அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, ஏப்ரல் 17

யார் உலகத் தலைவர்









மணி கணக்கில்
நாள் கணக்கில்
வாரக் கணக்கில்
கெடு வைக்கிறார்

நாளை முடிவதற்குள்
நாகரிகத் தொட்டில்
நிலப்பரப்பில் இல்லாது
நிர்மூலமாக்கப் படுமென்கிறார்

ஆதரிக்காத தலைவர்களை
ஆகட்டும், பார்க்கலாம்” என்கிறார்
ஆதரித்த மன்னர்களை
அரங்கத்தில் அசிங்கப்படுத்துகிறார்

சர்வதேச சட்டங்களை
கழிப்பறை காகிதமாக்குகிறார்
ஊரேச மமதையில்
ஒதுக்கித் தள்ளுகிறார்

அணுகுண்டு இருப்பதாய்
ஆலாபிக்கிறார்
ஹார்மேஸ் நீரிணை
அவருடையது என்கிறார்

"நேட்டோ" நாடுகள்
கூட்டில் இல்லையென்றவுடன்
"வீட்டோ" அதிகாரமிருந்தும்
வீரிட்டுப் புலம்புகிறார்

கப்பம் கட்டச் சொல்லி
கட்டுக்கதைகளைப் பரப்புகிறார்
எதிர்ப்பவர்களை
கற்காலத்திற்கு அழைக்கிறார்

சரிந்த சந்தையை
சரமாரி பொய்களால்
நிமிர்த்த முயன்று
நிலைகுலைந்து போகிறார்

பல "நாட்டிக்கல்“ தூரம் நின்று
பலமான குரல் எழுப்பி
பணியவில்லை என்றால்.......
பம்மாத்து செய்கிறார்

அவர்களோ, சரணடைவது
சைரஸ் வழிவந்தவர்களின்
சரித்திரத்தில் இல்லையென
வீர முழக்கமிடுகின்றனர்

அ.வேல்முருகன்


 

வெள்ளி, ஏப்ரல் 3

வரிக்கு மேல வரி.........















அச்சடிக்கும் இயந்திரத்தை
அரசாங்கம் வைத்துக் கொண்டு
அது ஏன்?
வரிக்கு மேல வரிகளை போடுகிறது

உழைத்துக் கிடைக்கும்
ஊதியத்திற்கு
உன்னிடம் கேட்பது
நேரடி வரியாம்

உண்டி வளர்க்க
உப்பு, புளி, மிளகாயோடு
உன் விருப்ப ஆடையணிய
மறைமுக வரியாம்

அலை அலையாய்
அகப்பட்டவனிடம் வாங்குவது
அரசாங்க விதியாம் – அந்த
கடவுளுக்கும் அதே கதியாம்

விலகிச் செல்ல
விழித்துக் கொண்டாலும்
விட்டில் பூச்சி நீ
விளங்கா அரசைக் கவனி

வசூலித்த வரியில்
வார்த்த சாலைக்கு
சுங்க வரியென (Toll)
கூசாமல் கேட்டிடும்

மகிழ்வூர்தி இலட்சமெனில்
பசுமை வரி, சாலை வரி
காப்பீடு, இதரச் செலவோடு
இருமடங்கு ஆகிடும்

பெட்ரோல், டீசலுக்கு
கலால் வரி – காரை
பேரிச்சம்பழத்திற்கு விற்றாலும்
சரக்கு சேவை வரி என்கிறான்

சேமிப்பின் வட்டிக்கு வரி
வசிக்கும் வீட்டிற்கு வரி
வழங்கும் மின்சாரத்திற்கு வரி
வளர்ப்பு பிராணிக்கும் வரி

சொத்து வாங்கினால்
பதிவு கட்டணம்
சொத்தை விற்றால்
இலாபத்திற்கு வரி கட்ட வேண்டும்

நிறுவனம் என்றால்
தொழில் வரியோடு
உரிமம், அனுமதி
சேவை வரியென நீளும்

காமதேனு நீ
வற்றாத மடியுனக்கு
வரிகள் கொட்டுமென
வாட்டுவது குடிமக்களை

அரசின்
அத்தனை வரிகளும்
அம்மக்களை கட்டுப்படுத்தவே
அதற்குதான் சட்டங்களே…!!!!


அ. வேல்முருகன்  







புதன், ஏப்ரல் 1

துபாய்



 











வாழ இயலாத
வரண்ட பாலைவனம்
வாரி வழங்கிய – எரி
வாயு, எண்ணெய்யால்

பூலோக சொர்கமென
புதிய புராணத்தை
பூஜிக்கத் தொடங்கையில்
பூகம்பம் நிகழ்ந்தது

பன்னாட்டு பணக்காரர்கள்
பாம் ஜுமைராக்களில்
புர்ஜ் கலீபாக்களில்
புரண்டு கொள்ள

தங்கத்தில் குடியுரிமை
தந்த மன்னர்
தப்பித்து அமெரிக்காவில்…
தன்னையே காத்துக் கொள்ள

குருக்ஷேத்திரப் போரில்
கௌரவம் என
பஹ்ரைனோடு துபாயும்
அமெரிக்காவை ஆதரிக்க

ஏவுகணைகள், ட்ரோன்களை
எதிர்கொள்ள இயலாத
அமீரகத்தை
அம்போவென விட்டுவிட்டு

தங்க குடியுரிமை
தகரமாய் கூட
தரத்தில் இல்லையென
பறந்து விட்டனர் அப்பாவிகள்

ஆம், அறுபது சதவீத
அந்த நாடோடிகள்
ஆயுள் முக்கியமென
அடுத்த சொர்க்கத்தைத் தேடிட

பன்னாட்டு வர்த்தகத்தின்
வணிகத் திருவிழாக்கள்
இணையில்லை என்றவர்கள்
எங்கோ மறைந்தனர்

