செவ்வாய், ஆகஸ்ட் 15

கண்களின் ஆற்றல்




 
குறள் 1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து


அஞ்சனம் தீட்டிய
அவளின் கண்கள்
கொஞ்சி அழைத்து
குற்று யிராக்கியது
தஞ்ச மென்றேன்
தன்நிலவாய் குளிர்ந்த
வஞ்சியின் கண்கள்
வைத்தியம் பார்த்தது

பாவல னாகி
பல்லக்கில் போவதும்
கோவல னாகி
கொலைகளம் செல்வதும்
ஆவலர் அவரவர்
அன்பின் ஆற்றலே
ஆவதும் அழிப்பதும்
அழகிய கண்களே 


ஞாயிறு, மார்ச் 5

அகலிகை




அகலிகை, சீதை, திரௌபதி,
தாரை, மண்டோதரி - பஞ்ச
கன்னியரென மகாபாரதம் உரைக்க

அவர்களில் அகலிகை
கௌதம ரிஷியின்
மனைக் கிழத்தி

வால்மீகி, கம்பன், துளசி
எழுத்தச்சன், தொரவே
இராமாயணங்களின் அகலிகை

பம்ம, பௌத்த
ஜைன இராமாயணங்களில்
காணாதுப் போகிறாள்

இந்திரனின் இச்சையால்
இராமனின் கால்பட்டு
சாப விமோசனதிற்குக் காத்திருந்தவள்

பாற்கடலைக் கடையத்
தோன்றியக் காமதேனுவை
மகரிஷிகள் ஏற்றனர்

அடுத்து தோன்றியது
வெண்ணிறக் குதிரை
மாவலி மன்னன் கொண்டான்

வெள்ளை யானையையும்
பாரிஜாத மரத்தையும்
தேவேந்திரன் பெற்றான்

அதன் பிறகு
அப்ஸரஸ் புடைச்சூழ
மாகாலட்சுமி தோன்றினாள்

அவளையும் இரத்தின மாலையையும்
ஸ்ரீமன் நாராயணன்
ஏற்றுக் கொண்டார்

மயக்கும் மதுவின் தலைவியை
அரியின் ஆசிர்வாதத்தோடு
அசுரர்கள் கொண்டனர்

அதற்குப் பிறகும்
அவர்கள் கடைய
ஆங்கு தோன்றியது

பேரழகின் உச்சமாய்
வானில் ஒளிரும் நட்சத்திரமாய்
அகலிகைத் தோன்றினாள்

அழகெனில்
அடிதடியும் உண்டல்லா
அங்ஙனமே ஆனது

இந்திரன் இச்சைக் கெண்டான்
கௌதமன் கச்சைக் கட்டினான்
போட்டியில் முடிவென்றான் பிரம்மன்

தேவர்களுக் கிடையேயான
தேடல் போட்டியன்றோ
தேடினர் தேடினர்

இருபக்க தலைக் கொண்ட
கோமளத்தைக் காண்பவருக்கு
பாற்கடல் பெற்றெடுத்த பத்தினி

ரிஷியோ தியானத்தில்
இந்திரனோ உலகப் பயணம்
நாரதர் நன்மை பயத்தார்

கோ சாலைக்கு கூட்டிச் சென்றார்
ஆங்கொரு கன்றீனும் பசுவிற்கு
கன்றின் தலை முதலில் வர

நாரதர் ரிஷியை
அப்பசுவை மும்முறை வலம்வர
பணிக்கிறார்

அங்ஙனம் வலம்வருவது
உலகைச் சுற்றுவதற்கு சமமென
சாட்சி தானென்கிறான் நாரதன்

கைப்பிடித்தான் கௌதமன்
காமத்தீ அடங்காத இந்திரன்
காத்திருந்தான்

அத்தாட்சியாய் சதானந்தன்
அவர்களின் மகவாய்
பிறக்கிறான்

மோகத்தில் வீழ்ந்தவனுக்கு
தாகம் தீறுமட்டும்
அச்சமும் நாணமேது

அவரவர் கற்பனைத் திரனுக்றேப்ப
அகலிகை அலைகழிக்கப் பட்டாள்
மகாபாரத்திலும் மானபங்கப் பட்டாள்

இரங்கநாத, பாஸ்கர, வங்காளி
இராமாயணங்களில் இந்திரன் எனவறிந்தே
இசைந்தாள் எனக் கதைச் செல்கிறது

தேவேந்திரன் துப்பறிவாளனாகி
கௌதமனின் செயல்களை
நோட்டமிடுகிறான்

நாளொன்றைத் தேர்ந்தேடுத்து
கௌசிகனாய் உருமாறி
கருக்கலை விரைவாக்கினான்

மாசு மருவற்றப் பேரழகை
ஆசையாய் ஆராதிக்க
ஒருசாமம் போதுமென

சேவலாய் குரலெழுப்ப
கௌதமன் வெளியேற
ஆவலாய் காத்திருந்தான்

இந்திரன் கௌதமனாய்
அகலிகையை அணைத்தான்
கற்புக்கரசி ஏமாந்தாள்

மாயக் கருக்கலென
ஆயத் தெரியாதக் கௌசிகன்
ஆசிரமம் திரும்பினான்

கண்ட கோலத்தினால்
மூண்ட கோபத்தில்
கல்லாக சபித்தான்

உன்னுருவத்தில் வந்ததனால்
உடனிருக்க அனுமதித்தேன்
என்றாள் அகலிகை

பொல்லாப் பழி விலக
இராமனின் கால்பட
விமோசனமென விலக்களித்தான்

இந்திரா உன்னாசை அல்குலென்பதால்
உடலெங்கும் ஆயிரம் பெறுவாயென
சாபமிட்டான் கௌதமன்

விமோசனம் வேண்டினர் இந்திரனுக்கு
ஆயிரம் கண்ணாக
மாற்றம் பெற்றது சாபம்

வால்மீகி கம்பனென
வரிசையாய் அகலிகையை
வதை செய்த தொன்மத்தில்

வண்ணக் கற்பனைகள்
எண்ணற்றக் கதைகளோடு
கற்புக்கு காரணம் கற்பிக்கிறது

தொன்மம் என்பதால்
தோப்புக் கரணம் போடாதே
எள்ளளவும் ஏற்காதே

காமத்தில் கல்லாயிறு
காலகாலமாய் பெண்ணிற்கு
போதிப்பது ஆண்தானே

மானுடத்தின் கற்பு
மதம் கொண்டவர்களுகில்லை
மானினத்திற்கு மட்டுமே

சுயவரம்
பெண்ணின் விடுதலையா
ஆணின் அடக்குமுறையா

வீரதீர மென்பது
வில்லை உடைப்பதா
எல்லை யறிந்து நடப்பதா

கல்லாமை என்பது
கல் பெண்ணாக - இராமனின்
கால்பட வேண்டுமென்பதா

சீதையின் கற்பைச் சோதிக்க
தீப்புக வைத்தவனா
தீர்பெழுதச் சிறந்தவன்

மானுடத் தோற்றமென்பது
மையலில் தோன்றுவதா
பாற்கடலில் எழுவதா?

தவ வலிமையால்
புவனம் அறியவில்லை எனில்
அவணி ஏது

மலர் நாடும் வண்டாய்
சிலர் மட்டு மிருப்பது
மகரந்தச் சேர்க்கைக்கா

தேனருந்தும் வண்டு
தெவிட்டிட
தேடும் மலர்கள் இரைதானே

இருதலைக் கோமளம்
இகத்தில் இல்லாத போது
இருப்பதாய் பாவித்து

அஞ்ஞான உலகமிதை
அற்புதமென வடித்தே
அகிலத்தை ஏமாற்றுவது

மெய்ஞானமென்று
ஐந்தறிவாய் ஏற்காதே
ஐயுறவு கொள்


திங்கள், பிப்ரவரி 27

அருகிரு அன்பே










கடுப்பில் ஏனடி
கண்ணனை வாட்டுற
வடுக்களாய் வார்த்தையை
வண்டியாய் கொட்டுற
தடுத்தே அன்பின்
தரத்தைச சோதிக்கற
அடுகள மல்லவே
அன்புனை எதிர்த்திட

ஒருநாள் இருநாள்
உனையான் மறந்தேனா
விரும்பும் மனதிற்கு
விடுமுறை அளித்தேனா
அரும்பும் நினைவால்
அத்தானை வெறுத்தாயா
பொருமிக் களைத்திடாதே
பொல்லாங்கும் சொல்லாதே

பொருள்தேடிச் சென்றேன்
பொஞ்சாதி உனக்காக
இருள்விலக்க வந்தேன்
இரும்பாய் மாறாதே
அருள்வேண்டி நின்றேன்
அர்ச்சனைகள் செய்யாதே
மருள்கொண்டும் விலகாதே
மச்சான் மடலேறுவேன்

உருவத்தை பார்த்திட
உன்தாபம் அடங்குமோ
குரலதைக் கேட்டிட
குதுகலம் பிறக்குமா
பருவத்தில் பசலை
பாவையை வாட்டுமோ
சரணடைந் தேன்தேவி
சரசம் பயிலவே

பருகிடும் விழிதனை
பார்த்து நாளாச்சு
நெருங்கிட விலகிடும்
நெடுநாள் கசப்பு
உருகிடும் பேச்சில்
உண்மைகள் விளங்கிடும்
அருகிரு அன்பே
அத்தனையும் மறைந்திடும்

திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

காதலர் தினம்






மடலேறி
மடல் வரைந்து
மடந்தையைக் கவர்ந்தவர்கள்
மலரில் தஞ்சடைந்த நாளோ

களவொழுக்கம் கண்ட
தலைவன் தலைவிக்கா
கண்டதும் காதல்கொண்ட
தற்கால காதலர்களுக்கா

தூதாய் வரும் தோழியா
துருவங்கள் இணையும் மொழியா
துறவறம் போகும் வழியா
துன்பத்தில உழலும் ஆழியா

