காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 8

என்னுலக நாயகன்

 

 










பனையளவு உயரமும்,
பார்த்தாலே பரவசமும்,
பகட்டுச் சொற்களும்
பாவையெனை கவராது.

பிரமிக்க வைக்கும்
பரிசுப் பொருளோ,
விலையுயர்ந்த அணிகலனோ
விளைவுகளை ஏற்படுத்தாது.

கடினமானச் சூழலில்
கைகோர்த்து நிற்பவனும்,
சங்கடங்கள் நேர்ந்தாலும்
சந்தித்துப் பேசுபவனும்,

தன்னுறவு இவளென்று
தன் சுகதுக்கங்களை
துறந்தெனை நேசிக்கும்
தக்கதொரு இணையாய்,

என்னை விரும்புவனும்,
என்னவன் இவனென
எண்ணத்தை விதைத்து
என்நம்பிக்கையை கூட்டுபவனும்

கதைக்கின்ற பொழுது
கடமைக்குத் தலையாட்டாது
கவனமாய் கேட்டு
கனிவுடன் நடப்பவனும்

உணர்வுகளைக் கடக்காமல்
உடனிருந்து மதித்து,
நிலைத்த அன்புடன்
நித்தமும் நேசிப்பவனை

எழுச்சி முரசறிவித்து
என்னுலக நாயகன்,
என்சுவாச காவலனென
எத்திக்கும் சொல்வேனே

. வேல்முருகன்

புதன், மே 6

ஊக்கம் நீயென்பதால்

 









உறவான என்னவளே,
ஊடுதல் ஏனடி?
சிறப்பான வாழ்விலே
சித்தாந்தம் நீயடி.

அறத்தின் நிழலிலே
அன்றிலாய் வாழ்ந்திட,
பறந்து வந்திடு
பருவத்தில் பயிர் செய்திட.

உருட்டல் மிரட்டலில்
உள்ளன்பு வருவதில்லை,
பொருளின்றிப் பொருத்தங்கள்
பொதுவில் நிலைப்பதில்லை.

விருப்பம் உள்ளதாலே
விண்ணப்பம் அளித்தேனடி,
ஒருமித்து வாழ்ந்திட
உன்னருள் போதுமடி.

பழகும் பாசாங்கு
பாவை அறிவாள்;
குழப்பம் ஏதுமில்லை,
குயுக்திகள் கொண்டவனே.

உழலும் மனதை
உன்னிடமே கொடுத்தேன்;
நிழலும் நீயென்று
நெஞ்சத்திற்கு சொன்னேன்.

ஆகட்டும், பார்க்கலாம்
ஆசையின் எல்லையினை;
தாகமும் தவிப்பும்
தள்ளாடுதா என்றே.

யூகத்தின் அடிப்படையில்
யுத்தங்கள் கூடாதடி;
ஊக்கம் நீயென்பதால்
உயிரானேன் உன்னிடமே.

. வேல்முருகன்


சனி, ஏப்ரல் 25

கண்களின் விதி

 














நியூட்டனின்
3வது விதிப்படி
எனை ஈர்க்கும்
எதிர்வினையே

திக்குத் தெரியாத
பரந்த வெளியில்
திசைதனை காட்டுவது
கன்னி உன் கண்களே

காந்த ஊசிபோல்
கன்னி இருக்கும் திசையை
புலனறியும் வித்தை
பூவுலகின் விந்தையே

கன்னியின் கண்களின்
மின்னோட்டக் காந்தப் புயல்
அன்பின் அலைவரிசையில்
அதிர்வெண்களைப் பரப்ப

தாலமி, கோபர்னிகசின்
கோட்பாடுகள் மாறலாம்
எனைச் சுற்றும் பூமியாய்,
உனைச் சுற்றும் சூரியனாய்

அட்சரேகை, தீர்க்கரேகை
சந்திக்கும் புள்ளியில்
சங்கமிக்க
புதுமைகள் படைப்போமடி

ஒளிச்சேர்க்கை விதியின்படி
உனைப் பார்த்தே
என் சுவாசங்கள்
நீடித்திருக்கின்றன

உயிரியல் தத்துவம்,
வேதியியல், இயற்பியலில்
இருந்துவிட்டு போகட்டும்—
இலக்கியமாய் இக் கவிதை


உனக்காக
அ. வேல்முருகன்

வியாழன், மார்ச் 5

யாமத்தின் யாழிசை

 














