சனி, நவம்பர் 15

இல்லாள் மகிழ.....




கட்டியவளைக்
கட்டியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டு
காதலடி எனச் சொல்

கவளச் சோறெடுத்து
காயும் நிலவொளியில்
காதலாய் ஊட்டிவிட
அறிவாய் அரிவையின் பார்வை

புன்னை வனத்தில்
புன் சிரிப்புடன்
புதுபுது கதைகளை பேசு
புகலிடமாவாள் உன்னிடம்

கீச்சு கீச்சென்று பேசுவதை
கீரவாணி என்று சொல்
கிச்சு கிச்சு மூட்டுவதை
கிழப் பருவத்திலும் தொடர்

தங்கமே என
தாங்கிப் பிடி
தத்தையெனக் கொஞ்சு
தாரளமாய் அணைத்துக் கொள்

கவிதை வாராதென்றால்
கடிதம் எழுது
காதல் ரசம் சொட்ட சொட்ட
கண்டிப்பாய் கவனிக்கப்படுவாய்

அங்காடிக்கு அழைத்துச்செல்,
ஆச்சரியப் படுத்த
அவள் விரும்பிய
ஆபரணத்தை வாங்கு

அவள் அழுகையை
அலட்சியப்படுத்தாது
அவளோடு சேர்ந்தழுது
ஆதரவாய் இரு

ஒற்றை ரோசாவோ
உனக்குப் பிடித்த ஜாதிமல்லியோ
ஒரு முழமாவது வாங்கி
உன் கையால் சூட்டிடு

ஏழேழு பிறவியும்
என்னிணை நீயேதானென
எண்ணிலடங்கா காரணங்களை
எடுத்துச் சொல்

வடதுருவமோ
தென்துருவமோ
எங்கு வேண்டுமானாலும் செல்
எனினும் திரும்பிவா அவளுக்காக

இத்தனைக்குப் பிறகும்
ஏதோதோ குறைகளை
எண்ணி காண்பிப்பாள்
எனினும் புன்னகையோடிரு

அ. வேல்முருகன்


வெள்ளி, நவம்பர் 7

குறுநகை புரிந்திடு




 











நீ என்னை சந்திக்கும் போதெல்லாம்
இறகுகள் முளைத்து பறக்கிறேன்
உன்னருகாமையில் - நான்
உயிரோடிருப்பதை உணர்கிறேன்

என்றென்றும் எனதானவன் நீ
எனது பகலும் எனது இரவும்
எனது நிழலும் எனது இசையும்
எல்லாமே நீயானதால்

சொல்லிலும் செயலிலும்
சொல்லாத காதலை
என்னில் இருப்பதை
எப்படி அறிய வைப்பேனடா

கோடையில்
கொட்டித் தீர்த்த மழைக்குப் பின்
வானமேடையை அலங்கரிக்கும்
வானவில்லாய்

உன்விழிப் பார்வை
உருவாக்கும் அற்புதங்கள்
என்னில் ஏற்படுத்திய
அதிர்வுகளால் மீளாதிருக்கிறேன்

மனதை நோகடிக்கும் -உன்
மௌனம் கனமானது
குறுநகை புரிந்திரு
குதுகலமாய் நானிருப்பேன்

அ. வேல்முருகன்

வியாழன், அக்டோபர் 9

H1B










H₂O
HbA1c
இதுபோல
H1B இருக்குமோ

கடவுச் சீட்டு அல்லாது
கனவு தேசத்தில் நுழைய
அடிமை ..... அல்ல அல்ல
அனுமதிச் சீட்டாம்

அறிவாளிகளுக்கென
அந்நாளில் வடிவமைத்ததை
அடிமைகளுக்காகவென
மாற்றியமைத்தவர்கள் யார்?

