திங்கள், அக்டோபர் 14

பங்குச் சந்தை

 












யாரோ
யாருடையப் பணத்தையோ
திருடிக் கொண்டிருக்கிறார்கள்

பதினாறு இலட்சம் கோடி
பங்குச் சந்தையில் காணவில்லையாம்
பதறாமல் விற்பனை தொடருகிறது

கொண்டுச் சென்றவர் யாரென்றோ
கொள்ளையடித்தவர் யாரென்றோ
பணத்தை பறிக் கொடுத்தவர் கேட்கவில்லை

ஹிண்டன்பர்க் அறிக்கையோ
இழந்த உயிர்களோ
ஏதும் செய்ய முடியாது

சட்டம் அங்கீகரித்த
பட்டவர்த்தன  பகற்கொள்ளை
இலாபமெனப்படுகிறது

உலக மயமாக்கலில்
அயலக நிறுவனங்களின் முதலீடு
உன்னைச் சுரண்டவா  

ஒழுங்கமைப்பட்ட திட்டத்தின்
கீழுள்ள முதலீடுகளின் உத்திரவாதம்
கள்ளத்தனமிக்க ஓர் ஒப்பாரி

ஹர்சத் மேத்தாக்கள்
கேத்தன் பரேக்குகள்
நேற்றைய இராசாக்கள்

சித்ரா இராமகிருஷ்ணன்
மாதபி புச்
இன்றைய இராணிகள்

ஊதிப் பெருக்கப்படும்
ஊக வணிகம்
உலகிற்குத் தேவையா

உழைப்பின்றிக் கிடைப்பதால்
உபரியென்று முதலீடு செய்கிறாய்
உள்ளதும் போனபின் ஏன் அழுகிறாய்

ஞாயிறு, அக்டோபர் 6

எட்டாம் பொருத்தம்

















ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ

மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை

பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது

ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன

வளரும் பிள்ளைக்காக
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ

சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்

எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை



சனி, அக்டோபர் 5

பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன்






பனிபடர்ந்த தேசத்தில்
பாவையுன்னைத் தேடுகிறேன்
கனியுதட்டின் காயத்திற்கு
கப்பம்கட்டப் போகிறேன்
இனிதென்று வாங்கியதை
இளஞ்சூட்டில் தருவாயோ?
நனியென்று நாயகனை
நாள்முழுக்க கொஞ்சுவாயோ?

பள்ளத்தாக்கின் பசுமையும்
பாய்தோடும் நீரோடையும்
கொள்ளையிடும் காட்சியால்
கொண்டல் பரவசமாக்க
துள்ளிடும் இளமையோ
தூதொன்றை ஏற்குது
உள்ளங்கள் ஒன்றாகி
உருகிதான் போகுது

முடிவில்லா மலைமுகட்டை
மூடிடும் மேகங்கள்
வடிவழகில் மையலுறும்
வண்டுகளாய் நின்றிட
கொடியொன்று அசைந்து
குழப்பத்தை விளைவிக்க
நொடியொன்றை வீணக்காது
நெஞ்சோடு சாய்ந்தாளே

வெள்ளி, அக்டோபர் 4

வெற்றிக் கழகம்

















கூத்துக் கட்டியவன்
குறைகளை களைவதாய்
கூட்டத்திடையே சூளுரைத்தான்

வசனங்கள் வசீகரிக்க
விண்ணதிர கைத்தட்டல்
மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல

கனவு வளர்த்தான்
கறுப்பை செலவளித்தான்
காசுக்கு கூட்டம் சேர்ந்தது

பலம் வாய்ந்தவனென
பத்திரிக்கைகள் புல்லரித்தன
பகற்கனவு தொடர்கதையானது

புதிய வரவாய்
வெற்றிக் கழகம்
போற்றிப் பாடுமா தமிழகம்

அரிதாரங்களாய்
அவையடக்கம் அறிந்து
அமைதி காத்தவர்கள்

புயலாக வருவதாய்
புழுதியை கிளப்ப
புலிகள் உறுமுகின்றன

மக்களுக்கு
தையல் இயந்திரமும்
தரை டிக்கெட்டும் கொடுத்த

வள்ளல்
ஊழல் பெருச்சாளிகளிடம்
ஒரு சீட்டுக்கு மண்டியிடுவாரா?