காற்றுமழை பருவத்தே வருவதுபோல்
காளைப் பருவத்தில் வருவதன்றோ
கூற்றுக் கிரையாகி போகாது
கூட்டணி பலமாகுவது இந்நாளோ

நொடிகள் நீள்கிறது
நாடித் துடிக்கறது
ஆடி மாதமாய்
அடுத்த நாள் தோணுது

இந்த துடிப்புதனை
இலாபமாய் மாற்றிட
இரத்தின கம்பளம் விரித்தவர்கள்
இரகரகமாய் விற்பவர்கள்

புனிதமென்ன
புவனம் முழுதும் கொண்டாட
புனைந்த கதைகளோடு
வணிகம் மட்டுமே குறிக்காள்

அட்சய திரிதையன்று
அட்டிகை வேண்டுமென
அவளை கேட்க வைப்பதும்
அத் திருநாள்தான்

திருநாளில் மட்டும்
திகட்டும் அன்பை அளிப்பாயோ
மறுநாளில் திக்குத் தெரியாது
திசைமாறிச் செல்வாயா



சனி, பிப்ரவரி 11

பசுத் தழுவுதல்





காதலிப்போர்
கண்ணோடு கண்
காணும் நாளா
பிப்ரவரி 14

வேதத்தை மீட்டெடுக்க
வாஞ்சையோடு
பசுவைக் கட்டியணைக்க
பிப்ரவரி பதினாங்கா

காமதேனு என
கட்டிப் பிடிப்பாயா
கோமாதா என
கூம்பிட்டு நிற்பாயா

பசுவைத் தழுவு
அசுமேத யாகத்தில்
வேதமுரைத்ததை
வேட்கையோடுச் செயல்படுத்து

யாக முடிவில்
தசரதப் பத்தினிகளுக்கு
புத்திரப் பாக்கியம்
பிப்ரவரி 14 ல் உங்களுக்கு

உழைப்பைப் போற்றும்
உன்னத மரபில்
உடனுழைத்த மாட்டை
உயர்த்திப் பிடிக்கும் தமிழனே

வேத மரபை மீட்க
பசுவைத் தேடிக் கொண்டிருப்பாயா
காதல் உயிரினத்தின்
உன்னதமென போதிப்பாயா

வியாழன், பிப்ரவரி 9

பிராமணன் – பாஸ்கி






அறிவு
அவன் சாதிச் சொத்தொன்று
அரை வேக்காடு
பாஸ்கி அலறியது

வரலாறு அறியாத
வந்தேறியா அவன்
வடிக்கட்டியப் பொய்களை
வாரி வழங்குபவன்

பௌத்தமும் சமணமும்
தழைத்தோங்கிய நாட்டை
தனதாக்கிக் கொண்டு
ஒமம் வளர்த்து யாசித்தவர்கள்

கடல் கடந்து செல்ல
வேதத்தில் உத்திரவில்லை
விவேகானந்தன் சென்றான்
விவேகத்தால் பெயர் பெற்றான்

வேதம் உரைத்ததை
வேண்டியபடி மாற்றினான்
குடுமியை வெட்டினான்
குலத்தொழிலையும் மாற்றினான்

மொட்டைப் பாப்பாத்திகள்
கட்டைப் பொருளாகாது
ஏட்டைப் படித்ததால்
கூட்டை விட்டுச் சிறகடித்தனர்

அழுந்த அழுந்த
அவன் சாதிப் பெண்டீரே
அவனை மதியாது
அந்த சாஸ்திரங்களை மாற்ற

சூத்திரன் மட்டுமென்ன
சூப்பிக் கொண்டிருப்பானா
ஈயத்தை காய்க்கும் வரை
இளித்துக் கொண்டிருப்பானா

அறிவோ, சிந்தனையோ
ஆறறிவு மனிதனுக்கே
ஆயினும் ஆங்கொரு
அக்லக்கைக் கொல்வது

அவன் வகுத்த நீதியெனில்
அவ்வறிவை மெச்சுவதா
அகிலத்தில் இல்லாது செய்வதா
அறமறிந்தவர்கள் சொல்லுங்கள்

அச்சாதி வேதத்தை
அறவே தான் பின்பற்றாது
அடுத்தவகளிடம் திணித்தே
அகண்ட கனவை கண்டவர்கள் 

பின்நோக்கி இழுக்கும்
பிற்போக்கு கயவர்கள்
பிரித்தாளும் சூழுச்சிக்கு
பிராமண ஊதுகுழலாய்

பாஸ்கி அரற்றியது
பகல் கனவென்று
பாடம் புகட்டு - அறிவு
பாரினில் பொதுவென்றே







ஞாயிறு, பிப்ரவரி 5

அதானி இந்தியா









ஊதிப் பெருக்கிய
உலகப் பணக்காரனை
உருட்டித் தள்ளியது
ஹிண்டன்பர்க் ஆய்வு

ஆய்வொரு குப்பையென
அவர்கள் குதித்தே – இது
இந்தியாவின் மீதான
வளர்ச்சிக்குத் தாக்குதல் என்றனர்

ஊக வணிக வீழ்ச்சியில்
ஊமையானது அரசு
ஊதிப் பெருக்காத எதிர்கட்சியோடு
ஊடகமும் மௌனமானது

இந்தியாவும் அதானியும்
இணையென்ற கூற்றை
இறையாண்மை இந்தியா
ஏற்றுக் கொண்டதா?

இரண்டு இந்தியா
ஏற்றுக் கொண்ட மக்கள்
தேச பக்திக் கொண்டவர்கள்
ஏற்காதவர்கள் ????............

அதானி அம்பானி
ஆளும் இந்தியாவில்
ஆநிரையோ அந்நியரோ
ஆமைக்கறி உண்பவரோ

எட்டு இலட்சம் கோடி
எங்குச் சென்றதென
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில்
“எல். ஐ. சி” யும், “எஸ். பி. ஐ” யும் வந்தனர்


வீழ்ந்தாலும் பாதிப்பில்லை
வீரவசன அறிக்கயை
வீசி எறிந்தனர் – ஊடகங்கள்
பிரசுரித்து ஆசுவாசப் படுத்தின

ஆண்டிறுதி விற்பனை
அதோகதி யானது எல்.ஐ.சி க்கு
அவர்களின் பங்கும்
அடிப்பட்டு வீழ்ந்தது

கருப்புப் பணத்தை ஓழித்து
பலகோடி இலாபமீட்டி
சில நாட்களில்
உலகில் 2வது நபர்

மொரிசியஸ், பனமா
கேமன் தீவுகளில் தேடிய
அதானியின் இந்தியாவா
55 சதவீதத்தை தொலைத்தது

வங்கிக் கடன், எல்.ஐ.சி முதலீடு
அடமானப் பத்திரங்கள்
45 சத வீதமாய் மிஞ்சுமா
நாமம் மட்டுமே எஞ்சுமா

நீரவ் மோடி
மல்லையாக்களின்
வரிசையின் எண்ணிக்கை
வரும் நாளில் தெரியுமோ

உலகம் சுற்றும் வாலிபனின்
உன்னதப் பயணங்கள்
உத்தமர் தேசத்தின்
உத்திரவாதமெனப் பொழிய

சந்தைதனை போட்டியின்றி
சகலமும் பெற்றவன்
சந்திச் சிரித்து நிற்கிறான்
சகாயனோ விக்கித்துப் போகிறான்

ஏவல் செய்யும்
அரசு யந்திரங்கள்
காவல் காக்கின்றன
கண்ணியம் காக்கப்படுகிறது

வீட்டுக் கடனுக்கு
வீடு ஜப்தி செய்யலாம்
ஜி.எஸ்,டி யால் மூடிய
சிறுநிறுவனங்களை ஏலம் விடலாம்

கொரானாவில் பரலோகம் சென்ற
பாமரனின் குடும்பத்தை
சட்டப்படி ஏலம் விட்டு
நிற்கதியாய் நடுத் தெருவில் நிறுத்தும்

வங்கி நடைமுறை
இந்தியர்களுக்கு மட்டுமே – ஆயினும்
அதானி இந்தியா
மேதினியில் வேறுதானே?

“இசட்” பிரிவு பாதுகாப்பில்
“செபி” யோ “சி.பி.ஐ “ யோ
உள் நுழைய முடியவில்லை
வங்கிகள் மூச்சு விடவில்லை

நீதி மன்றங்கள்
நிவாரணம் அளிக்குமோ
கடந்துச் செல்ல அவையும்
பழகிக் கொண்டனவோ

அமெரிக்க நீதிமன்றம் வா
ஆதாரம் தருகிறேன் என்கிறான்
ஆத்திரமோ, அவசரமோ இல்லை
அமைதிக் காக்கிறான்

தேசப் பக்தியால்
“ஆன்டி” இந்தியனாகாது
இருக்க பழகுவாயா?
எதிர்வினை யாற்றுவாயா?





