசாத்துவன் மகன்
மனம் மயங்கியே
மனையாளை அழைக்கலாம்

மாசறுக் காற்றேயென
மனிதா அழைப்பாயோ
காசுக் கொடுத்தாலும்
கலப்பிடமின்றி கிடைக்குமோ
 
இத்தனை நாட்கள்
புகையால் மறைத்த
இமயமலை சிகரங்கள்
அழகாய்த் தெரிகின்றன

ஒலியும் ஒளியும்
விரும்பியிருக்கலாம்
உனக்கது மாசானால்
உயிர் சுருங்கலாம்

ஒரியக் கடற்கரையில்
ஆமையிட்ட முட்டைகள்
குஞ்சுகளாய்
கடல் திரும்புகின்றன

மனிதர்களில்லா
கடலோரத்தில் 
கடற் பறவைகள் கூட்டமாய்
மானோத் துள்ளித் திரிகிறது   

மச்ச அவதாரத்தால்
56" மார்பழகனால்
முடியாததை
இயற்கை செய்கிறது

கங்கையில் யமுனையில்
கார்ப்ரேட் கழிவுகள்
கழுவியப் பாவங்கள்
காணாது போயின

மனிதர்கள் இல்லையெனில்
பாவங்களில்லை
பல்லாயிரம் கோடி
பகற்கொள்ளை திட்டங்களும்

வெனிஸ் கால்வாய்களில்
டால்பின்கள் உலவுகின்றன
தண்ணீர் தெளிந்திருக்கிறது
கொண்டோலா படகுகள் ஓய்வெடுப்பதால்

பயணங்கள் இல்லையெனில்
பாரினில் தீங்கில்லையோ
பேரண்டம் அமைதியாய்
மானுடமும் அமைதியாய்

உல்லாசக் கப்பல்கள்
ஊர்சுற்றும் தோணிகள்
சரக்கின் வகைக்கேற்க
நாவாய்கள் முடங்கிட

ஆழிச் சூழ் உலகின்
அளப்பரிய உயிரிகள்
பல்கி பெருகி
பவனி வருகிறதாம்

தெளிந்த நீரோட்டமும்
திரியும் மீன்கூட்டமும்
தேவையை கூறுதோ
தேடலை நிறுத்தென்று ஓதுதோ

கட்டுமரமோ
பாய்மரக் கலமோ
காற்றின் வழி பயணிக்க
கரை சேர்ந்த மனிதன்

எதிர்த்துச் செல்லென்ற
எண்ணம் பெற்றதனால்
எண்ணற்ற நஞ்சைக் கொட்டியதால்
எதுமற்று முடங்கினான் 

மனித குறுக்கீடுகள்
முன்னேற்றம் என்று
மா-நிலத்தைக் காயப்படுத்த
கொரோனாக் காப்பாற்றுகிறது

பாவ மன்னிப்புகள் வழங்கிய
பரமேஸ்வரனும்
பரமபிதா மற்றும்
பலரும் கதவடைத்துக் கொள்ள

புவிப் புன்னகையோடு
புரையோடிய மேனியை
புணரமைத்துக் கொள்கிறது
பராபரனும் பக்தனும் இல்லாததால்




தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...