நாட்டிலுள்ளோர் கூடிட
நாயகன் நாயகியை
இணையாய் ஏற்றுக் கொண்டான்
இட்டத்தோடு
இச்சடங்கு என்றாலும்
எதிர்ப்புகள்
இல்லாமலில்லை
அலங்கார மாளிகையில்லை
ஆங்கொரு கோயிலுமில்லை
மங்கல இசையுமில்லை
மக்கள் சாட்சியாயிருந்தனர்
புத்தாடை அணியவில்லை
அத்தரும் ஜவ்வாதுமில்லை
புழுதிப் படிந்த கூந்தலோடு
கசங்கிக் கிழிந்த சட்டையோடும்
அவர்கள் அன்னியமில்லை
அங்கு வளர்ந்தவர்கள்தான்
ஆயினும் ஈன்றவள்
அழுகிறாள், மகளை அடிக்கிறாள்
வலிகளுக்கிடையே
மகிழ்ச்சி - எனினும்
மயான அமைதி
மாலை மாற்றிக் கொண்டனர்
திலகமிட
குலுங்கி அழுகிறாள் தாய்
கண்ணீரோடு நாயகி
அமைதி சாட்சியாய் ஊர்
அவளுக்கும் அவனுக்கும்
ஈர்ப்பு இருந்ததால்
ஊர் சாட்சியானது
ஒரு காதல் வாழ்வானது
அ. வேல்முருகன்