வேல்வெற்றியின்
இனி ஒரு விதி செய்வோம்
சனி, மே 2
தாலி
பண்பாட்டின் சடங்கா?
பாவையின் அங்கமா?
எண்ணில்லா வடிவமா?
எதற்கென்று தெரியுமா—
பெண்ணினை அடிமையா,
பேரண்டம் முழுமையா?
கண்ணியாய் கைவிரலில்,
கழுத்தினில் கட்டியதோ?
அத்துகட்டி வாழ
அவளுக்குச் சுதந்திரமா?
வித்துபுட்டு குடிக்க
வீட்டிலிருக்கும் பண்டமா?
நித்தம் சுமங்கலியா,
நீங்காத அணிகலனா?
செத்துபுட்டா அறுத்து
செல்வியாக முடியுமா?
இடைஞ்சலென இரவில்
இலட்சினையைத் துறப்பதில்,
உடையவனும் உடன்பட,
ஊமையாய் கிடுமூரே;
அடையாள அடிமையிடம்
அக்கறை இல்லையெனில்,
மடைமாறும் அன்புதான்
மகமாயி மகிழ்ந்திடவே.
அருஞ்சுவை அன்பும்
அருகாமை இன்பமும்
கருப்பை நிரப்பல்ல
களிப்புடன் வாழ்ந்திடவே
பெருஞ்சுமை என்றானால்
பெரும்புராணம் ஏதுமின்றி
விரும்பியவழிச் சென்றிட
விவேகம் என்றறிந்தே
அச்சத்தில் ஆண்டாண்டு
அடையாள மாக்கியதை
துச்சமென தூக்கிவீசி
துணையிது வல்லவென்றே
இச்சமயம் இவளுரைக்க
இச்சட்டங்கள் மாளட்டுமே
சச்சரவின்றி சரிசமமாய்
சமூகத்தில் வாழட்டுமே
அ. வேல்முருகன்
வியாழன், ஏப்ரல் 30
மேகமே...... மேகமே.......
அலைந்து
திரியும் உனை
அகவை
நிறைந்தவளுக்கு
அணியும்
பாவாடையாக்கவா?
மலை
முகட்டை
மறைத்துச்
செல்கிறாயே—
மாராப்பு
ஞாபகமா?
சுட்டெரிக்கும்
சூரியனை
சூழ்ந்து
மறைக்கிறாயே—
சுகமெதுவென
காட்டவா?
காதற்
கிழத்தியை
காணும்
முழுநிலவன்று
காணாது
போனாயே!
வேலைவெட்டியில்லா
எனக்கு
வேடிக்கை
காட்டவா
வெண்மேகமா
வந்தாய்?
காலத்தே
பயிர் செய்து
கழனி
செழிக்கவா
கருமேகமா
திரண்டாய்?
முடிவில்லாத
பால்வீதியில்
முகிலினமே—
எந்த
முகவரியைத்
தேடுகிறாய்?
எண்ணற்ற
நட்சத்திரங்கள்
ஏன்
கண் சிமிட்டுகின்றன?
எனக்காக
கேட்டுச் சொல்லேன்.
அலுமினியப்
பறவையில்
அருகிருந்து
காண வந்தேன்;
அதிரவைத்து
அச்சமூட்டினாய்.
ஆயினும்
ஆங்காங்கே
பஞ்சுப்
பொதிகளாய்
பரவசப்படுத்தினாய்.
நிர்கதியாய்,
நிர்மூலமாய்
நீல
வானம்—
நீ
எங்கே சென்றாய்?
நீயின்றி
நீரில்லை;
நானிலத்தில்
நதிகளோடு
நாங்களும்
இல்லை.
அ. வேல்முருகன்
புதன், ஏப்ரல் 29
உச்சநீதிக்கு -வாதம் -2
பற்பல
நம்பிக்கைகள்
பலகாலம்
தொடர்ந்திருக்க,
பட்டென
மீறுவதால்
பலர்
மனது நோகுது.
தொழுவது
தொன்மை,
தொடுடையோன்
ஆயினும்,
தொடர்பு
இல்லை எனில்
தொழுவத்தில்
அனுமதி இல்லை.
நம்பிக்கையற்றவர்களுக்கு
ஆலய
நுழைவு
அடிப்படை
உரிமையா?
தனிப்பட்ட
உரிமையா?
வறண்ட
பாலைவனத்தின்
வற்றாத
நம்பிக்கை
ஓரான்
காடுகளில்
ஒளிந்திருக்கிறதா?
கங்கையும்
யமுனையும்
புறப்படும்
இடத்தில்
புனிதம்
புகுத்தப்பட்டதால்
இயற்கை
தெய்வமானதோ?
முப்பது
கோடி முகமுடையாள்,
உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்
—
பாரதியின்
பொழிப்புரை
மத
நம்பிக்கைகளுக்கல்ல.
அரசியலமைப்பின்
அடிப்படை
உரிமை
25 மற்றும்
26-ல்
வரையறுத்தாலும்,
வழக்கங்கள்
மட்டுமே ஏற்கப்படும்.
ஒழுங்குபடுத்தும்
அதிகாரம்
அரசுக்கு
உள்ளதென்றால்,
பெரும்பான்மை
மதத்திற்கா
சிறுபான்மை
சுதந்திரத்திற்கா?
ஆன்மீகத்தில்
அரசின்
ஆராய்ச்சி
கூடாதென்றாலும்,
அதன்
இயக்கத்தின்
அளவை
கட்டுப்படுத்துவது.
அவசியமான
நடைமுறையில்
பாதுகாப்பு
நோக்கமென்றாலும்,
அவர்களுக்கேற்ப
அடிக்கடி
மாற்றப்படும்.
பொறுப்பும்
கட்டுப்பாடும்
பொதுவில்
என்றாலும்,
பெரும்பான்மை
மீறுவது
பெருமை
என்றானது.
நம்பிக்கையற்றவர்கள்
நன்னெறி
வகுக்க
தகுதியற்றவர்கள்
என
நம்பிக்கையாளர்கள்
வாதிட.
பெரும்பான்மை
தகுதி
இவர்களை
தவிர்த்து,
எவரோ
அவரே என
அதிகாரம்
எழுதி வைத்தது.
இறை
மறுப்பாளனும்
இந்து
என்றானதால்,
பகுத்தறிவில்
- பக்தமான்கள்
நீதி
கோருகிறார்கள்.
அரசியலமைப்பில்
“அனைவரும்”
என்பதும்
அந்தக்
கூட்டம் மட்டுமே —
அனைத்து
கூட்டமுமல்ல.
சமம்
என்றாலும்
சமமில்லை;
வலிமையுள்ளவனே
வகுக்கிறான்
நீதி.
பொருத்திருப்போம்
—
பொருள்
பொதிந்த நீதி,
மானுட
தர்மமா
மத
தர்மமா என்றே.