டி. சி. எஸ்., எச். சி. எல்,
இன்போசிஸ், விப்ரோ
இன்னும் சில
மென்பொருள் விற்பன்னர்கள்

2000-3000 டாலருக்கு
சல்லிசாக கிடைக்கும்
சரக்கை வேண்டாமென
ட்ரெம்ப் உரைப்பதேன்

வளரும் இந்தியாவின்
வனப்பைக் குறைக்கவா
வாழும் அமெரிக்கனின்
வாழ்வைச் சிறப்பிக்கவா

ஒராண்டு உழைப்பை
60000-80000 டாலருக்கு
இறக்குமதி செய்ய - கூடுதலாக
90000 டாலரென்றால்

"குய்யோ முய்யோ" வென
கூவாது
"கப்சிப்" என்றிருப்பது
"கார்ப்ரேட் தந்திரமோ"

வந்தேறிகளின் தேசத்தில்
வாழ்வில்லை என்பதால்
வயிறெறிந்தவர்கள்
இருக்கதான் செய்தனர்

அமெரிக்காவை வளப்படுத்தவா
அவதார மெடுத்தாய்
அரிகரன் இல்லையென்றாலும்
அவனவன் தேசம் வளரும்தானே

 

அ. வேல்முருகன்

வியாழன், செப்டம்பர் 25

அறிவேணி ஆசிரியர்

















அறிவேணி ஆசிரியர்
அகரத்தில் ஆரம்பித்து
அறிவியல் ஆயிரம்
அதனுடன் அறநெறி
சிறியோர் நெஞ்சில்
சிறப்புடன் பதித்திட
செறிவுற்ற மாணவனாய்
செயலாற்ற மகிழ்வாரே

கற்போர் யாவரிடமும்
கனவுகளை விதைத்து
பிற்போக்கு எண்ணங்களை
பிழையெனச் சுட்டி
நிற்காதப் பயணத்தில்
நின்நிலை யுணர்த்தி
உற்சாக மளித்திடும்
உறவுதானே ஆசிரியர்

தக்கதொருக் கல்வியை
தாராது தடுத்தே
திக்கற்ற சமுகமா
திருமாலும் வைத்திருக்க
ஏக்கமுற்ற ஏழை
எளியோரின் கல்வியை
சக்தியால் சாதித்தது
சாவித்திரிபாய் பூலேவே

. வேல்முருகன்


ஞாயிறு, செப்டம்பர் 14

நேபாளம்

 









இப்படியெல்லாம்
இந்தியாவின் அண்டை நாட்டில்
இருப்பார்களா மக்கள்

இலங்கை, பாக்கிஸ்தான்
வங்கதேசம் என்றிருந்தது
நேபாளம் வரை வந்து விட்டது

மாடமாளிகைகள்
மந்திரிகளின் வாரிசுகளின்
மகோன்னத வாழ்வு

எளிய மக்களிடம்
ஏன் தீப்பற்ற வைத்தது
சமூக ஊடகங்களை தடுத்ததாலா

அடுத்தாத்து
அடுப்பங்கரையில்
ஏதேனும் புகை…………

மணிப்பூரில்
மாதக்கணக்கில் புகைந்திருக்க
மானுடம் மயங்கிதான் கிடந்தது

அத்தனை அமைப்புகளும்
அடிபணிந்து கிடக்கும் போது
புகையாவது? புடலங்காயாவது?

மக்கள் எழுச்சி
மகுடம் தரித்தவர்களை
மட்டுமா மாற்றும்

மாற்றுச் சிந்தாந்தம்
மக்கள் ஒவ்வொருவரையும்
வாழ்விக்க வாராதோ?

அ. வேல்முருகன்

வெள்ளி, செப்டம்பர் 5

ஓணம்

















ஆயிரமாண்டுகள் கடந்தும்
அத்தப்பூக் கோலமிட்டு
அறுசுவை உணவு படைத்து
அம்மாமன்னனை வரவேற்கின்றனர்

அண்டச் சாரச்சரமும்
அவன் காலடியில் என்றிருக்க
அவனோ மூன்றடி மண்ணிற்கு
அவதாரம் எடுத்தானாம்

மேகக் கூட்டத்திலும்
மாமன்னன் தலையிலும்
மண்தேடிய கதையா?
மக்கள் தலைவனை கொன்ற புனைவா?

