வெள்ளி, ஏப்ரல் 30

ஒரே இந்தியா

 




ரூ.150
ரூ.400
ரூ.600
ரூ.1000

கட்டளைதாரர் உபயமல்ல
கடவுளைக் காண்பதற்கான
படிநிலைக் கட்டணமுமல்ல
கட்டணம் தடுப்பூசிக்கு

பயன்நிலை ஒன்று
பயன்படுத்துவோரும் ஒன்று
படிநிலை ஏனென்றால்
பக்தனில்லை எதிரி ஆவாய்

பொது சிவில் சட்டம்
இந்தி இந்தியாவின் மொழி
இதை நோக்கும் தேசத்தில்
ஏனிந்தப் பிரிவினை

பிரிவினையின் படிப்பினைகள்
சாதிமதப் பேதமின்றி
பஞ்சைப் பராரிகள்
பரலோகம் செல்வது

பங்கு போட வசதியாக
பார்மசி கம்பெனிகளின்
பங்கு மதிப்பு – சந்தையில்
பலமடங்கு ஏறுது

இழவு வீட்டில்
இத்தனை இலாபமா
இருக்கட்டும்……
இந்த கொரோனாத் தொடரட்டும்

வியாழன், ஏப்ரல் 29

சுடலையாண்டி

 




கால் பணம்
முழத் துண்டு
வாய்கரிசி
ஏதுமில்லை

எரிக்கவோ
புதைக்கவோ
உடன் பாலோ
யார் அறிவார்

வீட்டிற்குள் வரவில்லை
வீதிவழிச் செல்லவில்லை
காடுவரை யாருமில்லை
கடைசி வரை???????

அலங்காரப் பாடையில்லை
அழுவதற்கு நாதியில்லை
அதன் பெருமையுரைக்க
ஓர் ஒப்பாரியுமில்லை

ஊர் மெச்ச வாழ்ந்தவன்
உலக விட்டுப் போகையில
உற்சவமாய் கொண்டு செல்ல
ஒருவரும் ஒப்பவில்லை

ரேஷனில் காத்திருந்தான்
தியேட்ரில் காத்திருந்தான்
ஒட்டுப்போடக் காத்திருந்தான்
ஒய்யாமாரி இடுகாட்டிலும்…………………….

அய்யகோ
அரிசந்திரன் கதையில்லை
ருத்ர பூமியில்
உறங்கவும் இடமில்லையே

திங்கள், ஏப்ரல் 26

மயிலக்காள மச்சானே





கூரை வேய்ந்த
   குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
    யாத்திரை வந்த
கூரைச் சீலை
    கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
    கைப்பிடித்து வாரேன்


அஞ்சாறு நாளா
    அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
    படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
    சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
     நிலவும் காயுதடி


மயிலக்காள மச்சானே
    மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
    தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
   அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
    ஞாபகம் கொள்வாயா


வாழும் வாழ்க்கையில்
    வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
    பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
    புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
    விசால உலகிலே


ஞாயிறு, ஏப்ரல் 25

திடீர் செல்வம்

 


குறள் 837

 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

 


ஆய்ந்தறியும் திறனில்லா
     அறிவிலியின் செல்வத்தை
வாய்ப்புக் கிடைப்போர்
     வாரிவாரிச் செல்வர்
ஏய்ப்பது அறியா
     ஏமாறும் பேதையர்
தேய்ந்துக் கிடக்கும்
     தோழமைக்கு உதவார்


பெருஞ்செல்வம் படைக்கும்
    பாதையை அறியாதவன்
திருவருளால் கிடைத்ததை
    தீயவர் புசித்திருக்க
வெற்று மனிதனாய்
    வேடிக்கைப் பார்ப்பான்
சுற்றமோ வாடிடும்
    சூழ்நிலையில் வருந்திடும்

சனி, ஏப்ரல் 24

கல்லறையிலிருந்தா கற்பீர்

 



