திருக்குறள் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருக்குறள் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், நவம்பர் 5

தெவிட்டாத இன்பம்




 








குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.


ஊடிய பிறகு

கூடியதால்
நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்


மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!

வெள்ளி, மார்ச் 1

நெருப்பு

 


 

.

 





 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

                                       குறள் 1104


தகதகவெனத் தகிக்கறாள்
தத்தையைப் பிரியும் பொழுதில்
அகலாது அருகிருக்க
அருஞ்சுனைக் குளிரைத் தருகிறாள்
தகனத் தட்பத்
தலைகீழ் நுட்ப மொன்று
இகத்தில் இவளுக்கு
இலகுவாய் வாய்த்த தெப்படி?

செவ்வாய், அக்டோபர் 3

காதற்கணை

 



குறள் 1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

 



கனியக் கனியப் பேச
காதல் வளரா
தனித்தச் சொல்மொழிந் தாலும்
தவத்தில் கிட்டா
இனிய கண்க ளிரண்டு
இசைக்கும் மொழியில்
புனிதக் காதல் மலருமே
புவன மெங்குமே


வனைந்த சொற்கள் பலவால்
வாராக் காதல்
சுனைபோல் சுரக்கும் கண்ணில்
சுழலும் பாரீர்
வினையாய் மாறிச் சொற்கள்
விளைவைச் சுருக்குமே
நினைத்த வுடனெழும் காதலில்
நீள்விழி இணையுமே

 

ன்பன்
அ. வேல்முருகன்

 

செவ்வாய், ஆகஸ்ட் 15

கண்களின் ஆற்றல்




 
குறள் 1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து


அஞ்சனம் தீட்டிய
அவளின் கண்கள்
கொஞ்சி அழைத்து
குற்று யிராக்கியது
தஞ்ச மென்றேன்
தன்நிலவாய் குளிர்ந்த
வஞ்சியின் கண்கள்
வைத்தியம் பார்த்தது

பாவல னாகி
பல்லக்கில் போவதும்
கோவல னாகி
கொலைகளம் செல்வதும்
ஆவலர் அவரவர்
அன்பின் ஆற்றலே
ஆவதும் அழிப்பதும்
அழகிய கண்களே 


செவ்வாய், ஜூன் 15

நாணமற்ற மாந்தன்

 


புல்லறிவாண்மை

குறள் 846:

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.



ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்


திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே

கற்றும் கல்லார்

 






புல்லறிவாண்மை


குறள் 845:


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.


அறியாததை அறிந்ததாய்
….. அறிவில்லார் உரைத்திட
அறிந்ததை அறிந்தாலும்
…… அய்யுறுவர் உலகத்தவர்
அறியாததைப் பிழையுடன்
….. ஆங்கே பொழிந்திட
நெறியிலார் இவனென
….. நினைவூட்டி காட்டிடும்


கற்றதைக் கசடற
…… கற்று இருந்திட
மற்றதை அறிந்ததாய்
….. மயக்கிப் பசப்பிட
கற்றவர் ஒப்பிடார்
….. கல்லாமை உணர்வரே
வெற்றியை விரும்பிட 
….. வேண்டாம் பொடிதலே

திங்கள், மே 24

வினை விதைத்தால்

 



குறள் 207

 

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

 

  

பகையுடை வேந்தனுக்கு

  ………  பலவழி  உண்டு மீள்வதற்கு

பகைதனை அஞ்சாது

   ……… பழிபாவச் செயலைச் செய்திட

வகைவகையாய்த் தீவினை

   ……… வழமையாய்த் தொடரும் மானிடனை

மிகையானத் பகையே

   ………  மடியும்வரை தொடர்ந்து அழித்திடும்

 

 

தீயதுச் செய்தவனை

   ……… திரும்பித் தாக்கிக் கொல்லும்

ஆய்ந்தால் அவன்செயல்

   ………. அவனுக்கு என்றே புரியும்

வீயாது என்பது

   ………. வினைக்குத் திணையல்ல என்பதாம்

மாய்க்கும் வரையில்

   ………  மானுடனைத் தொடரும் தீவினையாம்  


ஞாயிறு, ஏப்ரல் 25

திடீர் செல்வம்

 


குறள் 837

 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

 