வெறிச்சோடிய சாலைகள்
விமான நிலையங்கள்
ஒருவருமற்ற
உயரமான கட்டிடங்கள்

அனாதையாய்
ஆங்காங்கே நிற்கும்
உயர்விலை கார்கள்
செல்லப் பிராணிகள்

காரணம் யாதென்று
மேதினி அறிந்தாலும்
மேட்டிமை கொண்ட
மேற்குலகம் நீட்டிக்கும் போரை

அரசு இயந்திரங்கள்
உம்மென்றோ
ஆம்மென்றோ
உருப்படியாய் ஏதும் செய்யாது

மானுடத்தை காக்க
மக்கள் நாமே
போரை எதிர்த்து
போராடுவோம், வாருங்கள்


அ. வேல்முருகன்

சனி, மார்ச் 14

இன்று போய் நாளை வா









பொருளாதார தடைகளினால்
ஏற்கனவே
என்னால் கொல்லப்பட்டவர்கள்
போரில் பொருத முடியாதென்றா

எப்ஸ்டின் கோப்புகளுக்காக
இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு
என்னைத் தாக்குவதோ
எண்ணெய் வளங்களை கொள்ளையிடவோ

ஏவுகணைகளோடு
ஏராளாமான பொய்களோடு
ஒருமுறையல்ல எத்தனைமுறை
பிரம்மாஸ்திரத்தை ஏவினாலும்

இறையாண்மை கொண்ட
எந்நாடும் எதிர்க்கும்
இல்லாத நாடுகள்
அமெரிக்காவை நத்திப் பிழைக்கும்

பலவீனமான நேரத்தில்
பழித் தீர்க்காது
பலம்பெற்று வா என்பது
பாழும் கிணற்றில் வீழ்வதல்லவா

ஆக, அயோத்தி இராமன்
நிராயுதபாணி இராவணனை
பார்த்துரைத்த
கட்டுக்கதையல்ல இந்தப் போர்


அ. வேல்முருகன்




போரும் பொய்யும்









இரண்டு நாளில்
இருக்குமிடம் தெரியாது
ஈரான் அழிக்கப்படும்

அமைதியை நிலைநாட்ட
இரசாயன ஆயுதங்கள்
அடியோடு ஒழிக்கப்படும்

ஆயுதங்களை
அடியோடு ஓழித்து விட்டோம்
அடிபணிந்து விடுவார்கள்

உச்சத் தலைமையை
ஒழித்து விட்டோம்
திக்குத் தெரியாதிருக்கிறார்கள்

ஹார்மோஸ் நீரிணையில்
அச்சமின்றி செல்ல
ஆப்ரகாம் லிங்கன் கப்பல் வழிகாட்டும்

நேட்டோ நாடுகள்
நேசக் கரம் நீட்டுவார்கள்
நிம்மதியாய் இருங்கள்

பொறுத்திருங்கள்
பொருளாதாரத் தடைகளால்
போர் மட்டுப் படுத்தப்படும்

ஏவுகணைகளை இடைமறித்தோம்
ஏகப்பட்ட இழப்புகள்
யாருக்கு?

15 நாட்கள் கடந்து விட்டன
பதிலடி தொடர்கிறது
இஸ்ரவேலர்களை இறைவன்
.........காப்பாற்றுவானா?


அ. வேல்முருகன்

சனி, பிப்ரவரி 21

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

 









தேனாறும் பாலாறும்
தேர்தல் வந்தா ஓடுமா
ஏனோ தானோ
என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா
தானமா தந்ததற்கு
தருவது உனதுபொன் ஓட்டா
மான மில்லா
மாறும் கட்சியில் கூட்டா

தர்ம ராசா
தந்த இலவச மெல்லாம்
வர்க பேதத்தில்
வரிகளா வாரி அள்ளியதே
மர்ம தேர்தலில்
மாறிமாறி ஓட்டுப் போடு
நர்தன மாடு
நரகலில் நல்லதை தேடு

இரட்டை என்ஜின்
இறகு முளைத்து வருமா
புரட்டும் பொய்யும்
புடம்போட மெய்யாய் மாறுமா
குரட்டை விடாது
குளறுபடி எங்கென கண்டுபிடி
அரற்றாது ஆனவரை
அழுகலை அடியோடு வெட்டியெறி

ஆதார் இருந்தாலும்
ஆறேழு மென்பொருள் கண்டாலும்
பேதங்கள் இந்துக்களில்
பேருண்மை என்றே உரைப்பர்
ஆதரவா கையூட்டு
அவர்பேரில் பட்டா மாறுமென்பர்
ஏதும் மாறாதெனில்
எதற்கிந்த உரிமை யோசியுங்கள்

அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 6

இதுவொரு தாலாட்டு
















ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா கண்மணிய
அமெரிக்கா தானடிச்சதோ
அதிபரையும் கடத்தியதோ

எப்ஸ்டீன் கோப்புகளில்
யார்யாரோ ....
ஏகப்பட்ட படம் காட்டி
இந்தியாவை கொள்ளையிடுவாரோ

