கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடவுள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 22

உச்சநீதிக்கு -வாதம் -1

 










படைத்தவனை
பார்க்க அனுமதி வேண்டிட,
பாராமுகமாய் இருந்ததால்
பஞ்சாயத்து.

இயல்புகளுக்கு முரணாக
இறைவன் இருப்பதால்,
இப் பெண்களை
18-ஆம் படியில் பார்க்க விரும்பவில்லை.

அரசியல் சாசனம்
அர்ச்சகர் ஆவதற்கு
அனுமதி 25(2)(பி) கீழ் வழங்கினாலும்,
அதற்கும் தடை விதித்திட.

நிரந்தர பிரம்மச்சாரியின்
நிஷ்டை கலைந்திடுமோ,
நீள்விழி முலையுடைய மாதை
பட்டினத்தான் கண்டது போல்.

ஜெயமாலாவின் வாக்குமூலம்
ஜெயிக்கவில்லை என்றாலும்,
மனோரமா, சுதா சந்திரனுக்கு
அபராதம் விதித்து காத்தனர்.

தீண்ட அனுமதி இல்லை எனில்,
தீர்ப்பு எழுதுவதற்கு முன்
தீண்டித்தான் பார்ப்போம்—
தீர்ப்புகள் திருத்தப்பட?!!



வாதம் தொடரும்
அ. வேல்முருகன்

வெள்ளி, டிசம்பர் 5

பாரத் மாதா கீ ஜெய்

 


 










சிக்கந்தர் தர்கா தூணில்
சிவனின் மகனுக்குத் தீபம்
சி.ஐ.எஸ்.எப் சகிதம்
சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி

உளரல்கள் சட்டமாக
ஊர் வேடிக்கை பார்க்க
உடைந்தன மண்டைகள்
உதவாக்கரை மன்றங்களால்

கலவரத்தை தூண்டுவது
கயவாளிகள் என்றிருக்க
காவிகளுக்கு கட்டளையிடுவது
கருப்பு அங்கிகளா

சட்டங்கள் வளைவதால்
சாக்கடைகளின் நாற்றத்தை
சுத்திகரிக்க வேண்டியது
சமூகம்தான் சர்க்காரல்ல

பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரித்தானிய அடிவருடிகள்
பி.என்.எஸ் ஏவினாலும்
பின்வாங்காதே சமூகமே

அரசியல் சாசன பதவியில்
ஆடும் ஆட்டத்தை
ஆண்டவன் அறியாததால்
ஆரியம் வாழ்ந்திடுமோ

பொய்பொய்யா கதைகளை
பொதுவெளியில் கதைத்தாலும்
பொறிதனில் சிக்கி
பொய்மானின் பின் செல்லாதே

இராமனல்ல ஏமாற
சேவற்கொடிச் சேயோனின்
செந்தமிழ் உறவல்லவா
செகத்தினைக் காத்திடு

அ. வேல்முருகன்

புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



புதன், மார்ச் 20

மேல்பாதி திரௌபதி




ஆறுகால ஆராதனையின்றி
அம்மன் அவதியுறுவதாய்
ஆங்கொரு புலம்பல்

அரவமில்லாது
ஆலயத்தை திறந்து
ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும்

பக்த கோடிகள்
பக்கம் வந்திடாது
பார்த்துக் கொள்ளவும்

காவல் தெய்வத்திற்கு
கட்டளையல்ல
காவலர்களுக்கு

மேல்பாதி திரௌபதி
நீதியரசருக்கு கட்டுப்பட்டு
சாதிசனத்தைக் கைவிட்டுவிட்டாள்

சூதாட்டத்தில்
சுற்றமும் நாடுமிழந்தாள்
பாண்டவரின் திரௌபதி

சாதிய வெறியட்டாத்தில்
சாத்தியக் கதவுகளைத் திறக்க
நீதிமன்றத்தையே நாடுகிறாள்

தீர்ப்பென்னவோ
வனவாசமாய்தான் இருக்கிறது
எக்காலத் திரௌபதிக்கும்

திறந்தவுடன் மூடி – யாரைத்
திருப்தி படுத்துகிறார்
நீதியரசர்

மாவட்ட ஆட்சியருக்கும்
காவல் கண்காணிப்பாளருக்கும்
தேர்தல் கவலைகள்

ஏற்றத் தாழ்வுகளை
மாற்ற முடியாத தெய்வங்கள்
நீதிமன்றத்தில் ஒளிந்து கொண்டு

தனக்கு பூசைகள் வேண்டுகின்றன
தங்களின் சமுகநீதியை 
தரமுயர்த்துவார்களா பக்தகோடிகள்?!