பாதாளம் சென்றவன்
பணிந்து கேட்டதனால் விழாவா
பரிதவித்த மக்கள்
பரிவட்டம் கட்டியதாலா

இராவணன், பத்மாசுரன்
நரகாசுரனை அழிக்க
நடமாட விட்ட
நயவஞ்சக கதைகள்

பேரரசனின் பேரன்பில்
பெயர்ந்து போனதால்
மகா பலி என்றானதோ
மாமன்னன் வருவானோ

காலமெல்லாம் நினைவில்
மகாபலியை கொண்டதனால்
ஞாலமெங்குமுள்ள மக்கள்
களிக்கொண்டு விழாவாக்கினரோ

அ. வேல்முருகன்

டொனால்டு டிரம்ப்








கூறையேறி
கொக்கரிக்கும் கோழியை
நிமிர்ந்து பார்த்தாலும்
கடந்துச் செல்வர் மக்கள்

சீனாவிற்கு 100%
இந்தியாவிற்கு 50%
கூடுதல் வரியென்றவனை
குட்டியது உள்ளூர் பஞ்சாயத்து

வானளாவிய அதிகாரமென
வரிந்துக் கட்டியவர்கள்
சரிந்து போனதை
சரித்திரம்காட்டியதை போல

சீனா, இரஷ்யா
இந்தியா வடகொரியா
அணித் திரண்டவுடன்
அஸ்திவாரம் ஆட்டம் கண்டது

ஹார்வர்டு பல்கலைக்கழகம்
அயலக மாணவர்களுக்கானதென
அதன் நிதியை மறுக்க
நீதி காத்துக் கொண்டிருக்கிறது

அமெரிக்காவை
அகில உலக வசூல் மயமாக்கிய
ஐந்து இந்தியர்கள்
அமெரிக்காவிற்குத் தேவை

இந்தியக் கடல் உணவுகள்
ஆடை, தோல் பொருட்கள்
கூடுதல் வரியால் தடுப்பது
இந்தியா வளரக் கூடாததாலா

சுந்தர் பிச்சையும்
சத்திய நாடெல்லாவும்
இந்திரா நூயியும்
இன்னும் பலரும்

அமெரிக்காவை வளமாக்கினாலும்
இந்தியாவிற்காக
குரல்கொடுக்க முடியாதவர்களாயினும்
இங்கிருக்கும் நீங்கள் குரலற்றவர்களா



அ. வேல்முருகன்

திங்கள், செப்டம்பர் 1

வீதிக்கொரு கோயில்


 









வீதிக்கொரு கோயிலுண்டு
வீணாக மக்களை பிரித்துக்கொண்டு
சாதிக்கொருச் சாமியுண்டு
சட்டமாக்கி வைத்துக் கொண்டு
ஆதிக்கச்சாதி அத்தனையும்
அவர்களே உயர்ந்தவர்களென்று
சாதிக்க நினைப்பதை
சமாதிக்கு, என்று அனுப்புவதென்று

கேள்விகேட்டது யார்யார்?
கேட்காது முட்டாளாய் வாழ்வதுயார்?
நாளும் நட்சத்திரமும்
நடமாடுமுனை பாதிக்குமென சொன்னவரா?
மீளும்வழி இதுவென்று
மேடைதோறும் முழங்கிய பெரியோரா?
ஏளனசாதி என்பதற்கு
ஏன்உன் சாமியும் அடையாளமாகுதையா!!

சாதிகுல பெருமையெல்லாம்
சரித்திரத்தில் வீழ்ந்து கிடக்குதையா
மேதினியில் மேனிமறைக்கும்
மேலாடைக்கு வரிவிதித்தது யாரய்யா
நீதிவேண்டு மெனில்
நீதுறக்க வேண்டியது சாதியல்ல
ஆதிகுலச் சாமிகளை
அபகரித்த அவதாரக் கடவுள்களை

புத்தனை ஓழித்ததேன்
புத்தியை தீட்டு என்றதனாலே
பித்தான நம்பிக்கையால்
பிறமதக் கடவுளை வெறுத்ததேன்
முத்தான உடன்பிறப்பு
முப்பாட்டன் சாமியை மறுத்திட
தத்துவம் எதுவென்று
தள்ளாடல் வந்தால் நீமானுடனே