ஈரானில் கலகமோ
சிரியா உதவுமோ
அறியலையே என் கண்மணி
அமைதி திரும்ப கண்ணுறங்கு

இஸ்ரேல் குண்டுமழை
இடைவிடாது பொழியுமோ
பாலஸ்தீன குழந்தைகள்
பள்ளிக்கூடம்தான் போவாரோ

பதைபதைப்பு ஏதுமின்றி
பாரெல்லாம் உறங்குது
படைகளோடு சீனா வந்தாலும்
பாரதம்போல கண்ணுறங்கு

உக்ரேனில் நேட்டோவும்
ரூஷ்யாவின் புதினும்
ஓடிப்பிடித்து விளையாட
ஒய்யார நடைநடக்குது சீனா

கண்ணுறங்கு கண்ணுறங்கு
என் கண்மணியே கண்ணுறங்கு
ஆரோரோ ஆரிரரோ

கீரின்லாந்தோ
ஐஸ்லாந்தோ
வாங்கித் தாறேன்
வாய்மூடி கண்ணுறங்கு

பாகிஸ்தான் எதிரியென
இந்தியாவின்
பம்மாத்து கதைகேட்டு
கண்ணுறங்கு கண்ணே

கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணைய
காசுக்கு ரெண்டு
வாங்கித் தாரேன் கண்ணுறங்கு

குடிக்க பெப்சி கோக்கு
நடக்க அடிடாசு
உதட்டுச் சாயம் ரெவ்லான்
உட்கொள்ள கெண்டகி சிக்கன்
உனக்கேதான் கண்ணுறங்கு


அ. வேல்முருகன்


வெள்ளி, டிசம்பர் 5

பாரத் மாதா கீ ஜெய்

 


 










சிக்கந்தர் தர்கா தூணில்
சிவனின் மகனுக்குத் தீபம்
சி.ஐ.எஸ்.எப் சகிதம்
சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி

உளரல்கள் சட்டமாக
ஊர் வேடிக்கை பார்க்க
உடைந்தன மண்டைகள்
உதவாக்கரை மன்றங்களால்

கலவரத்தை தூண்டுவது
கயவாளிகள் என்றிருக்க
காவிகளுக்கு கட்டளையிடுவது
கருப்பு அங்கிகளா

சட்டங்கள் வளைவதால்
சாக்கடைகளின் நாற்றத்தை
சுத்திகரிக்க வேண்டியது
சமூகம்தான் சர்க்காரல்ல

பிரித்தாளும் சூழ்ச்சியில்
பிரித்தானிய அடிவருடிகள்
பி.என்.எஸ் ஏவினாலும்
பின்வாங்காதே சமூகமே

அரசியல் சாசன பதவியில்
ஆடும் ஆட்டத்தை
ஆண்டவன் அறியாததால்
ஆரியம் வாழ்ந்திடுமோ

பொய்பொய்யா கதைகளை
பொதுவெளியில் கதைத்தாலும்
பொறிதனில் சிக்கி
பொய்மானின் பின் செல்லாதே

இராமனல்ல ஏமாற
சேவற்கொடிச் சேயோனின்
செந்தமிழ் உறவல்லவா
செகத்தினைக் காத்திடு

அ. வேல்முருகன்

சொக்கப்பனை









குன்றிருக்கு மிடமெல்லாம்
குமரனைத் தேடாத சுவாமி
குத்துக்கல்லின் தீபமேற்ற
குபீரென வருவானா

மச்சு பிச்சுவில்
மூச்சு வாங்குவதால்
முருகன் முடங்கினானா
திருப்பரங்குன்றத்தில்

ஆல்ப்ஸ் மலைச் சிகரத்தில்
அரோகரா ஒலிக்க
இமயமலையில் எதிரொலித்திட
மதுரையம்பதியில் உத்திரவுகளா

விந்திய சாத்பூர மலைகளில்
விடிய விடிய தேடினாலும்
கார்த்திகேயேன்
கண்ணில் தெரிய மாட்டானா

ஏற்காடு, ஏலகிரியில்
எதிர்பட மாட்டாரா
ஏரவாடா சிறையில்
எவரேனும் அடைத்தார்களா

வயநாட்டில்
வாழாத தெய்வத்தை
மேகமலையில் தேடிட
தரிசனம் தருவானோ

சோதியா சொரூபமா தெரிவது
அப்பனா முருகனா
சாதி இந்து
சாமிநாத கூரய்யா

சொக்கப்பனைக் கொளுத்தி
சொக்கனை சோதியாய்
சோதித்த மக்கள்
மலையேறுவதில்லை

அக்கப்போர் அரஜாகம்
அதுவே தாரகமென
அயோதியாய் மாற்றிட
அணி திரண்டாலும்

ஆடு வெட்டத் தடையென்றால்
ஆர்பரித்தும்
கேடு கெட்டர்வர்கள் தீபமேற்ற
கோபத்தோடே எதிர்த்திடும் தமிழகம்

அ. வேல்முருகன்

செவ்வாய், டிசம்பர் 2

சிறப்பு தீவிர திருத்தம் (S I R)

 














ஓட்டுப் போட்டு ஆவதென்ன
ஒட்டுறவு இந்நாட்டில் என்பதுவோ
நாட்டில் தேர்தல் நடப்பது
நயவஞ்சக அரசியலின் நாடகமோ
காட்டாட்சிக் கட்சிகளின் கரங்களை
கடவுளும் கண்மூடி ஆதரிக்குமோ
கூட்டாட்சி தத்துவங்கள் மடியுமோ
கூழைக் கும்பிடே ஜனநாயகமோ