வெள்ளி, மார்ச் 1

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

ஞாயிறு, அக்டோபர் 2

நமக்கு மீறின சக்தி






கடவுளா
கட்டிய மனைவியா
காலகாலமாய் தேடியும்
கண்டுபிடிக்க முடியாததா

என்னால் இயலாததை
அவனால் முடியுமாயென சிந்தியாது
ஏதோவொரு சக்தியென
ஏன் தீர்மானித்தேன்

புயல் மழையெனில்
பூட்டிய வீட்டைத் திறப்பதில்லை
வெயில் உச்சமெனில்
வீதியில் நடப்பதில்லை

மழைப் பொழிய
குடையோடு நடக்க
விடைக் கண்டவன்
மின்னலில் மாண்டால்

நமக்கு மீறின சக்தியென்றே
மூளை மழுங்கியிருப்பானா
நாளையே வேறொருவனை
மின்னலில் சாகக் கொடுப்பானா

அளவுக்கதிகமான
வெயிலும் மழையும்
பருவநிலை மாற்றமென
பகுத்தறிந்த மனிதன்

ஜடாமுடியில்
கங்கையை சுமப்பவன்
கமண்டலத்தில் சிக்கிய
காவேரியைத் திறப்பவனின்

கட்டுக்கதைகள்
புத்தியெல்லாம் நிறைந்திருக்க
நமக்கு மீறின சக்தியென
நயமாய் சொன்னானா?

ஐம்பூதங்களைக் கடவுளாய்
அச்சத்தில் ஏற்றாயா
அங்குசத்தில் அடங்காததால்
நமக்கு மீறின சக்தியென்றாயா

பெயரிட்டு அழைத்த புயலில்
சர்வ வல்லமையுள்ளவன்
நமக்கு மீறின சக்தியென
சாக்குச் சொல்லியாப் போனான்

கருந்துளைக்குள் நடப்பதை
கற்றறிந்தவன் தேடுகிறான் – அத்
தேடலின் ஈர்ப்பு விதியால்
கடவுள் காணாமல் போகிறான்

மானுட ஆற்றலுக்கு
பிரபஞ்ச இயக்கவியல்
நமக்கு மீறியதல்ல என்றே
நாளும் சொல்லுது









புதன், டிசம்பர் 8

கடவுள் சொத்து – வளர்ச்சிக்கா



உலகளந்து
ஓடியாடி உழைத்து
பிட்டுக்கு மண் சுமந்து
சேர்த்தச் சொத்துக்கள்


மாட மாளிகைகள்
வணிக வளாகங்கள்
விவசாய நிலங்கள்
கல்லூரிப் பள்ளிச் சாலைகள்


வேர்வை முத்துச் சிந்தி
பார்வைக்குக் கட்டணம் வாங்கி
பலகாலம் சேர்த்தச் சொத்தில் - பங்கு
அரசின் வளர்ச்சிக்கா

சொத்து
வாரிசு உரிமைக்கு உட்பட்டது
வாரிசு இல்லையெனில் - அரசுக்கா
ஒன்று விட்ட உறவுக்கா


மரித்த கடவுளின் சொத்துக்களை
வாரிசு உரிமை கோரும்
வகையறா
நீதிமன்றம் வருமோ


இந்திரன் சோமன்
இவர்கள் மாஜி கடவுள்கள்
கிரேக்கத்திலும்
இந்தப் பட்டியல் உண்டு

வகை நான்கு
வழிபட தேவபாஷை - என
வகுத்த கடவுளை
வார்த்தெடுத்த நீதி அரசர்கள்


புதிய காரணங்களை
புனைந்து எழுதுவதால்
கடவுளின் இருப்பை
நீட்டிக்க முயல்கிறார்களோ?