வாதம் தொடரும்
அ. வேல்முருகன்
சனி, ஏப்ரல் 25
சாதி
கண்
கலந்து
காதலில்
விழுந்து
கரம்
பிடித்தேன்
ஒன்னு
கலந்து
ஒரு
பிள்ளையும் பெத்து
ஒத்திசைந்து
வாழ்ந்திருந்தேன்
வார்த்தெடுத்த
வார்த்தைகளின்
வர்ணஜாலத்தை
வஞ்சியவள்
இரசித்திருக்க
பேச்சு
வழக்கிலே
பேசிக்
களிக்கையிலே
எதோவென்று
சொன்னேன்
“எங்க
ஆளுங்க
இதுபோல
பேச மாட்டாங்க”
எதார்த்தமாகச்
சொன்னாள்
எனினும்
தரம்
குறைந்தவர்கள் எனும்
தொனி
தொக்கி நின்றதால்
வாடியது
முகம்
ஆண்டாண்டு
கால
அவச்சொல்லை
மாற்றுவதெப்படி?
அந்தத்
தெரு மக்களை
இந்தத்
தெருவில் இருப்பவர்கள்
அப்படித்தான்
அழைப்பார்களாம் ...
அப்படித்தான்
ஒருநாள்
உறவுகளோடு
ஓர்
ஊருக்குச் சென்றிருந்தேன்
குலம்,
கோத்திரத்தோடு
குடியிருப்பு
எங்கே என
குணமாதான்
கேட்டார்கள்
ஒரு சாதிதான்
– ஆனா
கொள்வினை,
கொடுப்பினை
அக்கூட்டத்தோடு
இல்லையென்றனர்
நுண்ணிய
அளவில்
மானுடத்தை
பிரித்த
சமுகத்தை
மாற்ற முடியுமா?
அ. வேல்முருகன்.
கண்களின் விதி
3வது விதிப்படி
எனை ஈர்க்கும்
எதிர்வினையே
திக்குத் தெரியாத
பரந்த வெளியில்
திசைதனை காட்டுவது
கன்னி இருக்கும் திசையை
புலனறியும் வித்தை
பூவுலகின் விந்தையே
மின்னோட்டக் காந்தப் புயல்
அன்பின் அலைவரிசையில்
அதிர்வெண்களைப் பரப்ப
கோட்பாடுகள் மாறலாம்
எனைச் சுற்றும் பூமியாய்,
உனைச் சுற்றும் சூரியனாய்
சந்திக்கும் புள்ளியில்
சங்கமிக்க
புதுமைகள் படைப்போமடி
ஒளிச்சேர்க்கை விதியின்படி
உனைப் பார்த்தே
என் சுவாசங்கள்
நீடித்திருக்கின்றன
உயிரியல் தத்துவம்,
வேதியியல், இயற்பியலில்
இருந்துவிட்டு போகட்டும்—
இலக்கியமாய் இக் கவிதை
உனக்காக
அ. வேல்முருகன்
புதன், ஏப்ரல் 22
உச்சநீதிக்கு -வாதம் -1
படைத்தவனை
பார்க்க
அனுமதி வேண்டிட,
பாராமுகமாய்
இருந்ததால்
பஞ்சாயத்து.
இயல்புகளுக்கு
முரணாக
இறைவன்
இருப்பதால்,
இப்
பெண்களை
18-ஆம்
படியில் பார்க்க விரும்பவில்லை.
அரசியல்
சாசனம்
அர்ச்சகர்
ஆவதற்கு
அனுமதி
25(2)(பி)
கீழ்
வழங்கினாலும்,
அதற்கும்
தடை விதித்திட.
நிரந்தர
பிரம்மச்சாரியின்
நிஷ்டை
கலைந்திடுமோ,
நீள்விழி
முலையுடைய மாதை
பட்டினத்தான்
கண்டது போல்.
ஜெயமாலாவின்
வாக்குமூலம்
ஜெயிக்கவில்லை
என்றாலும்,
மனோரமா,
சுதா
சந்திரனுக்கு
அபராதம்
விதித்து காத்தனர்.
தீண்ட அனுமதி
இல்லை எனில்,
தீர்ப்பு
எழுதுவதற்கு முன்
தீண்டித்தான்
பார்ப்போம்—
தீர்ப்புகள்
திருத்தப்பட?!!
வாதம் தொடரும்
அ. வேல்முருகன்
வெள்ளி, ஏப்ரல் 17
யார் உலகத் தலைவர்
மணி
கணக்கில்
நாள்
கணக்கில்
வாரக்
கணக்கில்
கெடு
வைக்கிறார்
நாளை
முடிவதற்குள்
நாகரிகத்
தொட்டில்
நிலப்பரப்பில்
இல்லாது
நிர்மூலமாக்கப்
படுமென்கிறார்
ஆதரிக்காத
தலைவர்களை
“ஆகட்டும்,
பார்க்கலாம்”
என்கிறார்
ஆதரித்த
மன்னர்களை
அரங்கத்தில்
அசிங்கப்படுத்துகிறார்
சர்வதேச
சட்டங்களை
கழிப்பறை
காகிதமாக்குகிறார்
ஊரேச
மமதையில்
ஒதுக்கித்
தள்ளுகிறார்
அணுகுண்டு
இருப்பதாய்
ஆலாபிக்கிறார்
ஹார்மேஸ்
நீரிணை
அவருடையது
என்கிறார்
"நேட்டோ"
நாடுகள்
கூட்டில்
இல்லையென்றவுடன்
"வீட்டோ"
அதிகாரமிருந்தும்
வீரிட்டுப்
புலம்புகிறார்
கப்பம்
கட்டச் சொல்லி
கட்டுக்கதைகளைப்
பரப்புகிறார்
எதிர்ப்பவர்களை
கற்காலத்திற்கு
அழைக்கிறார்
சரிந்த
சந்தையை
சரமாரி
பொய்களால்
நிமிர்த்த
முயன்று
நிலைகுலைந்து
போகிறார்
பல "நாட்டிக்கல்“
தூரம் நின்று
பலமான
குரல் எழுப்பி
பணியவில்லை
என்றால்.......
பம்மாத்து
செய்கிறார்
அவர்களோ,
சரணடைவது
சைரஸ்
வழிவந்தவர்களின்
சரித்திரத்தில்
இல்லையென
வீர
முழக்கமிடுகின்றனர்
அ.வேல்முருகன்
வியாழன், ஏப்ரல் 16
அன்பெனப்படுவது....
ஆருயிரே
என
அள்ளி
அணைத்து
அழுந்ததொரு
முத்தமிடுவதா?
தினம்
தினம்
தளிர்
மேனி காணாது
தவித்தேன்
என்பதா?
ஆலிங்கனத்தில்
ஆழ்கடல்
முத்தெடுக்க
அம்
மேனி குளிர்ந்திருப்பதா?
இதயத்தை
இயக்கும்
இனிய
தேவதையென
விதந்து
ஓதுவதா?
அன்பு –
என்றும்
அலங்கார
வார்த்தைகளை
அள்ளித்
தெளிக்க கிடைப்பதா?