கழகங்களில் ஒன்றாய்
கடைச் சரக்கை விற்க
கபட நாடகம் நடத்துவாரா?

ஜோசப்பின் தேசமல்ல
என்றபோது
ஓசன்னா என முனுமுனுக்காதவனா

உழைக்கும்
உங்களை இரட்சிக்க
ஓடோடி வருவான்

ஆட்சி அதிகாரம்
அன்னமிடும்
அட்சய பாத்திரமா

அவர்கள் சொத்தை
நூறாயிரம் மடங்காய்
மாற்றும் தந்திரமா

என்ன செய்வான்
எப்படிச் செய்வான்
ஏதாவது சொன்னானா?

மக்கள் சேவை
மகுடம் தரித்த
தொழிலாக மாறியதாலும்

கொள்ளையடித்தாலும்
குற்றமில்லை என்று
நீதியரசர்கள் தீர்ப்பெழுதுவதாலும்

வெற்றுக் கூச்சலோடு
வெற்றிக் கழகமென வருகுது
விழிப்பாயிரு தமிழா…

வியாழன், செப்டம்பர் 12

திருட்டு

 


ரூ,1500

ரூ. 5000 ஆனது
விலைவாசி அல்ல

28 டாலர்
72 டாலராக மாறியது
இலாபமல்ல

ரூ.1500
மின்சார கட்டணமல்ல
72 டாலர்
நிலக்கரியின் விலையுமல்ல

ரூ.61832 கோடி கடனில்
ரூ.15977 கோடி மட்டுமே
வங்கியால் வசூலிக்க முடிந்தது

10 பேர் வாங்கியதை
ஒருவர் மட்டும் தீர்த்த கதை
தீர்ப்பாயம் மட்டும் அறிந்தது

மூலதனம் குவிந்தாலும்
முதலிடத்தை தவற விட்டான்
ஹிண்டன்பார்க் அறிக்கையால்

களவாடப்படுகிறது
களவெனஅறியாது – மக்கள்
கவலைக்கடமான நிலையில்

வாக்கு அரசியலில்
வாய்கரிசி மக்களுக்கு
ரூ,500 அல்லது ரூ,1000

மக்களாட்சியில்
இராசராசன் குவிப்பது
கோடிகளில்

கட்டணங்கள் உயர்வது
கார்ப்பரேட்டுகள் கொழிக்க
கட்டாயமாக்கப் பட்டவை

சட்டங்கள்
சாமனியர்களின்
சமதர்ம வாழவிற்கல்ல

சட்டப்படி கொள்ளையிட
சமூகம் வேடிக்கைப் பார்க்க
சரித்திரம்

அதிகார அமைப்புகள்
ஜனநாயக தூண்கள்
அனைவருக்குமானதல்ல

திருட்டு தொடர்கிறது
உபா, குண்டர் சட்டங்கள்
ஒன்றும் செய்யவில்லை

அது அப்படிதானென
அவரவர் ஏற்றுக் கொண்டனரா
அதை மாற்றுவதெப்படி

                                        என யோசிக்கும்



புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



புதன், ஜூன் 12

உன் பார்வையின் பொருள்

 



தொல்காப்பியத்தில்
தேடத் தொடங்கினேன்
இலக்கண விதிகள் – பார்வைக்குத்
தட்டுப்படவில்லை

சங்க இலக்கியத்திலும்
சதுரகராதியிலும்
சுழன்றுத் தேடினேன்
சரியான விளக்கங்களில்லை

வள்ளுவன், கம்பன்
வகைவகையாய் வர்ணித்ததை
பாரதிதாசன் - புதுக்
கவிதையில் வடித்திருந்தாலும்