ஞாயிறு, நவம்பர் 13

பிரிவின் வலி






திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி

நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ

அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்

தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி

புதன், நவம்பர் 2

தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா

 





தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா

ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே

ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ

பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்

திங்கள், அக்டோபர் 24

தீபாவளி





புராணமோ
புனைந்தக் கதையோ
பொய்களின் மூட்டையோ
பொறுமையாய் கேளுங்கள்

வராக அவதாரத்தில்
பூமாத் தேவியை
தொட்டதால்
பவுமன் பிறக்கிறான்

அரக்கர்களை வென்ற கையோடு
அவளைத் தொட்டதால்
அவதாரத் பிறப்பிற்கு
அரக்க குணமாம்

குணத்தால்
அரக்கனென அழைத்ததால்
அவனுக்கொன்றும்
அச்சமில்லை

பிரம்மனிடம் -சகா
வரம் கேட்க
திருத்தி அளிக்கப்படுகிறது
ஈன்றவளால் இறுதி முடிவென

வராக அவதாரத்தில்
வசதியாய் தொட்டது
கிருஷ்ன அவதாரத்தில்
சத்யபாமாவால் சரிசெய்யப் பட்டது

தனயனென அறியாது
தன்னிணை காக்க
அசுரனை அழித்தாள்
தேவர்களை காத்தாள்

கதை முடிந்ததென
கடுகளவும் நினையாதீர்
கற்பனைகள் தொடரும்
காசியும் இராமேஸ்வரமும் இணையும்

திரேத யுக நாயகன்
திரும்புகிறார் கானக வாழ்விலிருந்து
தீபமேற்றி மகிழ்ந்தனராம் – மக்கள்
தீப ஓளி கதைகள்

2500 ஆண்டுகளுக்கு முன்
ஆணும் பெண்ணும் சமம்
அகிம்சை வாய்மையென்றும்
பற்றற்றிறு பாலுணர்வு துறவென்றும்

வடித்துக் கொடுத்த வர்த்தமானர்
வீடு பேறடைந்த நாளை
தீபமேற்றி வணங்கியதால்
திருநாள் அவர்களுக்கு

போதிமர ஞானம் போதும்
நாடாள வாவென்று - சுத்தோதனன்
நாலுபேரை அனுப்ப
நால்வரும் ஞானம் பெற

காலோதயன் எனும் அமைச்சன்
கபிலவஸ்துவுக்கு
சித்தார்த்தனை
அழைத்து வர

வறியவரும் தீபமேற்றி
வாழ்த்தட்டுமென்று
இருப்பவன் கொடுத்தான்
இருள் விலக மகிழ்ந்தான்

புத்தனின் வருகை
புத்தொளி அளித்ததால் – நாடு
திரும்பிய நன்நாளை
தீபஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்

1577 ஓர் அடிக்கல் நட்டு
பொற்கோயிலை கட்டத் துவங்கினர்
அந்நாளை சீக்கீயர்கள்
தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர்

சக்தி சிவனோடு இணைந்து
அர்த்தநாரியாய்
காட்சி அளித்த நாள்
கேதார கௌரி விரதநாள்

மனிதனின் விழாவா
மதங்களின் விழாவா
மானுட வாழ்வில்
மகிழ்ச்சியுறு நாளா???? !!!!!!!!!!!

புதன், அக்டோபர் 5

செத்தப் பின்பு




கொள்ளிச் சட்டியும்
நெய் பந்தமும்
நீராட்டும் இல்லாது
நீத்த உடல் வேகாதா

எள்ளுத் தண்ணியும்
பிண்டமும்
படைக்காட்டா - பாவி
ஆவியா சுத்துவேனா

வாழும் போதே
வகைவகையாய்
யாகங்கள் செய்யாததால்
கர்மபலன்கள் கிட்டாதோ

நாளும் கிழமையும்
நம்மை நினைத்து
நாதியில்லா எனக்கு
திதி கொடுப்பார்களா

கதியற்று எனக்கு நானே
கயாவில் பிண்டமிட்டு
காசியில் காலமானால்
கண்டிப்பாய் மோட்சம் கிட்டுமோ

கடன் பட்டு
கல்விக் கற்று
அயல் தேசம் சென்றவன்
அன்னியமாகி போனான்

எடுத்து போடுவது
யாரென அறிவோமா? – ஆனா
அடுத்தடுத்து ஆசைகள்
நிறைவேறுமா?

செவ்வாய், அக்டோபர் 4

காதல் - நிலையானதா?




பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி

நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்

புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது

முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது

நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்

வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்

பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல

திங்கள், அக்டோபர் 3

என்ன செஞ்ச





காதலி
கட்டிய மனைவி
பெற்றெடுத்த பிள்ளை
சட்டென்று கேட்கும் கேள்வி

அவளுக்கு
அது பிடிக்குமென்று
ஆசையாய் வாங்கிக் கொடுத்திருந்தாலும்
என்ன பெரிசா செஞ்சிட்ட

கல்யாண நாளென்று
கல் வைத்த அட்டிகையும்
கையளவு ஜரிகைச் சேலையும்
கட்டியவளோ - முகம் சுழிச்சிட்டா

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும்
பட்டம் படிக்க அனுப்பி வைத்தும்
இஷ்டம் போல் சுற்றிய
மகன் இக்கேள்வி கேட்டா

ஆணாதிக்க நாயகன்
சாதித்துதான் என்ன
தன்னாசைக்கு வாழ்ந்தா
தவிக்கவிட்டான் இவர்களை

இன்னும் இன்னும் என
எதிர்பார்க்கும்
இவர்களை
எதிர் கொள்ளவதெப்படி

ஞாயிறு, அக்டோபர் 2

காதல் நிலை




நித்திரையில்
சித்திரவதையில்லை
புத்தியும் பேதலிக்கவில்லை – இது
சத்தியமடி

ஒவ்வொருச் சொல்லுக்கும்
பல்வேறு அர்த்தம் கற்பித்து
பாடாய் படுத்தியவளே
திடமாய்தான் இருக்கிறேன்

உச்சரிக்கும் தொணியில்
உடைந்தே போவேன்
சஞ்சரிக்கும் ஆசையில்
சகித்துக் கொள்வேன்

உன் ஒவ்வொரு கோணலுக்கும்
என் வாடிய மனது
துறவறம் நாடாது
துன்பமின்றி இருக்குது

நினைவுகள் வாராமலில்லை – அவை
வினையாற்றுவதில்லை
ஏனைய எச்சங்கள்
எனை வாட்டுவதுமில்லை

இந்நொடியே
என் முன்னாடி
நீ தோன்ற நினைத்தக் காலம்
கடந்தக் காலங்களாயின

சந்தித்தே
சற்றேறக் குறைய
சிலபல காலமாயினும்
சஞ்சலமில்லை மனதில்

அவரவர் வாழ்க்கை என்றே
அன்னியப் பட்டு விட்டோம்
அன்றுனைப் பார்க்க நேரிட
அழகாய்தான் ஒளிந்துக் கொண்டாய்

கண்ணாமூச்சி ஆட்டங்கள்
காலங் கடந்தாலும்
காதலில் அழகுதான்
கணநேர மகிழ்ச்சிதான்

ஆர்பரித்த அன்பு
அடங்கிதான் போனதோ - அல்ல
ஆவல் இருக்கத்தான் செய்கிறது
ஆயினும் அவசரமில்லை

உனை நிந்தனைச் செய்ய – இக்
கவிதை வடிக்கவில்லை
நினை நினைத்த மனதை
ஆற்றுப் படுத்தும் நிலை







நமக்கு மீறின சக்தி






கடவுளா
கட்டிய மனைவியா
காலகாலமாய் தேடியும்
கண்டுபிடிக்க முடியாததா

என்னால் இயலாததை
அவனால் முடியுமாயென சிந்தியாது
ஏதோவொரு சக்தியென
ஏன் தீர்மானித்தேன்

புயல் மழையெனில்
பூட்டிய வீட்டைத் திறப்பதில்லை
வெயில் உச்சமெனில்
வீதியில் நடப்பதில்லை

மழைப் பொழிய
குடையோடு நடக்க
விடைக் கண்டவன்
மின்னலில் மாண்டால்

நமக்கு மீறின சக்தியென்றே
மூளை மழுங்கியிருப்பானா
நாளையே வேறொருவனை
மின்னலில் சாகக் கொடுப்பானா

அளவுக்கதிகமான
வெயிலும் மழையும்
பருவநிலை மாற்றமென
பகுத்தறிந்த மனிதன்

ஜடாமுடியில்
கங்கையை சுமப்பவன்
கமண்டலத்தில் சிக்கிய
காவேரியைத் திறப்பவனின்

கட்டுக்கதைகள்
புத்தியெல்லாம் நிறைந்திருக்க
நமக்கு மீறின சக்தியென
நயமாய் சொன்னானா?

ஐம்பூதங்களைக் கடவுளாய்
அச்சத்தில் ஏற்றாயா
அங்குசத்தில் அடங்காததால்
நமக்கு மீறின சக்தியென்றாயா

பெயரிட்டு அழைத்த புயலில்
சர்வ வல்லமையுள்ளவன்
நமக்கு மீறின சக்தியென
சாக்குச் சொல்லியாப் போனான்

கருந்துளைக்குள் நடப்பதை
கற்றறிந்தவன் தேடுகிறான் – அத்
தேடலின் ஈர்ப்பு விதியால்
கடவுள் காணாமல் போகிறான்

மானுட ஆற்றலுக்கு
பிரபஞ்ச இயக்கவியல்
நமக்கு மீறியதல்ல என்றே
நாளும் சொல்லுது









சனி, செப்டம்பர் 24

இலவசம்





வாக்குறுதியை வாரியிரைத்து
வாக்குச் சாவடியைக் கைப்பற்றி
வாகனப் படையோடு
வலம் வருபவனுக்கு

ஆட்சி அதிகாரம்
அத்தாட்சி பத்திரமா
ஆள்பவர் முடிதரித்ததும்
ஆலகால மாவதா

மறைமுக வரியாய்
மனிதனிடம் வசூலித்ததை
மானுடச் சமூகத்திற்கு
மடை மாற்றுவதா

அறுதிப் பெரும்பான்மை
அரசியல் கட்சிக்கில்லையெனில்
மக்கள் பிரதிகள் மொத்தமாய்
பச்சோந்தியாய் மாறுவதா

திறைச் செலுத்தும்
திடீர் பெருமுதலாளிகளுக்கு
வரியின் வரையறை
சரியில்லை எனக் குறைப்பதா

சமச்சீரற்ற சமூகத்தில்
சரிச்சமாய் உயர்ந்திட
பொருளாதாரத்தில் வீழ்ந்த
உயர்சாதிக்கு இடஒதுக்கீடு அளிப்பதா

அன்றாடங்காச்சி
ஐந்துக்கும் பத்துக்கும்
அன்றாடம் உழைத்தும்
அதோகதியாய் நிற்பதா

அதானி அம்பானியின்
5 இலட்சம் கோடி
10 இலட்சம் கோடியாய்
ஓராண்டில் மாறுவதா?