அப்பாவி பக்தர்கள்
அளித்தக் கொடைகள்
தங்க கோபுரமாக
தகதகவென மினுக்க


மினுக்கும் அழகில்
தனது கடவுளென மதிமயங்கி
எந்நாடுடைய சிவனேயென
ஏற்றிப் போற்றிட

கனவில் வந்தே
காப்பாற்று என் சொத்தை
நீதியரசருக்கு
கட்டளையிட்டிருப்பாரோ

அரசின் வளர்ச்சிக்கு
அடிப்படை வருமானம்
திருவிடந்தை பெருமாள் மட்டுமல்ல
திக்கெட்டும் காரணமாக கூடாதாம்


இந்து கோயில் வருமானத்தில்
கல்லூரித் திறப்பதா
கல்விக்கண் திறப்பதா
வேதம் கற்கட்டும்

வேதம் கேட்ட காதுகளில்
ஈயம் ஊற்றியவர்கள்
சூத்திரனிட்ட பிச்சையில்
வேதம் ஓதுகிறார்கள்

ருத்ர பூமி -சிவனுக்கு
பட்டாப் போட்ட இடமா
மானுடம் அமைதிக் கொண்டமிடமா - அல்ல
வீட்டுமனைகளாய் மாறியமிடமா


மலைகள் ஓடைகள்
மாயமாய் மறைய
அரசு ஆவணங்களும்
காசுக்கு மாறும் காலத்தில்

குலநாசமென
கூக்குரலிட்டாலும்
கூசாது மனைகளாய் மாற்றுவான்
கூத்தன் வரவே மாட்டானென்பதால்


சொத்துவரி
தொழில் வரி
மூலதன ஆதாய வரி - இன்னப் பிற
வரிகள் செலுத்துகிறாரா கடவுள்

அறிவுக் கூர்மையால்
அள்ளிச் சேர்த்த வருமானத்தில்
30% அரசு வசூலித்ததா?
முழு விலக்கு அளித்ததா


நீதிமன்றங்கள்
நேர்மையில் விலகுது
மானுடம் காப்பதை மறந்து
மதங்களை காக்க தீர்ப்பெழுதுகிறது


மதங்கள்
மானுடத்தை பிரித்து வைக்க
இயற்கை
இணைத்து வைக்கிறது


இணைவோம்
இறைவனை காணவல்ல
இறைவனின் இருப்பை நீட்டிக்கும்
இ.பி.கோவை மாற்றி எழுதுவோம்

ஞாயிறு, ஜூலை 19

புண்பட்ட மனமே

 

ழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்

ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல

அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்

தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா

இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்

இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்

இந்து  எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்

அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்

சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?

வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்

கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா

தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை

நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ

கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை

சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு

வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்

ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்

சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது

சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்

எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை           


செவ்வாய், ஜூன் 23

பூரி ஜெகந்நாதா


தங்கத் துடைப்பத்தால்
மன்னர் பெருக்கப்
பலபத்திரர், சுபத்திரையோடு
ஜெகந்நாதர் ரதத்தில் புறப்பட்டார்

உச்சநீதி மன்ற நீதிபதிகளை
அச்சுறுத்தியத் துடைப்பக்கட்டைகளை
ஆருக்கும் தெரியவில்லை
அவரும் கண்டுக் கொள்ளவில்லை

கொரோனாத் தொற்றால்
கூட்டத்தைப் பெருக்க வேண்டாமென
கும்மியடித்த சங்கராச்சாரி - இன்று
எதிர்பதனால் இந்த அனுமதியோ

மகாகனம் பொருந்திய
மக்கள் வழக்கறிஞ்ஞர்களால்
கூடாது என்ற தீர்ப்பை
கூடி மாற்றினர்

நாம் நம்புகிறோம்
சமூக இடைவெளியோடு
பக்தர்கள் இன்றி
பாங்கோடு நடத்துவீர்களென

பொய், பிறழ் கண்டவர்கள்
பொதுவாய் சொல்லி
ஒதுங்கிக் கொள்ள
ஒரு கூத்து ஆரம்பமானது

ஜராவின் (வேடன்) அம்பால்
ஜடமானான் கிருஷ்ணன்
அதாவது மரமானான்
மரணமெய்தினான்

இந்திரத்துய்மன் கனவில்
இறைவன் தோன்றி
ஆழிநீரில் மிதந்து வருவதில்
அற்புதசிலை வடித்திட வேண்டினான்