கள்ளுண்ணும் கண்ணாலே
கட்டுறுதிக் காளையை
துள்ளிட வைத்தவளே
தூக்கம் கெடுத்தவளே
வெள்ளி முளைக்கயில்
வேட்கையைச் சொன்னேனே
அள்ளியள்ளிக் கொடுத்தால்
அத்தானும் மகிழ்வேனே

ஞாயிறு உதித்தாலும்
ஞாபகங்கள் நிழலாடுதே
பாயில் உறங்கிட
பலகனவு வருகுதே
வாயிலில் நின்றே
வருகையை நோக்குதே
நோயில் மீட்டிட
நொடியும் தாமதிக்காதே

தாமரையிலைத் தண்ணீரா
தவிக்க விடாதே
சாமக்கோழி கூவுமென
சாத்திரம் பார்க்காதே
கோமளத்தின் கோபத்தில்
கோமாளி யாகாதே
காமன் கணைகளில்
கணக்குப் பார்க்காதே

யாமத்தின் யாழிசை
யாகப்பத்தினி யானே
பூமான் பூவையின்
பூப்பட்டு மேனியின்
ஏமாந்த கொங்கையை
ஏந்திப் பிடித்து
காமத்தின் கதவுகளை
கைப்பற்றத் தாமதமேன்


அ. வேல்முருகன்


திங்கள், பிப்ரவரி 16

ஒய்யாரம்

















விலகி விலகாத
விடிவெள்ளி விழித்தேன்
உலகில் உருவான
ஒய்யாரம் ரசித்தேன்
துலங்கிடும் பேரழகில்
துள்ளிதுள்ளித் திரிந்தேன்
நலங்கிட்டு நானுனை
நாயகியாய் கொண்டேன்

மஞ்சத்தில் மயக்கம்
மன்னனை நினைத்தா
அஞ்சனமும் அகிலும்
அத்தானை அணைப்பதற்கா
கெஞ்சிக் கொஞ்ச
கொட்டிப் பேசுவியோ
தஞ்சமென நெஞ்சை
தந்தபின் மிஞ்சுவியோ

வெற்றிலைத் தரித்து
வேள்வியில் விற்பன்னராய்
சிற்றிடையில் கற்றிட
சிறகொன்று முளைத்திட
முற்றிலும் முகிழ்ந்து
முடிவின்றி தொடர்ந்திட
இற்றிசையில் இற்கிழத்தி
ஈந்தது பேரின்பமே


அ. வேல்முருகன்




ஞாயிறு, பிப்ரவரி 15

கண்ணசைவு















காத்திருந்த கண்ணனுக்கு
கண்ணசைவில் கதைகளா
நேற்றிருந்து நித்திரையில்
நிலவொளியாய் ஆடுதியே
பூத்திருக்கும் ஆசைகளை
பூவிழியில் சொல்லுதியே
யாத்திரையின் வழிதனை
யாழினில் இசைக்குறியே

விழியரங்க வித்தைக்கு
வியாக்கானம் எழுதுகிறேன்
அழியாத அக்காட்சி
அக்மார்க்காய் பதிகின்றது
எழிழ்மிகு இமைகளும்
எனையே தாக்குகிறது
மொழியற்ற முகவரிகளில்
மொக்குகள் மலர்கிறது

காதலைக் கற்பிக்கும்
கருவிழி நாடகங்கள்
நாதனை நானாவிதம்
நாள்தோறும் நோக்கும்ரதம்
மேதமை கருவிழிகள்
மேதினியில் மோதும்வரை
வேதிவினை மாற்றங்கள்
வேந்தனிடம் விளைந்திடுமே


அ. வேல்முருகன்





சனி, பிப்ரவரி 14

காதலின் திருநாள்

 












காதலால் கனிந்துருக
கண்டநாள் இந்நாளோ?
ஆதலால் அகிலமே
ஆராதிக்க அனுமதியோ?
 
