சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 23

கரப்பான் பூச்சி














 வேலையற்றவர்கள்
 வீதிக்கு வாராது,
 “விதியே” என்று
 விடியலுக்கு தவமிருக்க,

 அதிகாரத்தைச் சுவைத்த
 ஒட்டுண்ணிகள்
 அதிகாரமற்றவர்களுக்கு
 அளித்த பெயர்.
 
    ஆண்டு கணக்காக
    அநீதியாய் வாய்தா;
    மீண்டதோ நியாயம்—
    மக்களின் சோம்பலால்.

    சமூக வலைதளங்களில்
    சந்தி சிரித்தாலும்,
    ஊழல் மயமானவர்கள்
    ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.

    ஊடகமெல்லாம்
    ஊனத்தால் சார்ந்திருக்க,
    ஊமையான மக்கள்
    ஊர்வலம் வந்திட,

    கரப்பான் பூச்சிகள்
    கரையானாய் பரவ,
    கலங்கியது நீதியா?
    கார்ப்பரேட் அரசா?


    அ. வேல்முருகன்

திங்கள், மே 11

சனகன் மகளாயினும்











எனக்கு மாற்றென
யாரைத் தேடுகிறாய்?
வனப்பு குறைவென்றா
வடிகட்டப் பார்க்கிறாய்?

முன்பின் பழகாமல்
முந்தானையில் முடிச்சிட்டால்,
முதல் நாளே குழப்பங்கள்,
முரண்களின் அணிவகுப்புகள்.

சரியான இணையென
சந்தித்த நொடிகளில்
சாதகமாய் சொல்லுகின்ற
சந்தோஷங்கள் நிலைப்பதல்ல.

னகன் மகளாயினும்
சங்கடங்கள் உண்டு.
வினாக்களுக்கு விடையுண்டு
விவேகத்துடன் தேர்ந்தெடு

உனை இழக்க விரும்பாததால்
உரிமையோடு சொல்கிறேன்
உருவங்கள் மாறினாலும்
உள்ளக்கிடக்கை யாரறிவார்

முற்றிலும் வலியற்று,
முத்தங்களில் மூழ்கி,
மினுமினுக்கும் காதலெல்லாம்
புனைவுகளிலும் கனவுகளிலும்.

ஆகச் சிறந்த இணைகளாய்
திரைப்படங்களில் மட்டுமே
கற்பனைகள் அல்லவே காதல்;
வலிகளோடுதான் ஆரம்பம்.

முற்றும் முழுமையாய்
முகவரி அறிய
விலகிச் செல்லாது
கற்றுக் கொடு

அறிதலும் புரிதலும்
அந்த நொடியில் நிகழாது;
பரிவும் பற்றுமே
பாதை வகுக்கும்.

துள்ளி மகிழ்ந்திட
துணையிடம் பட்டியலிடு;
அள்ளிக் கொடுத்திட
ஆவணச் செய்கிறேன்.

எது உனை மகிழ்விக்கும்
என அறியா மடந்தையிடம்
எண்ணங்களை சொல்லிடு;
ஏற்றப்படி மாறிக் கொள்கிறேன்

அனைத்தையும் சொல்லாதே — நின்
அகம் மகிழும் விருப்பங்கள்
அறிந்துகொள்ள விழைகிறேன்;
அதற்கேற்றாற்போல் மாறிக்கொள்ள.

பேரிடிகள் வந்தாலும்
பின் நிற்பது நானென
பெரு நம்பிக்கை கொள்;
பேதலித்து விடாதே.

கடந்து செல்லாதே;
கடமையில் குறையிருப்பின்
கட்டியணைத்து பேசு—
கரையேறிட வழியுண்டு.

நான் கவனிக்காததை
நச்சென சுட்டிக்காட்டு- நின்
கணிப்புகள் மாறாது
கடைப்பிடித்து காட்டுகிறேன்.

பற்றாக்குறை காலத்தில்
பதுக்கி விற்பதல்ல;
பருவங்கள் மாறினாலும்
பாசங்கள் மாற்றமில்லாதது.

அத்தகைய காதலை
அருகிருந்து கட்டமைக்க
அன்னியோன்யம் பிறக்கும்;
அகவிருள் விலகும்.

உண்மையான காதல்
ஒன்றிணைந்து வளரும்;
ஒவ்வொருவரின் நிறைகுறைகளை
நிதர்சனமென ஏற்கும்.

அ. வேல்முருகன்


செவ்வாய், மே 5

அசமத்துவ அகிலம்

 










பேராசை சமூகத்தின்
பெரும் மன்னன்
பேரங்கள் நடத்துவது....

ஈரானை வீழ்த்தவா,
இஸ்ரேலை மகிழ்விக்கவா,
இலாபங்கள் ஈட்டவா?

எண்ணெய் ஆதிக்கத்தில்
ஏறும் விலைவாசி
என்னை பாதிக்குமா?

கொலை, கொள்ளை
குற்றமில்லை என்றோத...
ஐ.நா.வும், அமெரிக்காவுமா?

அகோரப் பசிக்கு
அட்சயப் பாத்திரமாய்
அரசியல் பதவியா?