பூரிக் கடலில்
மிதந்து வந்ததோ மரக்கட்டை
பூஜைகள் செய்து
பெருமாளை வடிக்க உத்திரவு

உளி கொண்டு செதுக்க
உடைந்தது உளி
வயோதிக வடிவில்
வந்தனன் ஒரு தச்சன்

21 நாள்
அறைக் கதவை
ஆரும் திறக்கக் கூடாதென
ஆரம்பித்தான் வேலையை

15 நாட்கள்
தச்சன் உளி தடதடத்தது
அடுத்த 3 நாட்கள்
அமைதியாய் இருந்தது

பொறுக்காத மன்னன்
அறையை திறந்திட
சினந்தே உரைத்தான் - இனி
சிலைகள் அரைகுறைதானென

மூன்று சிலைகள்
முகம், கை மட்டுமே
அங்ஙனமே நிறுவி
அனைவரும் வழிபட்டனர்

இந்திர தையுமா
மன்னர் மரணத்திற்கு பின்
கோயில் பாழ்பட - பின்னர்
கடல்கோள் கொண்டது

இன்றைய கோயில்
கிபி 1200 -ல் முடிக்கப்பெற்றது
ஆயினும் இராமனும்
பாண்டவர்களும் வணங்கிய தலம்

நம்பிக்கையில்
கேள்வி எழுப்பாது
நழுவுவது நலம்
நம் நீதிபதிகளைப் போல்


வெள்ளி, ஜூன் 5

பன்றி கறி







வேணுகோபலனுக்கும்
இராகவேந்திரனுக்கும்
பன்றிக் கறிப் படைத்திட
பதைபதைத்தது கோவை

கண்ணப்பன் நாயனாரானார்
ஹரி என்கிற
ராம் பிரகாஷ் நாயனாராவதை
இந்துக்கள் தடுத்து விட்டனர்

வராக அவதாரமெடுத்து
பூமியைக் காப்பாற்ற
ஆயிரமாண்டுகள் போர் செய்து
அசுரனை வென்றவர்

ஐந்து மணி நேரத்தில்
மறைகாணியில்(CCTv)
படையிலிட்டவனைக் கண்டுபிடிக்க
மலைத்து நிற்கிறார்

பகவான் மலைக்கலாம்
பலரறியப் படையிலிட்டால்
பாரத் ரத்னா
பட்டம் அளித்திருக்கலாம்

யாருமறியாததால்
இஸ்லாமியர் கலங்கினர்
ஆட்டுக் கறிக்கே
அக்லக் அல்லாவிடம் சென்றதனால்

நன்றிகள்
நகர காவல் ஆணையருக்கு
சொன்னது இஸ்லாமியர்களா
நாம் மனிதர்கள்







புதன், மே 27

நாதமும் கடவுளும்




இசை 
மக்களுக்கா
கடவுளுக்கா

ஓசையில் ஆடுபவன்
கூத்தாண்டவனா
குதுகலித்து ஆடுபவனா

ஆடல்வல்லான்
ஆடிப்பார்த்ததுண்டா- தோற்ற
பார்வதியை தவிர

உருமியில் ஆடுவது
உடல் மட்டுமா
உள்ளமுமா

வித்தைகள்
விற்பனைக்கா
வயிறு வளர்க்கவா

கொரானவுக்கு அஞ்சிய
கடவுளுக்கு இசைக்க
கஞ்சிக் கிடைக்குமா

திறன் இருக்க
தெருவில் பாட
இரைப்பை நிறையலாம்

ஆக
கடவுள் கொடுக்காததை
கற்ற வித்தை தரும்


வெள்ளி, மே 8

அய்யோ...!!! கடவுளே...!!!