ஒவ்வொரு பார்வைக்கும்
ஓர் ஒற்றுமையுமில்லாது
ஓராயிரம் பொருளிருப்பதாய்
உள்ளுணர்வு உரைத்ததால்

புதையலைத் தேடுவது போல்
பார்வையின் இலக்கணத்தையும்
பாவலரின் விளக்கத்தையும்
பலவிடங்களில் தேடினேன்

மாயகோவ்ஸ்கியும்
பாப்லோ நெருடாவும்
தேடித்தேடி எழுதியும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

பலநூறாண்டுகள்
பார்வை பரிமாற்றம்
பல்பொருள் அளித்திருக்கலாம்
ஆயினும்

உன்விழித் தாக்க
என்னுள் அதிர்வுகள்
ஏழெட்டு ரிக்டரென
காதல் கடவுள் கணித்ததால்


தடுமாறும் அன்பன்
அ. வேல்முருகன்


சனி, ஜூன் 1

ரஃபா









அவர்கள்
எங்க வீட்டை
குண்டுகளால் அழித்து விட்டார்கள்

புழுதிப் படிந்த உடலோடு
குருதி வழிய
புலம்பிச் செல்பவள்

அயலகத்து குழந்தை யென்று
தியானத்திலமர்ந்து
கடந்துச் செல்லாதீர்கள்

எதற்காக எனவறியாது
யாராலெனப் புரியாது
குழந்தைகள் மரணிக்கின்றன

அதே மதவாதம்
எதேச்சையாக
எங்கும் நிகழலாம்

அதிகார போதையில்
ஆங்காங்கு பிரித்தாளும்
ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்

வேட்டுச் சத்தம்
கேட்டுக் பழகியிருக்கலாம்
வாழ்ந்து பாருங்கள்

சிறுச் சத்தத்திற்கு
மரணத்தை எதிர் நோக்கி
திடுக்கிட்டெழும் சிறார்கள்

ஐந்து இலட்சம் குழந்தைகள்
ஐயோ……….
ஆரும் கேட்பாரில்லை

ஐக்கிய நாடுகள் சபை
ஆட்சியாளர்கள் சார்பாக
இரைஞ்சுவதாக நடிக்கிறது

ஹார்வர்ட் பல்கலை மாணவர்கள்
பாதகை தாங்கி – உலகை
பார்க்கத் தூண்டுகிறார்கள்

விடுதலை தாகத்தோடிருந்தவனா
கொலைகளத்தை விரிவுப்படுத்தி
சாத்தானாக மாறிவிட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இந்த இனம் - யாருக்கு
இறப்பைக் காணிக்கையாக்குகிறது

அகதியாய் முகாம்களில்
ஆயினும் வான்தாக்குதலில்
ஆயிரமாயிராய் கொல்லப்பட

நிலத்தின் எல்லையா,
மதத்தின் தேவையா
இனத்தின் மீதான வெறுப்பா

குற்றம் புரியாத
குழந்தைகள் கொலையாக
குற்றம் புரிந்தவன் யார்?

அமெரிக்காவை
ஐநா சபையை ஆட்டுவிக்கும்
இஸ்ரேலியர்கள்

உளவில், சிந்தனையில்
உயர்ந்தவனாய் வேடமிடலாம்
ஆயினும் மானுடத்தின் எதிரிகள்

நீதி வேண்டுவது
“ரஃபா” வுக்கு மட்டுமல்ல
மானுடத்திற்கு



அ. வேல்முருகன்

ஞாயிறு, மே 19

வல்லினக் காதல்


 

ன்னியின் வேண்டுதல்
காளையால் கைகூடுமோ
ந்த காதல்
காக்க வழிகாட்டுமோ
கண்வுடன் அழைத்து
காதலி கைப்பற்றுமோ
கலந் மனங்கள்
களிப்புற்று வாழ்ந்திடவே
கட்டுப்ட்ட காளையாய்
காதலன் வருவானா
காதல்பற் மெல்லினத்தை
கலப்பானோ வல்லினமாய்