தேசங்களின் இறையாண்மை...
தீர்மானிப்பது வல்லரசுகளா
பன்னாட்டு நிறுவனங்களா

பேரண்டம் யாரையும்
பேதமாய் பார்க்காதபோது
பேரரசு என்பது மாயையா?

வான் பாதுகாப்பென்பது
வளிமண்டலத்தை
வஞ்சிப்பதா?

செயற்கை நுண்ணறிவில்
தானியங்கி ஏவுகணைகள்—
கற்காலத்தை நோக்கியா?

எல்லோருக்கும் எல்லாம்
என்பது பெருங்கனவா,
ஏற்றத்தாழ்வே நீதியா?

அசமத்துவமே அகிலத்தின்
அடிப்படை கொள்கையா?
அதனை மாற்றதான் முடியமா?

.வேல்முருகன்


சனி, மே 2

தாலி

















பண்பாட்டின் சடங்கா?
பாவையின் அங்கமா?
எண்ணில்லா வடிவமா?
எதற்கென்று தெரியுமா—
பெண்ணினை அடிமையா,
பேரண்டம் முழுமையா?
கண்ணியாய் கைவிரலில்,
கழுத்தினில் கட்டியதோ?

அத்துகட்டி வாழ
அவளுக்குச் சுதந்திரமா?
வித்துபுட்டு குடிக்க
வீட்டிலிருக்கும் பண்டமா?
நித்தம் சுமங்கலியா,
நீங்காத அணிகலனா?
செத்துபுட்டா அறுத்து
செல்வியாக முடியுமா?

இடைஞ்சலென இரவில்
இலட்சினையைத் துறப்பதில்,
உடையவனும் உடன்பட,
ஊமையாய் கிடுமூரே;
அடையாள அடிமையிடம்
அக்கறை இல்லையெனில்,
மடைமாறும் அன்புதான்
மகமாயி மகிழ்ந்திடவே.

அருஞ்சுவை அன்பும்
அருகாமை இன்பமும்
கருப்பை நிரப்பல்ல
களிப்புடன் வாழ்ந்திடவே
பெருஞ்சுமை என்றானால்
பெரும்புராணம் ஏதுமின்றி
விரும்பியவழிச் சென்றிட
விவேகம் என்றறிந்தே

அச்சத்தில் ஆண்டாண்டு
அடையாள மாக்கியதை
துச்சமென தூக்கிவீசி
துணையிது வல்லவென்றே
இச்சமயம் இவளுரைக்க
இச்சட்டங்கள் மாளட்டுமே
சச்சரவின்றி சரிசமமாய்
சமூகத்தில் வாழட்டுமே


அ. வேல்முருகன்


புதன், ஏப்ரல் 22

உச்சநீதிக்கு -வாதம் -1

 










படைத்தவனை
பார்க்க அனுமதி வேண்டிட,
பாராமுகமாய் இருந்ததால்
பஞ்சாயத்து.

இயல்புகளுக்கு முரணாக
இறைவன் இருப்பதால்,
இப் பெண்களை
18-ஆம் படியில் பார்க்க விரும்பவில்லை.

அரசியல் சாசனம்
அர்ச்சகர் ஆவதற்கு
அனுமதி 25(2)(பி) கீழ் வழங்கினாலும்,
அதற்கும் தடை விதித்திட.

நிரந்தர பிரம்மச்சாரியின்
நிஷ்டை கலைந்திடுமோ,
நீள்விழி முலையுடைய மாதை
பட்டினத்தான் கண்டது போல்.

ஜெயமாலாவின் வாக்குமூலம்
ஜெயிக்கவில்லை என்றாலும்,
மனோரமா, சுதா சந்திரனுக்கு
அபராதம் விதித்து காத்தனர்.

தீண்ட அனுமதி இல்லை எனில்,
தீர்ப்பு எழுதுவதற்கு முன்
தீண்டித்தான் பார்ப்போம்—
தீர்ப்புகள் திருத்தப்பட?!!



வாதம் தொடரும்
அ. வேல்முருகன்

திங்கள், செப்டம்பர் 1

வீதிக்கொரு கோயில்


 









வீதிக்கொரு கோயிலுண்டு
வீணாக மக்களை பிரித்துக்கொண்டு
சாதிக்கொருச் சாமியுண்டு
சட்டமாக்கி வைத்துக் கொண்டு
ஆதிக்கச்சாதி அத்தனையும்
அவர்களே உயர்ந்தவர்களென்று
சாதிக்க நினைப்பதை
சமாதிக்கு, என்று அனுப்புவதென்று

கேள்விகேட்டது யார்யார்?
கேட்காது முட்டாளாய் வாழ்வதுயார்?
நாளும் நட்சத்திரமும்
நடமாடுமுனை பாதிக்குமென சொன்னவரா?
மீளும்வழி இதுவென்று
மேடைதோறும் முழங்கிய பெரியோரா?
ஏளனசாதி என்பதற்கு
ஏன்உன் சாமியும் அடையாளமாகுதையா!!