நோய்வாய் பட்ட குடியரசியல்
நோட்டாவால் நிலமை மாறுமா
மாய்ந்து மாய்ந்து போட்டவோட்டு
மக்களாட்சியை கொண்டு வருமா
வாய்ப்பு மொன்றும் இல்லை
வாக்குத் திருட்டை தடுப்பதற்கே
ஆய்ந்து பாருங்கள் மக்களே
ஆட்சி ஆதிகாரம் அதானிக்கே

குடிமகனென குறிப்பெடுத்து போடுமோட்டு
குறியிடும் மையோடு மறையுமோ
அடிப்படை உரிமையென அணிமாறும்
அவ்வுறுப்பினன் பதவிதனைப் பறித்தால்
துடிப்பாகுமோ ஜனநாயகம் - நாட்டில்
துவண்ட வளர்ச்சிகள் மலருமோ
கடினமென கண்காணாப் போனாலும்
கண்முன்னே புல்டோசர் வருமோ

ஓட்டைச் செலுத்தி உரிமையை
உலகிற்கு உணர்த்திய உத்தமர்களே
கட்சிகளை உடைத்து கணக்கை
கூட்டும் வித்தையில் உன்கடமை
வேட்டைக்குத் தகுந்த அணிகளில்
வெள்ளாட்டில் கறுப்பாட்டைத் தேடுவதா
கூட்டணியில் கொள்கை என்பது
கோட்டையில் கொள்ளை அடிக்கதானே

சாமியும் கோமியமும் சக்திமிக்க
சர்க்காரை அமைக்க உதவினாலும்
பூமியில் இவர்களாட்சி மலாந்திட
பூக்குழியில் இறங்கும் ஆணையர்கள்
தாமிரப் பட்டயத்தில் ஆளுநராய்
தமிழகத்தை ஆட்சிபுரியும் பேறுபெற
யாமிங்கு அளித்த ஓட்டு
யமனாய் ஏமக்கு வந்ததிங்கே


அ. வேல்முருகன்

ஜனநாயகத் தூண்கள்

 













நீதிகள் விற்கப்பட
நீங்கள் ஏற்பீரோ
சேதிகள் திரிக்கப்பட
சோர்ந்து இருப்பீரோ
பிரதிநிதிகள் விலைபோக
பேச்சற்றுப் போவீரோ
அரசமைப்பு நிறுவனங்கள்
அடிமையாக ஆமோதிப்பீரோ

தூண்கள் நான்கும்
தூக்கில் தொங்கட்டும்
மாண்புகள் மறைந்து
மானம் போகட்டும்
வீணென்று நினையாது
வினாக்காள் பிறக்கட்டும்
கூட்டோடு மாற்றிட
கூக்குரல் எழுப்புங்கள்


அ. வேல்முருகன்

வியாழன், அக்டோபர் 9

H1B










H₂O
HbA1c
இதுபோல
H1B இருக்குமோ

கடவுச் சீட்டு அல்லாது
கனவு தேசத்தில் நுழைய
அடிமை ..... அல்ல அல்ல
அனுமதிச் சீட்டாம்

அறிவாளிகளுக்கென
அந்நாளில் வடிவமைத்ததை
அடிமைகளுக்காகவென
மாற்றியமைத்தவர்கள் யார்?

டி. சி. எஸ்., எச். சி. எல்,
இன்போசிஸ், விப்ரோ
இன்னும் சில
மென்பொருள் விற்பன்னர்கள்

2000-3000 டாலருக்கு
சல்லிசாக கிடைக்கும்
சரக்கை வேண்டாமென
ட்ரெம்ப் உரைப்பதேன்

வளரும் இந்தியாவின்
வனப்பைக் குறைக்கவா
வாழும் அமெரிக்கனின்
வாழ்வைச் சிறப்பிக்கவா

ஒராண்டு உழைப்பை
60000-80000 டாலருக்கு
இறக்குமதி செய்ய - கூடுதலாக
90000 டாலரென்றால்

"குய்யோ முய்யோ" வென
கூவாது
"கப்சிப்" என்றிருப்பது
"கார்ப்ரேட் தந்திரமோ"

வந்தேறிகளின் தேசத்தில்
வாழ்வில்லை என்பதால்
வயிறெறிந்தவர்கள்
இருக்கதான் செய்தனர்

அமெரிக்காவை வளப்படுத்தவா
அவதார மெடுத்தாய்
அரிகரன் இல்லையென்றாலும்
அவனவன் தேசம் வளரும்தானே

 

அ. வேல்முருகன்

திங்கள், ஜூலை 7

அரோகரா...................









சங்கிகளுக்கு
சளைத்தவர்களில்லை என
பழனியில் பட்டம் பெற்றவர்கள்
பதவிகாலம் முடிவடைவதால்

பதினாறு ஆண்டுகள் கழித்து
பக்தக் கோடிகளை
பரவசப் படுத்தப்
பரபரப்பாய் திருச்செந்தூரில்

அரோகரா...................
அவனென்னச் சொல்வது
அறநிலையத் துறை - அதிகாரம்
அடியேனிடமிருக்க

கோடிகளைப் புரளவிட்டு
கொள்கை வெங்காயத்தை
கொற்றவன் புறந்தள்ளி
கோஷத்தை மாற்றினான்

புனித நீரைத் தெளித்து
பாவப் பட்ட மக்களை
இரட்சிப்பதன்றோ ஆட்சியாளர்களின்
பகுத்தறிவு

அறுபடையில்
முதலாம் படை வீட்டை
முருக பக்தர்கள்
முற்றுகை யிட்டதால்

இரண்டாம் படைக்கு
இன்று குடமுழுக்கு
மற்றபடை வீட்டில்
மசூதியில்லை அவர்களுக்கு

குடமுழுக்கு
யாகசாலைகள்
தடங்கலின்றி ஆட்சியைத்
தக்க வைக்குமோ

பொற்றாமரைக் குளங்களும்
ஆறுகால பூஜையும்
ஆழித் தேரோட்டமும்
பொற்காலமென எழுதிட

திராவிட மாடலில்
இறங்காத விலைவாசியை
புறந்தள்ளி பம்மாத்தாய்
குமரனுக்கு அரோகரா .............


