செவ்வாய், ஜூன் 22

கடை

 





வருமானத் திற்குவழி வாழ்வழிக்கும் கள்ளோ
பெருமான் கடைத்திறக்கப் போராட்ட மில்லையோ
தீர்க்கமா மூடாது திக்கெட்டும் விற்கவா
தேர்ந்தெடுத் தாய்புது தேர்


எதிரணியாய் கேள்வி ஏகமாய் கேட்க
அதிகார நாற்காலி ஆட்பட்டக் கையோடு
அத்தனையும் மறந்து அரசு நடத்திட
நித்தமுமுண் டென்றார்இந் நீர்


பெருந்தொற்றுக் காலத்தில் பொய்யான பிம்பம்
பொருளோ டாயிரம் போட்டுக் கொடுக்க
இருளகற்றும் தேவனென்று இச்சகம் பேசும்
பெருங்கனவில் ஏமாற்றம் பார்!

அம்மா





தன்நலங் கருதாது தோன்றலின் வாழ்வினை
என்நாளும் வேண்டுவது ஏற்றமிகு அன்னை
கனவை விதைப்பதும் கற்றுத் தருவதும்
அன்பைப் பொழிவது மவள்


சேய்வளர்ந்து செல்வச் சிறப்போடு வாழ்ந்தாலும்
தையலால் மாதாவை தீயாய் வதைத்தாலும்
சேய்க்கு நோயென்றால் சோர்ந்தே அரற்றும்
நேயம் மிகுந்தவள் தாய்


அற்புத வாழ்வினிலே அம்மா எனிலன்பு
பொற்பாதம் பின்தொடர பொன்னான வாழ்வு
உறவென ஓராயிரம் உன்னைத் தொடர்ந்தாலும்
சிறந்தவள் தாயென எண்

சனி, ஜூன் 19

உழவன்

 






உலகம் உயர்வுற ஊனுறக்க மின்றி
நிலத்தைப் பயிரிட் டுணவை நிதமும்
சகலருக்கும் ஈபவனைச் சாக்காட்டில் வீழா
மிகிழ்வுறச் செய்வதே மாண்பு

செவ்வாய், ஜூன் 15

நாணமற்ற மாந்தன்

 


புல்லறிவாண்மை

குறள் 846:

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.



ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்


திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே

கற்றும் கல்லார்

 






புல்லறிவாண்மை


குறள் 845:


கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.


அறியாததை அறிந்ததாய்
….. அறிவில்லார் உரைத்திட
அறிந்ததை அறிந்தாலும்
…… அய்யுறுவர் உலகத்தவர்
அறியாததைப் பிழையுடன்
….. ஆங்கே பொழிந்திட
நெறியிலார் இவனென
….. நினைவூட்டி காட்டிடும்


கற்றதைக் கசடற
…… கற்று இருந்திட
மற்றதை அறிந்ததாய்
….. மயக்கிப் பசப்பிட
கற்றவர் ஒப்பிடார்
….. கல்லாமை உணர்வரே
வெற்றியை விரும்பிட 
….. வேண்டாம் பொடிதலே

சனி, ஜூன் 12

நட்பு அறி








நட்பாராய்தல் : 
குறள் எண்:792


ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும்



குற்றம் ஆய்ந்து
.....குணமும் ஆய்ந்து
சுற்றம் கொள்ள
.....சுகமே பெருவாய்
முற்றும் அறியா
.....முதிரும் நட்பில்
முற்றல் மட்டும்
.....முகாரி ஆகும்



பிறக்கும் போதே
.....பின்தொடரும் உறவா
சிறக்கும் நட்பை
.....சீர்தூக்கிப் பார்த்தே
உறவோர் ஆக்கு
.....உவரை ஏற்றால்
பிறகோர் துயரம்
.....பிணக்கா டுவரும்