சனி, மே 18

கண்மூடும் வேளையிலே





கண்மூடும் வேளையிலே
கனவில் வந்தவளே
பண்பாடி அலைந்தோம்
பசுமைச் சூழ்வெளியில்
தண்நிலவு நீண்டிருக்க
தந்தநின் முத்தங்கள்
மண்ணுலகில் உன்னிடமே
மறுபடியும் வேண்டுகிறேன்

தண்டையிடும் சத்தம்
தளிர்நடை என்றானதே
சண்டையிடும் மனதும்
சங்கமத்தை வேண்டுதே
தொண்டுச் செய்ய
தோழமையை விரும்பும்
வண்டு பூவிடம்
வனைந்த பாவிது

கண்விழிக்க கலைந்தன
கண்மணி யாரென
அண்டை அயலகத்தில்
ஆர்வமாய் தேடிட
எண்ணிய வண்ணம்
எவரும் இல்லை
கண்ணூறுப் பட்டிருக்கும்
காத்திரு காதலிக்க

செவ்வாய், மே 14

ஜெய்ஸ்ரீராம் - நல்லகாலம் பொறக்குது




ஹிஜாப் – மதஉரிமை
திருநீறு – இந்துத்துவம்



வெறுப்பை விதைக்கும்
வேத விற்பன்னர்களோ
வேண்டாத மதவாதிகளோ
மேற்கூறியவை

நாலு வரியில்
நால் வர்ணத்தையல்ல
நாட்டை பிளவுபடுத்த
முகநூலில் வெளியிட்டவை

பொய்யும் புனைச்சுருட்டும்
பிழைப்பாய் கொண்டவர்கள்
வாழ்வை அழிக்க
வதந்தியை பரப்பினாலும்

ஆய்ந்தறியும் திறன்
அறிவுடைத் தமிழனுக்கு
ஆதியிலிருந்து உண்டென்பதால்
அடியிற் காணும் விளக்கங்கள்

மடிசார், பஞ்சகச்சம்
கொடியிடை மறைக்க
குற்றமேதுமில்லை

கலாச்சாரத்தின் அடையாளமாய்
காணும் ஆடைகளை
கலவரமாய் மாற்றுவதேன்

ஜப்பான், பூட்டான் ஆடைகளை
சீர் செய்ய கிளம்பாமல்
ஹிஜாப் –ல் நுழைவதேன்

பிடி சாம்பலாய்
பிணமான பின் மாறும் உடலில்
தரிக்கும் திருநீறு

சைவத்தின் அடையளாமாம்
இந்துத்துவம் – இங்கே
வந்துதிப்பது எதற்காக

திருமண், சந்தனம்
குங்குமம் குறியீடுகளாய் இருக்கலாம்
குழப்பம் விளைவிக்கவல்ல


புர்கா – மதஉரிமை
காவித்துண்டு – மதவாதம்



பூணூல், உச்சிக்குடுமி
சர்வாதிகார சாதியாய் இருக்கட்டும்
சமுகத்தை பிரிக்காத வரை

மங்களூர் கலவரம்
மானுடத்தின் நிலவரமா
மதவாதத்தின் எதிர்வினையா?

கருப்பு திரவிடமாய்
சிகப்பு கம்யூனிசமாய்
பச்சை விவசாயமாய்

மஞ்சள் மங்களமாய்
மாநிலத்தில் இருக்கையில்
காவி கலவரமாவதேன்?