                                 அ. வேல்முருகன்

செவ்வாய், ஏப்ரல் 8

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்


 









கேலிக் கூத்துக்கள்
காலிப் பெருங்காயமாச்சு
புலிச் சிங்கமில்லை
மலிவான மனிதனென்றே

உச்ச நீதிமன்றம்
எச்சரித்து விட்டப் பின்னும்
எச்சமாக ஏனின்னும்
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாய்

காவிச் சாயத்தில்
கல்வியை மாற்ற
கூவிக் கொண்டிருந்த
ஆர் என் இரவிக்கு

அரசியலமைப்புச் சட்டம்
அறைந்தே சொன்னது
ஆராய்ந்து கொண்டிருக்க
ஆகமமல்ல - மசோதாக்கள்

ஏற்புடையதில்லையெனில்
எடுத்தியம்பு முப்பது நாட்களில்
ஏவலாளிதான் நீயெனில்
என்னவென கேட்டுச்சொல்

வரையறைதனை வழங்கியதால்
வல்லூறுகளின் மூக்குடைந்தது
திரைமறைவு நாடகங்கள்
தெருவுக்கு வந்தது

திராவிடத் திருநாட்டில்
திரவியம் தேடி வந்தவர்கள்
ஆரியம் பயிற்றுவித்தால்
சூரியன் பகுத்தறிவைப் போதிக்கும்

வள்ளுவரோடு
வள்ளலாரையும் வைகுந்தரைவும்
வலிந்து வருணாசிரமத்திற்குள்
வரையறுத்த வஞ்சகத்தையும்

வெல்லும் தமிழ்நாடு
சொல்லும் சூத்திரங்கள்
எல்லா மாநிலத்திற்குமென
துல்லியமானது பாரடா

                                                அ. வேல்முருகன்


வெள்ளி, அக்டோபர் 4

வெற்றிக் கழகம்

















கூத்துக் கட்டியவன்
குறைகளை களைவதாய்
கூட்டத்திடையே சூளுரைத்தான்

வசனங்கள் வசீகரிக்க
விண்ணதிர கைத்தட்டல்
மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல

கனவு வளர்த்தான்
கறுப்பை செலவளித்தான்
காசுக்கு கூட்டம் சேர்ந்தது

பலம் வாய்ந்தவனென
பத்திரிக்கைகள் புல்லரித்தன
பகற்கனவு தொடர்கதையானது

புதிய வரவாய்
வெற்றிக் கழகம்
போற்றிப் பாடுமா தமிழகம்

அரிதாரங்களாய்
அவையடக்கம் அறிந்து
அமைதி காத்தவர்கள்

புயலாக வருவதாய்
புழுதியை கிளப்ப
புலிகள் உறுமுகின்றன

மக்களுக்கு
தையல் இயந்திரமும்
தரை டிக்கெட்டும் கொடுத்த

வள்ளல்
ஊழல் பெருச்சாளிகளிடம்
ஒரு சீட்டுக்கு மண்டியிடுவாரா?

கழகங்களில் ஒன்றாய்
கடைச் சரக்கை விற்க
கபட நாடகம் நடத்துவாரா?

ஜோசப்பின் தேசமல்ல
என்றபோது
ஓசன்னா என முனுமுனுக்காதவனா

உழைக்கும்
உங்களை இரட்சிக்க
ஓடோடி வருவான்

ஆட்சி அதிகாரம்
அன்னமிடும்
அட்சய பாத்திரமா

அவர்கள் சொத்தை
நூறாயிரம் மடங்காய்
மாற்றும் தந்திரமா

என்ன செய்வான்
எப்படிச் செய்வான்
ஏதாவது சொன்னானா?

மக்கள் சேவை
மகுடம் தரித்த
தொழிலாக மாறியதாலும்

கொள்ளையடித்தாலும்
குற்றமில்லை என்று
நீதியரசர்கள் தீர்ப்பெழுதுவதாலும்

வெற்றுக் கூச்சலோடு
வெற்றிக் கழகமென வருகுது
விழிப்பாயிரு தமிழா…

புதன், ஏப்ரல் 17

தேர்தல் 2024










நாட்டின் வளங்களை
நாலு பேருக்கு விற்க
நாடி வருகிறார்கள்
நாள் 19 ஏப்ரல் 2024

பத்தல பத்தல
பத்தாண்டுகள் என்றே
பகற்கனவோடு வருபவனை
பாராள அனுமதிப்பாயா?