கணக்கு வழக்கு
பிரதம நிதிக்கா
உனக்கு தேவையில்லாதது என
உரக்க சொல்வதா

நிதியை நிர்வகிக்க
பதியாய் வந்தவர்கள்
குதியாய் குதிக்கறார்கள்
பணம் அவர்களுடையதாம்

ஆதாரை இணை - எரிவாயு
மான்யம் கிடைக்குமென்றார்கள்
விட்டுக்கொடு என்றார்கள்
விலையேற்றமே கண்டோம்

ரோட்டோரக் காய்கறிக் கடையும்
டிஜிட்டிலில் பளபளப்பதாய்
பே – ட்டி - எம், போன் பே யும்
பேட்டி அளிக்கின்றன

இரண்டு சட்டைக்கு
ஒரு சட்டை இலவசம் - இது
வியாபாரத் தந்திரம்
வீழ்வது விட்டில்கள்

குடிக் காப்பது
அரசின் கடமை
குடிக்கக் கொடுத்து
வருவாய் பெருக்குவது

வரி வசூலை
பிரித்தளிப்பது உன்வேலை
தரித்திரனாய் மக்களை
பிரித்து வைத்திருப்பதோ

சுகாதாரமாய் வாழ
மருத்துவ வசதி
சுயமரியாதையோடு வாழ
யாரிடமும் கையேந்தாமல்

ஒண்டக் குடிசையும்
கற்கக் கல்வியும்
உழைக்க வேலையும்
ஒவ்வொருக்கும் இருந்தால்

தாலிக்குத் தங்கம்தான் கேட்போமா
தமிழகம் அரசிடம்
காட்டில் ஒரு வீடுதான் கேட்போமா
ஒன்றிய ஆட்சியிடம்

ஞாயிறு, செப்டம்பர் 18

மரணம் எந்த நொடி



எந்த நொடி
எந்த நிமிடம்
எந்த நாள்
எங்ஙனம் அறிவேன்

மரணத்தை யோசிக்கிறேன்
மாறும் உலகில் - மாறுமோ,
மறுதலிக்குமோ
மானுட வாழ்வு

மன அழுத்தங்கள்
மரணத்தை யாசிக்கின்றன
ஆசைகளின் ஓட்டத்தில்
மாத்திரைகள் நீட்டிக்கின்றன

சுகமான மரணம்
எங்ஙனம் நிகழும்
சுவாச வலியின்றியா
சுற்றியிருப்பவர்களுக்கு வலியின்றியா

உடல் உபாதைகளும்
திடமற்ற மனதும்
கடமைக்கு வாழாது
கானகத்தை நாடுதோ

போதுமா வாழ்க்கை
மோதுகின்ற கேள்வியில்
வாதிடுகின்றன – வாழ்வு
உனக்காகவா அல்ல குடும்பத்திற்கா

நீயில்லா உலகில்
நீடித்திருக்கும் குடும்பம்
தீயில் வெந்திட
தேடுகிறாயோ காரணங்கள்

நீதியும் நேர்மையும்
உனக்கானதல்ல
சாதிச் சமூகத்தின்
ஆதிக்கச் சொல்லாடல்கள்

சேர்த்தச் சொத்துக்கள்
சோர்ந்திராதே எனச் சொல்லுமோ
ஆர்பரித்த அன்பு
அடுத்த வேளையை நோக்குமோ

போதித்தப் புத்தனும்
பூமிக்குள்ளே
சாதித்த மன்னனும்
சமாதிக்குள்ளே

அறிவியல்
அறிவை வளர்க்குமா
அறியா மரணத்தை
ஆராய்ச்சி செய்யுமா

நாற்பதாண்டு வாழ்வை
எழுபதாண்டிற்கு நீடித்தது
ஏற்பதா மறுப்பதா
யார் தீர்மானிப்பது

உலகின் முதல் செல்வந்தனா
உலகின் முதல் ஏழையா
அவரவர் மனமெனில்
அவர்களின் மனநிலை

மனநிலைக் காரணிகள்
மரணத்தை யாசிக்கின்றன
புறநிலைக் காரணிகள்
பூபாளத்தை நேசிக்கின்றன

பருவநிலை மாற்றங்கள்
பாடம் நடத்துகின்றன
உருவமற்ற, உருவமுள்ள
கடவுளும் மாண்டு போகின்றன

மூப்பது வந்திட
முடங்குவது உடலா
கடந்து செல்லும் வாழ்வில்
காப்பதும் கடவுள்ளில்லையா

உற்ற உறவுகள்
உறுதுணையா
பற்றற்றிரு எனும்
பட்டினத்தான் போதனையா

மரணத்தின் சிந்தனைகள்
மாறி மாறி வந்துச் செல்ல
இரணங்களா
இல்லாத காரணங்களா

இயங்கும் உலகில்
இவை மனப்பிறழ்வென
இனம் காணுவோமா
எக்கேடுக்………… செல்வோமா

கற்றதனால் ஆன பயன்
கடவுளைத் தொழுவதா
மற்றதனால் மரணத்தை
மாற்ற முயல்வதா

தேடல் முடிந்ததா
தேவை முடிந்ததா
வாடிய உனைக் கண்டு
வாட ஒருவருமில்லையோ

நூறாண்டு வாழ்வு
நூலாகி போனதே
ஐம்பதை தாண்ட
அவ்வாழ்வும் சலித்ததே

ஞாயிறு, ஆகஸ்ட் 28

சுதந்திரம் 75 ஆம் ஆண்டில்

 





முதன் முறையாக
உத்திரபிரதேசத்தின் ஒரு கிராமம்
மின்னொளியை கண்டது


முதன் முறையாக
தமிழக கிராமம் ஒன்றில்
பேரூந்து வசதி கிடைத்தது

முதன் முறையாக
ஊராட்சியில் தலித் ஒருவர்
தேசியக் கொடியேற்றுகிறார்

முஸ்லிம் பிரதிநிதி
ஒன்றிய அமைச்சராய்
அங்கம் வகிக்காத திருநாளாயிற்று

சுயச்சார்பு என்பது
இந்தியத் தேசியக் கொடியை
சீனாவிடம் வாங்குவதாய் ஆனது

சுதந்திரந்தின் போது ரூ. 3.31 இருந்த
ஒரு டாலரின் மதிப்பு
வளர்ச்சியடைந்து ரூ.79.87 ஆனது

75 ஆண்டுகளில் உருவான
தேசத்தின் கட்டுமானங்கள்
நட்டக் கணக்கில் விற்பனை

ஈஸ்ட் இன்டியா கம்பெனி
அம்பானி அதானி கம்பெனியாக
பெயர் மாற்றமடைந்திருக்கிறது

அக்மார்க் தேசபத்திக்கு
கொடியேற்றுங்கள் வீடுதோறும்
முடிவற்ற விலையேற்றத்தை மறந்திருங்கள்

ஞாயிறு, மார்ச் 27

தேவதையின் தீர்ப்பு







வேண்டா மென்பதை
வேர்விட்ட பின்பு அறிவிக்க
ஆண்டியா மாறியே
அருகன் நிழலில் நிற்பேனோ
தீண்டா நிலையில்
திக்கற்று சரணடை வேனோ
மண்டா போவேன்
மார்க்க முண்டு புதுபிக்க


பட்டங்கள் கொடுத்தே
பராக்கிரமப் பாண்டிய னென்றாய்
வட்டத்தில் வாக்கப்பட
வரிசையில் வில்லேந்தி வந்தாலும்
திட்டத்தில் நாமில்லை
தீர்த்துச் சொன்ன தேவியே
தெட்டலல்ல தெளிவென்றே
தெரிந்துக் கொள்ளும் வாய்ப்பே


வற்புறுத்த - வரமளித்து
வசந்தனை காத்தரு ளினாயோ
அற்புதங்கள் நிகழாதென
அந்தபுரத் திடமில்லை என்றாயோ
கற்பிதங்கள் அவரவர்
கனவுகளால் கானல் நீராக
புற்பதமாய் ஆனதே
புட்பகேது புவனம் அழிந்ததே


ஆர்பரித்த அன்பு
ஆரிடம் தோன்றிய தென்றே
கூர்வாளால் கேட்கிறாய்
குற்றப் பத்திரிக்கை வாசிக்கறாய்
ஊர்முழுக்க அறியுமே
உத்திர வாதமில்லை என்றா
தீர்ந்தது கணக்கென
தீர்பெழுதி விட்டாய் தேவதையே


உதட்டில் அன்பும்
உள்ளத்தில் கபடமும் கண்டேன்
எதற்கிந்த வேடம்
எந்தன் கைபேசியும் தடைபடுதே
பதரால் பயனில்லை
பக்குவமாய் தவிர்ப்போ மென்று
இதமாய் இங்கிதமாய்
இயல்பாய் உணர்த்தி வைத்தாய்


மறக்க முடியுமா
மானுட மன்றோ முடியாதே
சிறந்த நினைவுகள்
சித்திரமா தொடர்ந்து வருமே
அறமல்ல என்றால்
ஆகட்டும் கண்ணே பார்க்கிறேன்
பிறழாது இருக்கவே
பிரபஞ்சத் துர்வாசனைத் தேடுகிறேன்


விதையும் துளிராய்
விளைந்த அன்பும் தளிர்க்கும்
கதைத்த காலங்கள்
காதலின் கடந்த காலமாகும்
வதைக்கும் வார்த்தைகள்
வடுவாய் மனதைச் சிதைக்கும்
எதையும் தாங்கும்
எஞ்சிய வாழ்க்கை இரவலாகும்





செவ்வாய், மார்ச் 1

காசுக்கு நீரோ







கமலையில் இறைச்சநீர்
கால்வாயில் பாய்ந்தோட
கைகளால் பருகிடுவோம்
காய்ந்த தொண்டையை நனைத்திட

ஏனோத் தெரியல
தேனாய் இனித்திடும்
பானையின் தண்ணீர்
நஞ்சென நம்பிய தெப்படி

வானம் பொய்த்தாலும்
சுனையில் சுரந்திருக்கும்
அனைவரையும் காத்திருக்கும்
வினையாய்(தொழில்) ஆனதிப்போ

அமெரிக்க கம்பெனி
அஃகுவாபினா, கின்லே
அடைத்து தரும் நீரிலே
ஆரோக்கியம் அடங்கியிருக்கா

கற்பிதங்கள் உண்மையென
கற்றறிந்தோர் ஏற்பதால்
காசுக் கொடுத்து
காலாவதி நீரை வாங்குவதா?