ஹலால் உணவு - மதஉரிமை
வெஜிட்டேரியன் உணவு – பார்பனியம்



கிடைத்ததை உண்டு
காலத்தை வென்றவன்
ஹலால் அசைவமென்கிறான்

கனியோ காய்கறிகளோ
மனிதன் உண்ண
மண்ணில் விளைந்தவை

குதிரைகளை கொன்று
அசுவமேத யாகம் வளர்த்தவர்கள்
அக்லக்கை கொன்று – தாங்கள்
அசைவமல்ல என்கிறார்கள்

ஆடு, மாடு, கோழிகள்
அறுத்து ஏற்றுமதி செய்பவர்கள்
அவாள்களாக இருக்க

அடுத்தவன் உண்பதை
அவமானமாக சொல்பவனின்
அழுக்கை யார் சொல்வது

மச்ச, கூர்ம, வராகம்
அவதாரங்களா….. மாமிசமா ......
கொல்கத்தா பிராமணனுக்கும்
ஆமைக்கறி சீமானுக்கும் தெரியாதா


அல்லாஹூ அக்பர் – மதஉரிமை
ஜெய்ஸ்ரீராம் – தீவிரவாதம்


இறைவனே மிகப் பெரியவன் எனும்
இஸ்லாத்தின் அல்லாஹூ அக்பரை
இவர்கள் ஏன் சீண்டுகிறார்கள்

ஓம்….
ஓங்காரமாய், பிரணவமாய்
ஒலிக்க ஒரு உபவத்திரமில்லை

ஹரஹர மகாதேவ
அரோகரா, கோவிந்தா ஒலிகளில்
பக்தியே தவழ்ந்தது

புத்தம், சரணம், கச்சாமி
பரலோகத்திலுள்ள பிதாவே
அல்லாஹூ அக்பர்
ஒன்றிணைந்தே இருந்தோம்

மகமாயி, மாரியாத்தா
முருகன், சிவனை
முடக்கவா ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம் ஒலித்தவுடன்
ஜெக்கம்மா
கெட்டகாலம் பொறக்குது என்றாளே?

புதன், ஏப்ரல் 17

தேர்தல் 2024










நாட்டின் வளங்களை
நாலு பேருக்கு விற்க
நாடி வருகிறார்கள்
நாள் 19 ஏப்ரல் 2024

பத்தல பத்தல
பத்தாண்டுகள் என்றே
பகற்கனவோடு வருபவனை
பாராள அனுமதிப்பாயா?

அக்மார்க் இந்துக்கள்
ஆட்சிக் கட்டிலை
அயோத்தி இராமனிடம் கேட்காது
அர்பன் நக்சல்களிடம் கேட்பதேன்

பொற்கால ஆட்சியாளர்கள்
பொய்மானைத் தேடி
சரயு நதிக்கரைத் துறந்து
இராவண தேசம் வருவதேன்

கோயபல்ஸ் கொள்கை
பொய்களை உண்மையாக்குவதில்லை
உண்மையாய் இருக்குமோ என
உன் உள்ளுணர்வைத் தூண்டுவது

வாக்குறுதிகள்
வெற்றுக் கூச்சல்கள்
நிறைவேற்ற அவர்கள்
மக்களில் ஒருவரல்ல

மாட்சிமை தங்கிய
மன்னராய் வாழ்பவர்கள்
முடிச் சூட்டியப் பின்
மாக்களாய் உனை நடத்துபவர்கள்

பக்தியில் பசுவைத் தொழவும்
புத்தியில் அக்லக்கைக் கொல்லவும்
சிந்தனை உனக்கிருந்தால்
நந்தனை எரித்த வாரிசு நீயே

சனநாயகத் தூண்கள்
வீழ்ந்து கிடப்பதை
எழுப்புமோ உன்வாக்கு
சவக்குழியைதான் ஆழமாக்கும்

நோட்டாவைப் பலப்படுத்திட
நோஞ்சான் சனநாயகம்
விரீட்டெழுந்து
விடியலைத் தருமா?

