மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 17

நூல் விமர்சனம் ஆங்கில மாயை




ஆங்கில மாயை  - ஆசிரியர் நலங்கிள்ளி

ஆங்கிலம் உலக மொழி இல்லை அதுவொரு கட்டுக்கதை என்பதை பல ஆதாரங்களோடு நிருப்பிப்பது இந்நூல்.   இந்த ஆராய்ச்சியில் ஆங்கிலம் சனநாயக மொழியா, பெண்ணிய மொழியா அல்ல அறிவியல் மொழியா என கேள்வி எழுப்பி அந்த மொழி அப்படி பட்டதல்ல அது சாதாரண மக்களின் மொழியாக சிலரால் பேசப்பட்டது என்கிறார். ஆட்சி மொழி இலத்தீன், ஆங்கிலேய மக்களிடம் இலத்தீன் பேசுவது உயர்வாக இருந்தது ஏனெனில் அது இறை மொழியாக பாவிக்கப்பட்டது எனவே ஆட்சிமொழியாகவும் இருந்தது. ஏழைகள் பேசும் மொழியாக ஆங்கிலம் இருந்தது.  அதாவது ஆங்கிலம் பேசுபவன் உயர்ந்தவன் என என்னும் தமிழ் சமுதாயமும் போல.

ஆங்கில மாயை என கூற வந்த ஆசிரியர் பெரியாரும் அவர் வழி வந்தவர்களும் ஆங்கிலம் கற்றால்தான் உயர முடியும் என்று பரப்புரை செய்ததாக ஒரு குற்றசாட்டை ஆதாரங்களோடு வைக்கிறார்.  ஆனால் நூலின் இறுதியில் பெரியாரின் வாதத்தில் சூதில்லை, எப்படியாவது தன் மகன் ஆங்கிலம் கற்றால் உயர்ந்துவிட மாட்டானா என நினைக்கும் ஒரு அப்பாவி தமிழ்ன் நினைப்பது போல் நினைக்கிறார் என்கிறார்.

இங்கிலாந்தில், ஹிப்ரூ மொழியில் எழுதப்பட்ட விவிலியம் இலத்தீன் மொழியில் மக்களுக்கு பகிரப்பட்டது. ஜான் வைக்லிஃப் என்ற ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியர் 1370 ஆண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மக்களிடம் சுற்றுக்கு விட்டார்.  திருச்சபை மொழிப்பெயர்ப்பால் தீட்டு ஏற்பட்டதென அவரை தீக்கிரையாக்கியது.  ஆம் இங்கே சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் திருவாசம் வாசிப்பது தீட்டு என்பது போல்.

தாமஸ் லினேகர் எனும் பன்மொழி அறிஞர் 1500 களில் ஆக்ஸ்ஃபோர்டு பேராசிரியராக இருந்தவர் விவிலியத்தை கிரேக்கத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழி பெயர்த்தார்.  அதில் இலத்தீன் விவிலியத்திற்க்கும் கிரேக்க விவிலியத்திற்க்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள்.  அதாவது நம்மவூர் வால்மீகி இராமயணத்திற்கும் கம்ப இராமயாணத்திற்கு உள்ள வித்தியாசங்கள்.

பிறகு மிகப் பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்த்தியவர்கள் யாரும் ஆங்கிலேயர்கள் அல்ல வெவ்வேறு ஐரோப்பிய நாட்டை சேர்ந்தவர்கள் என்கிறார். தற்போது வேண்டுமானால் சில கண்டுபிடிப்புகள் ஆங்கிலேயர்களால் நிகழ்த்தப்பட்டுள்ளது.  நியூட்டனே அவர் கண்டுபிடிப்புகளை இலத்தீனில்தான் எழுதியுள்ளார் என்ற ஆதாரத்தை வைக்கிறார். 