ஆய்ந்தறியும் திறனில்லா
     அறிவிலியின் செல்வத்தை
வாய்ப்புக் கிடைப்போர்
     வாரிவாரிச் செல்வர்
ஏய்ப்பது அறியா
     ஏமாறும் பேதையர்
தேய்ந்துக் கிடக்கும்
     தோழமைக்கு உதவார்


பெருஞ்செல்வம் படைக்கும்
    பாதையை அறியாதவன்
திருவருளால் கிடைத்ததை
    தீயவர் புசித்திருக்க
வெற்று மனிதனாய்
    வேடிக்கைப் பார்ப்பான்
சுற்றமோ வாடிடும்
    சூழ்நிலையில் வருந்திடும்

வியாழன், மே 14

வாட்டல்




தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று
                                                                                                    குறள் 1318


ஊடுவாள் எனவறிந்து
உள்ளடக்கினேன் தும்மலை
உணர்ந்தாளோ என்னவோ

உம்மவள் நினைப்பதை – நான்
உணராதிருக்க
உள்ளடக்கினீரோ என வதைத்தாள்

புதன், ஜூலை 10

மாலையின் வேலை




மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன் 

                                                                                                                     குறள் 1226
அறியேன்
 மாலை - எனை
 கொல்லும்  வேளை - என

 மணவாளன் உடனிருந்த
 மாலை யெல்லாம்
 மகிழ்ந்த வேளையால்

சனி, டிசம்பர் 29

இணைதல் பிரிவிற்கா?




இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு  

                                                            குறள் 1152
கண்கள் தழுவிட
கண்டேன் சொர்க்கம்
அந்நாளில்

உடலை தழுவிட
உணர்த்துதே பிரிவை
இந்நாளில்

ஞாயிறு, டிசம்பர் 2

தேடல்




விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி.     
                                                            குறள் 1210


கடந்த நிமிடம் வரை
கண்முன்னிருந்தான்
காணாது சென்றான்

நிலவே
நீயெங்கும் செல்லாதே
நினதொளியில்தான் - அவனை
தேட வேண்டும்

செவ்வாய், நவம்பர் 13

மாலை எனை வாட்டுது



பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர்

                                                                                                   குறள்  1230

சென்றனன்
செல்வம்  தேடி
செல்லாதிருந்தது உயிர்

ஆயினும் அந்திமாலை
அவனை நினைவூட்டி
அடியவளைக் கொல்லுது

சனி, நவம்பர் 3

வாழ்க்கைச் சூத்திரம்



வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி
                                                            குறள் 1192

பருவம் தப்பிய மழையும்
பார்த்து பழகாத காதலும்
பட்டு காய்ந்து சருகாகும்

பருவ மழையும்
பார்வை தீண்டலும்
பாரினை இயக்கும்


புதன், அக்டோபர் 3

காதல் வளர்ந்த கதை


கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
குறள் 1144  


அவளோடு பேசுவதாக
அவரவர் பேசினர்
அதுவே எங்கள்
அன்பை வளர்த்தது

ஊர்பேச்சே
ஊக்கமானது
உள்ளம் சேர
உபகாரமானது

அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் நானும்
இற்று போயிருப்பேன்

திங்கள், செப்டம்பர் 17

தடுமாற்றம்



புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு.                                                   குறள் 1259


காணாதது போல்
காதலனை ஊடலால்
கண்டபடி
வதைக்க நினைத்தேன்

அவனை கண்டவுடன்
அனிச்சையாக - நெஞ்ச(ம்)
அணைக்க
ஆரத் தழுவினேன்







சனி, செப்டம்பர் 15

மாலை மயக்கம்




பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து.
                                                                                                    குறள் 1229

அறிவை மயக்கும்
அந்தி மாலை
அடியவளை மட்டுமல்ல
அகிலத்தையும் வாட்டும்


திங்கள், ஜூன் 4

ஊடலும் கூடலும்

 



ஊடி யவரை உணராமை வாடிய 
வள்ளி முதலரிந் தற்று.                                                  குறள் 1304

வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்

கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்

அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்

சனி, ஜூன் 2

கண்கள்

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்.                                                        குறள் 1084




போர்குணமாய்
பேதையின் -கண்கள்
ஆயினும்
அமைதி தவழும்
அணங்கவள்

முரணாய்
உயிரை பருகவோ -அல்ல
உள்ளம் உருகவோ
ஏனிந்த மறுபாடு
என்னவளே

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...