ஊரே
எதிர்த்தாலும்
உதவிட
நானிருக்கிறேனென,
ஓடி
வருவது
அவசியப்படும்
போது
ஆதரவு
கரம் நீட்டுவது,
கொடுத்த
வாக்கைக் காப்பாற்றுவது
கோபத்தின்
உச்சியில்
குதறி
எடுக்காமல்
மதிப்புடன்
நடத்துவது
காதலும்,
ஈர்ப்பும்
கணப்பொழுதில்
மாறுகின்ற
காலச்சூழலில்
– மாறாதிருப்பது
நொடிப்பொழுது
செயலல்ல,
நீண்ட
நெடிய பயணத்தின்
நீடித்து
நிலைத்துக் கொண்டிருப்பது
அ. வேல்முருகன்
வெள்ளி, ஏப்ரல் 3
போடுங்கம்மா ஓட்டு
ஜனநாயகத் திருவிழா
ஜனநாயகன் திரைப்படம்
சதிகளால் வரவில்லை என
சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள்
வேட்பாளர் பட்டியல்
வெளியிட முடியாத கட்சிகள்
வெற்றிப் பெற்றுவிடுவதாய்
கனவு காண்கிறார்கள்
மார்க்சிய-லெனினிய குழுக்கள்
மதவாதிகளை எதிர்கொள்ளாது
திராவிடத்தை
தழுவிக் கொண்டனர்
யார் அழைப்பார்களென
யௌவன வேடமிட்டு
காத்திருந்து காத்திருந்து
யாசகம் கேட்கிறார்கள்
துரோகிகள் என தூற்றிய
துடைப்பக் கட்டைகள்
பட்டுக் குஞ்சம் கட்டி
பல்லக்கில் செல்கிறார்கள்
வளர்ச்சிக்கேற்ப
வழங்கவில்லை இடங்களென
வருத்தங்களிருந்தாலும்
வலதுசாரிகள் வரக் கூடாதென்பதற்காக
இடதுசாரிகளின் இடிமுழக்கம்
வெளியே தெரியாதவாறும்
மாவளவனின் வருத்தத்தோடும்
மையத்தின் தியாகத்தோடும்
கொள்கைக் கூட்டணியென்ற
கோட்பாட்டை மறந்து
ஆர்.எஸ்.எஸ். அடிவருடியை
இணைத்தொரு கூட்டணி
அதிகாரம் வேண்டுமென
அவர்கள் டெல்லிக்கு
ஆவலாய் பறந்து
அமைத்தொரு கூட்டணி
அனாதைகள் இணைந்து
அவர்களிருப்பை
அகிலம் கவனிக்க
அமைந்தது மற்றொரு கூட்டணி
எல்லோரிடமும் பேசி
எங்கும் பேரம் படியாததால்
யாரும் வேண்டாமென
எல்லா இடங்களிலும் போட்டி
இந்தத் திருவிழாவில்
செய்தி ஊடகங்கள்
சில்லறை பார்ப்பதற்காக
சித்திரங்களை காட்டுகின்றன
எல்லோரும் இலவசமென
எழுப்பும் கூவல்களில்
ஏனோ மறந்தோம்
ஏறும் விலைவாசியை
வாக்கெனும் வாய்கரிசியை
வழங்கிய பின்
நேட்டோ போல
நோட்டாவும் உதவாது
ஆக, என்ன செய்யலாம்
ஊரை நிர்வாகம் செய்பவன்
ஊழல் நிகழ்த்துவானெனில்
உடனே நீக்கிட அதிகாரம் கேள்!!
அ. வேல்முருகன்
வரிக்கு மேல வரி.........
அச்சடிக்கும் இயந்திரத்தை
அரசாங்கம் வைத்துக் கொண்டு
அது ஏன்?
வரிக்கு மேல வரிகளை போடுகிறது
உழைத்துக் கிடைக்கும்
ஊதியத்திற்கு
உன்னிடம் கேட்பது
நேரடி வரியாம்
உண்டி வளர்க்க
உப்பு, புளி, மிளகாயோடு
உன் விருப்ப ஆடையணிய
மறைமுக வரியாம்
அலை அலையாய்
அகப்பட்டவனிடம் வாங்குவது
அரசாங்க விதியாம் – அந்த
கடவுளுக்கும் அதே கதியாம்
விலகிச் செல்ல
விழித்துக் கொண்டாலும்
விட்டில் பூச்சி நீ
விளங்கா அரசைக் கவனி
வசூலித்த வரியில்
வார்த்த சாலைக்கு
சுங்க வரியென (Toll)
கூசாமல் கேட்டிடும்
மகிழ்வூர்தி இலட்சமெனில்
பசுமை வரி, சாலை வரி
காப்பீடு, இதரச் செலவோடு
இருமடங்கு ஆகிடும்
பெட்ரோல், டீசலுக்கு
கலால் வரி – காரை
பேரிச்சம்பழத்திற்கு விற்றாலும்
சரக்கு சேவை வரி என்கிறான்
சேமிப்பின் வட்டிக்கு வரி
வசிக்கும் வீட்டிற்கு வரி
வழங்கும் மின்சாரத்திற்கு வரி
வளர்ப்பு பிராணிக்கும் வரி
சொத்து வாங்கினால்
பதிவு கட்டணம்
சொத்தை விற்றால்
இலாபத்திற்கு வரி கட்ட வேண்டும்
நிறுவனம் என்றால்
தொழில் வரியோடு
உரிமம், அனுமதி
சேவை வரியென நீளும்
காமதேனு நீ
வற்றாத மடியுனக்கு
வரிகள் கொட்டுமென
வாட்டுவது குடிமக்களை
அரசின்
அத்தனை வரிகளும்
அம்மக்களை கட்டுப்படுத்தவே
அதற்குதான் சட்டங்களே…!!!!