காய்ந்த தலையுடன்
காலத்தை ஓட்டும்
கண்ணீர் கலங்களாக
கரைசேரும் புதல்வர்களை

வேய்ந்த கூரையிலிருந்து
வேடிக்கை பார்க்கும்
வேலவனே மாற்றோனே
வேள்வியா பெரிது

தோய்ந்த எண்ணையில்
தேகத்தை வளர்ப்பவனே
தோல்சுருங்கி வாட
தலைவிதியை நிர்ணயித்தவனே

மாய்ந்த இவர்கள்
உனை சேவித்தும்
வினை எனசொல்லி
விளையாடுவது நியாயமோ

முக்கண் நாயகனே
மூவுலகமும் அறிந்தவனே
முலைப்பாலின்றி வதங்கி
மூச்சு விடுவதேனோ?

ஞானசம்பந்தனுக்கு
ஞானப்பால்
நியாயமா தேவி - இத்தளிர்களுக்கு
தாயில்லையோ நீ

குடமுழுக்கென்று
குடம் குடமாய்
கொட்டும் பாலெல்லாம்
குழந்தைக்கு கொடுத்தால்

ஒருவேளை சோற்றுக்கு
ஓடியோடி உழைத்து
சக்கையை ஊண்டு
சாகிறான் மனிதன்

உனக்கோ ஆறுகால உணவு
கணக்கோ கண்பிதுங்கும் அளவு
உலகோ பசியால் பிளவு
உணவோ அங்கு தொலைவு

நெய்யென்றும் பாலென்றும்
பஞ்சாமிருதம் பன்னீரென்றும்
பச்சைக் கல்லில் கொட்டி
பாவத்தை போக்குகிறார்களாம்

பாவம் செய்ய முடியாமல்
பாழும் வயிற்றுகாக அலைகிறேன்
கல்லே எனக்கொரு வரம்கொடு
கல்லாக நான்மாற வேண்டும்

வானமே கூரையாக
வாழ்வை நடத்தும்
வக்கற்ற எங்களை விட்டுவிட்டு
வசதியாய் நீ மட்டும்

வானளாவ வீடுகட்டி
இல்லறம் நடத்தும்
நல்லறம் சொன்னவனே
இதுவா அறம்

அறுபடை வீடு கொண்டவனே
உனக்கோ தெருவுக்குத் தெரு
ஊருக்கு ஊர்
மாட மாளிகைகள்

ஒன்றுக்கு இரண்டென
உல்லாச வாழ்வு நடத்தும்
காம நாயகனே
கற்பு என்றால் என்ன?

கல்லே, தெய்வமே
தூணிலிருப்பவனே
துக்கம் அளிக்கிறாயே
தொலைந்து போயேன்

ஏகாதிபத்தியம் நடத்துபவனே
எச்சரிக்கை விடுக்கிறோம்
வானமே கூரையிருந்தாலும்
வரண்டுவிடாது எங்கள் புரட்சி

பலவுருவம் கொண்டவரே
பலத்தை சற்று காட்டுங்களேன்
பணம் வேண்டுமானாலும் தருகிறேன்
தினம் அருள்புரிய வேண்டுகிறேன்

அய்யோ...... கடவுளே..... கல்லே....
என் கேள்விகளுக்கு பதில்
நீயில்லை என்பதால்
இன்றுவரை கிடைக்கவில்லை

திங்கள், மே 4

சகலமும் நீயே



எம்மன ஆலயத்தின்  தேவியாய்
    என்னை கவர்ந்தவள் அமர்ந்திருக்க
அம்பலத்தில் இல்லாத தேவிக்கு
     ஆராதனை  ஆராட்டு  ஏனோ
சுடரொளியாய் விளங்கும் விழியில்
     சுழன்றடிக்கும்   வெளிச்ச மிருக்க
சடங்காய்  தீபவொளி எதற்கு
    சர்வேஸ்வரி  எனமுகம் காட்டவோ
   
தேவியின் கடைக்கண் வேண்டிட
       தருணம் இதுவல்ல என்றாளே
கூவியும் தராத தேவியிடமா
    கும்பிட்டு  வரங்கள் கேட்பேன்
ஆவியும் நினது சரணமென
    ஆவண சாசன  மாக்குகிறேன்
புவியில் வாழும் வரையில்
    பேதையே தாராயோ நினதருளை