சாதிகுல பெருமையெல்லாம்
சரித்திரத்தில் வீழ்ந்து கிடக்குதையா
மேதினியில் மேனிமறைக்கும்
மேலாடைக்கு வரிவிதித்தது யாரய்யா
நீதிவேண்டு மெனில்
நீதுறக்க வேண்டியது சாதியல்ல
ஆதிகுலச் சாமிகளை
அபகரித்த அவதாரக் கடவுள்களை

புத்தனை ஓழித்ததேன்
புத்தியை தீட்டு என்றதனாலே
பித்தான நம்பிக்கையால்
பிறமதக் கடவுளை வெறுத்ததேன்
முத்தான உடன்பிறப்பு
முப்பாட்டன் சாமியை மறுத்திட
தத்துவம் எதுவென்று
தள்ளாடல் வந்தால் நீமானுடனே

மொழியால் உன்னின
முகவரி போதுமென நினைத்தால்
வழிவழி வந்த சாமியும்
வாமனனாய் விரிந்த சாதியையும்
குழித்தோண்டிப் புதைத்திட
கூட்டுறவில் மனிதம் வாழ்ந்திடும்
அதைத்தாண்டி ஆதிசங்கரன்
அவதரித்தாலும் அன்புதான் செழித்திடும்


அ. வேல்முருகன்

திங்கள், ஜூலை 7

அரோகரா...................









சங்கிகளுக்கு
சளைத்தவர்களில்லை என
பழனியில் பட்டம் பெற்றவர்கள்
பதவிகாலம் முடிவடைவதால்

பதினாறு ஆண்டுகள் கழித்து
பக்தக் கோடிகளை
பரவசப் படுத்தப்
பரபரப்பாய் திருச்செந்தூரில்

அரோகரா...................
அவனென்னச் சொல்வது
அறநிலையத் துறை - அதிகாரம்
அடியேனிடமிருக்க

கோடிகளைப் புரளவிட்டு
கொள்கை வெங்காயத்தை
கொற்றவன் புறந்தள்ளி
கோஷத்தை மாற்றினான்

புனித நீரைத் தெளித்து
பாவப் பட்ட மக்களை
இரட்சிப்பதன்றோ ஆட்சியாளர்களின்
பகுத்தறிவு

அறுபடையில்
முதலாம் படை வீட்டை
முருக பக்தர்கள்
முற்றுகை யிட்டதால்

இரண்டாம் படைக்கு
இன்று குடமுழுக்கு
மற்றபடை வீட்டில்
மசூதியில்லை அவர்களுக்கு

குடமுழுக்கு
யாகசாலைகள்
தடங்கலின்றி ஆட்சியைத்
தக்க வைக்குமோ

பொற்றாமரைக் குளங்களும்
ஆறுகால பூஜையும்
ஆழித் தேரோட்டமும்
பொற்காலமென எழுதிட

திராவிட மாடலில்
இறங்காத விலைவாசியை
புறந்தள்ளி பம்மாத்தாய்
குமரனுக்கு அரோகரா .............


                                 அ. வேல்முருகன்

வெள்ளி, மார்ச் 28

விவசாயம் காப்போம்















காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு

வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்

சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்

இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே

கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு

கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்

வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க

மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க


                      அ. வேல்முருகன்







புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



சனி, ஜூன் 1

ரஃபா









அவர்கள்
எங்க வீட்டை
குண்டுகளால் அழித்து விட்டார்கள்

புழுதிப் படிந்த உடலோடு
குருதி வழிய
புலம்பிச் செல்பவள்

அயலகத்து குழந்தை யென்று
தியானத்திலமர்ந்து
கடந்துச் செல்லாதீர்கள்

எதற்காக எனவறியாது
யாராலெனப் புரியாது
குழந்தைகள் மரணிக்கின்றன

அதே மதவாதம்
எதேச்சையாக
எங்கும் நிகழலாம்

அதிகார போதையில்
ஆங்காங்கு பிரித்தாளும்
ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்

வேட்டுச் சத்தம்
கேட்டுக் பழகியிருக்கலாம்
வாழ்ந்து பாருங்கள்

சிறுச் சத்தத்திற்கு
மரணத்தை எதிர் நோக்கி
திடுக்கிட்டெழும் சிறார்கள்

ஐந்து இலட்சம் குழந்தைகள்
ஐயோ……….
ஆரும் கேட்பாரில்லை

ஐக்கிய நாடுகள் சபை
ஆட்சியாளர்கள் சார்பாக
இரைஞ்சுவதாக நடிக்கிறது

ஹார்வர்ட் பல்கலை மாணவர்கள்
பாதகை தாங்கி – உலகை
பார்க்கத் தூண்டுகிறார்கள்

விடுதலை தாகத்தோடிருந்தவனா
கொலைகளத்தை விரிவுப்படுத்தி
சாத்தானாக மாறிவிட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இந்த இனம் - யாருக்கு
இறப்பைக் காணிக்கையாக்குகிறது

அகதியாய் முகாம்களில்
ஆயினும் வான்தாக்குதலில்
ஆயிரமாயிராய் கொல்லப்பட

நிலத்தின் எல்லையா,
மதத்தின் தேவையா
இனத்தின் மீதான வெறுப்பா

குற்றம் புரியாத
குழந்தைகள் கொலையாக
குற்றம் புரிந்தவன் யார்?