தாமிரபரணியும் சிறுவாணியும்
தமிழகத்தின் தேனாறுகள்
ஆள்துளையிட்டு அவர்கள்
கொள்ளையிடக் கானலாச்சோ

உன்வீட்டு நீருக்கு
உன்சட்டைப் பையில்
காசெடுக்கும் உரிமையை
கார்ப்பரேட்டுக்கு கொடுத்ததாரோ

நீரும் நிலமும்
நஞ்சாய் மாறிப் போக
ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த
எட்டப்பர்களின் பேராசையா

வளர்ச்சி தேசத்தின்
வளங்களை அழித்தா
வருங்காலச் சந்ததியை
வருத்தாதிருக்க

புத்தனாக மாறென
பூச்சாண்டிக் கூவல் இதுவல்ல
மானுடச் சமுகத்தில்
விலங்காய் மாறாதிரு

 


வெள்ளி, பிப்ரவரி 4

ஒன்றிய பிரதிநிதியின் துரோகம்

 



தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, வெகுஜன மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு மசோதாவை அனுப்பினால் ஆறு மாதங்கள் காலம் தாழ்த்தி ஏற்க முடியாது என்பதோடு மட்டுமல்ல உண்மைக்கு புறம்பான காரணத்தை சொல்லி  ஒன்றிய பிரதிநிதி திருப்பி அனுப்புகிறார்.

நீட் தேர்வை கிராமபுற மற்றும் அரசு மாணவர்கள் வற்வேற்கிறார்கள். அவர்கள் அதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

7.5 சதவீத ஒதுக்கீடு தேர்தலுக்காவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பாலும் பெறப்பட்டது. அவ்வொதுக்கீடை இப்போதும் தொடர்வதால் நிராகரிக்க இயலாது.

நீட் தேர்வில் இம்முறை வெற்றிப் பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மத்திய கல்வி முறையில் (CBSE) பயின்ற மாணவர்கள் முதல் 600 பேர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசு மாணவர்கள் ஒதுக்கீடு மூலமே பயனடைந்துள்ளனர்.  ஒதுக்கீடு இல்லையெனில் அவர்களுக்கு இந்த வாய்ப்பும் பறிபோயிருக்கும்.

ஒன்றிய பிரதிநிதியின் துரோகத்தால் அரசு தன் முடிவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  மத்திய கல்வி முறைக் கல்வி, மாநில அரசு கல்வி முறையில் பயின்ற மாணவர்களை விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்.

இப்படி செயல்படுவதால் ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகரிக்கலாம்.

இதையும் கடந்து கல்வி வியாபாரம் என்றான பின் அதன் கட்டணங்கள் அதிகமாகதான் இருக்கிறது.  98 = 55,50,00,000  என்பது நாட்டின் வளத்தைக் காட்டுகிறது.  அப்படிதான் கல்வியிலும்.

மற்ற இலவசங்களைக் காட்டிலும் எந்தக் கல்வியையும் இலவசமாக கிடைக்கச் செய்தால் நீட் தேர்வுகள் தேவையில்லைதான்.

 

மருத்துவக் கல்வியின் ஒரு ஆண்டு கட்டணங்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இப்படி இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி                                15000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு     600,000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% நேரடி ஒதுக்கீடு   20,00,000

தனியார் நிகர்நிலை பல்கலைகழங்கள்                   25,00,000

 

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு ரூ. 10 லட்சமாக இருக்கிறது. அரசு கல்லூரிக் கட்டணம் தவிர்த்து மற்ற தனியார் கல்வி கட்டணங்கள் ஏறக்குறைய ஒன்றே. ஒரு பாடத்தை ஒரே வகுப்பில் வேறு வேறு மாணவர்கள் இம்மாதிரி கட்டணம் செலுத்தி படிப்பதே இன்றைய மருத்துவக் கல்வி. இலவச தரிசனம் முதல் ரூ 200 வரை கட்டணம் பெற்று தரிசனம் தரும் கடவுள் உள்ள நாட்டில் இப்படிதான் கல்வியும்.  மக்கள் அதற்கு அடிமை. கல்விக்கு மௌனியாக கடந்துச் செல்கிறார்கள்,

இதற்கு தீர்வு காணாமல் நீட்டிற்கு தீர்வு காண்பது பெரிய வெற்றியல்ல.

இது மட்டுமல்ல. நாமக்கல் பிராய்லர் கோழிகள் மன்னிக்கவும், மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய மாநில வழி கல்வியானாலும் அங்கே வகுப்புகள் A to Z மட்டுமல்ல AA to Az வரை நடைப் பெறுகிறது. கட்டணம் ரூ 2-3 இலட்சங்கள் நீட் பயிற்சிக்கும் சேர்த்து.

ஆக கல்வி என்பது மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். கொள்ளையடிப்பவர்களுக்காக அல்ல

வியாழன், பிப்ரவரி 3

காதலி கண்பாரடி

 


காதலி கண்பாரடி
காதலில் வாடுமெனை
சாதக வார்த்தையால்
சக்திமா னாக்கடி
வீதியில் சுற்றுமெனை
விரைவில் காத்திடு
ஆதியில் ஏவாளும்
அங்ஙனமே செய்தாளடி

காதலர் தினமா
காத்திருக்கும் எனக்கேதடி
நாதமோ வேதமோ
நாளும்நின் அருளடி
ஆதலால் அன்பே
அடியவனை ஏற்பதாய்
சாதகப் பதிலை
சங்கேதமாய் உணர்த்தடி

காத்திருக்க வைப்பதா
காதலியுன் சோதனை
பூத்திருக்கும் அன்பினை
புற்பதமாய் எண்ணிட
யாத்திருந்த பாக்களா
யாசகனின் உத்தியா
சாத்தியத்தை உரைத்தால்
சட்டென ஏற்பேனே


மொட்டுக்கள் பூவாக
மோனநிலை யிருக்கு
மெட்டுக்கள் நீயிட்டு
மெய்நலம் கூறாதே
கட்டுக்கள் தளர
காயங்கள் வருமே
சிட்டுக்கள் பறப்பது
சிறையில் அடையவா

விட்டுச் செல்லவா
விருப்பம் சொன்னேன்
எட்டிச் செல்லாதே
என்னினிய காதலே
விட்டிலாய் வீழவா
விழுதுவிட்டு வாழவா
திட்டமிடு பெண்ணே
தீர்ப்பை வழங்கிடு

பிழைகள் இல்லையடி
பிடித்தால் இணைவோம்
தழைத்தல் இயல்படி
தகுதலாக்கு மனதினை
உழைக்கும் உறுதியுண்டு
உறுதுணையாய் நீயுண்டு
அழைத்துக் கொள்ளேன்
அறத்தோடு வாழ்வோம்

ஆகட்டும் பார்க்கலாம்
அடுத்த தையிலே
மேகங்கள் மறையலாம்
மேற்திசைக் காற்றிலே
பாகமான வாழ்வில்
பாதியில் கைவிட்டு
போகவாழ்வு வீண்னென்ற
பட்டினத்தான் அறிவாயா

ஞானியாய் மாறவா
நாயகியை நேசித்தேன்
ஏனிந்தச் சிந்தனைகள்
என்றென்றும் பூசிப்பேன்
நானிலமும் வியந்திட
நன்றாய் வாழ்ந்திட
ஆனிப்பொன் அழகே
அத்தானை நினைத்திடு


புதன், ஜனவரி 26

உனைத் தென்றல் தீண்டவும் விடமாட்டேன்

 




 



தூற்றலை மறந்து
தூயவளை நினைக்க
வேற்றலம் தீண்டிட
வேடிக்கை ஏனடி
மாற்றம் நிகழுமடி
மற்போரில் அல்ல
ஏற்றத்தில் உரைப்பேன்
என்தேவி நீயே



மன்றலில் இணைந்து
மாயத்தை வெல்ல
அன்றில் என்றே
அகிலம் போற்ற
தென்றலும் ஏமாந்து
தென்னையில் அமரும்
அன்றென் அன்பின்
ஆழத்தை உணர்வாய்



உலகை இயக்கும்
உன்னதக் காற்றோ
விலகா திருக்கும்
வேலவன் மாற்றோ
நலமே விழையும்
நாயகன் நானடி
அலாபமே அவ்வுரு
அடிக்கடி மாறுமே



திண்ணியன் அருகிருக்க
தென்மலைத் தென்றல்
எண்திசை சூழ்ந்தாலும்
எல்லையில் நிறுத்திடுவேன்
பண்ணிசையில் தூதை
பக்குவமா அனுப்பினாலும்
கண்ணேயுனைத் தென்றல்
தீண்டவும் விடமாட்டேன்

சனி, ஜனவரி 15

ஆக்ரமிப்பு


 

அன்றாடங் காய்ச்சியாய்
அரைவயிற்றுக் கஞ்சிக்கு
அவ்வீதிவழி – தள்ளுவண்டியில்
காய்கறி விற்போம்

அகிலஉலகப் பணக்காரன்
அம்பானி அன்றாடங்காய்ச்சியா
அரை வயிற்றுக்காரனோடு
அவனுகென்னப் போட்டி

பாதையோரம் துணிவிரித்து
பலபேர் கேட்கக் கூவி
பட்டினியப் போக்க
கூறுக் கட்டி வித்தோம்

“ரோட் ஷோ“ என
“ஜியோ சிம்“ விற்று
போட்டியை திவாலாக்கியவன்
தெருவுக்கு வாரான் யாரைத் திவாலாக்க

கொட்டிக் கிடக்கும் பணத்தால்
நட்ட விற்பனை செய்ய வாரான்
இலவசம் இலவசம் எனக் கூவ
இளித்துக் கொண்டு செல்வாயா?