அக்மார்க் இந்துக்கள்
ஆட்சிக் கட்டிலை
அயோத்தி இராமனிடம் கேட்காது
அர்பன் நக்சல்களிடம் கேட்பதேன்

பொற்கால ஆட்சியாளர்கள்
பொய்மானைத் தேடி
சரயு நதிக்கரைத் துறந்து
இராவண தேசம் வருவதேன்

கோயபல்ஸ் கொள்கை
பொய்களை உண்மையாக்குவதில்லை
உண்மையாய் இருக்குமோ என
உன் உள்ளுணர்வைத் தூண்டுவது

வாக்குறுதிகள்
வெற்றுக் கூச்சல்கள்
நிறைவேற்ற அவர்கள்
மக்களில் ஒருவரல்ல

மாட்சிமை தங்கிய
மன்னராய் வாழ்பவர்கள்
முடிச் சூட்டியப் பின்
மாக்களாய் உனை நடத்துபவர்கள்

பக்தியில் பசுவைத் தொழவும்
புத்தியில் அக்லக்கைக் கொல்லவும்
சிந்தனை உனக்கிருந்தால்
நந்தனை எரித்த வாரிசு நீயே

சனநாயகத் தூண்கள்
வீழ்ந்து கிடப்பதை
எழுப்புமோ உன்வாக்கு
சவக்குழியைதான் ஆழமாக்கும்

நோட்டாவைப் பலப்படுத்திட
நோஞ்சான் சனநாயகம்
விரீட்டெழுந்து
விடியலைத் தருமா?

பதிவாகாத வாக்கும்
பயனற்ற நோட்டாவும்
பெரும்பான்மை என்றானால்
பாசிசமே வெல்லும்

மின்சார விளக்கணைத்து
மெழுவர்த்தி ஏற்றியவர்களே
கைத்தட்டி கொரானாவை
கொல்ல வழிகாட்டியவர்களிடம்

மொழியொரு கருவி
முழக்கமிடும் இனத்தின் அடையாளம்
ஓட்டுக்கு முனகும் உனக்கோ
அவ்வுணர்வு புரியாதெனச் சொல்

வாங்கும் வரிகளை
வாரிவழங்கும் வள்ளலாய்
வடிவமைப்பட்ட கதைகள்
வந்த பெருமழையில் கரைந்தன

ஊழலற்ற உத்தமர் பட்டம்
உச்சநீதி மன்றம் உத்தரவிட
பாரத வங்கி
பல்லிளித்து வழங்கியது

கட்சிகளை உடைத்து
ஆட்சி அமைப்பது
அவர்களுக்கு அத்துபடியான பின்
ஐந்தாண்டு தேர்தல் ஏன்

கட்டளைகளுக்கு பணியாதவர்களை
காராகிரகத்தில் அடைக்க
பூஜ்ய மதிப்பெண்கள்
ராஜ்யத்தோடு ராசியாகி விட்டன

ஓய்வுப் பெற்ற நீதியரசர்கள்
உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கிறார்கள்
எதற்கென்று
யாருக்கும் தெரியவில்லை

ஈ.டி, ஐ.டி., சி.பி.ஐ
நிர்வாகங்கள்
நேர்மை துறந்ததை
நெஞ்சுயுர்த்தி சொல்கிறது

ஏறிய விலைவாசியை
தேடும் கருப்புப் பணத்தில்
வேலைவாய்ப்பை உருவாக்க
தேனாறும் பாலாறும் ஓடுமா

செய்தி ஊடகங்கள்
சப்பாணி ஆனதை
அண்ணாமலை அறிவிக்க
சமூக ஊடகங்கள்தானே மறுக்கிறது

இவையெல்லாம் அறிந்ததால்
“ஏப்ரல்”, “மே” யில்
ஏமாறாதே என்கிறேன்
ஏற்பவர் ஏற்க!! ஏற்காதவர்??!!!!

திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

ஞாயிறு, பிப்ரவரி 5

அதானி இந்தியா









ஊதிப் பெருக்கிய
உலகப் பணக்காரனை
உருட்டித் தள்ளியது
ஹிண்டன்பர்க் ஆய்வு

ஆய்வொரு குப்பையென
அவர்கள் குதித்தே – இது
இந்தியாவின் மீதான
வளர்ச்சிக்குத் தாக்குதல் என்றனர்

ஊக வணிக வீழ்ச்சியில்
ஊமையானது அரசு
ஊதிப் பெருக்காத எதிர்கட்சியோடு
ஊடகமும் மௌனமானது

இந்தியாவும் அதானியும்
இணையென்ற கூற்றை
இறையாண்மை இந்தியா
ஏற்றுக் கொண்டதா?

இரண்டு இந்தியா
ஏற்றுக் கொண்ட மக்கள்
தேச பக்திக் கொண்டவர்கள்
ஏற்காதவர்கள் ????............

அதானி அம்பானி
ஆளும் இந்தியாவில்
ஆநிரையோ அந்நியரோ
ஆமைக்கறி உண்பவரோ

எட்டு இலட்சம் கோடி
எங்குச் சென்றதென
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில்
“எல். ஐ. சி” யும், “எஸ். பி. ஐ” யும் வந்தனர்


வீழ்ந்தாலும் பாதிப்பில்லை
வீரவசன அறிக்கயை
வீசி எறிந்தனர் – ஊடகங்கள்
பிரசுரித்து ஆசுவாசப் படுத்தின

ஆண்டிறுதி விற்பனை
அதோகதி யானது எல்.ஐ.சி க்கு
அவர்களின் பங்கும்
அடிப்பட்டு வீழ்ந்தது

கருப்புப் பணத்தை ஓழித்து
பலகோடி இலாபமீட்டி
சில நாட்களில்
உலகில் 2வது நபர்

மொரிசியஸ், பனமா
கேமன் தீவுகளில் தேடிய
அதானியின் இந்தியாவா
55 சதவீதத்தை தொலைத்தது

வங்கிக் கடன், எல்.ஐ.சி முதலீடு
அடமானப் பத்திரங்கள்
45 சத வீதமாய் மிஞ்சுமா
நாமம் மட்டுமே எஞ்சுமா