அமெரிக்காவை
ஐநா சபையை ஆட்டுவிக்கும்
இஸ்ரேலியர்கள்

உளவில், சிந்தனையில்
உயர்ந்தவனாய் வேடமிடலாம்
ஆயினும் மானுடத்தின் எதிரிகள்

நீதி வேண்டுவது
“ரஃபா” வுக்கு மட்டுமல்ல
மானுடத்திற்கு



அ. வேல்முருகன்

திங்கள், ஏப்ரல் 1

டி.எம். கிருஷ்ணா

 




கர்நாடக சங்கீதம்
கருவறை பொக்கிஷமா
காப்பாற்ற வேண்டுமென
கதறுதே ஓரு கூட்டம்

ரஞ்சினியும் சுதாக்களும்
ராக ஆலாபனையில்
ரசாபாசம் உள்ளதென்றா
ரசிகையாய் ஆட்சேபிக்கின்றனர்

சுருதிபேதம் உள்ளதாய்
துஷ்யந் ஸ்ரீதர் உரைப்பது
சுத்த கர்நாடகமாய் இல்லாது
சிந்தித்து செயல் படுவதா?

தாளகதி மாறியதோ
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணம் வீசுமென்று
மேடையில் கலகக்குரலோ

இராமா ஏழுந்திருவென
அட்சர சுத்தமாய்
அவாள் மட்டும்தான்
ஆலாபிக்க முடியுமா

இசை மக்களுக்கா
இல்லை கலைக்கா
கோபுர வாதிகளுக்கா
கோபுரத்தின் உள்ளிருப்பவருக்கா

இராமனை பாட வேண்டியவன்
இராமசாமியை பாடியதாலும்
சலாத்துல்லா சலாமுல்லா என்று
இசையை இணைப்பதாலும்

சங்கீத கலாநிதி
அகௌரவம் ஆனது
சங்கீத வித்வத் சபை
சந்திக்கு இழுக்கப்பட்டது

சந்தைக்காக
அமெரிக்கா, பிரான்ஸில்
அரங்கேற்றம் செய்பவர்கள்
காசுக்குதானே விற்கிறார்கள்

கலை
வர்க்க பேதமற்றது
கடைக்கோடி ரசிகனின்
ரசனையை உயர்த்துவதும் அதுவே

பண்ணைபுரத்து ராசைய்யா
பாடியது மக்களிசைதானே
மாநிலமல்ல மண்ணுலகமெல்லாம்
மருகி உருகுதுதானே

உயர்குடி இசையை
ஊருசனம் ரசிக்கல
உன்சாதி மட்டுமே
ஒய்யாரமா நினைக்குது

ஒப்பாரி வைக்கும்
ஒன்றுமில்லா இசையை
ஒருவருக்கும் ஓதாது
ஒளித்து வைப்பதால் உயர்ந்ததா?

பொதுவெளியில்
பொற்காசு கிடைக்குமென்று
பிதற்றலை பரப்புவர்கள்
புனிதமென்று கூவுவதேன்

புறகணிப்பதால்
புனிதம் மீட்கப்படுமோ
புறகாரணிகள் வேறுவேறு
புறந்தள்ளுங்கள் இவர்களை

கற்றலுக்கு உரியவை
கலையும் அதன் நேர்த்தியும்
ஏகலைவன்
எப்போதும் கற்பவனே

ஏனோ
வர்ண பேதத்தை
வாழ்வில் நுழைத்து
வாராது காம்போதி என்றதை

ஆமோதிக்காது - கலை
ஆருக்கும் உரியது
அனைவரும் கற்கலாம்
அது கர்நாடகமாயிருந்தாலும்

இனப் படுகொலை
ஈவெரா வேண்டியதாய்
இட்டுக் கட்டும் காதைகள்
ஏராளமாய் கடந்தும்

பெண்ணடிமை விலக
போராடியப் பெரியாரை
பெண்ணே இழித்துரைப்பது
பேதமை எனினும் பொய்கள்தானே

ஆண்டைகளின் அதிகாரம்
ஆங்கு முடிவுற்றதால்
அவதூறுகளை
அள்ளித்தெளிக்கின்றனர்

அசாதாரணத் திறமையிருந்தும்
அங்கிகாரம் வேண்டி
அவாளாக வேடமேற்றதாய்…….
அதுவொரு விமர்சனம்

கொட்டு அடிக்க
கோமாதா தோல்
அக்லக்கை கொல்ல
கோமாதா புனிதமாகிறது

இந்த அரசியலை
இதுவரை பேசாதவர்கள்
சிந்திக்கச் சொன்னவர் என்றவுடன்
சினம் கொள்கின்றனர்

கலைஞர்களுக்குள்- இது
காலை வாரும் அரசியல்லல்ல
கற்றல் பரவலாக்குவதை
காயடிக்கும் அரசியல்

அ. வேல்முருகன்

 


வெள்ளி, மார்ச் 1

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

புதன், நவம்பர் 15

மரணமா மதங்களுக்கு





நிலையானது ஏதுமில்லை
ஆன்மா இல்லவே இல்லை
துன்பம் உண்டு

தோன்றியது மாறும்/மறையும்
எனக்கு மீறிய சக்தி
எதுவெனக் கேள்

ஆம். உண்மையை
உரக்கச் சொன்னால்
மார்க்கம் மரணித்துப் போகும்

ஆசையே துன்பங்களின்
அடிப்படைக் காரணம்
அய்யோ வேண்டாம் பௌத்தம்

அனைவரும் சமம்
ஆன்மாவே கடவுள், பற்றற்றிரு,
என்றதனால் துரத்தினர் சமணத்தை

கற்பித்தவன் மக்கலி கோசாலர்
கல்வெட்டு ஆதாரமில்லை என்பதால்
கடைபிடிக்கவில்லை ஆசிவகத்தை

கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே என்றாலும்
கடவுள் அருளியதால் கடைபிடிக்கறோம்

என்னை நம்பு
நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை
என்னையன்றி ஓரணுவும் அசையாது

நால் வருணத்தை படைக்க
நான்முகன்
மூவுலகை காத்திட விஷ்ணு

படைக்கும் மந்திரத்தை படைத்தவன்
அழிக்கும் தொழிலின் நாயகன்
ஆனந்த தாண்டவமிடுபவன்

அண்டச் சராச்சரங்களை
ஆதியும் அந்தமமும் இல்லாதவன்
காத்திடும் பலகதைகள்

இந்துவாக ஒருங்கிணைந்தனர்
அதர்மம் தலைத்தூக்க
அவன் வருவானென காத்திருக்கிறார்கள்

பாவத்தின் சம்பளம் மரணம்
பாவிகளை மிரட்டினாலும்
பாவ மன்னிப்பு உண்டு

பரிசுத்த ஆவியால்
பிறப்பைக் கண்டவர்
மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்

பத்துக் கட்டளைகளை மறந்தாலும்
பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்
பக்தியோடு திருச்சபைக்கு வந்தால்

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்

வணக்கத்திற்குரியவன்
அல்லாவை தவிர
வேறு யாருமில்லை

அல்லா அனைத்தையும்
கவனித்துக் கொண்டிருக்கிறான்
தீர்ப்பு வழங்க வருவான்

தொழுகையும், நோன்பும்
மற்ற நற்காரியங்கள்
அல்லாஹ்வுக்கு விருப்பமானவை

துன்பத்தில் உழலும் போது
தேடி அழைப்பாயெனில்
வழி காட்டுவர்

தீய கருமங்கள்
தேவையைப் பொருத்தே
நிகழ்கிறது

எனவே தண்டனைகள்
இவ்வுலகில் கிடைத்தாலும்
மேலுலகில் மன்னிக்கப்படுகிறது
அனைத்தும் நானே
நம்பிக்கையோடு வா
நற்கதி அளிக்கிறேன்

நால்வகை மதங்கள்
நம்பிக்கையை விதைப்பதால்
நீண்டு வளர்கிறது மதம்

என்னையே கடவுளாய் ஏற்பாய்
இருக்கும் கிளைகளெல்லாம்
போலி என்றே உணருங்கள்

ஏமாறும் கூட்டம்
எண்ணிகையில்
பெருகிக் கொண்டிருக்கிறது

காசு உள்ளவன்
கடை திறக்கிறான்
கல்லா நிரப்ப மட்டுமல்ல

அதிகார வர்கமாய்
அய்யோ பாவங்களை
ஆட்டிப் படைக்க

ஆசையைத் துறப்பதும்
அவன் எனக்கு சமமா என்பதும்
அடிப்படையில் வேறு வேறு

ஆக
ஆசிவகம், பௌத்தம்
சமணம் சாமதியானது.





பாலஸ்தீனம் இஸ்ரேலாகிய கதை


















ஆபிரகாமின் புதல்வர்கள்
இஸ்ரவேலரின் குழந்தைகள்
கடவுளை ஒளியாய் கண்டவர்கள்
யூதர்களாம்

யூதனாய் பிறந்தவன்
இறைதூதன் என்றே வந்தான்
இறைவனாக்கப் பட்டான்
கிருத்துவனாக்கப்பட்டான்

அந்த மண்ணிலிருந்தே
அவதரித்த முகமது நபி
தானும் இறைதூதனென்றான்
அல்லாவே கடவுளென்றான்

யெருசலேம் என்பது
அமைதியின் உறைவிடமாம்
மும்மதத்திற்கும்
புனித இடமாம்

கிமு-வில்
கிரேக்கத்தின் அடிமையாய்
கிபி-யில்
இட்லரின் இரையாய் யூதர்கள்

1948 வரை
இஸ்ரேல் எனும் நாடு
உலக வரைபடத்தில்
ஒரு புள்ளியாகவும் இல்லை

நாடு கட்ட யூதர்கள்
பணம் கொடுத்து
பாலஸ்தீனர்களின் பாலையை
பட்டா நிலமாக்கினர்

பத்தாது என முடிவெடுத்து
படைத் திரட்டி ஆக்கிரமித்தனர்
அமெரிக்காவும் இங்கிலாந்தும்
ஆமோதித்தது

இஸ்ரவேலரின் பிள்ளைகள்
பத்துக் கட்டளைகளை
பரிதவிக்க விட்டு
இஸ்ரேலை உருவாக்கினர்

மேற்கு முனையும்
காசா துண்டும்
பாலஸ்தீனர்களின்
பற்றாக்குறை தேசமானது

ஐக்கிய நாடுகள்
ஆட்டத்தை வேடிக்க பார்க்குது
அரபு நாடுகள்
அரற்றிக் கொள்ளுது

பாலஸ்தீனியர்கள்
அவர்கள் மண்ணில்
அந்நியப் பட்டு நிற்கிறார்கள்
அனுதாபங்கள் வேண்டாம்

அகிலத்தின்
அறிவுஜீவி என்று
அரற்றிக் கொள்ளும் யூதன்
மனிதனைக் கொல்கிறான்

பணம் கொடுத்து வாங்கியவன்
பகட்டாய் வாழ்வதும்
பணத்தால் ஏமாந்தவன்
பரதேசியாய் வாழ்வதும்

மதங்கள் போதித்தவையா
மானுடம் மறந்தவையா
மண்ணின் மைந்தர்கள்
மனிதனாய் இருப்பதில்லையா?