ஆடும் ஆங்கார நாயகிக்கு
      ஆறுகால  அருஞ்சுவை உணவிருக்கு
பாடுபட கைகள் இரண்டிருக்கு
    பாதையில் இணையாய் வாமயிலே
மாடுமனை மச்சான் நானிருக்கேன்
    மண்ணைத் திருத்தவோம் பொன்மயிலே
வீடுநிறை  விளைச்சலால் பெண்ணே
    வீதியோடு விருந்துண்டு மகிழ்வோம்


ஆயுதத்தால் என்ன பயனடி
     ஆரை  வதைக்க அவதாரமடி
பாயும் விழியின் வீச்சால்
    பணிந்தேன் உன்னிடம் சரணமடி
சூரனை  சூலத்தால் கொல்ல
     சூத்திரம் வகுத்தவள் சாமுண்டி
தீரனம்மா திலகமிடு மெல்ல
     தீஞ்சுவை வாழ்வை வேண்டி

நான்மாட கூடலில் வாழ்வதற்கு
     நான்கு வாசல் கொண்டவளாம்
உன்னோடு கூடி வாழ்வதற்கு
    உன்னிதய வாசல் போதுமடி
அனலாய் அக்னியான அவளா
    அகிலதிற்கு அருள்வாள் சொர்க்கம்
தனலாய் தகிக்மெனை அணைத்திட
    தணியுமே  காண்பேனே சொர்க்கம்


 

புதன், ஏப்ரல் 15

எங்கே கடவுள் - மார்கண்டேய கட்ஜு



தீர்க்கமான கேள்வி
தீர்க்க வேண்டியதுதானே
தீர்த்த கோமியத்தாலே

வேதனை தீருமென்றால்
விஷத்தை அருந்த - உன்
பிள்ளைகள் காத்திருக்கையில்

எங்கே சென்றாய்
என் கடவுளே
ஏன் கதவடைத்தாய்

எழுப்பியவன் நீதிபதி
எனினும் - ஆண்டவனிடம்
அடிபணிந்து ஆக வேண்டுமோ

அரங்கன்
அவதாரமெடுக்கலாம்
அதுதான் இதுவென்று கதைக்காது

அரன்
அரம்பையோடா - அல்ல
மயானத்தில்லா

மாயவனை
மோகினி வடிவடுக்க  சொல்லி
புணர சென்றிருக்கிறான்

ஏனா? !! வந்த மருத்துவனை
வாயிலேயே திருப்பியவனை
எப்படிச்  சொல்ல

சொர்க்க வாசல் திறக்குமென
சோம்பி கிடக்காதே
சோறு தண்ணிக்கு வழியில்லை

"தெய்வத்தால் ஆகாதெனினும்"
தீர்த்துச் சொன்ன
திருவள்ளுவன் வழியில்

முயற்சி செய் மானுடமே
மர்கண்டேயேனாக வாழவல்ல
கொத்துக் கொத்தாய் சாகாதிருக்க

சனி, ஏப்ரல் 4

வாலி


தம்பிக்கு நட்பாய்
தசரதப் புத்திரனாம்
தாரை உரைக்க...
தம்பியைக் கொல்லேன் - என்கிறான்

வாய்க்கால் தகராறு
வாலிக்கும் இராமனுக்கும்
வாழ்வில் ஏதடி
வேதங்கற்றவன் - யோக்கியனடி

எதிர்நின்று வீழ்த்தாது
புல்மறைத்தப் பாழ்கிணறுபோல்
பாணமெய்தினான் மறைந்திருந்து
மாண்டான் வாலி - வீரனவன்

அறத்தோடுப் போரிட்டவனை
திறத்தால் வெல்லாது
புறத்தால் கொன்றே
புகழ்மகுடம் கொண்டவனே

எதிர்த்து நீவந்திருந்தால்
எமலோகம் சென்றிருப்பாய்
மறைந்துக் கொன்றதனால்
மாறாபழிச் சுமக்கிறாய்

சுக்ரீவனின் தேவை
சீதையை மீட்கவென்றால்
பாதைக் காட்டி - உனது
மனையாளை மீட்டிருப்பேனே