புதன், ஏப்ரல் 1
துபாய்
வாழ இயலாத
வரண்ட பாலைவனம்
வாரி வழங்கிய – எரி
வாயு, எண்ணெய்யால்
பூலோக சொர்கமென
புதிய புராணத்தை
பூஜிக்கத் தொடங்கையில்
பூகம்பம் நிகழ்ந்தது
பன்னாட்டு பணக்காரர்கள்
பாம் ஜுமைராக்களில்
புர்ஜ் கலீபாக்களில்
புரண்டு கொள்ள
தங்கத்தில் குடியுரிமை
தந்த மன்னர்
தப்பித்து அமெரிக்காவில்…
தன்னையே காத்துக் கொள்ள
குருக்ஷேத்திரப் போரில்
கௌரவம் என
பஹ்ரைனோடு துபாயும்
அமெரிக்காவை ஆதரிக்க
ஏவுகணைகள், ட்ரோன்களை
எதிர்கொள்ள இயலாத
அமீரகத்தை
அம்போவென விட்டுவிட்டு
தங்க குடியுரிமை
தகரமாய் கூட
தரத்தில் இல்லையென
பறந்து விட்டனர் அப்பாவிகள்
ஆம், அறுபது சதவீத
அந்த நாடோடிகள்
ஆயுள் முக்கியமென
அடுத்த சொர்க்கத்தைத் தேடிட
பன்னாட்டு வர்த்தகத்தின்
வணிகத் திருவிழாக்கள்
இணையில்லை என்றவர்கள்
எங்கோ மறைந்தனர்
வெறிச்சோடிய சாலைகள்
விமான நிலையங்கள்
ஒருவருமற்ற
உயரமான கட்டிடங்கள்
அனாதையாய்
ஆங்காங்கே நிற்கும்
உயர்விலை கார்கள்
செல்லப் பிராணிகள்
காரணம் யாதென்று
மேதினி அறிந்தாலும்
மேட்டிமை கொண்ட
மேற்குலகம் நீட்டிக்கும் போரை
அரசு இயந்திரங்கள்
உம்மென்றோ
ஆம்மென்றோ
உருப்படியாய் ஏதும் செய்யாது
மானுடத்தை காக்க
மக்கள் நாமே
போரை எதிர்த்து
போராடுவோம், வாருங்கள்
அ. வேல்முருகன்
சனி, மார்ச் 21
கொலைபழி சுமத்து
ரோம் நகரம்
பற்றி எரிகையில்
நீரோ மன்னன்
"ஃபிடில்" வாசித்தது வரலாறு
ஈரானோடு
இஸ்ரேலும் பற்றி எரிய
அமெரிக்க அதிபரால்
இரத்த ஆறு ஓடுகிறது
மலைகளுக்கிடையே
பேரொளித் தோன்றி
பத்துக் கட்டளைகளை
நெதன்யாகுவுக்குச் சொல்லுமோ
இறை தூதர்கள்
எங்கேயாவது தோன்றி
இந்தப் போரை
இருநாட்களுக்குள் முடிப்பார்களோ
பேரரசுகள் வீழ்ந்து
வல்லரசுகள் உருவாகிட
நாகரிகத் தொட்டில்கள்
நாசமாகிதான் போயின
மேலாதிக்க பேராசையில்
மேலும் சிலநாடுகள்
மேன்மை பொருந்திய
மகுடத்திற்கு காத்திருக்கின்றன
மாடமாளிகைகள்
மணல்மேடுகளாக
மானுட மரணங்கள்
மனதை மாற்றவில்லை
குகைகளில் வாழ்ந்து
குடும்பம் கூட்டமென
கோலோச்சியவர்கள்
பதுங்கு குழிகளில்
நாலுகால் பாய்ச்சலில்
நங்கூரமின்றி அறிவியல்
நாடற்ற நாடோடிகளாய்
நாகரிகச் சமூகம்
மானுட மரணத்தை
மருந்துகாளல் நீட்டித்தவர்கள்
போரிடும் காரணத்தை
பொய்யாய்தான் உரைத்தனர்
இது, சுதந்திரத்திற்கான
விடுதலைப் போரா
சுரண்டுவதற்கான
மேலாதிக்கப் போர்
வெல்வது யாராக இருந்தாலும்
வீழ்வது மக்களே
கொல்வது கொற்றவனென்பதால்
கொலைபழி சுமத்து
போர்.... காலங்கள்
வீரத்தின் அடையாளமானது
கற்காலம்
காலாட்படை
தேரோடு குதிரைப்படை
யானைப்படை கவசங்களோடு
எக்காளமிட்டது மன்னர் காலம்
வணிக கப்பல்கள்
கொள்ளையடிக்க
போர் கப்பலென
பெயர் மாறியது கடந்தகாலம்
தூப்பாக்கித் தோட்டாக்கள்
தொலைதூர பீரங்கிகள்
கண்ணி வெடிகள்
காலாவதியாதி நாளாச்சோ
விமானப்படை - அதி
விரைவுத் தாக்குதல்கள்
வேவு பார்க்கும் ரேடார்கள்
துல்லியமாய் தாக்குமோ
ஒவ்வொரு போரும்
ஒருசில கண்டுபிடிப்பை
மானுடத்தை அழிக்க
உலகில் உருவாக்கும்
இன்று, டிரோன்கள்
கொத்து குண்டுகள்
பாலிஸ்டிக் ஏவவுகளை
செயற்கைகோள் உளவுகள்
திருப்பாச்சி அரிவாளும்
தீப்பிழம்பு ஏவுகணைகளும்
தீர்த்துச் சொல்லும்
தீர்வுகள் ஏதுமில்லை
தகவல் குறியீடுகளை
கணணியால் பூட்டவிழ்த்து
இரகசியங்களை அறிவது
இராப்பகலா தாக்கதானே
ஆல்ஃபிரட் நோபிள்
அன்று நொந்தது
அந்த டைனமைட்டுகள்
அமைதி காக்காது என்றுதானே
ஆயினும் ஆயுதங்களை
அகிம்சையால் வெல்வோமா
அதுவொரு பகற்கனவு
அதனை புறந்தள்ளு
அ. வேல்முருகன்
சனி, மார்ச் 14
இன்று போய் நாளை வா
ஏற்கனவே
என்னால் கொல்லப்பட்டவர்கள்
போரில் பொருத முடியாதென்றா
எப்ஸ்டின் கோப்புகளுக்காக
இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு
என்னைத் தாக்குவதோ
எண்ணெய் வளங்களை கொள்ளையிடவோ
ஏவுகணைகளோடு
ஏராளாமான பொய்களோடு
ஒருமுறையல்ல எத்தனைமுறை
பிரம்மாஸ்திரத்தை ஏவினாலும்
இறையாண்மை கொண்ட
எந்நாடும் எதிர்க்கும்
இல்லாத நாடுகள்
அமெரிக்காவை நத்திப் பிழைக்கும்
பலவீனமான நேரத்தில்
பழித் தீர்க்காது
பலம்பெற்று வா என்பது
பாழும் கிணற்றில் வீழ்வதல்லவா
ஆக, அயோத்தி இராமன்
நிராயுதபாணி இராவணனை
பார்த்துரைத்த
கட்டுக்கதையல்ல இந்தப் போர்
அ. வேல்முருகன்
போரும் பொய்யும்
இருக்குமிடம் தெரியாது
ஈரான் அழிக்கப்படும்
அமைதியை நிலைநாட்ட
இரசாயன ஆயுதங்கள்
அடியோடு ஒழிக்கப்படும்
ஆயுதங்களை
அடியோடு ஓழித்து விட்டோம்
அடிபணிந்து விடுவார்கள்
உச்சத் தலைமையை
ஒழித்து விட்டோம்
திக்குத் தெரியாதிருக்கிறார்கள்
ஹார்மோஸ் நீரிணையில்
அச்சமின்றி செல்ல
ஆப்ரகாம் லிங்கன் கப்பல் வழிகாட்டும்
நேட்டோ நாடுகள்
நேசக் கரம் நீட்டுவார்கள்
நிம்மதியாய் இருங்கள்
பொறுத்திருங்கள்
பொருளாதாரத் தடைகளால்
போர் மட்டுப் படுத்தப்படும்
ஏவுகணைகளை இடைமறித்தோம்
ஏகப்பட்ட இழப்புகள்
யாருக்கு?