தூதால் துணையவள்
துணிந்திங்கு வருவாளா
ஈதலால் ஈருடல்
இசைந்திங்கு சேருமோ

ஏந்திழை ஏனையாளும்
ஏகாதி பதியாகிட
வேந்தன் வேலவன்
வேட்கையை வெளியிட
 
காந்தக் கண்ணழகு
கண்ணிமைக்க மறக்குமே
தீந்தமிழ் தேன்குரல்
தீண்டுமே மனதை

உன்னதமே உனதன்பு
உவரெனை உருமாற்றவே
என்னாளும் எனதன்பு
எனையாளும் தேவிக்கே
 
நன்னாளாம் நானவளை
நாழிகையும் பிரியாததே
இன்னலாம் இனியவளுக்கு
இவனின்றி இயங்குவதே

காற்றும் கடலலையும்
கணப்பொழுதில் மாறும்
நேற்றும் என்றென்றும்
நேசமது மாறாது
 
போற்றும் பொன்மானை
பொழுதும் பிரியாது
ஏற்றமுடன் இணைந்தே
எந்நாளும் வாழ்ந்திடவே

வாழ்த்தும்
அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 6

கண்மூடி உனை....

 


நினைத்தவுடன்
நினைக் காண
நித்தமும் ஆசைதான்

ஏழுலகம் தாண்டி
எனைத் தவிக்கவிட்டு
எந்நேரமும் நினைவுகளோடு

ஆகாசப் பயணத்தால்
அன்பேயுனை
அருகிருந்து காணலாம்

ஆயினும்
கண்ணிரண்டை மூடி
கண்ணாளா வாவென்றால்
கணப்பொழுதில் வந்துவிடுவாய்

ஆங்கே..
என்னிதய துடிப்பு
ஏழிசை மீட்டுவதாய்
எகத்தாளம் செய்வாய்

அந்த அன்பிலே
ஆசுவாசப் படுத்திக் கொண்டு
ஆனந்தமாய்தான் இருக்கிறேன்

ஆக
கண்விழித்திருப்பதை விட
கண்மூடி உனை காண்பதிலே
காலங்கள் உருண்டோடுதடா

அ. வேல்முருகன்

ஞாயிறு, டிசம்பர் 7

திரளழகு











திரளழகை தீபவொளி
திருத்தி எழுதிட
முரணேது முந்தானை
முகமன் கூறிட
மரகதவுடல் மச்சானை
மகிழ்ச்சியில் ஆழ்திட
சரசங்கள் பயின்றிட
சரணடை பேரழகே

நின்னசைவின் எழிலில்
நிலவும் நாணுதடி
பின்னலிடை, பின்னழகு
பிதற்ற விட்டதடி
என்னுறக்கம் கெடுத்தே
ஏகாந்தம் கொல்லுதடி
மன்னவனின் மடிசாய்திட
மாயங்கள் நிகழுமடி

இழுத்துப் பிடித்து
இமயமலை யாக்கினாலும்
தழுவும் தென்றலின்றி
தேகம் சிலிர்காதடி
கொழுநன் குதுகலிக்க
கொடுத்தால் சுகங்களடி
செழுமையான காதல்
சேர்ந்திருக்கும் வாழ்வுதானடி


அ. வேல்முருகன்


 

ஞாயிறு, நவம்பர் 30

காதலின் இராகங்கள்














வேண்டாம் என்பது
வேதவாக் கல்ல
வேள்வியைத் தொடர
வேண்டுகோள் என்றே

மோகன இராகத்தில்
மௌனமாய் சுரங்களை
ஆனந்த பைரவியாக்கி
ஆவலைத் தூண்டினேன்

ஏகாந்த வேளையில்
எதிரிசையின் எதிரொலியில்
எதிர்பார்ப்பின் இராகங்கள்
எதுவென அறிகிறேன்

சேர்ந்திசையில் ஓத்திசைவு
சேட்டைகள் சங்கதிகள்
சிறுசிறு அலங்காரங்கள்
சிறப்பென அளிக்கிறேன்

அரோகணம் அவரோகணம்
அத்தனையும சஞ்சரித்து
அப்பாடா என்றே
ஆனந்தத்தில் திளைத்திருக்க

மோகனத்தில் முகிழ்ந்திருந்தவள்
விழித்தெழுந்து வேண்டுகிறாள்
கிழக்கு வெளுக்கும்வரை
கீர்த்தனைகள் பாடிட

மனநிலை அறிந்து
மச்சங்கள் ஆய்ந்து
சுரங்களின் சுரங்கங்களை
சுருதியில் தேடிட

கல்யாணி இராகத்தில்
கரகரப் பிரியாவை
கலந்து இசைத்திட
கண்ணாட்டி கண்ணயர்ந்தாள்

இந்நாட்டில் ஏதுவேண்டும்
என்னவள் எனைத்தூண்டி
ஏதோதோ இராகத்தை
எனையறிய வைத்தாளே….!!!!