பரிசுத்த வேதகாமம்
பாவிகளை உருவாக்குகிறது
தோராவும் குரானும்
குறுக்கே வாராது நிற்கிறது

பாவ மன்னிப்பு
பரலோகத்தில்
பார்த்துக் கொள்ளலாமென
யூதர்கள் யோசித்தார்களா

குழந்தைகளையும்
மருத்துவ மனையையும்
குறிப்பிட்டுத் தாக்கும்
இலக்கானதேன்?

நாடிழந்து
நட்டநடு காட்டில்
கூடாரத்தில் வாழும்
கற்காலச் சூழலேன்

அகதியாய் வெளியேறவும்
ஆங்கே வழியில்லை
எல்லைகளை மூடி
அப்பாவிகளை முடுக்குவதேன்

மானுடமென்பது
மனிதனை மனிதன் நேசிப்பது
மதங்கள் என்றும்
மனிதனை உலகில் பிரிப்பது

மூன்றடி மண் கேட்ட
புராணக் கதை தெரியுமா
இன்று இஸ்ரேல்
ஏவுகணைகளால் கேட்கிறது

ஞாயிறு, நவம்பர் 5

வாழத்தானே இணைந்தனர்

 



கண்கள் கனிய
காதல் அரும்பியது
கைப் பிடிக்க
கழுத்து அறுப்பட்டது

விரும்பிய உள்ளங்கள்
வீம்பான பெற்றோர்கள்
விலையானது உயிர்கள்
விளையுமோ அன்பு

விளைந்த அன்பை
வேரறுக்க நினைத்தது
வேண்டாத சாதியில்லை
வீரதீரமிக்க ஆணாதிக்கமே

வாழத்தானே பெற்றாய்
வாழத்தானே இணைந்தனர்
வழியில் வந்ததெது
வரட்டு கௌரவமா?

சிந்தனைகள் மாறிட
சிந்திய ரத்தங்கள்
சீராக்குமா சமூகத்தை
சீழ்பிடித்து மாளுமா?

சாதியும் கடவுளும்
சரிசமமா யில்லை
சக்ரவர்த்தியும் சமானியனும்
சம்பந்தி யாகுவதில்லை

சந்ததி தழைக்க
சரித்திரம் படைக்க
சமத்துவம் கொடாது
சாக்காட்டைத் தந்தானே

உலக இயக்கத்தின்
உன்னதம் காதலே
உலகறிவற்றவனே
உயிரைக் கொய்தானே

உயிர்கள் ஒன்றென
உணர்ந்திட முடியாதோ
உறவைக் கொண்டாட
உன்மதம் தடுக்குதோ

ஐந்தறிவும்
அன்போடு வாழுதே– உன்
அகங்காரம்
அக்காதலைக் கொல்லுதே

ஊரும் உறவும்
உருகி அழுகிறது
உருவ மழிக்க
ஊழென இருப்போமா

முயன்ற உள்ளங்களை
முகிழ விடாது
முக்கரம் கொன்றாலும்
மூளுமே காதல்தீ

திங்கள், பிப்ரவரி 13

காதலர் தினம்






மடலேறி
மடல் வரைந்து
மடந்தையைக் கவர்ந்தவர்கள்
மலரில் தஞ்சடைந்த நாளோ

களவொழுக்கம் கண்ட
தலைவன் தலைவிக்கா
கண்டதும் காதல்கொண்ட
தற்கால காதலர்களுக்கா

தூதாய் வரும் தோழியா
துருவங்கள் இணையும் மொழியா
துறவறம் போகும் வழியா
துன்பத்தில உழலும் ஆழியா

காற்றுமழை பருவத்தே வருவதுபோல்
காளைப் பருவத்தில் வருவதன்றோ
கூற்றுக் கிரையாகி போகாது
கூட்டணி பலமாகுவது இந்நாளோ

நொடிகள் நீள்கிறது
நாடித் துடிக்கறது
ஆடி மாதமாய்
அடுத்த நாள் தோணுது

இந்த துடிப்புதனை
இலாபமாய் மாற்றிட
இரத்தின கம்பளம் விரித்தவர்கள்
இரகரகமாய் விற்பவர்கள்

புனிதமென்ன
புவனம் முழுதும் கொண்டாட
புனைந்த கதைகளோடு
வணிகம் மட்டுமே குறிக்காள்

அட்சய திரிதையன்று
அட்டிகை வேண்டுமென
அவளை கேட்க வைப்பதும்
அத் திருநாள்தான்

திருநாளில் மட்டும்
திகட்டும் அன்பை அளிப்பாயோ
மறுநாளில் திக்குத் தெரியாது
திசைமாறிச் செல்வாயா