நீரவ் மோடி
மல்லையாக்களின்
வரிசையின் எண்ணிக்கை
வரும் நாளில் தெரியுமோ

உலகம் சுற்றும் வாலிபனின்
உன்னதப் பயணங்கள்
உத்தமர் தேசத்தின்
உத்திரவாதமெனப் பொழிய

சந்தைதனை போட்டியின்றி
சகலமும் பெற்றவன்
சந்திச் சிரித்து நிற்கிறான்
சகாயனோ விக்கித்துப் போகிறான்

ஏவல் செய்யும்
அரசு யந்திரங்கள்
காவல் காக்கின்றன
கண்ணியம் காக்கப்படுகிறது

வீட்டுக் கடனுக்கு
வீடு ஜப்தி செய்யலாம்
ஜி.எஸ்,டி யால் மூடிய
சிறுநிறுவனங்களை ஏலம் விடலாம்

கொரானாவில் பரலோகம் சென்ற
பாமரனின் குடும்பத்தை
சட்டப்படி ஏலம் விட்டு
நிற்கதியாய் நடுத் தெருவில் நிறுத்தும்

வங்கி நடைமுறை
இந்தியர்களுக்கு மட்டுமே – ஆயினும்
அதானி இந்தியா
மேதினியில் வேறுதானே?

“இசட்” பிரிவு பாதுகாப்பில்
“செபி” யோ “சி.பி.ஐ “ யோ
உள் நுழைய முடியவில்லை
வங்கிகள் மூச்சு விடவில்லை

நீதி மன்றங்கள்
நிவாரணம் அளிக்குமோ
கடந்துச் செல்ல அவையும்
பழகிக் கொண்டனவோ

அமெரிக்க நீதிமன்றம் வா
ஆதாரம் தருகிறேன் என்கிறான்
ஆத்திரமோ, அவசரமோ இல்லை
அமைதிக் காக்கிறான்

தேசப் பக்தியால்
“ஆன்டி” இந்தியனாகாது
இருக்க பழகுவாயா?
எதிர்வினை யாற்றுவாயா?





வெள்ளி, பிப்ரவரி 4

ஒன்றிய பிரதிநிதியின் துரோகம்

 



தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, வெகுஜன மக்களால் எதிர்பார்க்கப்படும் ஒரு மசோதாவை அனுப்பினால் ஆறு மாதங்கள் காலம் தாழ்த்தி ஏற்க முடியாது என்பதோடு மட்டுமல்ல உண்மைக்கு புறம்பான காரணத்தை சொல்லி  ஒன்றிய பிரதிநிதி திருப்பி அனுப்புகிறார்.

நீட் தேர்வை கிராமபுற மற்றும் அரசு மாணவர்கள் வற்வேற்கிறார்கள். அவர்கள் அதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கையை நிராகரித்திருக்கிறார்.

7.5 சதவீத ஒதுக்கீடு தேர்தலுக்காவும், 20 க்கும் மேற்பட்ட மாணவர்களின் உயிரிழப்பாலும் பெறப்பட்டது. அவ்வொதுக்கீடை இப்போதும் தொடர்வதால் நிராகரிக்க இயலாது.

நீட் தேர்வில் இம்முறை வெற்றிப் பெற்ற மாணவர்கள் மதிப்பெண் அடிப்படையில் மத்திய கல்வி முறையில் (CBSE) பயின்ற மாணவர்கள் முதல் 600 பேர். இதிலிருந்து தெரிவது என்னவென்றால் அரசு மாணவர்கள் ஒதுக்கீடு மூலமே பயனடைந்துள்ளனர்.  ஒதுக்கீடு இல்லையெனில் அவர்களுக்கு இந்த வாய்ப்பும் பறிபோயிருக்கும்.

ஒன்றிய பிரதிநிதியின் துரோகத்தால் அரசு தன் முடிவை இப்படி மாற்றிக் கொள்ளலாம்.  மத்திய கல்வி முறைக் கல்வி, மாநில அரசு கல்வி முறையில் பயின்ற மாணவர்களை விகிதாச்சார முறையில் தேர்ந்தெடுக்கலாம். அதாவது மாணவர்களின் மொத்த எண்ணிக்கை அடிப்படையில்.

இப்படி செயல்படுவதால் ஒதுக்கீட்டின் சதவிகிதம் அதிகரிக்கலாம்.

இதையும் கடந்து கல்வி வியாபாரம் என்றான பின் அதன் கட்டணங்கள் அதிகமாகதான் இருக்கிறது.  98 = 55,50,00,000  என்பது நாட்டின் வளத்தைக் காட்டுகிறது.  அப்படிதான் கல்வியிலும்.

மற்ற இலவசங்களைக் காட்டிலும் எந்தக் கல்வியையும் இலவசமாக கிடைக்கச் செய்தால் நீட் தேர்வுகள் தேவையில்லைதான்.

 

மருத்துவக் கல்வியின் ஒரு ஆண்டு கட்டணங்கள் அண்டை மாநிலமான புதுச்சேரியில் இப்படி இருக்கிறது.