மொழியால் உன்னின
முகவரி போதுமென நினைத்தால்
வழிவழி வந்த சாமியும்
வாமனனாய் விரிந்த சாதியையும்
குழித்தோண்டிப் புதைத்திட
கூட்டுறவில் மனிதம் வாழ்ந்திடும்
அதைத்தாண்டி ஆதிசங்கரன்
அவதரித்தாலும் அன்புதான் செழித்திடும்


அ. வேல்முருகன்

வெள்ளி, ஆகஸ்ட் 29

விடியலை நீட்டிக்க

 












துடிக்கத் துடிக்கத்
துவளச் செய்து
கொடியிடைத் தன்னில்
கொட்டும் அடித்து
வடிவழகே வசந்தமே
வசனம் படித்து
அடிமனதில் நங்குரமாய்
அமர்ந்த வேலவா

படிக்கப் படிக்கப்
பசலைத் தீருமோ
முடிவல்ல என்றே
முகக்குறிக் கூறுமோ
விடிவிளக்கு விழிபிதுங்கி
வெட்கத்தில் நாணுமோ
விடியலை நீட்டிக்க
விண்ணப்ப மெழுதுமோ

கடிப்பட்டக் கழுத்தின்
காயத்தை மறைத்து
கொடிபிடித்து குறைத்தீர்க்க
கொழுநனைக் கேட்டவுடன்
அடிமட்டத் தொண்டனாய்
ஆட்சேபனை எதுமின்றி
நொடியில் முத்தத்தை
நூதலில் பதித்திட

செடிதனில் செங்கதிர்
செய்திடும் மாயத்தை
மடிதனில் வீழ்ந்த
மச்சானும் புரிந்திட
நெடிய பயணத்தில்
நேசன் இவனென்று
அடியவள் மனதில்
அச்சாணி ஆனதின்றே


அ. வேல்முருகன்  




வியாழன், ஆகஸ்ட் 28

நாயகன்


 







காளையை அடக்கி
இளவட்டக்கல் தூக்கி
காதலியை கைப்பிடித்தது
கற்காலம்

நஞ்சையும் புஞ்சையும்
தோப்பும் துரவும்
நாயகன் இவனென
நாடியது ஒருகாலம்

மழையோ வெயிலோ
மாதம் ஒன்றானால்
கைநிறையச் சம்பளம்
இதுவும் கடந்தகாலம்

கற்றக் கல்வியால்
ஏற்றப் பணியில்
கற்றைக் கற்றையாய்
கண்மணி ஈட்டுவதால்

இருக்க இடமும்
உடுக்கத் துணியும்
இன்னும் பிறவும்
எவர்தயவும் வேண்டாததால்

அன்றைய நிகழ்வுகளை
ஆற்றாமையில் பரிமாற
ஆம்மென்றோ அல்லவென்றோ
ஆற்றுப்படுத்துபவனே

தன்நிலைக்குத்
தக்கத்தொரு துணையாய்
பொன்மாலைப் பொழுதில்
கைப்பிடித்து வருபவனே


வியாழன், ஆகஸ்ட் 14

வரட்சி

 









மெளனம்
மெல்லியாளிடம்
மொழிவதற்கு ஏதுமில்லை
மன்னனிடமும்

நாட்கள் கடந்தன
இணையர்கள் எதிரெதிர்
நடமாடிக் கொண்டாலும்
நட்பொன்றுமில்லை

காரணமொன்றுமில்லை
வாக்குவாதம்
தாக்குவாதமானாதால்
தாமரையிலைத் தண்ணீரானது

பிடிவாதம்
வாய்ப்புகளை
வாய்தா வாங்கிக் கொண்டிருக்க
வரட்சியே நிலவியது

நீயா நானா என்று
தீண்டாதிருந்த போது
வேண்டா விருப்பாக
ஏதோவொரு விசாரிப்பு

பற்றிக் கொண்டது
பஞ்சும் நெருப்பும்
பார்க்கலாம் - அடுத்த
அமர்களம் எப்போதென

அ. வேல்முருகன்

ஞாயிறு, ஆகஸ்ட் 10

ஆணவத்தின் அடிச்சுவடு

 