பதிவாகாத வாக்கும்
பயனற்ற நோட்டாவும்
பெரும்பான்மை என்றானால்
பாசிசமே வெல்லும்

மின்சார விளக்கணைத்து
மெழுவர்த்தி ஏற்றியவர்களே
கைத்தட்டி கொரானாவை
கொல்ல வழிகாட்டியவர்களிடம்

மொழியொரு கருவி
முழக்கமிடும் இனத்தின் அடையாளம்
ஓட்டுக்கு முனகும் உனக்கோ
அவ்வுணர்வு புரியாதெனச் சொல்

வாங்கும் வரிகளை
வாரிவழங்கும் வள்ளலாய்
வடிவமைப்பட்ட கதைகள்
வந்த பெருமழையில் கரைந்தன

ஊழலற்ற உத்தமர் பட்டம்
உச்சநீதி மன்றம் உத்தரவிட
பாரத வங்கி
பல்லிளித்து வழங்கியது

கட்சிகளை உடைத்து
ஆட்சி அமைப்பது
அவர்களுக்கு அத்துபடியான பின்
ஐந்தாண்டு தேர்தல் ஏன்

கட்டளைகளுக்கு பணியாதவர்களை
காராகிரகத்தில் அடைக்க
பூஜ்ய மதிப்பெண்கள்
ராஜ்யத்தோடு ராசியாகி விட்டன

ஓய்வுப் பெற்ற நீதியரசர்கள்
உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கிறார்கள்
எதற்கென்று
யாருக்கும் தெரியவில்லை

ஈ.டி, ஐ.டி., சி.பி.ஐ
நிர்வாகங்கள்
நேர்மை துறந்ததை
நெஞ்சுயுர்த்தி சொல்கிறது

ஏறிய விலைவாசியை
தேடும் கருப்புப் பணத்தில்
வேலைவாய்ப்பை உருவாக்க
தேனாறும் பாலாறும் ஓடுமா

செய்தி ஊடகங்கள்
சப்பாணி ஆனதை
அண்ணாமலை அறிவிக்க
சமூக ஊடகங்கள்தானே மறுக்கிறது

இவையெல்லாம் அறிந்ததால்
“ஏப்ரல்”, “மே” யில்
ஏமாறாதே என்கிறேன்
ஏற்பவர் ஏற்க!! ஏற்காதவர்??!!!!

திங்கள், ஏப்ரல் 1

டி.எம். கிருஷ்ணா

 




கர்நாடக சங்கீதம்
கருவறை பொக்கிஷமா
காப்பாற்ற வேண்டுமென
கதறுதே ஓரு கூட்டம்

ரஞ்சினியும் சுதாக்களும்
ராக ஆலாபனையில்
ரசாபாசம் உள்ளதென்றா
ரசிகையாய் ஆட்சேபிக்கின்றனர்

சுருதிபேதம் உள்ளதாய்
துஷ்யந் ஸ்ரீதர் உரைப்பது
சுத்த கர்நாடகமாய் இல்லாது
சிந்தித்து செயல் படுவதா?

தாளகதி மாறியதோ
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணம் வீசுமென்று
மேடையில் கலகக்குரலோ

இராமா ஏழுந்திருவென
அட்சர சுத்தமாய்
அவாள் மட்டும்தான்
ஆலாபிக்க முடியுமா

இசை மக்களுக்கா
இல்லை கலைக்கா
கோபுர வாதிகளுக்கா
கோபுரத்தின் உள்ளிருப்பவருக்கா

இராமனை பாட வேண்டியவன்
இராமசாமியை பாடியதாலும்
சலாத்துல்லா சலாமுல்லா என்று
இசையை இணைப்பதாலும்

சங்கீத கலாநிதி
அகௌரவம் ஆனது
சங்கீத வித்வத் சபை
சந்திக்கு இழுக்கப்பட்டது

சந்தைக்காக
அமெரிக்கா, பிரான்ஸில்
அரங்கேற்றம் செய்பவர்கள்
காசுக்குதானே விற்கிறார்கள்

கலை
வர்க்க பேதமற்றது
கடைக்கோடி ரசிகனின்
ரசனையை உயர்த்துவதும் அதுவே

பண்ணைபுரத்து ராசைய்யா
பாடியது மக்களிசைதானே
மாநிலமல்ல மண்ணுலகமெல்லாம்
மருகி உருகுதுதானே

உயர்குடி இசையை
ஊருசனம் ரசிக்கல
உன்சாதி மட்டுமே
ஒய்யாரமா நினைக்குது

ஒப்பாரி வைக்கும்
ஒன்றுமில்லா இசையை
ஒருவருக்கும் ஓதாது
ஒளித்து வைப்பதால் உயர்ந்ததா?