அன்பா அறிவா






சாதகப் பறவைகள்
.....சாசனம் எழுத
காதக தகப்பன்
.....காதலை முறிக்க
நூதன வழியில்
.....நுண்ணிடைத் தப்ப
மாதவ மாதம்
.....மாறனை மணந்தாளே


காதல் இணைகளுக்கு
.....கனவு சுமையாக
வாதம் வம்பாக
.....வஞ்சியும் குறும்பாக
ஆதன் என்றாள்
.....ஆர்வலன் பழித்தான்
பேதம் பிறக்க
.....பெரும்பிழை என்றானே


அன்புடை நெஞ்சத்தை
.....அறிவியல் விளக்கா
அன்பினை அறிவால்
.....அளந்திட விளங்கா
ஒன்றிட வேண்டில்
.....உயர்தவர் துலையர்
அன்றிலில் இலையென்று
.....அறிவது அழகே

வியாழன், ஜூன் 10

ஒன்றியத்தில் தமிழ்நாடு







அகம்பலக் கொண்ட
....அருமை நாடு
சகலரும் ஒன்றே
.....சட்டம் பாரு
சிகரமாய் வென்ற
....சிங்காரத் தமிழுக்கு
அகரமாய்த் தமிழ்நாடு
....ஆகட்டும் வளநாடு


ஒன்றியம் என்றால்
....உனக்கேன் கவலை
அன்றிலாய் வாழ
....அடித்தளம் அதுவே
அன்றியும் அழைக்க
..... அடிமையா தமிழன்
குன்றிடா ஒன்றியத்தில்
....கூடிடு தமிழனென்றே

கன்னல் தமிழ்








கன்னல் தமிழை
.....கண்ணாய்ப் போற்று
இன்னல் வந்தால்
.....இறந்து காப்பாற்று
என்னில் தாயே
.....எனவே வணங்கு
உன்னில் மொழியே
.....உறவைத் தொடங்கு


அம்பலம் ஏறா
.....அன்னைத் தமிழை
அமணர் வகுத்த
.....அற்புத வழியில்
கம்பன் அல்ல
......காளையர் காப்பர்
நம்பன் முருகன்
.....நம்பி யாருமில்ல


மும்மொழியை வேண்டுவர்க்கு
......முக்கனியின் இனிமையை
செம்மொழியாம் தமிழின்
.....சுவையை கூறிடுவாய்
எம்மொழிக்கும் ஈடில்லை
.....என்னினத்தின் அடையாளம்
அம்மொழியே தமிழாம்
.....அதனால் வாழியவாம்

வெள்ளி, ஜூன் 4

எம்மை இயக்கும் ???.............

 



எம்மை இயக்கும் இறைவன்
யாரோ சிலரறிவார் போலும்
தம்மைத் தூற்றும் நாத்திகனை
தடுதாட் கொள்ளும் நாயகன்
அம்பலத்தில் அடையாள மாகிடவே
அவர்கள் ஆம்மென்று ஆவாரோ
கம்பளம் விரித்தேக் காத்திருக்கும்
கிறித்து அல்லா இந்துவல்ல

நாத்திக வாதத்தில் நாவாய்
நர்த்தன மிடுபவனும் அவனே
ஆத்திகர் அற்புதமாய் ஏய்க்க
அளித்த விளக்க மிதுவே
நித்தமும் காக்கும் இறையெனில்
நிற்கதியாய் மாளும் நிலையேனோ
துதித்தாலும் பக்தியில் லையென
துணையாய் வாரா திருந்தாரோ

இந்திரன் வருணன் என்றே
இல்லாதார் பட்டியல் நீளும்
இந்த வரிசையில் கிரேக்க
ஹீரா ஜுயஸ் தொடரும்
உந்திப் பெருக்க ஏமாற்றி
உதிரம் குடிக்கும் கூட்டத்தை
சந்தியில் நிறுத்திக் கேட்டால்
சூதாய் நம்பிக்கை என்றிடும்