வீதியின் கீரைக்காராம்மா
பால், தயிர் காரம்மா
இவர்கள் காணாமல் போக
“ரிலையன்ஸ்“ காரணமா

தெருவுக்குத் தெரு
திக்கெட்டு மிருந்தக் கடைகள்
“அமேசான்” “பிளிப்கார்ட்”டால்
அதோகதியான கதைகள் - மறந்தாயா


வீதிக்கு வாராதே
விழுங்கிடும் கொரோனா
வாசலுக்கு வாரேன்
வசதிப்படுமென்கிறான்

நேற்று வரை
வாசலில் விற்றவன்
“ரிலையன்ஸ்“ சட்டையணிந்து வாரான்
பழகிக் கொள்ளாதே மானிடா

குஜராத்தி பனியாவிற்கு
கொத்தடிமையாய் மாறாதே
உன்ஜாதி உழைப்பது – அச்சாதி
பணத்தை விதைப்பது 

உள்ளுர் மண்ணில்
உனக்காக விளைந்ததை
உன்னினம் விற்கட்டுமே
உறவுகள் வாழட்டுமே

திங்கள், டிசம்பர் 20

கன்னிகாதானம்


 

தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட

தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே

இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை

மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு

கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்

ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற

வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்

கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே

புதன், டிசம்பர் 8

கடவுள் சொத்து – வளர்ச்சிக்கா



உலகளந்து
ஓடியாடி உழைத்து
பிட்டுக்கு மண் சுமந்து
சேர்த்தச் சொத்துக்கள்


மாட மாளிகைகள்
வணிக வளாகங்கள்
விவசாய நிலங்கள்
கல்லூரிப் பள்ளிச் சாலைகள்


வேர்வை முத்துச் சிந்தி
பார்வைக்குக் கட்டணம் வாங்கி
பலகாலம் சேர்த்தச் சொத்தில் - பங்கு
அரசின் வளர்ச்சிக்கா

சொத்து
வாரிசு உரிமைக்கு உட்பட்டது
வாரிசு இல்லையெனில் - அரசுக்கா
ஒன்று விட்ட உறவுக்கா


மரித்த கடவுளின் சொத்துக்களை
வாரிசு உரிமை கோரும்
வகையறா
நீதிமன்றம் வருமோ


இந்திரன் சோமன்
இவர்கள் மாஜி கடவுள்கள்
கிரேக்கத்திலும்
இந்தப் பட்டியல் உண்டு

வகை நான்கு
வழிபட தேவபாஷை - என
வகுத்த கடவுளை
வார்த்தெடுத்த நீதி அரசர்கள்


புதிய காரணங்களை
புனைந்து எழுதுவதால்
கடவுளின் இருப்பை
நீட்டிக்க முயல்கிறார்களோ?


அப்பாவி பக்தர்கள்
அளித்தக் கொடைகள்
தங்க கோபுரமாக
தகதகவென மினுக்க


மினுக்கும் அழகில்
தனது கடவுளென மதிமயங்கி
எந்நாடுடைய சிவனேயென
ஏற்றிப் போற்றிட

கனவில் வந்தே
காப்பாற்று என் சொத்தை
நீதியரசருக்கு
கட்டளையிட்டிருப்பாரோ

அரசின் வளர்ச்சிக்கு
அடிப்படை வருமானம்
திருவிடந்தை பெருமாள் மட்டுமல்ல
திக்கெட்டும் காரணமாக கூடாதாம்


இந்து கோயில் வருமானத்தில்
கல்லூரித் திறப்பதா
கல்விக்கண் திறப்பதா
வேதம் கற்கட்டும்

வேதம் கேட்ட காதுகளில்
ஈயம் ஊற்றியவர்கள்
சூத்திரனிட்ட பிச்சையில்
வேதம் ஓதுகிறார்கள்

ருத்ர பூமி -சிவனுக்கு
பட்டாப் போட்ட இடமா
மானுடம் அமைதிக் கொண்டமிடமா - அல்ல
வீட்டுமனைகளாய் மாறியமிடமா


மலைகள் ஓடைகள்
மாயமாய் மறைய
அரசு ஆவணங்களும்
காசுக்கு மாறும் காலத்தில்

குலநாசமென
கூக்குரலிட்டாலும்
கூசாது மனைகளாய் மாற்றுவான்
கூத்தன் வரவே மாட்டானென்பதால்


சொத்துவரி
தொழில் வரி
மூலதன ஆதாய வரி - இன்னப் பிற
வரிகள் செலுத்துகிறாரா கடவுள்

அறிவுக் கூர்மையால்
அள்ளிச் சேர்த்த வருமானத்தில்
30% அரசு வசூலித்ததா?
முழு விலக்கு அளித்ததா


நீதிமன்றங்கள்
நேர்மையில் விலகுது
மானுடம் காப்பதை மறந்து
மதங்களை காக்க தீர்ப்பெழுதுகிறது


மதங்கள்
மானுடத்தை பிரித்து வைக்க
இயற்கை
இணைத்து வைக்கிறது


இணைவோம்
இறைவனை காணவல்ல
இறைவனின் இருப்பை நீட்டிக்கும்
இ.பி.கோவை மாற்றி எழுதுவோம்

வியாழன், நவம்பர் 18

திருடர்கள்

 



இருவகை இவர்கள்
இல்லாமையால்
இத்தொழிலா – அல்ல
இதில்தான் வளம் கொழிக்குமா

தனியுடமைதனை
தக்கச் சமயத்தில்
தட்டிப் பறிப்பது
சாதாரணத் திருடன் செயல்

எதைக் களவாடுவது
யாரிடம் களவாடுவதென
தீர்மானிக்கும் திருடன்
சாதாரணத் திருடன்

இழப்பெனில்
செல்வத்தை பாதுகாக்க
எதிர்த்து போராடுவோம்
சாதாரண திருடனிடத்தில்

இழந்ததை மீட்க
இ.பி.கோ. வை நம்பி
சிலர் மீட்பர் – சிலர்
இருப்பதையும் இழப்பர்

வளமான எதிர்காலத்தை
உழைக்கும் வாய்ப்பை
கற்கும் கல்வியை
கருணையின்றி பறிப்பர்

வியாபாரத்தை இழப்பாய்
ஆரோக்கியத்தை இழப்பாய்
யாரால் – எந்த திருடனால்
என்றாவது யோசித்தாயா?

திருடனை
திருவாளர் பொதுசனம்
தேர்ந்தெடுத்தது மட்டுமல்ல
ஆதரித்துப் பாதுகாப்பது அவரே!!!

சனநாயக கடமையில்
தேர்ந்தெடுக்க அதிகாரமுனக்கு
சாக்கடை நமக்கெதற்கென
ஒதுங்கியிருந்து ஆதரிப்பதும் நீயே

தேர்ந்தெடுத்தவனின் – வீரத்
தீர பெருமையுரைத்து
திருட்டில் பங்குப் பெற்று
பாதுகாப்பதும் நீயே

மலைகள் – ஆறுகள்
குவாரிகளாய்
கிரானைட் பலகைகளாய்
காணாமல் போகும்

கடற்கரை தாதுமணலாய்
கடல் கடந்து செல்லும்
கடலோரம் புதைகுழியாகும்- உன் வாழ்வு
என்னவாகும்

போடாத சாலைகள்
பளபளக்கும்
பொருத்தாத விளக்குகள்
ஒளிவிட்டு எரியும்

கூடங்குளம், ஸ்டெர்லைட்
காவு கேட்கும்
வாடியபோதெல்லாம் வாடியதாய்
வசனம் பிறக்கும்

காடு கழனிகள்
இறால் வளர்ப்பென
களர் நிலமாகும் – வாழ்க்கை
களையிழந்து போகும்

மீத்தேன், ஹைட்ரோகார்பன்
எட்டு வழிச் சாலைகள்
வளர்ச்சியின் வேடத்தை
கச்சிதமாய் ஏற்கும்

நாட்டின் வளங்களை கொள்ளையிட்டு
நமது மகிழ்ச்சியையும் – உடல்
நலத்தை பறிப்பதை
வேடிக்கை பார்க்கிறோம்


பொதுத் துறை நிறுவனங்கள்
பொன் முட்டையிட – அறுத்து
தனியாருக்கு தாரை வார்க்க
நட்ட கணக்கு நம்பப் படுகிறது


அவமானகரமான
கேலிக்குரிய – இச்செயலை
என்ன செய்யலாம்
சிந்தித்தாயா?