பொதுவெளியில்
பொற்காசு கிடைக்குமென்று
பிதற்றலை பரப்புவர்கள்
புனிதமென்று கூவுவதேன்

புறகணிப்பதால்
புனிதம் மீட்கப்படுமோ
புறகாரணிகள் வேறுவேறு
புறந்தள்ளுங்கள் இவர்களை

கற்றலுக்கு உரியவை
கலையும் அதன் நேர்த்தியும்
ஏகலைவன்
எப்போதும் கற்பவனே

ஏனோ
வர்ண பேதத்தை
வாழ்வில் நுழைத்து
வாராது காம்போதி என்றதை

ஆமோதிக்காது - கலை
ஆருக்கும் உரியது
அனைவரும் கற்கலாம்
அது கர்நாடகமாயிருந்தாலும்

இனப் படுகொலை
ஈவெரா வேண்டியதாய்
இட்டுக் கட்டும் காதைகள்
ஏராளமாய் கடந்தும்

பெண்ணடிமை விலக
போராடியப் பெரியாரை
பெண்ணே இழித்துரைப்பது
பேதமை எனினும் பொய்கள்தானே

ஆண்டைகளின் அதிகாரம்
ஆங்கு முடிவுற்றதால்
அவதூறுகளை
அள்ளித்தெளிக்கின்றனர்

அசாதாரணத் திறமையிருந்தும்
அங்கிகாரம் வேண்டி
அவாளாக வேடமேற்றதாய்…….
அதுவொரு விமர்சனம்

கொட்டு அடிக்க
கோமாதா தோல்
அக்லக்கை கொல்ல
கோமாதா புனிதமாகிறது

இந்த அரசியலை
இதுவரை பேசாதவர்கள்
சிந்திக்கச் சொன்னவர் என்றவுடன்
சினம் கொள்கின்றனர்

கலைஞர்களுக்குள்- இது
காலை வாரும் அரசியல்லல்ல
கற்றல் பரவலாக்குவதை
காயடிக்கும் அரசியல்

அ. வேல்முருகன்

 


புதன், மார்ச் 20

மேல்பாதி திரௌபதி




ஆறுகால ஆராதனையின்றி
அம்மன் அவதியுறுவதாய்
ஆங்கொரு புலம்பல்

அரவமில்லாது
ஆலயத்தை திறந்து
ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும்

பக்த கோடிகள்
பக்கம் வந்திடாது
பார்த்துக் கொள்ளவும்

காவல் தெய்வத்திற்கு
கட்டளையல்ல
காவலர்களுக்கு

மேல்பாதி திரௌபதி
நீதியரசருக்கு கட்டுப்பட்டு
சாதிசனத்தைக் கைவிட்டுவிட்டாள்

சூதாட்டத்தில்
சுற்றமும் நாடுமிழந்தாள்
பாண்டவரின் திரௌபதி

சாதிய வெறியட்டாத்தில்
சாத்தியக் கதவுகளைத் திறக்க
நீதிமன்றத்தையே நாடுகிறாள்

தீர்ப்பென்னவோ
வனவாசமாய்தான் இருக்கிறது
எக்காலத் திரௌபதிக்கும்

திறந்தவுடன் மூடி – யாரைத்
திருப்தி படுத்துகிறார்
நீதியரசர்

மாவட்ட ஆட்சியருக்கும்
காவல் கண்காணிப்பாளருக்கும்
தேர்தல் கவலைகள்

ஏற்றத் தாழ்வுகளை
மாற்ற முடியாத தெய்வங்கள்
நீதிமன்றத்தில் ஒளிந்து கொண்டு

தனக்கு பூசைகள் வேண்டுகின்றன
தங்களின் சமுகநீதியை 
தரமுயர்த்துவார்களா பக்தகோடிகள்?!