தொன்மையான நாகரிகம்

     தோண்டிக் கிடைப்பதென்ன

இன்பமான வாழ்க்கை

     இன்னும் இருக்கிறதே

துன்பமதுக்  கோவிடாய்

      துரத்தலாம் பிரமிடாய்

பொன்னுடலைக் காத்திட

      போட்டிடுக்  கவசந்தனை


வெள்ளி, ஏப்ரல் 23

கல்நெஞ்சம்




கண்ணில் அம்பொன்று
கணையாய்த் தொடுத்தே
காதலைப் பெருக்காதே
கண்ணா அமைதியில்லையே

காட்சிகள் விழியில்
காதலைக் கூட்டும்
கண்ணின் விழித்திரை
கதவடைத்துக் கொள்ளடி

தங்குத் தடையின்றி
தாமிரபரணி நீரோட்டமாய்
தமிழ் பேசுமழகில்
தட்டுத் தடுமாறினேன்

சொல்லும்....
சொல்லும் அழகும்
சொல்லச் சொல்ல
சொக்கிதான் போனேனடா

கனிய கனியப் பேசி
காதலின்பம் கூட்டி
காணாது போனவனே
காதல் பேச வாடா

மௌனம் காத்து
மனதை வதைத்தவளே
கோவை இதழில்
கொஞ்சி பேசடி
 
இளங்கன்றுக்கு
இட்ட வாய்பூட்டோ
இள மயிலே
இளகாதோ நின் மனமே

போதிமரப்  போதனையோ
பேசாதுப் போனாயே
பொடா-தடா சட்டமோ
போட்டால் வாட்டமே

கண்மூடிக்
காட்சியை மறைக்கலாம்
வாய்மூடி காதல்
வசனத்தை நிறுத்தலாம்

கண்ணே எப்போதும்
கண்டபடி நினைக்கும்
கல்லான மனதை
கட்டளையிட்டு மூடுவியோ        

வெள்ளி, ஏப்ரல் 16

வித்தகனே! மன்னவனே!






அருகில் நீயிருக்க
அத்தனையும் மறந்திடுமே
அஞ்சுகமே உனையணைக்க
ஆனந்தம் பெருகிடுமே


சிந்தையில் ஏதுமில்லை
சித்தார்தன் நிலையுமில்லை
சுந்தரப் பாண்டியனாய்
சந்தேகம் ஒன்றுமில்லை

கொத்துமலர் கொடுத்தவனே – நின்
சித்து விளையாட்டை நானறிவேன்
கற்றலில் நீயொரு வித்தகனே
முற்றுமோ என்காதல் மன்னவனே?!


புதன், ஏப்ரல் 14

விழிபேசும் மொழியென்ன கேட்கிறேன்



விழிபேசும் மொழியென்னக் கேட்கிறேன்
    விடுகதையா, விடையா வினவுகிறேன்
மொழிபெயர்க்க அகராதித் தேடுகிறேன்
    மொழிகளின் வகைதனை அறிகிறேன்
பொழிகின்ற அன்பைதான் காண்கிறேன்
    பொல்லங்கு ஆகுமோ புரியலையே
வழிவழியாய் வந்தவர்களை நாடுகிறேன்
    வாலிப வயதென வாழ்த்துகின்றார்

ஆழிப் பேரலையாய் மனமுறிவு
    ஆதலினால் வந்தது மணமுறிவு
பழிபேசும் சமுகத்தைக் காண்கின்றேன்
    பகல்கனவா வாழ்க்கை யோசிக்கிறேன்
இழிவோ மறுவாழ்வு இவ்வுலகிலே
    இணையாய் வருவதற்கு இடைஞ்சலோ
வாழியகா தலென்று வருவாயோ!
    வழியில்லை எனகத வடைப்பாயோ?

ஏழிசையில் ஆரோகணம் அவரோகணம்
    எப்படி இசைத்திடவும் இனிமையே
பழிப்பரென இளமையை இழக்கலாமோ
    பாரென வாழ்வது இலக்கணமே
தோழியாய், இணையாய் இணையலாம்
    தோற்பது நம்முடைய இலக்கல்ல
வீழ்வது விதிவசமென முடங்காது
    வாழ்ந்துக் காட்டுவோம் வாழ்க்கையை

திங்கள், ஏப்ரல் 5

நெஞ்சுகுள் நீயே



நிலவைக் காதலிப்பாய்
    நதியை வர்ணிப்பாய்
உலவும் தென்றலை
    உயிரெனக் கதைப்பாய்
மலரை அழகென்பாய்
    மங்கையை மறந்திடுவாய்
கலந்திடும் நேரத்தில்
     கல்நெஞ்சில் நானென்பாய்

இளமைக் குன்றா
     என்னினிய தமிழென்பாய்
குளத்தின் ஆம்பலை
     குவலய அழகென்பாய்
வளமைக் கொண்டவளை
     வந்தணைக்க மறந்திடுவாய்
வெள்ளை நெஞ்சத்திலே
     வேண்டியவளை நினைக்கலையோ


கிழத்தி நானொருத்தி
     கிடக்கும் நினைவின்றி
யாழிசைச் சிறப்பை
     யாமத்தில் பாடுகிறாய்
அழகழகாய் பேசிடும்
     அத்தானின் நெஞ்சத்திலே
ஆழ்ந்து கிடப்பது
      அடியவள் மட்டும்தானே……????

நெஞ்சத்தில் நீயேதான்
      நேசமுள்ள இணையேதான்
வஞ்சியுணை கண்டிட
      வாராதோக் கற்பனைகள்
மிஞ்சிடாது நிலவை
      மலரைக் காணுகையில்
அஞ்சுகமேக் கலங்காதே
       ஆசையுடன் வாழ்வோமடி


தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...