நாடு பின்னோக்கிச் செல்கிறது
பார்வையாளனாக – நீண்ட
அமைதிக் கொள்வாயா
பதைப்பதைத்து எழுவாயா

அரசியல்
அது சாக்கடைதான்
எத்தனை நாள் பார்த்துக் கொண்டிருப்பாய்
சுத்தம் செய்ய இறங்கு

சாக்கடையில் இறங்கி
சுத்தம் செய்ய
சாதாரணன் தயங்கியதாய்
சரித்திரமில்லை

வேண்டாத வேலையென்று
ஒதுங்கி நிற்காதே
விழுங்கி விடும்
வேலெடு - வீச்சோடு வா

நமது எண்ணிக்கையில்
அவர்கள் இல்லை
ஆயினும் அச்சமேன் - வெற்றிக்கு
ஆர்பரித்து இறங்கு

இல்லையெனில்
பெரும் கார்ப்பரேட்டுகள்
எல்லாத் தொழிலையும் செய்யும்
ஏமாளியாய் வாழ்வாய்

ஆம்…. ஒவ்வொரு
தேசப் பற்றாளனும்
தேசத்தை தூய்மையாக்க நினைத்தால்
தேசம் மக்களுக்கானது

புதன், நவம்பர் 3

எது இந்தியா

 




565 சமஸ்தானங்களை
ஒரு குடையின் கீழ்
மாட்சிமை தங்கிய
மகாராணி ஆண்டதா


இரும்பு மனிதனின்
இஷ்டத்திற்கு பரோடா
இன்னபிறத் தேசங்களை - 1956 வரை
இணைத்த கதையா


அசோகர் பேரரசு,
கனிஷ்கர் பேரரசு
குப்த பேரரசு
ஓளரங்கசீப் பேரரசுகளா

குஜராத்தின்
சோலாங்கி, வகேலா அரசா
மைத்திரக 
கூர்ஜர-பிரதிகாரப் பேரரசா

ராஜபுத்திர
சௌகான்கள்
சந்தேலர்கள், தோமர்,
பரமார் பேரரசுகளா


இரத்தோர்கள் வழிவந்த
இராஷ்டிரகூடர்கள்
ஹொய்சாளர்கள்
காகதீயர்களின் அரசா


கிருஷ்ண தேவராயரின் 
விஜயநகரப் பேரரசா
மேலைச் சாளுக்கியர்கள் அரசா
கீழைச் சாளுக்கியரின் வேங்கி நாடா

கஜினி முகமது
கோரி முகமது
தில்லி சுல்தான்களின் அரசா
அடில்ஷாக்களின் பாமினி பேரரசா

சேர சோழ பாண்டிய
பல்லவ மன்னர்கள்
கடையெழு வள்ளல்கள்
கட்டியெழுப்பிய தேசமா

ஜான்ஸிராணி லக்குமிபாய்
சித்தூர் ராணி பத்மினி
ராணி மங்கமாள்
கட்டபொம்மன், மருதுவின் பூமியா

வேணாடு வர்மாக்கள்
மைசூரு மகாராஜாக்கள்
தஞ்சை பேஷ்வாக்கள்
தவறவிட்ட தேசமா?

பௌத்தம் உதித்த பகுதியா
பாலப் பேரரசா
காமரூப பேரசா - இதில்
எது இந்தியா?


மன்னர் மானியங்களால்
வடிவமைக்கப்பட்ட தேசம்
இன்றும் நிலைத்திருந்து
இந்தியா என்றிருப்பது


தமிழனாய் இருப்பதால்
இந்தியானாய் ஆக்கப்பட்டது போல்
வேற்றுமையில் ஓற்றுமையென
விருப்போடு இணைந்த மக்களால்

பல்வேறு பண்பாட்டுச் சுவடுகளை
பல்வேறு இனங்கள்
பசுமையாய் பதித்திருக்கும் தேசத்தில்
ஏன் இந்து இந்தியா


கடாராம் கொண்டான்
இலங்கை, மாலத்தீவு  
மலேயா, சுமத்ரா, கம்போடியா, 
இந்தோனேசியா, மியான்மாரையும் வென்றான்

அகண்ட தேச கனவுக்கு
முப்பாட்டன் வென்ற தேசத்தை
மூன்று நொடியில் இணைத்தாலென்ன
இலங்கையை மட்டுமாவது கொண்டலென்ன

இணையத்தை முடக்கி
கைப்பேசி சேவையை
கட்டுப்படுத்தி – வென்றதாய்
கதைப்பவனே உன்னால் முடியுமா

குடியாட்சில்
சுயாட்சி வேண்டுமென
விதையிட்டது
திராவிட மண்தானே

சுடலையும் கருப்பனும்
சுப்ரமண்யன் ஆகமாட்டான்
முனியும் பச்சையம்மாளும்
மூலஸ்தானத்திற்கு வரமாட்டார்கள்

பத்ம விருது நிகழ்வில்
பாரம்பரிய  ஆடையணிந்து
பண்பாடு இதுவென்று - இன்று
பறையறிவித்தது புரியலையா?

படிநிலைகளின்
பாரத தேசத்தை
பார்த்து மாற்றுவோம்
பாரினில் மானுடத்தை காத்தே

செவ்வாய், ஜூன் 22

கடை

 





வருமானத் திற்குவழி வாழ்வழிக்கும் கள்ளோ
பெருமான் கடைத்திறக்கப் போராட்ட மில்லையோ
தீர்க்கமா மூடாது திக்கெட்டும் விற்கவா
தேர்ந்தெடுத் தாய்புது தேர்


எதிரணியாய் கேள்வி ஏகமாய் கேட்க
அதிகார நாற்காலி ஆட்பட்டக் கையோடு
அத்தனையும் மறந்து அரசு நடத்திட
நித்தமுமுண் டென்றார்இந் நீர்


பெருந்தொற்றுக் காலத்தில் பொய்யான பிம்பம்
பொருளோ டாயிரம் போட்டுக் கொடுக்க
இருளகற்றும் தேவனென்று இச்சகம் பேசும்
பெருங்கனவில் ஏமாற்றம் பார்!

அம்மா





தன்நலங் கருதாது தோன்றலின் வாழ்வினை
என்நாளும் வேண்டுவது ஏற்றமிகு அன்னை
கனவை விதைப்பதும் கற்றுத் தருவதும்
அன்பைப் பொழிவது மவள்


சேய்வளர்ந்து செல்வச் சிறப்போடு வாழ்ந்தாலும்
தையலால் மாதாவை தீயாய் வதைத்தாலும்
சேய்க்கு நோயென்றால் சோர்ந்தே அரற்றும்
நேயம் மிகுந்தவள் தாய்


அற்புத வாழ்வினிலே அம்மா எனிலன்பு
பொற்பாதம் பின்தொடர பொன்னான வாழ்வு
உறவென ஓராயிரம் உன்னைத் தொடர்ந்தாலும்
சிறந்தவள் தாயென எண்

சனி, ஜூன் 19

உழவன்

 






உலகம் உயர்வுற ஊனுறக்க மின்றி
நிலத்தைப் பயிரிட் டுணவை நிதமும்
சகலருக்கும் ஈபவனைச் சாக்காட்டில் வீழா
மிகிழ்வுறச் செய்வதே மாண்பு

செவ்வாய், ஜூன் 15

நாணமற்ற மாந்தன்

 


புல்லறிவாண்மை

குறள் 846:

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.



ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்


திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே

கற்றும் கல்லார்

 






புல்லறிவாண்மை


குறள் 845:


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.


அறியாததை அறிந்ததாய்
….. அறிவில்லார் உரைத்திட
அறிந்ததை அறிந்தாலும்
…… அய்யுறுவர் உலகத்தவர்
அறியாததைப் பிழையுடன்
….. ஆங்கே பொழிந்திட
நெறியிலார் இவனென
….. நினைவூட்டி காட்டிடும்


கற்றதைக் கசடற
…… கற்று இருந்திட
மற்றதை அறிந்ததாய்
….. மயக்கிப் பசப்பிட
கற்றவர் ஒப்பிடார்
….. கல்லாமை உணர்வரே
வெற்றியை விரும்பிட 
….. வேண்டாம் பொடிதலே

சனி, ஜூன் 12

நட்பு அறி








நட்பாராய்தல் : 
குறள் எண்:792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்



குற்றம் ஆய்ந்து
.....குணமும் ஆய்ந்து
சுற்றம் கொள்ள
.....சுகமே பெருவாய்
முற்றும் அறியா
.....முதிரும் நட்பில்
முற்றல் மட்டும்
.....முகாரி ஆகும்



பிறக்கும் போதே
.....பின்தொடரும் உறவா
சிறக்கும் நட்பை
.....சீர்தூக்கிப் பார்த்தே
உறவோர் ஆக்கு
.....உவரை ஏற்றால்
பிறகோர் துயரம்
.....பிணக்கா டுவரும்

அன்பா அறிவா






சாதகப் பறவைகள்
.....சாசனம் எழுத
காதக தகப்பன்
.....காதலை முறிக்க
நூதன வழியில்
.....நுண்ணிடைத் தப்ப
மாதவ மாதம்
.....மாறனை மணந்தாளே


காதல் இணைகளுக்கு
.....கனவு சுமையாக
வாதம் வம்பாக
.....வஞ்சியும் குறும்பாக
ஆதன் என்றாள்
.....ஆர்வலன் பழித்தான்
பேதம் பிறக்க
.....பெரும்பிழை என்றானே


அன்புடை நெஞ்சத்தை
.....அறிவியல் விளக்கா
அன்பினை அறிவால்
.....அளந்திட விளங்கா
ஒன்றிட வேண்டில்
.....உயர்தவர் துலையர்
அன்றிலில் இலையென்று
.....அறிவது அழகே

வியாழன், ஜூன் 10

ஒன்றியத்தில் தமிழ்நாடு







அகம்பலக் கொண்ட
....அருமை நாடு
சகலரும் ஒன்றே
.....சட்டம் பாரு
சிகரமாய் வென்ற
....சிங்காரத் தமிழுக்கு
அகரமாய்த் தமிழ்நாடு
....ஆகட்டும் வளநாடு


ஒன்றியம் என்றால்
....உனக்கேன் கவலை
அன்றிலாய் வாழ
....அடித்தளம் அதுவே
அன்றியும் அழைக்க
..... அடிமையா தமிழன்
குன்றிடா ஒன்றியத்தில்
....கூடிடு தமிழனென்றே

கன்னல் தமிழ்








கன்னல் தமிழை
.....கண்ணாய்ப் போற்று
இன்னல் வந்தால்
.....இறந்து காப்பாற்று
என்னில் தாயே
.....எனவே வணங்கு
உன்னில் மொழியே
.....உறவைத் தொடங்கு


அம்பலம் ஏறா
.....அன்னைத் தமிழை
அமணர் வகுத்த
.....அற்புத வழியில்
கம்பன் அல்ல
......காளையர் காப்பர்
நம்பன் முருகன்
.....நம்பி யாருமில்ல


மும்மொழியை வேண்டுவர்க்கு
......முக்கனியின் இனிமையை
செம்மொழியாம் தமிழின்
.....சுவையை கூறிடுவாய்
எம்மொழிக்கும் ஈடில்லை
.....என்னினத்தின் அடையாளம்
அம்மொழியே தமிழாம்
.....அதனால் வாழியவாம்

வெள்ளி, ஜூன் 4

எம்மை இயக்கும் ???.............