பெண்ணடிமைத்தனம் கூடாது என்ற பெரியார் எப்படி பெண்ணடிமைத்தனத்தை கொண்ட ஆங்கிலத்தை வேண்டுமென்றார் என்ற  கேள்வியை வைக்கிறார். அதற்கும் ஏகப்பட்ட ஆதாரங்களை சொல்லாடல்களை உங்கள் முன் விவாதத்திற்கு வைக்கிறார்

தமிழ் சமுதாயம் படிக்க வேண்டிய ஒரு நூல் கண்டிப்பாக படியுங்கள்.

குறைகள் என கண்டோமென்றால், இந்த ஆங்கில மாயை எனும் ஆய்வை பெரியாரை மையப்படுத்தி அணுகியிருக்கிறார்.  

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிவிட்டார்.  தமிழில் புராண குப்பைகள் அதிகமாக இருந்தாலும் அவ்வாறு கூறியிருக்க கூடாது என்பது இவரின் வாதம். அதனால் மொழி ஒன்றும் அழிந்து விடாது என்கிறார். விவிலியம் மாறியது ஆனால் ஆங்கிலம் அழியவில்லை என்கிறார்.

பெரியார் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்தியதை சொல்லாமல் விட்டுவிட்டார்.  ஆம் சில மேற்கோள்களை எடுத்துக் காட்டிய  ஆனைமுத்து தொகுத்த அதே புத்தகத்தில்தான் பெரியார் செய்த இச்செயலும் இருக்கிறது.

மொழி என்பது அறிவு என ஓரிடத்தில் கருத்தை வைக்கிறார். தாய்மொழியில் சிந்திப்பது எளிது, புரிந்து கொள்வது எளிது.  ஆனால் அறிவு….. நான் வேறுபடுகிறேன்.  உடன்படுவோர் மேலும் கருத்து தெரிவிக்கலாம்.

முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் 1937 ஆண்டு நடைப் பெற்றது. அந்த மொழி எழுச்சியைப் பற்றி ஏதும் இல்லை.  1950 ல் குடியரசான இந்தியா அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியை தேசிய மொழியாக ஏற்கும் என அறிவித்தது.  அதை நடைமுறைப்படுத்த 1965 ல் முயன்றபோது ஏற்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தைப் பற்றி எந்த கருத்தும் இல்லை.

புற்றீசல் போல மெட்ரிக் பள்ளிகளை திறக்க அனுமதி கொடுத்த அரசை, ஆங்கிலத்தை நோக்கி மக்களை ஓட விட்டதைப் பற்றி விமர்சனம் இல்லை. ஆம் அரசும் நம்மை திசை திருப்புகிறது.

மொழி என்பது அடையாளம்.  “தமிழ்மொழி” தமிழ் இனத்தின் அடையாளம். மதங்களால் வேறுப்பட்டாலும் இனம் என அடையாளப்படுத்துவது தமிழ் மொழிதான். நாடு கடந்து வாழ்ந்தாலும் தமிழன் என்றே அடையாளம் காணப்படுகிறோம்.

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ஜப்பானிய அறிஞர்கள் 11 பேர்.  இவர்களில் 9 பேர் ஜப்பானில் வசிப்பவர்கள். பெரும்பாலான அறிஞர்களுக்கு ஆங்கிலம் தெரியாது.  அவர்களின் கருத்துக்கள் அவர்களின் தாய் மொழியான ஜப்பானிய மொழியில்தான் பகிரப்பட்டது.

ஆக தமிழை வளர்க்க தமிழில் பேசுவோம்



செவ்வாய், அக்டோபர் 21

ஆங்கிலம்












அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியாச் சொற்பதமா
புரியயவை சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்குச் சரியாகுமா
சாப்பாட்டின் பொருளாகுமா

ஆறாயிரம் மொழியில்
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
மானுடத் தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்தப் பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவாய்ப் பகர்வாய்த்
தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
நாமொன்றும் நாண வேண்டாமே

கண்மூடித் தாய்தமிழில்
கண்டதும் இல்லையெனத் தூற்றாமல்
கண்டுபிடிக் கல்வியறிவில்
காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டுத் தமிழ்மொழியில்
கற்றதைப் பரப்பு வெற்றிபார்