அ. வேல்முருகன்  



சனி, நவம்பர் 15

ஆனந்த முத்தம்














அதிர்வில்லா முத்தத்தில்
ஆனந்தம் ஏதடி
எதிர்பாரா வேளையில்
எத்தனைச் சுகமடி
உதிரம் கொதிக்க
உதடுகள் துடிக்க
கதிகலங்கும் முத்தத்தை
கண்ணே வழங்கடி

வழங்கிட பெறுவது
வாடிக்கை என்றிருக்க
வழக்கொன்று தொடுத்து
வாய்தா கேட்பது
அழகல்ல என்றே
ஆட்சேபனை செய்கிறேன்
இழப்பெனக்கு என்பதால்
இழப்பீடும் கேட்கிறேன்

கோரிக்கை என்றாலும்
கொடுப்பது கடமையடி
ஓரிடம் உதடென்றால்
ஒவ்வொரு அங்கமும்
போரிடும் நிலையாகுது
பொழுதை கழிக்காதே
பீறிடும் ஆசைகளை
பிறைபோல மறைக்காதே

மறைத்திட மறுத்திட
மனமது மருகுது
திறைச்செலுத்த தினம்தினம்
தித்தித்து திகட்டுது
முறையான முத்தத்தில்
மூழ்கிட மூலதனமாகுது
நிறைவென நின்முத்தம்
நினைவில் நிலைக்குது

அ. வேல்முருகன்

வெள்ளி, நவம்பர் 7

குறுநகை புரிந்திடு




 











நீ என்னை சந்திக்கும் போதெல்லாம்
இறகுகள் முளைத்து பறக்கிறேன்
உன்னருகாமையில் - நான்
உயிரோடிருப்பதை உணர்கிறேன்

என்றென்றும் எனதானவன் நீ
எனது பகலும் எனது இரவும்
எனது நிழலும் எனது இசையும்
எல்லாமே நீயானதால்

சொல்லிலும் செயலிலும்
சொல்லாத காதலை
என்னில் இருப்பதை
எப்படி அறிய வைப்பேனடா

கோடையில்
கொட்டித் தீர்த்த மழைக்குப் பின்
வானமேடையை அலங்கரிக்கும்
வானவில்லாய்

உன்விழிப் பார்வை
உருவாக்கும் அற்புதங்கள்
என்னில் ஏற்படுத்திய
அதிர்வுகளால் மீளாதிருக்கிறேன்

மனதை நோகடிக்கும் -உன்
மௌனம் கனமானது
குறுநகை புரிந்திரு
குதுகலமாய் நானிருப்பேன்

அ. வேல்முருகன்

வெள்ளி, ஆகஸ்ட் 29

விடியலை நீட்டிக்க

 












துடிக்கத் துடிக்கத்
துவளச் செய்து
கொடியிடைத் தன்னில்
கொட்டும் அடித்து
வடிவழகே வசந்தமே
வசனம் படித்து
அடிமனதில் நங்குரமாய்
அமர்ந்த வேலவா

படிக்கப் படிக்கப்
பசலைத் தீருமோ
முடிவல்ல என்றே
முகக்குறிக் கூறுமோ
விடிவிளக்கு விழிபிதுங்கி
வெட்கத்தில் நாணுமோ
விடியலை நீட்டிக்க
விண்ணப்ப மெழுதுமோ

கடிப்பட்டக் கழுத்தின்
காயத்தை மறைத்து
கொடிபிடித்து குறைத்தீர்க்க
கொழுநனைக் கேட்டவுடன்
அடிமட்டத் தொண்டனாய்
ஆட்சேபனை எதுமின்றி
நொடியில் முத்தத்தை
நூதலில் பதித்திட

செடிதனில் செங்கதிர்
செய்திடும் மாயத்தை
மடிதனில் வீழ்ந்த
மச்சானும் புரிந்திட
நெடிய பயணத்தில்
நேசன் இவனென்று
அடியவள் மனதில்
அச்சாணி ஆனதின்றே


அ. வேல்முருகன்  




வியாழன், ஆகஸ்ட் 14

வரட்சி

 