நம்பிக்கை என்றே நால்வர்
நாலுச் சுவற்றுள் துதிக்க
அம்பிகை, அல்ல அவரவர்
ஆண்டவனை தடுப்பர் யாரோ
சம்புகன் ஏகலைவன் ஏமாந்த
சரித்திரம் தொடருமென நினைப்பில்
வம்பிழுக்க நாத்திகனை இயக்குவது
வரனருள் என்று ரைப்பவரோ

மற்ற இறையை மறுதலிக்கும்
மாண்புறு நாத்திகர் இவரே
முற்றும் மறுக்கும் நபரை
முட்டாள் என்றவரும் இவரே
வற்றும் அறிவால் தூற்றி
வழங்கும் பட்டங்கள் பலவே
சீற்றம் தனிந்தே சிவனருள்
சேரட்டும் என்றதனால் வாழ்கவே

வியாழன், ஜூன் 3

இரங்கல் எழுதாத நாளில்லை

 

 


 

இரங்கல் எழுதாத நாளில்லை

     இகலார் என்று யாருமில்லை

அரசன் ஆண்டி பேதமில்லை

     அய்கோ கண்ணில் நீரில்லை

தரணியில் தீராநோய் ஒன்றில்லை

    தீநுண்  மிக்கோத் தீர்வில்லை  

மரணம் ஒன்றும் புதிதில்லை

    மனதிற்குத் தாங்கும் திடமில்லை   

 

பிரம்மனும் பரமனும் துணையில்லை

    பேதையர் நம்பிக்கைக் காக்கவில்லை

அரற்றும் நிலைக்காணத் தாளவில்லை

     ஆதரவாய் அவர்களுக்கு ஒன்றுமில்லை

கிராமம் நகரமென எல்லையில்லை

     காற்றில் பரவத் தடையில்லை

சீரான வாழ்வு திரும்பவில்லை

     சோராதிரு வேறு வழியில்லை

 

ஊரடங்கு நீடிக்க விருப்பமில்லை

      உழைத்து பொருளீட்ட வாய்ப்பில்லை

பாரங்கே தடுப்பூசிக் கிட்டவில்லை

      பலகாலம் காத்திருக்க மனமில்லை

நெருங்கிப் பழகிய உறவில்லை

      நேற்று இருந்தார் இன்றில்லை

சுருங்கி போனது உலகமில்லை

      சுற்றித் திரிந்த நாமன்றோ


திங்கள், மே 31

கன்னக்குழி அழகி






கன்னக்குழி அழகி
......கரம்பற்ற மகிழ்தேனடி
அன்னநிறத் தழகி
.....ஆசையில் தொட்டேனடி
மின்னும் கண்கள்
......மீறச் சொல்லுதடி
சான்றாய் இச்சொன்று
.......சத்தமின்றிக் கொடடி
தென்றல் வருடியதாய்த்
......தேகம் குறிக்குமடி


நன்னாளின் ஆனந்தம்
......நாற்புறம் பரவட்டும்
பொன்னாள் என்றே
........பொன்னேடு எழுதட்டும்
மேன்மையுற இணைந்த
......மொட்டுக்கள் என்றே
சான்றோர் வாழ்த்தும்
.......சம்சாரக் கடலிலே
இன்பமாய் முத்தெடுக்க
........இட்டமாய் வாயேன்டி

வியாழன், மே 27

வசந்தகால வானம் பாடிகள்

 


இளவேனிற் காலத்தில்
…… இளஞ்சோடிப் பாடித் திரிய
தளர்வற்ற ஊரடங்கில்
…… தத்தளித்தேத் தேடி வாட
இளமை முறுக்கில்
…...இதயம் தேடிச் செல்ல
விளக்கம் கேட்டு
……. வீதியில் காவலர் தடுக்க


ரோசாப்பூ வாசம்
…… ராசாத்தி நினைப்பக் கூட்டுது
நேசத்தின் வேகம்
…… நொடிநேரம் ஒளியாண் டானது
வசந்தத்தை தேடும்
……. வசந்தகால வானம் பாடிகளை
தேசத்தின் பெருந்தொற்று
…… தேவை யின்றி வாட்டுது