 













ஆணவத்தின் அடிச்சுவடு
அச்சனாதன சாதியடுக்கே
ஊனமாக்கிய உன்மனதை
உலுக்கலியே கொலைகளும்

நாணமின்றி மனிதனென
நாட்டில் சொல்லாதே
வீணானச் சாதியை
விட்டொழிய வெல்வாயே

கலப்புமணம் கலகமா
கவர்திழுப்பது பாலினிமா
குலப்பெருமை சிதையுமா
குறத்தியின் முருகனாகிட

உலகெங்கு மில்லா
உயர்சாதி இங்குமட்டும்
விலங்காக இருப்பதேன்
விழித்தெழு மனிதனே

ஆண்டப் பரம்பரை
ஆண்டாண்டு பெருமையா
மாண்ட மன்னரெல்லாம்
மதங்கொணடு திரியலையா

ஊணின்றி உழைத்திட
ஊருவிட்டுப் போகயில
பூணுகின்ற வேடம்
பூரிப்பைத் தருகிறதோ

முறுக்கு பிழிந்து
மூணுவேளைச் சாப்பிட
உறுத்தலில்லை உனக்கு
உழைப்பு என்பதனால்

கிறுக்கா மாறுகிறாய்
கீழ்சாதி அவனென்கிறாய்
இறுகியக் கட்டமைப்பை
ஈடுகாட்டில் எரித்திட்டால்

ஆண்டிகள் அரசனில்லை
அனைவரும் அன்புடையோர்
தீண்டாமை மதங்களில்லை
திருச்சிற்றபலத் திருச்சபையின்

வேண்டாத வேற்றுமைகளை
வெறியாட்டை வேரறுத்து
தோண்டிப் புதைத்திடுவோம்
தோழமையுடன் வாழ்ந்திடுவோம்



அ. வேல்முருகன்

கரிசக் காட்டு காதலி















கரிசக் காட்டுக்
கருத்தம்மா, கனவில்
பரிசம் போட்டேன்
பக்கம் வாயேம்மா

உரிமைக் கோரும்
ஒசந்த மச்சானே
அரிவை வேண்டுவது
அன்பு மட்டுமே

மனசில் நிறைந்தவளே
மாநிறத்து மயிலே
அனல்பேச்சு ஆகாது
அன்பென்றும் மாறாது

அக்குத் தொக்கு
ஆருமில்லை என்றே
சொக்குப்பொடிப் போட்டாலும்
சொக்கிட மாட்டேன்

பருத்தியிலப் பஞ்செடுத்து
பதமாக நூலெடுத்து
ஒருத்தி உனக்கென
ஒருசீலை நெய்தேனடி

முருகன் அழகென்பதும்
முன்கண்ணன் மகனென்பதும்
நெருங்கிடத் தகுதியில்லை
நெஞ்சமதும் ஏற்பதில்லை

உழைத்துக் காத்திட
உறுதியுண்டு நெஞ்சிலே
தழைத்து வாழ்ந்திட
தாரமாய் வாயேன்டி

அழைத்த அன்பனே
ஐந்திணை வாழ்வுதனை
வாழைப்போல் தொடருமெனில்
வாரேன் இணையாக


அ. வேல்முருகன்

முத்தக் கோளாறு

 


 

















அன்பை வெளிப்படுத்த

அனுமதிக்கப் பட்ட – ஓர்

அனிச்சைச் செயல்

முத்தம் கொடுப்பதே

 

அங்கீகாரத்திற்குப் பின்

அவளிடம் அவனோ

அவனிடம் அவளோ

அனுமதி கேட்பதில்லை

 

ஆசையைச் சொல்ல

அதன் போக்கில்

அழுத்தமாய் பதிப்பது

அந்த முத்தம்

 

கோபத்தின் உச்சியில்

கொண்டவன் குளிர

கொடுத்தாலும் மறுத்து

கோளாறு செய்பவன்

 