மெளனம்
மெல்லியாளிடம்
மொழிவதற்கு ஏதுமில்லை
மன்னனிடமும்

நாட்கள் கடந்தன
இணையர்கள் எதிரெதிர்
நடமாடிக் கொண்டாலும்
நட்பொன்றுமில்லை

காரணமொன்றுமில்லை
வாக்குவாதம்
தாக்குவாதமானாதால்
தாமரையிலைத் தண்ணீரானது

பிடிவாதம்
வாய்ப்புகளை
வாய்தா வாங்கிக் கொண்டிருக்க
வரட்சியே நிலவியது

நீயா நானா என்று
தீண்டாதிருந்த போது
வேண்டா விருப்பாக
ஏதோவொரு விசாரிப்பு

பற்றிக் கொண்டது
பஞ்சும் நெருப்பும்
பார்க்கலாம் - அடுத்த
அமர்களம் எப்போதென

அ. வேல்முருகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 10

முத்தக் கோளாறு

 


 

















அன்பை வெளிப்படுத்த

அனுமதிக்கப் பட்ட – ஓர்

அனிச்சைச் செயல்

முத்தம் கொடுப்பதே

 

அங்கீகாரத்திற்குப் பின்

அவளிடம் அவனோ

அவனிடம் அவளோ

அனுமதி கேட்பதில்லை

 

ஆசையைச் சொல்ல

அதன் போக்கில்

அழுத்தமாய் பதிப்பது

அந்த முத்தம்

 

கோபத்தின் உச்சியில்

கொண்டவன் குளிர

கொடுத்தாலும் மறுத்து

கோளாறு செய்பவன்

 

கொஞ்சி மகிழ்ந்து

கொஞ்சம் விலகினாலும்

கொசுறு கேட்டு

கொட்டமடிப்பது முத்தத்திற்கே

 

கடுந்தவ மிருந்தாலும்

காத்திரு என்றே

கவனித் திருப்பாள்

காய்ச்சல் உச்சமாகிட

 

காரணமாயாமல்

கணப்பொழுதும் கடத்தாமல்

காற்றும் புகுந்திடாமல்

கடையேழு வள்ளலாவர்

 

                              அ. வேல்முருகன்

 


திங்கள், ஆகஸ்ட் 4

முழுநிலவு காயுதடா
















முழுநிலவு காயுதடா
முகங்காட்டிப் போயேன்டா
எழுமாசை கோடிகளடா
என்னவென்று கேளடா

எழுபிறப்பும் என்னுடன்
எழுந்தருள வேண்டுமடா
மழுப்பாமல் மாலையிட
மன்மதப் பயணமடா

பேரின்ப வேள்வியில்
பேதங்கள் ஏனடா
கோரிக்கை வைத்தால்
கொண்டாடிச் செய்திடு

பூரிப்பைக் கண்டு
புதியனத் தேடிடு
பாரியாளை வள்ளல்
பாரியாய் உணர்ந்திடு

அத்தானின் வித்தைகள்
ஆய்வுக் களமாகிட
பித்தான என்மேனி
பிணியைத் தீர்ப்பாயா

ஒத்திசைவா நாமிருக்க
ஒவ்வொரு நாளும்
முத்தத்தில் மூழ்கி
முத்தெடுக்க வருவாயா

                         அ. வேல்முருகன்


புதன், ஜூலை 30

இதுவுமொருத் திருமணம்

 

















நட்டநடு வீதியில்
நாட்டிலுள்ளோர் கூடிட
நாயகன் நாயகியை
இணையாய் ஏற்றுக் கொண்டான்

இட்டத்தோடு
இச்சடங்கு என்றாலும்
எதிர்ப்புகள்
இல்லாமலில்லை

அலங்கார மாளிகையில்லை
ஆங்கொரு கோயிலுமில்லை
மங்கல இசையுமில்லை
மக்கள் சாட்சியாயிருந்தனர்

புத்தாடை அணியவில்லை
அத்தரும் ஜவ்வாதுமில்லை
புழுதிப் படிந்த கூந்தலோடு
கசங்கிக் கிழிந்த சட்டையோடும்

அவர்கள் அன்னியமில்லை
அங்கு வளர்ந்தவர்கள்தான்
ஆயினும் ஈன்றவள்
அழுகிறாள், மகளை அடிக்கிறாள்