இப்போதோ

விலங்கை கொல்ல
விதிகள் வேண்டாமென்கிறாய்
ஏலாமை மறைக்க
ஏதோதோ காரணம் தேடுகிறாய்







புதன், மார்ச் 25

கடவுள்




கண்ணப்பனின் பக்தியை சோதிக்க
கண்ணில் இரத்தம் வடித்தவனே
கண்டத்தில் ஆலகாலம் நிறுத்தியவனே
என்னப்பனே எங்களுக்கு கதவடைக்காதே

உலகளந்த வாமன வடிவமே
உலகாளும் மாபலி கொரோனவை
மூன்றடி எடுத்து வைத்தே
மன்றாடும் மக்களை காப்பாற்று

பெண்ணால் பிறக்காத முருகனே
உன்னால் மடிந்தவன் சூரனே
ஆறு முகத்தில் கொரோனாவா
ஆறுகால உணவும் அரோகராவா


மகிசா சூரனல்ல - மக்களம்மா
மரணம் கொரோனாவால் வேண்டாம்மம்மா
மகேசுவரனின் வரமும் இல்லையம்மா
மலைத்தே கதவடைத்துக்  கொள்ளாதேம்மா







வெள்ளி, ஜனவரி 26

செக்சி துர்கா



முருகனை அழைக்க
அழகு நாமங்கள்
அவரவர் விருப்பமாய்
118 இருப்பதாயும்

சுடுகாட்டானை
சுட்டும் பெயர்கள்
சுமார் ஆயிரம்- ஆயின்
சொரூபம் ஒன்று

அகிலாண்டேஸ்வரியை
அன்பாய் அழைக்க
அவர்களிட்டப் பெயர்
ஆயிரமல்ல 150

குலம்காக்கும் எம்மவர்கள்
அய்யனாரென்றாலும்
எந்த அய்யனென்று
எடுப்பாய்ச் சொல்வர்

பேச்சி, இசக்கி
பச்சையம்மாள், முனியம்மாய்
இரட்சித்தவர்கள் என்பதால்
இரகரகமாய்ப் பெயரில்லை

விடுதலை, சுதந்திரம்
வேறுபாடின்றி
வைத்தப் பெயர்கள்
யாருக்குச் சிக்கல்

சுட்டும் பெயரொன்றை
சூட்டியக் காரணத்தால்
வெட்டும் கூட்டமொன்று
காட்டுக் கத்தல் கத்துகிறது
  
இல்லாததை இருப்பதாகவும்
சொல்லாததைச் சொன்னதாகவும்
நடக்காததை நடந்ததாகவும்
நாடகம் நடத்துகின்றனர்

பாத்திமா, மேரியை
பார்த்தாயா அப்படி
பாராள்பவளை – படமிட்டு
பார்க்கலாமா என்கிறான்

சௌந்தர்ய லகரியில் – சங்கரன்
சொக்கிப் பாடுகிறான் – சொக்கன்
சும்மாயிருந்தான் – பக்தாள்ஸ்
சனல் சசிதரனை வாட்டுவதேன்?!!...

சனி, ஆகஸ்ட் 27

குலத் தொழில்



செம்படவனோ
செம்மீன்
மரைக்காயாரோ அல்ல
எஸ் & எஸ், ஸ்ரீராம்
அக்மார்க் அய்யர்கள்
அயிரையைப் பிடிச்சு வித்தவங்க

கூறு 5 ரூபாவென்று
கூவி வித்தவன்
குப்பனோ, சுப்பனோ இல்லீங்க
பனியாக்கள்
ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார்
பியானி, அம்பானி

நாலுபேர் தலைமுடி வெட்டி
நானூறுக் கோடிப் பொருளீட்ட
நாவிதனோ நான்
நேட்சுரல்ஸ், கீரின் ட்ரென்ட்
கார்ப்ரேட் முதலைகள்

வெள்ளன எழுந்து
வெளுத்துக் கொடுத்தவனை
வண்ணாரெனப் பெயரிட்டாய்
பிக் லாண்ட்ரி, லாண்ட்ரி பாய்
கடைத் திறந்தாயே
நீ என்ன சாதி