திங்கள், அக்டோபர் 24

தீபாவளி





புராணமோ
புனைந்தக் கதையோ
பொய்களின் மூட்டையோ
பொறுமையாய் கேளுங்கள்

வராக அவதாரத்தில்
பூமாத் தேவியை
தொட்டதால்
பவுமன் பிறக்கிறான்

அரக்கர்களை வென்ற கையோடு
அவளைத் தொட்டதால்
அவதாரத் பிறப்பிற்கு
அரக்க குணமாம்

குணத்தால்
அரக்கனென அழைத்ததால்
அவனுக்கொன்றும்
அச்சமில்லை

பிரம்மனிடம் -சகா
வரம் கேட்க
திருத்தி அளிக்கப்படுகிறது
ஈன்றவளால் இறுதி முடிவென

வராக அவதாரத்தில்
வசதியாய் தொட்டது
கிருஷ்ன அவதாரத்தில்
சத்யபாமாவால் சரிசெய்யப் பட்டது

தனயனென அறியாது
தன்னிணை காக்க
அசுரனை அழித்தாள்
தேவர்களை காத்தாள்

கதை முடிந்ததென
கடுகளவும் நினையாதீர்
கற்பனைகள் தொடரும்
காசியும் இராமேஸ்வரமும் இணையும்

திரேத யுக நாயகன்
திரும்புகிறார் கானக வாழ்விலிருந்து
தீபமேற்றி மகிழ்ந்தனராம் – மக்கள்
தீப ஓளி கதைகள்

2500 ஆண்டுகளுக்கு முன்
ஆணும் பெண்ணும் சமம்
அகிம்சை வாய்மையென்றும்
பற்றற்றிறு பாலுணர்வு துறவென்றும்

வடித்துக் கொடுத்த வர்த்தமானர்
வீடு பேறடைந்த நாளை
தீபமேற்றி வணங்கியதால்
திருநாள் அவர்களுக்கு

போதிமர ஞானம் போதும்
நாடாள வாவென்று - சுத்தோதனன்
நாலுபேரை அனுப்ப
நால்வரும் ஞானம் பெற

காலோதயன் எனும் அமைச்சன்
கபிலவஸ்துவுக்கு
சித்தார்த்தனை
அழைத்து வர

வறியவரும் தீபமேற்றி
வாழ்த்தட்டுமென்று
இருப்பவன் கொடுத்தான்
இருள் விலக மகிழ்ந்தான்

புத்தனின் வருகை
புத்தொளி அளித்ததால் – நாடு
திரும்பிய நன்நாளை
தீபஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்

1577 ஓர் அடிக்கல் நட்டு
பொற்கோயிலை கட்டத் துவங்கினர்
அந்நாளை சீக்கீயர்கள்
தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர்

சக்தி சிவனோடு இணைந்து
அர்த்தநாரியாய்
காட்சி அளித்த நாள்
கேதார கௌரி விரதநாள்

மனிதனின் விழாவா
மதங்களின் விழாவா
மானுட வாழ்வில்
மகிழ்ச்சியுறு நாளா???? !!!!!!!!!!!

சனி, செப்டம்பர் 24

இலவசம்





வாக்குறுதியை வாரியிரைத்து
வாக்குச் சாவடியைக் கைப்பற்றி
வாகனப் படையோடு
வலம் வருபவனுக்கு

ஆட்சி அதிகாரம்
அத்தாட்சி பத்திரமா
ஆள்பவர் முடிதரித்ததும்
ஆலகால மாவதா

மறைமுக வரியாய்
மனிதனிடம் வசூலித்ததை
மானுடச் சமூகத்திற்கு
மடை மாற்றுவதா

அறுதிப் பெரும்பான்மை
அரசியல் கட்சிக்கில்லையெனில்
மக்கள் பிரதிகள் மொத்தமாய்
பச்சோந்தியாய் மாறுவதா

திறைச் செலுத்தும்
திடீர் பெருமுதலாளிகளுக்கு
வரியின் வரையறை
சரியில்லை எனக் குறைப்பதா

சமச்சீரற்ற சமூகத்தில்
சரிச்சமாய் உயர்ந்திட
பொருளாதாரத்தில் வீழ்ந்த
உயர்சாதிக்கு இடஒதுக்கீடு அளிப்பதா

அன்றாடங்காச்சி
ஐந்துக்கும் பத்துக்கும்
அன்றாடம் உழைத்தும்
அதோகதியாய் நிற்பதா

அதானி அம்பானியின்
5 இலட்சம் கோடி
10 இலட்சம் கோடியாய்
ஓராண்டில் மாறுவதா?