15 நாட்கள் கடந்து விட்டன
பதிலடி தொடர்கிறது
இஸ்ரவேலர்களை இறைவன்
.........காப்பாற்றுவானா?
அ. வேல்முருகன்
வியாழன், மார்ச் 5
யாமத்தின் யாழிசை
கட்டுறுதிக் காளையை
துள்ளிட வைத்தவளே
தூக்கம் கெடுத்தவளே
வெள்ளி முளைக்கயில்
வேட்கையைச் சொன்னேனே
அள்ளியள்ளிக் கொடுத்தால்
அத்தானும் மகிழ்வேனே
ஞாயிறு உதித்தாலும்
ஞாபகங்கள் நிழலாடுதே
பாயில் உறங்கிட
பலகனவு வருகுதே
வாயிலில் நின்றே
வருகையை நோக்குதே
நோயில் மீட்டிட
நொடியும் தாமதிக்காதே
தாமரையிலைத் தண்ணீரா
தவிக்க விடாதே
சாமக்கோழி கூவுமென
சாத்திரம் பார்க்காதே
கோமளத்தின் கோபத்தில்
கோமாளி யாகாதே
காமன் கணைகளில்
கணக்குப் பார்க்காதே
யாமத்தின் யாழிசை
யாகப்பத்தினி யானே
பூமான் பூவையின்
பூப்பட்டு மேனியின்
ஏமாந்த கொங்கையை
ஏந்திப் பிடித்து
காமத்தின் கதவுகளை
கைப்பற்றத் தாமதமேன்
அ. வேல்முருகன்
ஞாயிறு, மார்ச் 1
நிபந்தனையற்றதா காதல்
எந்த சூழ்நிலையிலும்
என்னிணை நீயென்று
என்றென்றும் சொல்வேனடி
உனக்காக
உன்னுடனேயே
ஒவ்வொரு பொழுதும் கழியுமடி
ஆயினும்
ஆயிரம் அவஸ்தைகள்
அத்தனையும் சந்திக்க
அடியே
அன்பன் துணையுண்டு
சோதனைகளை சோதிக்க
வா, இறுகப் பற்று
இருவரும் இணைந்து
எதையும் எதிர்கொள்வோம்
கோப தாபத்தில்
கொதித்தெழுந்தாலும்
குறைகளைச் சுட்டு
விட்டு விலகாது
விதியென நோகாது
வேறெங்கு செல்வேனடி
பூரணத்துவம் கொண்டவர்
பூவுலகில் யாருமில்லை
புன்னகையோடிரு
கடினமாக காலங்களில்
கரைந்து குழம்பாதே
பொறுமையோடிரு
காதல்
காலகாலமானது
கண் கலங்காதிரு
மகிழ்வானத் தருணங்களில்
மனமொத்து இருப்பது
இயல்பென்றாலும்
நீயிருக்கும் வரை
நிலைத்திருக்கும் எனதன்பு
நிபந்தனைகளுக்கு உட்டபட்டதல்ல
அன்பன்
அ. வேல்முருகன்
சனி, பிப்ரவரி 21
தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?
தேர்தல் வந்தா ஓடுமா
ஏனோ தானோ
என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா
தானமா தந்ததற்கு
தருவது உனதுபொன் ஓட்டா
மான மில்லா
மாறும் கட்சியில் கூட்டா
தர்ம ராசா
தந்த இலவச மெல்லாம்
வர்க பேதத்தில்
வரிகளா வாரி அள்ளியதே
மர்ம தேர்தலில்
மாறிமாறி ஓட்டுப் போடு
நர்தன மாடு
நரகலில் நல்லதை தேடு
இரட்டை என்ஜின்
இறகு முளைத்து வருமா
புரட்டும் பொய்யும்
புடம்போட மெய்யாய் மாறுமா
குரட்டை விடாது
குளறுபடி எங்கென கண்டுபிடி
அரற்றாது ஆனவரை
அழுகலை அடியோடு வெட்டியெறி
ஆதார் இருந்தாலும்
ஆறேழு மென்பொருள் கண்டாலும்
பேதங்கள் இந்துக்களில்
பேருண்மை என்றே உரைப்பர்
ஆதரவா கையூட்டு
அவர்பேரில் பட்டா மாறுமென்பர்
ஏதும் மாறாதெனில்
எதற்கிந்த உரிமை யோசியுங்கள்
அ. வேல்முருகன்
திங்கள், பிப்ரவரி 16
ஒய்யாரம்
விடிவெள்ளி விழித்தேன்
உலகில் உருவான
ஒய்யாரம் ரசித்தேன்
துலங்கிடும் பேரழகில்
துள்ளிதுள்ளித் திரிந்தேன்
நலங்கிட்டு நானுனை
நாயகியாய் கொண்டேன்
மஞ்சத்தில் மயக்கம்
மன்னனை நினைத்தா
அஞ்சனமும் அகிலும்
அத்தானை அணைப்பதற்கா
கெஞ்சிக் கொஞ்ச
கொட்டிப் பேசுவியோ
தஞ்சமென நெஞ்சை
தந்தபின் மிஞ்சுவியோ
வெற்றிலைத் தரித்து
வேள்வியில் விற்பன்னராய்
சிற்றிடையில் கற்றிட
சிறகொன்று முளைத்திட
முற்றிலும் முகிழ்ந்து
முடிவின்றி தொடர்ந்திட
இற்றிசையில் இற்கிழத்தி
ஈந்தது பேரின்பமே
ஞாயிறு, பிப்ரவரி 15
கண்ணசைவு
கண்ணசைவில் கதைகளா
நேற்றிருந்து நித்திரையில்
நிலவொளியாய் ஆடுதியே
பூத்திருக்கும் ஆசைகளை
பூவிழியில் சொல்லுதியே
யாத்திரையின் வழிதனை
யாழினில் இசைக்குறியே
விழியரங்க வித்தைக்கு
வியாக்கானம் எழுதுகிறேன்
அழியாத அக்காட்சி
அக்மார்க்காய் பதிகின்றது
எழிழ்மிகு இமைகளும்
எனையே தாக்குகிறது
மொழியற்ற முகவரிகளில்
மொக்குகள் மலர்கிறது
காதலைக் கற்பிக்கும்
கருவிழி நாடகங்கள்
நாதனை நானாவிதம்
நாள்தோறும் நோக்கும்ரதம்
மேதமை கருவிழிகள்
மேதினியில் மோதும்வரை
வேதிவினை மாற்றங்கள்
வேந்தனிடம் விளைந்திடுமே
அ. வேல்முருகன்
சனி, பிப்ரவரி 14
காதலின் திருநாள்
காதலால் கனிந்துருக
கண்டநாள் இந்நாளோ?
ஆதலால் அகிலமே
ஆராதிக்க அனுமதியோ?