சப்பாத்தி முள் தைக்காதிருக்க
செருப்புத் தந்தவனை
சக்கிலி என்றாய்
மாட்டுத் தோலை இறக்குமதிச் செய்து
செருப்பு செய்யும் – நீ யார்
வெட்கமின்றிச் சொல்
  
சூத்திர பஞ்சமனின் வேலை
சுகமா இருந்தா வா
சாக்கடையைச் சுத்தம் செய்வோம்
கோடிகள் கிடைக்காவிட்டாலும்
குமட்டும் வாசனைப் பெறுவாய்

எனக்கோ எம்பெருமானின் கடாட்சம்
கருவறைக் குள்ளிருந்தால் கிட்டுமென
ஆகம விதிப்படிக் கற்றிருக்கிறேன் – ஆம்
அடியேன் பூசாரியாக வேண்டும்
அவனருளின்றிக் கோடிகள் வேண்டேன்

கிராமத் தேவதைகள்
அரவணைத்து வளர்ந்தவனென்பதால்
மதுரையம்பதியிலோ, காஞ்சியிலோ
மயிலைக் கபாலியோ அல்ல
அரங்கனோ அடியேனை ஏற்க வேண்டும்





திங்கள், செப்டம்பர் 15

சிவன் சொத்து குலநாசம்



நூற்றிருபந்தைந்து பேருக்கு
இட்ட சாபம்
குலநாசம்

செந்தில் வேலவன் பெயரில்
செய்திதாளில் விளம்பரம்
சிவனின் மைந்தனாயிருக்கலாம்

அக்னி செரூபமான
அண்ணாமலையாரை
அவர்கள் ஏமாற்றினார்களாம்

பிள்ளையின் தலையை கொய்தவன்
பக்த பிள்ளைகள் – உங்களை
மொய் எழுத சொல்கிறான்

தாயும் சேயுமானாலும்
வாயும் வயிறும் வேறுதானே – அதனால்
வாய்தா கொடுத்திருக்கிறான்

ஆறுகால உணவின்றி
அவனை வாடவிட்டால்
ஆறு’கால’ செய்திவரும்

மெய்யான உலகில்
மெய்யான உங்களை
மொய் எழுதி வாழச் சொல்கிறான்

பிட்டுக்கு மண் சுமந்தவனை
பிள்ளைகள் ஏமாற்றலாமோ?
பிடி சாபமென்கிறான்

சாபத்திற்கு
சன்மானம் அளித்தால்
சாப விமோசனம்

எட்டாயிரத்திற்கும்
இரண்டு கோடிக்கும்
சமத்துவமாய் சாபம்

முக்கண் நாயகனே
உமக்கு பட்டா அளித்த
வட்டாச்சியர் யார்?

உமக்கு முன்
உரிமை கொண்டாடிய
பட்டாதாரர் யார்?

ஆதியும் அந்தமுமில்லா
ஆறுமுகனின் தகப்பனே – உரூரின்
ஆதிதான் யாதோ?

பட்டா மாற்ற – நான்
பட்டபாடு – நீயும்
பட்டாயோ?

காஞ்சி காமாட்சி
மதுரை மீனாட்சி
மயிலை கபாலியோடு

மூவடியில் உலகலந்தவனுக்கும்
பூவுலகில் நிலமெதற்கு
கோடிகளில் புரள்வதற்கா?

ஆண்டையா? ஆண்டவனா? – அல்ல
அடுத்தவன் உழைப்பில் வாழும்
தஞ்சாவூர் மிராசா?

ருத்ரபூமி பொறம்போக்கு
மாத்திரமே – உனது
சொத்தென் றிருந்தேன்

சுடலையை விட்டு
சுற்றி சுற்றி – வளைத்த
சொத்தின் விபரம் இதுதானோ

தலையாறு கொண்டவனுக்கும்
தலையை கொய்தவனுக்கும்
எல்லையில்லா சொத்திருப்பதால்

அவ்வை பள்ளி – உன்
பிள்ளைக்கு பிடிக்குமென
நடத்துகிறோம்

அதற்கு கோடிகளில்
பங்கு கேட்பதா?
சங்கரனே உமது குலமென்ன?





இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...