அன்பு

 


அன்பென அவளை நெருங்க
…… அத்தான் என்றே மயங்க
அன்னமே அன்பன் நானாக
….. அச்சாரம் கொள்க என்றேன்
ஆனையோ ஆநிறையோ அல்ல
….. அன்பின் கணையாழி கண்ணே
ஆனிப்பொன் அணிகள் வேண்டா
….. அத்தான் அருகிருக்க வேண்டும்


அனுதினம் அந்தாதி பாடும்
…… அபிராமி நானாக வேண்டும்
ஆனந்த நிலையில் அன்பே
……. அனைத்தும் ஒன்றாக வேண்டும்
அன்றில் இவர்கள் என்றே
……. ஆன்றோர் வாழ்த்த வேண்டும்
அந்தம் நீயின்றி வெறுமை
……. ஆயினும் நீவாழ வேண்டும்

புதன், மே 26

காற்று

 



காற்றைத் தென்றலாகப் புயலாகக் 
.....கண்டிருந்த காலச் சூழலிலே 
முற்றத்தின் நிலவொளியில் எம்மை 
......முனைந்துப் பாடிடலாம் என்றதனால் 
கற்றறிந்த தமிழ் துணையிருக்கக் 
......கவிதையில் கேட்டு வைத்தேன் 
இற்றைத் தினத்தில் இறக்குமதி 
......இனத்தில் காற்றிருப்ப தெதனாலே? 

தொற்றால் பற்றாக் குறையா 
......தூய்மை இல்லா முறையா 
வற்றா வளியை வரம்பற்று 
......வஞ்சிக்க வந்த வினையா 
காற்றில் லையென்றுக் கதைப்பர் 
......கற்ற இயற்பியலின் காரணத்தில் 
காற்றில் லையென்றுக் பதறுபவர் 
......கொரானாத் தொற்றின் மரணத்தில் 

வளிநான்கில் குளிர் மேலடுக்கு 
.....வகைமீதிக் காற்றின் கதகதப்பு 
துளிக்காற்றின் விலையை அறிவாய் 
.....தீநுண்மி பரவி யிருக்க 
வளியின் எடையை அறிவாயா 
.....வளர்ந்த விஞ்ஞானம் உதவ 
அளந்தேன் ஐந்தாயி ரதிருநூறு 
......மிலியன் மிலியன் என்றே

எரிக்கும் எண்ணெய் நிலக்கரியால்
.....ஏற்படுவது நைட்ரசன் காற்றாகும்
கரிம வாயுக்கள் நிலைத்திருக்க
.....காடுகள் நிலத்தைப் பாதிக்கும்
கார்பன் எரியா திருக்கக்
.....கார்பன் மோனாக்சைட் உருவாகும்
மருந்தாய் பாலிவினைல் குளோரைட்
.....மானுட உயிரைக் காக்கும்

ஆடிக்காற்றில் காற்றாலை மின்சாரம்
.....ஆனால் தனித்திருக்கும் சம்சாரம்
ஆழிக்காற்றில் கிழத்தியுடன் சஞ்சாரம்
.....ஆனந்த இலக்கியப் பண்பாடும்
கொடியசையக் காற்று வந்ததா
.....காற்றி ருப்பதால் அசையுமே
கொடிகளின் ஒளிச்சேர்கை உயிர்காற்றை
.....கணக்கின்றி உருவாக்கித் தருமே

எலக்ட்ரான் புரோட்டான் நுண்துகள்
....எதிரிடச் சூரியக் காற்றாம்
உலவும் ஓசோன் அகப்புற
.....ஊதாக் கதிரைத் தடுத்திடுமாம்
மழைக்கு ஈரக் காற்றுதென்
......மேற்கில் புறப்பட்டுப் பொழிந்திடும்
கீழடி நாகரிகம் புதையக்
.....காற்றும் புயலுமெனப் புரிந்திடும்