தூதால் துணையவள்
துணிந்திங்கு வருவாளா
ஈதலால் ஈருடல்
இசைந்திங்கு சேருமோ
ஏந்திழை ஏனையாளும்
ஏகாதி பதியாகிட
வேந்தன் வேலவன்
வேட்கையை வெளியிட
காந்தக் கண்ணழகு
கண்ணிமைக்க மறக்குமே
தீந்தமிழ் தேன்குரல்
தீண்டுமே மனதை
உன்னதமே உனதன்பு
உவரெனை உருமாற்றவே
என்னாளும் எனதன்பு
எனையாளும் தேவிக்கே
நன்னாளாம் நானவளை
நாழிகையும் பிரியாததே
இன்னலாம் இனியவளுக்கு
இவனின்றி இயங்குவதே
காற்றும் கடலலையும்
கணப்பொழுதில் மாறும்
நேற்றும் என்றென்றும்
நேசமது மாறாது
போற்றும் பொன்மானை
பொழுதும் பிரியாது
ஏற்றமுடன் இணைந்தே
எந்நாளும் வாழ்ந்திடவே
வெள்ளி, பிப்ரவரி 6
இதுவொரு தாலாட்டு
ஆரடிச்சா கண்மணிய
அமெரிக்கா தானடிச்சதோ
அதிபரையும் கடத்தியதோ
எப்ஸ்டீன் கோப்புகளில்
யார்யாரோ ....
ஏகப்பட்ட படம் காட்டி
இந்தியாவை கொள்ளையிடுவாரோ
ஈரானில் கலகமோ
சிரியா உதவுமோ
அறியலையே என் கண்மணி
அமைதி திரும்ப கண்ணுறங்கு
இஸ்ரேல் குண்டுமழை
இடைவிடாது பொழியுமோ
பாலஸ்தீன குழந்தைகள்
பள்ளிக்கூடம்தான் போவாரோ
பாரெல்லாம் உறங்குது
படைகளோடு சீனா வந்தாலும்
பாரதம்போல கண்ணுறங்கு
உக்ரேனில் நேட்டோவும்
ரூஷ்யாவின் புதினும்
ஓடிப்பிடித்து விளையாட
ஒய்யார நடைநடக்குது சீனா
கண்ணுறங்கு கண்ணுறங்கு
என் கண்மணியே கண்ணுறங்கு
ஆரோரோ ஆரிரரோ
கீரின்லாந்தோ
ஐஸ்லாந்தோ
வாங்கித் தாறேன்
வாய்மூடி கண்ணுறங்கு
பாகிஸ்தான் எதிரியென
இந்தியாவின்
பம்மாத்து கதைகேட்டு
கண்ணுறங்கு கண்ணே
கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணைய
காசுக்கு ரெண்டு
வாங்கித் தாரேன் கண்ணுறங்கு
குடிக்க பெப்சி கோக்கு
நடக்க அடிடாசு
உதட்டுச் சாயம் ரெவ்லான்
உட்கொள்ள கெண்டகி சிக்கன்
உனக்கேதான் கண்ணுறங்கு
அ. வேல்முருகன்
கண்மூடி உனை....
நித்தமும் ஆசைதான்
ஏழுலகம் தாண்டி
எனைத் தவிக்கவிட்டு
எந்நேரமும் நினைவுகளோடு
ஆகாசப் பயணத்தால்
அன்பேயுனை
அருகிருந்து காணலாம்
ஆயினும்
கண்ணிரண்டை மூடி
கண்ணாளா வாவென்றால்
கணப்பொழுதில் வந்துவிடுவாய்
ஆங்கே..
என்னிதய துடிப்பு
ஏழிசை மீட்டுவதாய்
எகத்தாளம் செய்வாய்
அந்த அன்பிலே
ஆசுவாசப் படுத்திக் கொண்டு
ஆனந்தமாய்தான் இருக்கிறேன்
ஆக
கண்விழித்திருப்பதை விட
கண்மூடி உனை காண்பதிலே
காலங்கள் உருண்டோடுதடா
புதன், பிப்ரவரி 4
மெய்யும் அறிவும்
உள்ளபடி ஏற்காது
உடன்படுவ தில்லையென
உறுதியான முடிவுகள்
தடாபொடா சட்டங்கள்
தடாலென மாறிடும்
அடடா அற்புதமென
அனுமதி அளித்திடும்
தேகத்தின் விதிகள்
திருத்தங்கள் செய்திடும்
மோகத்தின் சுருதிகள்
மோகினியாய் பாய்ந்திடும்
யோகமே தகுதியாகி
யௌவனம் மகிழ்திட
சாகசப் பகுதியில்
தடுத்தாட் கொள்வதும்
தட்சணைகள் அளிப்பதும்
கொடுப்பதும் எடுப்பதும்
கொள்கை என்றல்ல
தொடுதலின் கொதிநிலைத்
தொண்டினை ஏற்பதும்
விட்டுக் கொடுக்க
வித்தைகள் கற்பதும்
தோகை யவளிடம் தோற்று
தேவையை அறிந்திடு
பூவையின் மென்மை - தென்றலின்
புழுதியற்ற புயலாகும்
ஆகையால் உன்னில் ஆனந்தம்
ஆர்ப்பரித்து பெருகும்
சனி, ஜனவரி 31
மாதவி
கண்ணகி யெனில்
காதற் கிழத்தி
காப்பிய மாதவி?!!
அரங்கேற்றம் கோவலன்
அவர்கள்மகள் மணிமேகலை
அத்துடன் துறவறம்
அக்மார்க் இல்லையோ
கலைகளில் சிறந்தாலும்
கரிகாலன் வாழ்த்தினாலும்
கற்பின் கோட்பாடுகள்
காயப் படுத்துவதேன்
கானல் வரிகளா
கற்பை எடைபோடும்
கட்டியவள் தாண்டினாலும்
கறைப் படுத்தும்
கணிகையர் குலமென
கட்டுரைத்து கன்னியவள்
கட்டிலுக்கு மட்டுமேயென
காற்றுவாக்கில் கற்பித்தே
பொன்னுக்கு விலைகொடுத்து
பெண்ணை வாங்கியதாலா
பொற்கொல்லன் சதிபோல
பெண்ணை வகைசெய்தீர்
பொற்றாமரை தேவி
பொறியில் சிக்காதெனில்
புகார் நகரையே
புறம்பேசும் கூட்டங்கள்
இவளுக்கு இலக்கணம்
இதுவென இகத்தில்
இயம்பியது இதுகாறும்
இம்மானுடம் தானே
அறவண அடிகள்
ஆதரித்தாலும் - உதய
குமாரன்கள் இருப்பதால்
கணிகைதானோ என்றென்றும்
விரும்பிய வாழ்வு
ஏறிட்டுப் பார்தேனன்று
தினகரன் நானென்று
தீட்சை அளித்துவிட்டு
வனப்பில்லை யென்றே
வனவாசம் அளித்திட
மௌனமே மருந்தென
மாவுலகில் வாழ்கிறேன்
ஊடலென ஊரெல்லாம்
ஊகிக்காது அறிந்தாலும்
காடெல்லாம் வாசமுண்டு
காத்திருப்போம் என்றிருந்தேன்
நாடகமென நானறிய
நாதியற்ற மன்னனாய்
வேடங்களில் இழந்தது
வேங்கிநாடு மல்லவே
அணங்கென ஆசையோ
அவசியமென கருதியோ
இணங்கிச் சென்றேனோ
இடறிதான் வீழ்ந்தேனோ
கணக்கு வழக்கென்று
காதலில் வந்தபின்
பிணக்கு என்பதும்
பிறைபோல தானே
எண்ண ஓட்டங்கள்
ஏனோ ஒத்திருக்கல
உண்ணோக்கம் எதுவென
உள்ளபடி விளங்கல
எண்ணீர் தெளித்து
எழுப்பிய கல்லறையில்
விண்ணப்ப மெழுதாதே
விரும்பியபடி வாழடி
செவ்வாய், ஜனவரி 20
என் கேள்விக்கென்ன பதில்
செப்புவதா வேண்டாமா
சிக்கலாகுமோ என
சிந்தித்துக் கொண்டிருக்க
தாமதமேன் தலைவா
தசைசால் மானுடா
தக்கதொரு பதிலுக்கா
தவிப்பதேன் மணிகணக்கா
கேள்வியா?! எனக்கா?!