 



எம்மை இயக்கும் இறைவன்
யாரோ சிலரறிவார் போலும்
தம்மைத் தூற்றும் நாத்திகனை
தடுதாட் கொள்ளும் நாயகன்
அம்பலத்தில் அடையாள மாகிடவே
அவர்கள் ஆம்மென்று ஆவாரோ
கம்பளம் விரித்தேக் காத்திருக்கும்
கிறித்து அல்லா இந்துவல்ல

நாத்திக வாதத்தில் நாவாய்
நர்த்தன மிடுபவனும் அவனே
ஆத்திகர் அற்புதமாய் ஏய்க்க
அளித்த விளக்க மிதுவே
நித்தமும் காக்கும் இறையெனில்
நிற்கதியாய் மாளும் நிலையேனோ
துதித்தாலும் பக்தியில் லையென
துணையாய் வாரா திருந்தாரோ

இந்திரன் வருணன் என்றே
இல்லாதார் பட்டியல் நீளும்
இந்த வரிசையில் கிரேக்க
ஹீரா ஜுயஸ் தொடரும்
உந்திப் பெருக்க ஏமாற்றி
உதிரம் குடிக்கும் கூட்டத்தை
சந்தியில் நிறுத்திக் கேட்டால்
சூதாய் நம்பிக்கை என்றிடும்

நம்பிக்கை என்றே நால்வர்
நாலுச் சுவற்றுள் துதிக்க
அம்பிகை, அல்ல அவரவர்
ஆண்டவனை தடுப்பர் யாரோ
சம்புகன் ஏகலைவன் ஏமாந்த
சரித்திரம் தொடருமென நினைப்பில்
வம்பிழுக்க நாத்திகனை இயக்குவது
வரனருள் என்று ரைப்பவரோ

மற்ற இறையை மறுதலிக்கும்
மாண்புறு நாத்திகர் இவரே
முற்றும் மறுக்கும் நபரை
முட்டாள் என்றவரும் இவரே
வற்றும் அறிவால் தூற்றி
வழங்கும் பட்டங்கள் பலவே
சீற்றம் தனிந்தே சிவனருள்
சேரட்டும் என்றதனால் வாழ்கவே

வியாழன், ஜூன் 3

இரங்கல் எழுதாத நாளில்லை

 

 


 

இரங்கல் எழுதாத நாளில்லை

     இகலார் என்று யாருமில்லை

அரசன் ஆண்டி பேதமில்லை

     அய்கோ கண்ணில் நீரில்லை

தரணியில் தீராநோய் ஒன்றில்லை

    தீநுண்  மிக்கோத் தீர்வில்லை  

மரணம் ஒன்றும் புதிதில்லை

    மனதிற்குத் தாங்கும் திடமில்லை   

 

பிரம்மனும் பரமனும் துணையில்லை

    பேதையர் நம்பிக்கைக் காக்கவில்லை

அரற்றும் நிலைக்காணத் தாளவில்லை

     ஆதரவாய் அவர்களுக்கு ஒன்றுமில்லை

கிராமம் நகரமென எல்லையில்லை

     காற்றில் பரவத் தடையில்லை

சீரான வாழ்வு திரும்பவில்லை

     சோராதிரு வேறு வழியில்லை

 

ஊரடங்கு நீடிக்க விருப்பமில்லை

      உழைத்து பொருளீட்ட வாய்ப்பில்லை

பாரங்கே தடுப்பூசிக் கிட்டவில்லை

      பலகாலம் காத்திருக்க மனமில்லை

நெருங்கிப் பழகிய உறவில்லை

      நேற்று இருந்தார் இன்றில்லை

சுருங்கி போனது உலகமில்லை

      சுற்றித் திரிந்த நாமன்றோ


திங்கள், மே 31

கன்னக்குழி அழகி






கன்னக்குழி அழகி
......கரம்பற்ற மகிழ்தேனடி
அன்னநிறத் தழகி
.....ஆசையில் தொட்டேனடி
மின்னும் கண்கள்
......மீறச் சொல்லுதடி
சான்றாய் இச்சொன்று
.......சத்தமின்றிக் கொடடி
தென்றல் வருடியதாய்த்
......தேகம் குறிக்குமடி


நன்னாளின் ஆனந்தம்
......நாற்புறம் பரவட்டும்
பொன்னாள் என்றே
........பொன்னேடு எழுதட்டும்
மேன்மையுற இணைந்த
......மொட்டுக்கள் என்றே
சான்றோர் வாழ்த்தும்
.......சம்சாரக் கடலிலே
இன்பமாய் முத்தெடுக்க
........இட்டமாய் வாயேன்டி

வியாழன், மே 27

வசந்தகால வானம் பாடிகள்

 


இளவேனிற் காலத்தில்
…… இளஞ்சோடிப் பாடித் திரிய
தளர்வற்ற ஊரடங்கில்
…… தத்தளித்தேத் தேடி வாட
இளமை முறுக்கில்
…...இதயம் தேடிச் செல்ல
விளக்கம் கேட்டு
……. வீதியில் காவலர் தடுக்க


ரோசாப்பூ வாசம்
…… ராசாத்தி நினைப்பக் கூட்டுது
நேசத்தின் வேகம்
…… நொடிநேரம் ஒளியாண் டானது
வசந்தத்தை தேடும்
……. வசந்தகால வானம் பாடிகளை
தேசத்தின் பெருந்தொற்று
…… தேவை யின்றி வாட்டுது

அன்பு

 


அன்பென அவளை நெருங்க
…… அத்தான் என்றே மயங்க
அன்னமே அன்பன் நானாக
….. அச்சாரம் கொள்க என்றேன்
ஆனையோ ஆநிறையோ அல்ல
….. அன்பின் கணையாழி கண்ணே
ஆனிப்பொன் அணிகள் வேண்டா
….. அத்தான் அருகிருக்க வேண்டும்


அனுதினம் அந்தாதி பாடும்
…… அபிராமி நானாக வேண்டும்
ஆனந்த நிலையில் அன்பே
……. அனைத்தும் ஒன்றாக வேண்டும்
அன்றில் இவர்கள் என்றே
……. ஆன்றோர் வாழ்த்த வேண்டும்
அந்தம் நீயின்றி வெறுமை
……. ஆயினும் நீவாழ வேண்டும்

புதன், மே 26

காற்று

 



காற்றைத் தென்றலாகப் புயலாகக் 
.....கண்டிருந்த காலச் சூழலிலே 
முற்றத்தின் நிலவொளியில் எம்மை 
......முனைந்துப் பாடிடலாம் என்றதனால் 
கற்றறிந்த தமிழ் துணையிருக்கக் 
......கவிதையில் கேட்டு வைத்தேன் 
இற்றைத் தினத்தில் இறக்குமதி 
......இனத்தில் காற்றிருப்ப தெதனாலே? 

தொற்றால் பற்றாக் குறையா 
......தூய்மை இல்லா முறையா 
வற்றா வளியை வரம்பற்று 
......வஞ்சிக்க வந்த வினையா 
காற்றில் லையென்றுக் கதைப்பர் 
......கற்ற இயற்பியலின் காரணத்தில் 
காற்றில் லையென்றுக் பதறுபவர் 
......கொரானாத் தொற்றின் மரணத்தில் 

வளிநான்கில் குளிர் மேலடுக்கு 
.....வகைமீதிக் காற்றின் கதகதப்பு 
துளிக்காற்றின் விலையை அறிவாய் 
.....தீநுண்மி பரவி யிருக்க 
வளியின் எடையை அறிவாயா 
.....வளர்ந்த விஞ்ஞானம் உதவ 
அளந்தேன் ஐந்தாயி ரதிருநூறு 
......மிலியன் மிலியன் என்றே

எரிக்கும் எண்ணெய் நிலக்கரியால்
.....ஏற்படுவது நைட்ரசன் காற்றாகும்
கரிம வாயுக்கள் நிலைத்திருக்க
.....காடுகள் நிலத்தைப் பாதிக்கும்
கார்பன் எரியா திருக்கக்
.....கார்பன் மோனாக்சைட் உருவாகும்
மருந்தாய் பாலிவினைல் குளோரைட்
.....மானுட உயிரைக் காக்கும்

ஆடிக்காற்றில் காற்றாலை மின்சாரம்
.....ஆனால் தனித்திருக்கும் சம்சாரம்
ஆழிக்காற்றில் கிழத்தியுடன் சஞ்சாரம்
.....ஆனந்த இலக்கியப் பண்பாடும்
கொடியசையக் காற்று வந்ததா
.....காற்றி ருப்பதால் அசையுமே
கொடிகளின் ஒளிச்சேர்கை உயிர்காற்றை
.....கணக்கின்றி உருவாக்கித் தருமே

எலக்ட்ரான் புரோட்டான் நுண்துகள்
....எதிரிடச் சூரியக் காற்றாம்
உலவும் ஓசோன் அகப்புற
.....ஊதாக் கதிரைத் தடுத்திடுமாம்
மழைக்கு ஈரக் காற்றுதென்
......மேற்கில் புறப்பட்டுப் பொழிந்திடும்
கீழடி நாகரிகம் புதையக்
.....காற்றும் புயலுமெனப் புரிந்திடும்


கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...