செவ்வாய், மே 25

பொற்காலம்

 

 

குப்தர் சோழர் காலமும்

    குடிகளின் வாழ்வின் முறையும்

ஒப்புவமை இல்லாக் காரணத்தால்

    ஒப்பினர் பெற்காலம் என்றே

அப்பத்தைப் பிட்டு அளித்து

    அன்பைப் போதித் திருந்தாலும்

சப்பாத்தி முள்ளைக் கீரிடமாய்

    சூட்டியதால் புனிதக் காலமானது

 

காமராசர் ஆட்சிப் பொற்காலம்

    கழக ஆட்சி நிகழ்காலம்

கோமளவல் லியாட்சிக் கடந்தகாலம்

    “கார்பரேட்” ஆட்சி இருண்டகாலம்

ஏமாளி மக்கள் எண்ணுவது

     என்று மீளும் பொற்காலம்

சீமான் சீமாட்டி ஆண்டாலும்

    சந்திப்பது என்னவோ கற்காலம்

திங்கள், மே 24

வினை விதைத்தால்

 



குறள் 207

 

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

 

  

பகையுடை வேந்தனுக்கு

  ………  பலவழி  உண்டு மீள்வதற்கு

பகைதனை அஞ்சாது

   ……… பழிபாவச் செயலைச் செய்திட

வகைவகையாய்த் தீவினை

   ……… வழமையாய்த் தொடரும் மானிடனை

மிகையானத் பகையே

   ………  மடியும்வரை தொடர்ந்து அழித்திடும்

 

 

தீயதுச் செய்தவனை

   ……… திரும்பித் தாக்கிக் கொல்லும்

ஆய்ந்தால் அவன்செயல்

   ………. அவனுக்கு என்றே புரியும்

வீயாது என்பது

   ………. வினைக்குத் திணையல்ல என்பதாம்

மாய்க்கும் வரையில்

   ………  மானுடனைத் தொடரும் தீவினையாம்  


ஞாயிறு, மே 23

திருநங்கையர் வாழட்டும்





அர்த்தநாரி ஆண்டவனால்
       ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
       உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
       கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
       புலரியோ ஒன்றுமில்லை


இடப்பக்க உமையவளே
       இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
       மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
       தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
       பலப்படி உயர்ந்திடுவர்


இலக்கின்றிச் சென்றவர்
       இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
       இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
       இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
       நெடும்பயணம் சென்றனர்


பெற்றோர் புறந்தள்ள
       பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
       பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
       அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
       வெஞ்சமரில் வென்றவளே


திருநங்கை வாழட்டும்
       திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
       பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
       உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
       பந்தத்தில் சேர்த்தே


வெள்ளி, மே 21

கொரானா தேவி

     

குற்றுயிராய்க் கொலையுயிராய்
     கொரானாவில் தத்தளிக்க
கற்றறிவு இல்லாத
     கோவைக் குடிசில
தோற்றமுறச் செய்தனராம்
     தேவிக் கொரானாவை
காற்றில் பரவி
     ககனம் நிறைப்பாளோ


நூற்றாண்டு கடந்தும்
     நூல்பலக் கற்றும்
கற்காலக் பிளேக்கை
     கருமாரி விரட்டியதால்
தற்காலத் தற்குறிகள்
     தந்தத் தேவிதான்
முற்றாக ஒழிக்குமோ
     மூச்சைதான் காக்குமா?


இட்டசித்தித் தேவிக்குபின்
     ஈசுவரனும் தோன்றலாம்
தட்டநீட்டிக் காசுபார்க்கும்
     துட்டர்களைக் காணலாம்
மொட்டுவிடும் மூடதனம்
     முளையிலேக் கிள்ளுவோம்
கட்டுப்படும் தடுப்பூசியால்
     கலக்கமின்றி வாழ்வோம்

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...