அரசு மருத்துவக் கல்லூரி                                15000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு     600,000

தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% நேரடி ஒதுக்கீடு   20,00,000

தனியார் நிகர்நிலை பல்கலைகழங்கள்                   25,00,000

 

தமிழகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியின் 50% அரசு ஒதுக்கீடு ரூ. 10 லட்சமாக இருக்கிறது. அரசு கல்லூரிக் கட்டணம் தவிர்த்து மற்ற தனியார் கல்வி கட்டணங்கள் ஏறக்குறைய ஒன்றே. ஒரு பாடத்தை ஒரே வகுப்பில் வேறு வேறு மாணவர்கள் இம்மாதிரி கட்டணம் செலுத்தி படிப்பதே இன்றைய மருத்துவக் கல்வி. இலவச தரிசனம் முதல் ரூ 200 வரை கட்டணம் பெற்று தரிசனம் தரும் கடவுள் உள்ள நாட்டில் இப்படிதான் கல்வியும்.  மக்கள் அதற்கு அடிமை. கல்விக்கு மௌனியாக கடந்துச் செல்கிறார்கள்,

இதற்கு தீர்வு காணாமல் நீட்டிற்கு தீர்வு காண்பது பெரிய வெற்றியல்ல.

இது மட்டுமல்ல. நாமக்கல் பிராய்லர் கோழிகள் மன்னிக்கவும், மாணவர்கள் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள். மத்திய மாநில வழி கல்வியானாலும் அங்கே வகுப்புகள் A to Z மட்டுமல்ல AA to Az வரை நடைப் பெறுகிறது. கட்டணம் ரூ 2-3 இலட்சங்கள் நீட் பயிற்சிக்கும் சேர்த்து.

ஆக கல்வி என்பது மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட வேண்டும். கொள்ளையடிப்பவர்களுக்காக அல்ல

புதன், டிசம்பர் 8

கடவுள் சொத்து – வளர்ச்சிக்கா



உலகளந்து
ஓடியாடி உழைத்து
பிட்டுக்கு மண் சுமந்து
சேர்த்தச் சொத்துக்கள்


மாட மாளிகைகள்
வணிக வளாகங்கள்
விவசாய நிலங்கள்
கல்லூரிப் பள்ளிச் சாலைகள்


வேர்வை முத்துச் சிந்தி
பார்வைக்குக் கட்டணம் வாங்கி
பலகாலம் சேர்த்தச் சொத்தில் - பங்கு
அரசின் வளர்ச்சிக்கா

சொத்து
வாரிசு உரிமைக்கு உட்பட்டது
வாரிசு இல்லையெனில் - அரசுக்கா
ஒன்று விட்ட உறவுக்கா


மரித்த கடவுளின் சொத்துக்களை
வாரிசு உரிமை கோரும்
வகையறா
நீதிமன்றம் வருமோ


இந்திரன் சோமன்
இவர்கள் மாஜி கடவுள்கள்
கிரேக்கத்திலும்
இந்தப் பட்டியல் உண்டு

வகை நான்கு
வழிபட தேவபாஷை - என
வகுத்த கடவுளை
வார்த்தெடுத்த நீதி அரசர்கள்


புதிய காரணங்களை
புனைந்து எழுதுவதால்
கடவுளின் இருப்பை
நீட்டிக்க முயல்கிறார்களோ?


அப்பாவி பக்தர்கள்
அளித்தக் கொடைகள்
தங்க கோபுரமாக
தகதகவென மினுக்க


மினுக்கும் அழகில்
தனது கடவுளென மதிமயங்கி
எந்நாடுடைய சிவனேயென
ஏற்றிப் போற்றிட

கனவில் வந்தே
காப்பாற்று என் சொத்தை
நீதியரசருக்கு
கட்டளையிட்டிருப்பாரோ

அரசின் வளர்ச்சிக்கு
அடிப்படை வருமானம்
திருவிடந்தை பெருமாள் மட்டுமல்ல
திக்கெட்டும் காரணமாக கூடாதாம்


இந்து கோயில் வருமானத்தில்
கல்லூரித் திறப்பதா
கல்விக்கண் திறப்பதா
வேதம் கற்கட்டும்

வேதம் கேட்ட காதுகளில்
ஈயம் ஊற்றியவர்கள்
சூத்திரனிட்ட பிச்சையில்
வேதம் ஓதுகிறார்கள்

ருத்ர பூமி -சிவனுக்கு
பட்டாப் போட்ட இடமா
மானுடம் அமைதிக் கொண்டமிடமா - அல்ல
வீட்டுமனைகளாய் மாறியமிடமா


மலைகள் ஓடைகள்
மாயமாய் மறைய
அரசு ஆவணங்களும்
காசுக்கு மாறும் காலத்தில்

குலநாசமென
கூக்குரலிட்டாலும்
கூசாது மனைகளாய் மாற்றுவான்
கூத்தன் வரவே மாட்டானென்பதால்


சொத்துவரி
தொழில் வரி
மூலதன ஆதாய வரி - இன்னப் பிற
வரிகள் செலுத்துகிறாரா கடவுள்

அறிவுக் கூர்மையால்
அள்ளிச் சேர்த்த வருமானத்தில்
30% அரசு வசூலித்ததா?
முழு விலக்கு அளித்ததா


நீதிமன்றங்கள்
நேர்மையில் விலகுது
மானுடம் காப்பதை மறந்து
மதங்களை காக்க தீர்ப்பெழுதுகிறது


மதங்கள்
மானுடத்தை பிரித்து வைக்க
இயற்கை
இணைத்து வைக்கிறது


இணைவோம்
இறைவனை காணவல்ல
இறைவனின் இருப்பை நீட்டிக்கும்
இ.பி.கோவை மாற்றி எழுதுவோம்

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...