கேள்வி கொள்ள
கேட்டது எனைதானென்றிட
கேடயத்தை தேடினேன்
பதற்றத்தை தூண்டியது
பாவையின் கேள்வி
பதிலேதும் உரைக்காது
பார்வையால் திரையிட்டு
நோக்கினேன் அவளை
நோக்கம் எதுவோயென
நோட்ட மிட்டேன்
நொந்து கொண்டேன்
உனக்கொரு பதில்
உடனே சொல்லிட
உள்ளம் நினைத்தாலும்
உச்சரிப்பில் பிழையானால்
புரிந்தது புரியாதது
புரளி, புரட்டு
புத்திக்கு எட்டவில்லை
புலம்பிக் கொண்டேன்
எனக்கான எலிப்பொறியோ?
ஏதேனும் உளருமுன்
எதற்கும் ஒருமுறை
என்ன கேள்வியென
பலமுறைச் சொல்லி
பலபதில் தேடி
பக்குமான பதிலெனில்
பாதக சாதகங்களை
சிருங்கார வார்த்தைகளில்
சிலாகித்து உரைத்திட
சிந்தித்து..... சிந்தித்து....
சிக்கினால் வழியோசித்து
சிறந்த பதிலை
செப்புவதா வேண்டாமா
சிக்கலாகுமோ என
சிந்தித்துக் கொண்டே ............
ஞாயிறு, டிசம்பர் 7
திரளழகு
திரளழகை தீபவொளி
திருத்தி எழுதிட
முரணேது முந்தானை
முகமன் கூறிட
மரகதவுடல் மச்சானை
மகிழ்ச்சியில் ஆழ்திட
சரசங்கள் பயின்றிட
சரணடை பேரழகே
நின்னசைவின் எழிலில்
நிலவும் நாணுதடி
பின்னலிடை, பின்னழகு
பிதற்ற விட்டதடி
என்னுறக்கம் கெடுத்தே
ஏகாந்தம் கொல்லுதடி
மன்னவனின் மடிசாய்திட
மாயங்கள் நிகழுமடி
இழுத்துப் பிடித்து
இமயமலை யாக்கினாலும்
தழுவும் தென்றலின்றி
தேகம் சிலிர்காதடி
கொழுநன் குதுகலிக்க
கொடுத்தால் சுகங்களடி
செழுமையான காதல்
சேர்ந்திருக்கும் வாழ்வுதானடி
அ. வேல்முருகன்
வெள்ளி, டிசம்பர் 5
பாரத் மாதா கீ ஜெய்
சிக்கந்தர் தர்கா தூணில்
சிவனின் மகனுக்குத் தீபம்
சி.ஐ.எஸ்.எப் சகிதம்
சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி
உளரல்கள் சட்டமாக
ஊர் வேடிக்கை பார்க்க
உடைந்தன மண்டைகள்
உதவாக்கரை மன்றங்களால்
கயவாளிகள் என்றிருக்க
காவிகளுக்கு கட்டளையிடுவது
கருப்பு அங்கிகளா
சட்டங்கள் வளைவதால்
சாக்கடைகளின் நாற்றத்தை
சுத்திகரிக்க வேண்டியது
சமூகம்தான் சர்க்காரல்ல
பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரித்தானிய அடிவருடிகள்
பி.என்.எஸ் ஏவினாலும்
பின்வாங்காதே சமூகமே
அரசியல் சாசன பதவியில்
ஆடும் ஆட்டத்தை
ஆண்டவன் அறியாததால்
ஆரியம் வாழ்ந்திடுமோ
பொய்பொய்யா கதைகளை
பொதுவெளியில் கதைத்தாலும்
பொறிதனில் சிக்கி
பொய்மானின் பின் செல்லாதே
இராமனல்ல ஏமாற
சேவற்கொடிச் சேயோனின்
செந்தமிழ் உறவல்லவா
செகத்தினைக் காத்திடு
அ. வேல்முருகன்
சொக்கப்பனை
குன்றிருக்கு மிடமெல்லாம்
குமரனைத் தேடாத சுவாமி
குத்துக்கல்லின் தீபமேற்ற
குபீரென வருவானா
மச்சு பிச்சுவில்
மூச்சு வாங்குவதால்
முருகன் முடங்கினானா
திருப்பரங்குன்றத்தில்
ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில்
அரோகரா ஒலிக்க
இமயமலையில் எதிரொலித்திட
மதுரையம்பதியில் உத்திரவுகளா
விந்திய சாத்பூர மலைகளில்
விடிய விடிய தேடினாலும்
கார்த்திகேயேன்
கண்ணில் தெரிய மாட்டானா
ஏற்காடு, ஏலகிரியில்
எதிர்பட மாட்டாரா
ஏரவாடா சிறையில்
எவரேனும் அடைத்தார்களா
வயநாட்டில்
வாழாத தெய்வத்தை
மேகமலையில் தேடிட
தரிசனம் தருவானோ
சோதியா சொரூபமா தெரிவது
அப்பனா முருகனா
சாதி இந்து
சாமிநாத கூரய்யா
சொக்கப்பனைக் கொளுத்தி
சொக்கனை சோதியாய்
சோதித்த மக்கள்
மலையேறுவதில்லை
அக்கப்போர் அரஜாகம்
அதுவே தாரகமென
அயோதியாய் மாற்றிட
அணி திரண்டாலும்
ஆடு வெட்டத் தடையென்றால்
ஆர்பரித்தும்
கேடு கெட்டர்வர்கள் தீபமேற்ற
கோபத்தோடே எதிர்த்திடும் தமிழகம்
செவ்வாய், டிசம்பர் 2
சிறப்பு தீவிர திருத்தம் (S I R)
ஒட்டுறவு இந்நாட்டில் என்பதுவோ
நாட்டில் தேர்தல் நடப்பது
நயவஞ்சக அரசியலின் நாடகமோ
காட்டாட்சிக் கட்சிகளின் கரங்களை
கடவுளும் கண்மூடி ஆதரிக்குமோ
கூட்டாட்சி தத்துவங்கள் மடியுமோ
கூழைக் கும்பிடே ஜனநாயகமோ
நோய்வாய் பட்ட குடியரசியல்
நோட்டாவால் நிலமை மாறுமா
மாய்ந்து மாய்ந்து போட்டவோட்டு
மக்களாட்சியை கொண்டு வருமா
வாய்ப்பு மொன்றும் இல்லை