கணக்கு வழக்கு
பிரதம நிதிக்கா
உனக்கு தேவையில்லாதது என
உரக்க சொல்வதா

நிதியை நிர்வகிக்க
பதியாய் வந்தவர்கள்
குதியாய் குதிக்கறார்கள்
பணம் அவர்களுடையதாம்

ஆதாரை இணை - எரிவாயு
மான்யம் கிடைக்குமென்றார்கள்
விட்டுக்கொடு என்றார்கள்
விலையேற்றமே கண்டோம்

ரோட்டோரக் காய்கறிக் கடையும்
டிஜிட்டிலில் பளபளப்பதாய்
பே – ட்டி - எம், போன் பே யும்
பேட்டி அளிக்கின்றன

இரண்டு சட்டைக்கு
ஒரு சட்டை இலவசம் - இது
வியாபாரத் தந்திரம்
வீழ்வது விட்டில்கள்

குடிக் காப்பது
அரசின் கடமை
குடிக்கக் கொடுத்து
வருவாய் பெருக்குவது

வரி வசூலை
பிரித்தளிப்பது உன்வேலை
தரித்திரனாய் மக்களை
பிரித்து வைத்திருப்பதோ

சுகாதாரமாய் வாழ
மருத்துவ வசதி
சுயமரியாதையோடு வாழ
யாரிடமும் கையேந்தாமல்

ஒண்டக் குடிசையும்
கற்கக் கல்வியும்
உழைக்க வேலையும்
ஒவ்வொருக்கும் இருந்தால்

தாலிக்குத் தங்கம்தான் கேட்போமா
தமிழகம் அரசிடம்
காட்டில் ஒரு வீடுதான் கேட்போமா
ஒன்றிய ஆட்சியிடம்

செவ்வாய், மார்ச் 1

காசுக்கு நீரோ







கமலையில் இறைச்சநீர்
கால்வாயில் பாய்ந்தோட
கைகளால் பருகிடுவோம்
காய்ந்த தொண்டையை நனைத்திட

ஏனோத் தெரியல
தேனாய் இனித்திடும்
பானையின் தண்ணீர்
நஞ்சென நம்பிய தெப்படி

வானம் பொய்த்தாலும்
சுனையில் சுரந்திருக்கும்
அனைவரையும் காத்திருக்கும்
வினையாய்(தொழில்) ஆனதிப்போ

அமெரிக்க கம்பெனி
அஃகுவாபினா, கின்லே
அடைத்து தரும் நீரிலே
ஆரோக்கியம் அடங்கியிருக்கா

கற்பிதங்கள் உண்மையென
கற்றறிந்தோர் ஏற்பதால்
காசுக் கொடுத்து
காலாவதி நீரை வாங்குவதா?

தாமிரபரணியும் சிறுவாணியும்
தமிழகத்தின் தேனாறுகள்
ஆள்துளையிட்டு அவர்கள்
கொள்ளையிடக் கானலாச்சோ

உன்வீட்டு நீருக்கு
உன்சட்டைப் பையில்
காசெடுக்கும் உரிமையை
கார்ப்பரேட்டுக்கு கொடுத்ததாரோ

நீரும் நிலமும்
நஞ்சாய் மாறிப் போக
ஓட்டுப்போட்டுத் தேர்ந்தெடுத்த
எட்டப்பர்களின் பேராசையா

வளர்ச்சி தேசத்தின்
வளங்களை அழித்தா
வருங்காலச் சந்ததியை
வருத்தாதிருக்க

புத்தனாக மாறென
பூச்சாண்டிக் கூவல் இதுவல்ல
மானுடச் சமுகத்தில்
விலங்காய் மாறாதிரு

 


சனி, ஜனவரி 15

ஆக்ரமிப்பு


 

அன்றாடங் காய்ச்சியாய்
அரைவயிற்றுக் கஞ்சிக்கு
அவ்வீதிவழி – தள்ளுவண்டியில்
காய்கறி விற்போம்

அகிலஉலகப் பணக்காரன்
அம்பானி அன்றாடங்காய்ச்சியா
அரை வயிற்றுக்காரனோடு
அவனுகென்னப் போட்டி

பாதையோரம் துணிவிரித்து
பலபேர் கேட்கக் கூவி
பட்டினியப் போக்க
கூறுக் கட்டி வித்தோம்

“ரோட் ஷோ“ என
“ஜியோ சிம்“ விற்று
போட்டியை திவாலாக்கியவன்
தெருவுக்கு வாரான் யாரைத் திவாலாக்க

கொட்டிக் கிடக்கும் பணத்தால்
நட்ட விற்பனை செய்ய வாரான்
இலவசம் இலவசம் எனக் கூவ
இளித்துக் கொண்டு செல்வாயா?

வீதியின் கீரைக்காராம்மா
பால், தயிர் காரம்மா
இவர்கள் காணாமல் போக
“ரிலையன்ஸ்“ காரணமா

தெருவுக்குத் தெரு
திக்கெட்டு மிருந்தக் கடைகள்
“அமேசான்” “பிளிப்கார்ட்”டால்
அதோகதியான கதைகள் - மறந்தாயா


வீதிக்கு வாராதே
விழுங்கிடும் கொரோனா
வாசலுக்கு வாரேன்
வசதிப்படுமென்கிறான்

நேற்று வரை
வாசலில் விற்றவன்
“ரிலையன்ஸ்“ சட்டையணிந்து வாரான்
பழகிக் கொள்ளாதே மானிடா

குஜராத்தி பனியாவிற்கு
கொத்தடிமையாய் மாறாதே
உன்ஜாதி உழைப்பது – அச்சாதி
பணத்தை விதைப்பது 

உள்ளுர் மண்ணில்
உனக்காக விளைந்ததை
உன்னினம் விற்கட்டுமே
உறவுகள் வாழட்டுமே

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...