வலிகளுக்கிடையே
மகிழ்ச்சி - எனினும்
மயான அமைதி
மாலை மாற்றிக் கொண்டனர்

திலகமிட
குலுங்கி அழுகிறாள் தாய்
கண்ணீரோடு நாயகி
அமைதி சாட்சியாய் ஊர்

அவளுக்கும் அவனுக்கும்
ஈர்ப்பு இருந்ததால்
ஊர் சாட்சியானது
ஒரு காதல் வாழ்வானது


                                     அ. வேல்முருகன்

வியாழன், ஜூலை 10

சூட்சமம்

















காதல் சொல்ல வந்தேன்
காதுக் கொடுக்க மறுப்பதேன்
வாதம் செய்து வதைப்பது
வாகைச் சூடி மகிழவா
மோத லென்றும் தொடர்வது
மோகம் கொண்டக் காரணமா
மாதம் மும்முறை வருத்தினாலும்
மாயங்கள் செய்வது முத்தமா

ஆசையாப் பேச வந்தால்
அலட்சியம் காட்டு மன்பே
மீசைக் காரனின் பேச்சு
மீட்டும் வீணையா இல்லையா
ஓசை யின்றி இருந்தால்
ஓய்ந்து போக மாட்டேனடி
பூசைக் குரியது நானல்ல
பூவுல கெங்கும் தேடுமன்பே

ஏங்கும் என்னை வருத்தவா
ஏதோதோ சொல்லி வாட்டுற
தாங்கும் மனது என்றாலும்
தாக்குதலில் வீழ்த்திப் பாக்குற
எங்கும் எதிலும் வெற்றி
என்றே கனவில் மிதக்குற
பொங்கும் அன்பு இல்லாது
புன்னகை முகத்தில் மலராது

எதிர்த்துக் கேள்வி கேட்டிட
ஏனடி முகத்தச் சுருக்குற
அதித அன்பில் அப்படி
அதட்டி வைப்பேன் என்கிற
பதித்த பாவன சீதாராம்
பழகிக் கொள்ளப் பார்க்கிறேன்
சுதியினி சேர்ந்திசையில் மாறாத
சூட்சமம் அறிந்தே நடக்கிறேன்

புறக்கணிப்பு

 













புறக்காரணிகளைச் சொல்லி
புறக்கணிப்புக்குப்
பொழிப்புரை எழுதுகிறாய்
புகலிடம் கேட்டவனிடம்

முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு
அன்பை
ஆய்வுக்கு உட்படுத்துகிறாய்
ஆட்சேபனைகள் கூடாதென்கிறாய்

மென்னிதயம்
என்பொருட்டா மாறியது
அன்பை ஆறறிவால் பார்க்க
கல்லாக்கிக் கொள்ளச் சொன்னதோ

ஏனெதெற்கென
ஏதும் கேட்கமால்
ஆம் போடுவதாயிருந்தால்
ஆகட்டும் பார்க்கலா மென்கிறாய்

உடனிருக்கவும்
ஊர்ச் சுற்றவும்
உத்தரவுகளை நிறைவேற்றவும்
உமா பதியாயிருக்க வேண்டுகிறாய்

அசலனமற்று
அஞ்சலி செலுத்த
ஆயுத்தமாகிறாய்
அடைக்கலமும் மறுக்கிறாய்

கடந்துச் செல்லக்
காரணங்கள்
கண்டுப் பிடித்தப் பிறகு
காதலாவது கத்திரிக்காயவது


                                            அ. வேல்முருகன்  








செவ்வாய், ஜூன் 10

நோய்

 










நோக்கும் கண்களால்
நோயைத் தந்தாய்
நீக்கும் மருத்துவம்
நீயேதான் என்றாய்
தூக்கம் கெடுத்து
துவளச் செய்தாய்
தாக்கும் நினைவுகளால்
தவிக்கவே விட்டாய்

மறதி வேண்டுமென
மனதிடம் கேட்டேன்
துறவுக் கொண்டாலும்
துரத்தும் என்றது
உறவு என்பது
உயிருள்ள வரைதான்
இறவுச் சொல்லும்
இனியில்லை வதைதான்

நினைவுகள் இன்பமென
நியதி ஏதுமில்லை
புனைவுகள் என்றாலும்
புலன்கள் அறிவதில்லை
தினையளவு வெறுப்பு
தீர்ப்பு அளிப்பதில்லை
அனைத்தும் புரிந்தாலும்
அன்புத் தோற்பதில்லை

                                   அ. வேல்முருகன்

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...