அம்மொழியில் பேசிடவே
ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழித், தமிழுனுக்கு
சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழிப் புலமை
பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழிப் பெருமை
எவரும் பேசிடப் பெருகுமே

ஆங்கிலமொரு மொழிதான்
அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமாய்க் கூறாதே
இகலோகம் சுற்றிட உதவாதென
எங்கெல்லாம் போவாய்
எதற்காய்ப் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
ஆங்கில அழகைப் பார்த்திடுவேன்

சனி, ஜனவரி 11

“தமிழ்” கடவுள்



பன்மொழி புலமை
பக்தனுக்கு உண்டா
ஏழேழு உலகை
இரட்சித்து காக்கும்
பரமனுக்கும் உண்டா

அறிந்தது அறியாதது
தெரிந்தது தெரியாதது
புரிந்தது புரியாதது
சிவாஜி  - சிவனாய்
உச்சரிக்க அழகு

அழகன் முருகனோ
அவனப்பன் சிவனோ
அவதார பெருமாளோ
அவர்களது பத்தினிகளோ
அறியாதது ஏதுமுண்டோ?

கைலாய வாசமென்பதால்
காதில் விழுந்தவை
சமஸ்கிருதமாம் - ஆதலால்
பைந்தமிழ்
மைந்தனுக்கும் தெரியாதாம்

காமாட்சி
“கற்றது தமிழ்” அல்லவாம்
மீனாட்சிக்கு
சொக்கனை தெரியுமாம்
சங்கத்தமிழ் புரியாதாம்

தேவாரமோ திருவாசகமோ
தமிழில் ஒரு வாசகமோ
புரியலையாம்
தில்லை நடராசனுக்கு – இது
தீட்சிதர்கள் சொன்னது

ஆலயத்தம்மனும்
பாளையத்தம்மனும்
பைந்தமிழில் பூசிக்க
பரவசமடைந்ததாய்
பக்தர்கள் சொல்ல

சுப்புணி சுட்டபழம்
சூத்திர மொழியில்
கேட்டதாக அவ்வை
பாட்டெடுக்க - அவாள்
தேவமொழி என்றனரே

அனந்தனுக்கு
ஆராரோவோ அல்ல
பூபாளமோ
சமஸ்கிருதத்தில் வேண்டுமென
சட்டம் போட்டானா?

அண்ட சராச்சரத்தை காப்பவனுக்கு
அய்யாயிரமாண்டு தமிழ் தெரியாதாம்
அப்படியா! – அக்குடும்பத்தை
ஆரம்ப பள்ளிக்கு அனுப்புவோமா
ஆனா, ஆவன்னா கற்க?!





சனி, மார்ச் 6

மொழி

இது ஒரு கருவி, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள. உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. இடம், இனம் அடுத்து மனிதனை வகைப்படுத்த மொழி ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மொழி மேலும் ஒரு எல்லைக் கோட்டை உருவாக்குகிறது.



இதில் என் மொழி உயர்ந்து தாழ்ந்தது, தொன்மையானது இப்படி பல வாதங்கள். மொழிவெறி மனிதனை பகைவனாக்குகிறது. ஏன்? தன் மொழி உயர்ந்தது என்பதில் தவறில்லைதான்.



ஆனால், உலக மொழி, பேட்டை மொழி என தேவையா. உலகெங்குமுள்ள 2500 க்கும் மேற்பட்ட மொழிகளை இரண்டிலிருந்து பத்து மொழிகளுக்குள் அடக்கிட இயலுமா? ஏனைய மொழிகளை காணாது செய்திட இயலுமா?



உதாரணமாக, கண்டத்திற்கு ஒரு மொழியெனவும், அல்லது உலக மொழியாக ஆங்கிலமும், இந்திய மொழியாக இந்தியும் ஏற்படுத்தினால் என்ன?

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...