வாக்குத் திருட்டை தடுப்பதற்கே
ஆய்ந்து பாருங்கள் மக்களே
ஆட்சி ஆதிகாரம் அதானிக்கே
குடிமகனென குறிப்பெடுத்து போடுமோட்டு
குறியிடும் மையோடு மறையுமோ
அடிப்படை உரிமையென அணிமாறும்
அவ்வுறுப்பினன் பதவிதனைப் பறித்தால்
துடிப்பாகுமோ ஜனநாயகம் - நாட்டில்
துவண்ட வளர்ச்சிகள் மலருமோ
கடினமென கண்காணாப் போனாலும்
கண்முன்னே புல்டோசர் வருமோ
ஓட்டைச் செலுத்தி உரிமையை
உலகிற்கு உணர்த்திய உத்தமர்களே
கட்சிகளை உடைத்து கணக்கை
கூட்டும் வித்தையில் உன்கடமை
வேட்டைக்குத் தகுந்த அணிகளில்
வெள்ளாட்டில் கறுப்பாட்டைத் தேடுவதா
கூட்டணியில் கொள்கை என்பது
கோட்டையில் கொள்ளை அடிக்கதானே
சாமியும் கோமியமும் சக்திமிக்க
சர்க்காரை அமைக்க உதவினாலும்
பூமியில் இவர்களாட்சி மலாந்திட
பூக்குழியில் இறங்கும் ஆணையர்கள்
தாமிரப் பட்டயத்தில் ஆளுநராய்
தமிழகத்தை ஆட்சிபுரியும் பேறுபெற
யாமிங்கு அளித்த ஓட்டு
யமனாய் ஏமக்கு வந்ததிங்கே
அ. வேல்முருகன்
ஜனநாயகத் தூண்கள்
நீங்கள் ஏற்பீரோ
சேதிகள் திரிக்கப்பட
சோர்ந்து இருப்பீரோ
பிரதிநிதிகள் விலைபோக
பேச்சற்றுப் போவீரோ
அரசமைப்பு நிறுவனங்கள்
அடிமையாக ஆமோதிப்பீரோ
தூண்கள் நான்கும்
தூக்கில் தொங்கட்டும்
மாண்புகள் மறைந்து
மானம் போகட்டும்
வீணென்று நினையாது
வினாக்காள் பிறக்கட்டும்
கூட்டோடு மாற்றிட
கூக்குரல் எழுப்புங்கள்
ஞாயிறு, நவம்பர் 30
காதலின் இராகங்கள்
வேதவாக் கல்ல
வேள்வியைத் தொடர
வேண்டுகோள் என்றே
மோகன இராகத்தில்
மௌனமாய் சுரங்களை
ஆனந்த பைரவியாக்கி
ஆவலைத் தூண்டினேன்
ஏகாந்த வேளையில்
எதிரிசையின் எதிரொலியில்
எதிர்பார்ப்பின் இராகங்கள்
எதுவென அறிகிறேன்
சேர்ந்திசையில் ஓத்திசைவு
சேட்டைகள் சங்கதிகள்
சிறுசிறு அலங்காரங்கள்
சிறப்பென அளிக்கிறேன்
அரோகணம் அவரோகணம்
அத்தனையும சஞ்சரித்து
அப்பாடா என்றே
ஆனந்தத்தில் திளைத்திருக்க
மோகனத்தில் முகிழ்ந்திருந்தவள்
விழித்தெழுந்து வேண்டுகிறாள்
கிழக்கு வெளுக்கும்வரை
கீர்த்தனைகள் பாடிட
மனநிலை அறிந்து
மச்சங்கள் ஆய்ந்து
சுரங்களின் சுரங்கங்களை
சுருதியில் தேடிட
கல்யாணி இராகத்தில்
கரகரப் பிரியாவை
கலந்து இசைத்திட
கண்ணாட்டி கண்ணயர்ந்தாள்
இந்நாட்டில் ஏதுவேண்டும்
என்னவள் எனைத்தூண்டி
ஏதோதோ இராகத்தை
எனையறிய வைத்தாளே….!!!!
சனி, நவம்பர் 15
ஆனந்த முத்தம்
ஆனந்தம் ஏதடி
எதிர்பாரா வேளையில்
எத்தனைச் சுகமடி
உதிரம் கொதிக்க
உதடுகள் துடிக்க
கதிகலங்கும் முத்தத்தை
கண்ணே வழங்கடி
வழங்கிட பெறுவது
வாடிக்கை என்றிருக்க
வழக்கொன்று தொடுத்து
வாய்தா கேட்பது
அழகல்ல என்றே
ஆட்சேபனை செய்கிறேன்
இழப்பெனக்கு என்பதால்
இழப்பீடும் கேட்கிறேன்
கோரிக்கை என்றாலும்
கொடுப்பது கடமையடி
ஓரிடம் உதடென்றால்
ஒவ்வொரு அங்கமும்
போரிடும் நிலையாகுது
பொழுதை கழிக்காதே
பீறிடும் ஆசைகளை
பிறைபோல மறைக்காதே
மறைத்திட மறுத்திட
மனமது மருகுது
திறைச்செலுத்த தினம்தினம்
தித்தித்து திகட்டுது
முறையான முத்தத்தில்
மூழ்கிட மூலதனமாகுது
நிறைவென நின்முத்தம்
நினைவில் நிலைக்குது
தாலி
பண்பாட்டின் சடங்கா? பாவையின் அங்கமா? எண்ணில்லா வடிவமா? எதற்கென்று தெரியுமா— பெண்ணினை அடிமையா, பேரண்டம் முழுமையா? கண்ணியாய் கைவிரலில்...
-
ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத க...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...
-
அச்சடிக்கும் இயந்திரத்தை அரசாங்கம் வைத்துக் கொண்டு அது ஏன்? வரிக்கு மேல வரிகளை போடுகிறது உழைத்துக் கிடைக்கும் ஊதியத்திற்கு உன்னிடம...
-
பன்மொழி புலமை பக்தனுக்கு உண்டா ஏழேழு உலகை இரட்சித்து காக்கும் பரமனுக்கும் உண்டா அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது ...
-
ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் "ஃபிடில்" வாசித்தது வரலாறு ஈரானோடு இஸ்ரேலும் பற்றி எரிய அமெரிக்க அதிபரால் இரத்த ஆறு ஓட...