கொஞ்சி மகிழ்ந்து

கொஞ்சம் விலகினாலும்

கொசுறு கேட்டு

கொட்டமடிப்பது முத்தத்திற்கே

 

கடுந்தவ மிருந்தாலும்

காத்திரு என்றே

கவனித் திருப்பாள்

காய்ச்சல் உச்சமாகிட

 

காரணமாயாமல்

கணப்பொழுதும் கடத்தாமல்

காற்றும் புகுந்திடாமல்

கடையேழு வள்ளலாவர்

 

                              அ. வேல்முருகன்

 


திங்கள், ஆகஸ்ட் 4

முழுநிலவு காயுதடா
















முழுநிலவு காயுதடா
முகங்காட்டிப் போயேன்டா
எழுமாசை கோடிகளடா
என்னவென்று கேளடா

எழுபிறப்பும் என்னுடன்
எழுந்தருள வேண்டுமடா
மழுப்பாமல் மாலையிட
மன்மதப் பயணமடா

பேரின்ப வேள்வியில்
பேதங்கள் ஏனடா
கோரிக்கை வைத்தால்
கொண்டாடிச் செய்திடு

பூரிப்பைக் கண்டு
புதியனத் தேடிடு
பாரியாளை வள்ளல்
பாரியாய் உணர்ந்திடு

அத்தானின் வித்தைகள்
ஆய்வுக் களமாகிட
பித்தான என்மேனி
பிணியைத் தீர்ப்பாயா

ஒத்திசைவா நாமிருக்க
ஒவ்வொரு நாளும்
முத்தத்தில் மூழ்கி
முத்தெடுக்க வருவாயா

                         அ. வேல்முருகன்


புதன், ஜூலை 30

இதுவுமொருத் திருமணம்

 

















நட்டநடு வீதியில்
நாட்டிலுள்ளோர் கூடிட
நாயகன் நாயகியை
இணையாய் ஏற்றுக் கொண்டான்

இட்டத்தோடு
இச்சடங்கு என்றாலும்
எதிர்ப்புகள்
இல்லாமலில்லை

அலங்கார மாளிகையில்லை
ஆங்கொரு கோயிலுமில்லை
மங்கல இசையுமில்லை
மக்கள் சாட்சியாயிருந்தனர்

புத்தாடை அணியவில்லை
அத்தரும் ஜவ்வாதுமில்லை
புழுதிப் படிந்த கூந்தலோடு
கசங்கிக் கிழிந்த சட்டையோடும்

அவர்கள் அன்னியமில்லை
அங்கு வளர்ந்தவர்கள்தான்
ஆயினும் ஈன்றவள்
அழுகிறாள், மகளை அடிக்கிறாள்

வலிகளுக்கிடையே
மகிழ்ச்சி - எனினும்
மயான அமைதி
மாலை மாற்றிக் கொண்டனர்

திலகமிட
குலுங்கி அழுகிறாள் தாய்
கண்ணீரோடு நாயகி
அமைதி சாட்சியாய் ஊர்

அவளுக்கும் அவனுக்கும்
ஈர்ப்பு இருந்ததால்
ஊர் சாட்சியானது
ஒரு காதல் வாழ்வானது


                                     அ. வேல்முருகன்

நட்பின் மேன்மை

 













இழப்பின் பொழுது இன்னலைக் களைந்து
பழகும் மானிடன் பகலவன் ஆவான்
குழப்பம் இருப்பின் குந்தகம் தவிர்த்து
வழக்கைத் தீர்த்து வாட்டம் போக்கி
அளாவி மகிழும் அன்பர் யாரோ
வளர்ப்பர் நட்பை வாழ்நாள் முழுதுமே


அ. வேல்முருகன்


அகங்கார ஆட்டம்

 
















அதிகாரம்
அகங்காரத்தில்
ஆட்டம் போடுகிறது

எல்லையற்ற
எத்தேசதிகாரத்தால்
எதிரியை அடக்க நினைக்கிறது

இழப்பதற்கு
ஏதுமில்லாததால்
எதிரியோ எதிர்த்து நிற்பர்

வீரனைக் கோழையென்று
விவாதித்து
வீணில் மகிழ்வர்

ஊரெல்லாம் தூற்றினாலும்
உறுத்தல் இல்லாது
உலா வருவர்

நடுக்கத்தை
நாற்காலியில் அமர்ந்து
நகையாடி மறைப்பர்

வேதத்தை துணைக்கழைத்து
கொலைக்கானத் தண்டணை
இல்லையெனத் தீர்ப்பெழுதுவர்

பரிபாலினத்தை
பக்கச் சார்புடன்
பகிரங்கமாய் செய்வர்

இயற்கை நீதியின்
இறக்கொடித்து
இறைத் தீர்ப்பென்று கூறுவர்

இத்தனையும் யாதென்று
இங்கிருப்போர் கேட்போரானால்
இதுதான் நாட்டுநடப்பு என்பேன்

அ. வேல்முருகன்

வியாழன், ஜூலை 10

சூட்சமம்

















காதல் சொல்ல வந்தேன்
காதுக் கொடுக்க மறுப்பதேன்
வாதம் செய்து வதைப்பது
வாகைச் சூடி மகிழவா
மோத லென்றும் தொடர்வது
மோகம் கொண்டக் காரணமா
மாதம் மும்முறை வருத்தினாலும்
மாயங்கள் செய்வது முத்தமா

ஆசையாப் பேச வந்தால்
அலட்சியம் காட்டு மன்பே
மீசைக் காரனின் பேச்சு
மீட்டும் வீணையா இல்லையா
ஓசை யின்றி இருந்தால்
ஓய்ந்து போக மாட்டேனடி
பூசைக் குரியது நானல்ல
பூவுல கெங்கும் தேடுமன்பே

ஏங்கும் என்னை வருத்தவா
ஏதோதோ சொல்லி வாட்டுற
தாங்கும் மனது என்றாலும்
தாக்குதலில் வீழ்த்திப் பாக்குற
எங்கும் எதிலும் வெற்றி
என்றே கனவில் மிதக்குற
பொங்கும் அன்பு இல்லாது
புன்னகை முகத்தில் மலராது

எதிர்த்துக் கேள்வி கேட்டிட
ஏனடி முகத்தச் சுருக்குற
அதித அன்பில் அப்படி
அதட்டி வைப்பேன் என்கிற
பதித்த பாவன சீதாராம்
பழகிக் கொள்ளப் பார்க்கிறேன்
சுதியினி சேர்ந்திசையில் மாறாத
சூட்சமம் அறிந்தே நடக்கிறேன்

புறக்கணிப்பு

 













புறக்காரணிகளைச் சொல்லி
புறக்கணிப்புக்குப்
பொழிப்புரை எழுதுகிறாய்
புகலிடம் கேட்டவனிடம்

முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு
அன்பை
ஆய்வுக்கு உட்படுத்துகிறாய்
ஆட்சேபனைகள் கூடாதென்கிறாய்

மென்னிதயம்
என்பொருட்டா மாறியது
அன்பை ஆறறிவால் பார்க்க
கல்லாக்கிக் கொள்ளச் சொன்னதோ

ஏனெதெற்கென
ஏதும் கேட்கமால்
ஆம் போடுவதாயிருந்தால்
ஆகட்டும் பார்க்கலா மென்கிறாய்

உடனிருக்கவும்
ஊர்ச் சுற்றவும்
உத்தரவுகளை நிறைவேற்றவும்
உமா பதியாயிருக்க வேண்டுகிறாய்

அசலனமற்று
அஞ்சலி செலுத்த
ஆயுத்தமாகிறாய்
அடைக்கலமும் மறுக்கிறாய்

கடந்துச் செல்லக்
காரணங்கள்
கண்டுப் பிடித்தப் பிறகு
காதலாவது கத்திரிக்காயவது


                                            அ. வேல்முருகன்  








தாலி

பண்பாட்டின் சடங்கா? பாவையின் அங்கமா? எண்ணில்லா வடிவமா? எதற்கென்று தெரியுமா— பெண்ணினை அடிமையா, பேரண்டம் முழுமையா? கண்ணியாய் கைவிரலில்...