வெள்ளி, மார்ச் 1

மன்னிப்பு





மாறிடுமோ நடந்தைவைகள்
மன்னிப்பதால்
மறந்திடுவோமா

கொட்டிய வார்த்தைகள்
தேளின் வலியாக - சுண்ணாம்பு
விஷத்தை முறிக்குமோ

காயமோ வடுக்களோ
கண்களில் படும்போது
வலிகள் வந்துதான் போகும்

மனதும் மௌனமாகும்
கடந்து செல்லக்
கடினமாகும்

பகை வளர்த்து
பழியோடு வாழலாமா?
பண்பல்லவென மாறலாமா?

மறப்போம் மன்னிப்போம்
மனதிற்கல்ல
மாறாதத் தேவைக்கு

நெருப்பு

 


 

.

 





 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

                                       குறள் 1104


தகதகவெனத் தகிக்கறாள்
தத்தையைப் பிரியும் பொழுதில்
அகலாது அருகிருக்க
அருஞ்சுனைக் குளிரைத் தருகிறாள்
தகனத் தட்பத்
தலைகீழ் நுட்ப மொன்று
இகத்தில் இவளுக்கு
இலகுவாய் வாய்த்த தெப்படி?

காதல் சின்னம்




ஷாஜகான் கட்டியக்
கல்லறையா
சகலரும் எண்ணும்
இதய வடிவமா?

கட்டி அணைத்து
கனன்ற வெப்பத்தை
கட்டிலில் தணித்து
தொட்டிலில் தாலாட்டுவதா?

கணையாழி அணிவித்து
காதல் சின்னமென
கல்லறை வரை
கழற்றாமல் காப்பதா?

ஒற்றைப் பூவை
ஒய்யராமாய் சூட்டி
ஒப்படைத்தேன் எனையென்று
ஒன்று படுதலோ?

எக்காலமும் நினைவிலிருக்க
எதிர்பாரா முத்தமொன்றை
ஏந்திழைக்கு அளிக்க
எண்யெண்ணி மகிழ்வதா?

அல்ல அல்ல
அர்பணிப்பாய்
ஆயுள் முழுவதும்
அவளோடு பயணிப்பது

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

சனி, பிப்ரவரி 10

வலி

      




பார்வையால் வீழ்த்தி 
வார்தைகளால் வாட்டிடும்
ஏரார்ந்த கன்னியவளை
எங்ஙனம் பகைத்திடுவேன்

அத்தனை ஆசை
அவளிடம் கொண்டதால்
சித்திரத்தை பழிக்காது
சிரித்துச் செல்வேன்

ஊடல் கொண்டதில்
ஓர் இடைவெளி
வாடல் தொடராதிருக்க
ஐக்கியமாவதே வழி

அன்பைச் சோதிக்க
அவள் உதிர்ப்பவை
அறமற்றது என்பதால்
அமைதி காத்திடுவேன்

இடைவெளி காலத்தில்
ஏங்கிய நினைவுகளால்
கடைச்சங்கப் புலவன்
கன்னியிடம் ஏதோ உரைக்க

உண்மையா பொய்யா
உதடுகள் படபடக்க
ஓராயிரமுறை புலம்பியவளிடம்
ஒன்றுமில்லையென நகர்தேன்

வஞ்சியை வஞ்சிக்கல்ல
வலிதனை உணர்த்திட
வாடியவளுக்காக வாடினேன்
வாடாதிருக்க பாடினேன்.

புதன், நவம்பர் 15

மரணமா மதங்களுக்கு





நிலையானது ஏதுமில்லை
ஆன்மா இல்லவே இல்லை
துன்பம் உண்டு

தோன்றியது மாறும்/மறையும்
எனக்கு மீறிய சக்தி
எதுவெனக் கேள்

ஆம். உண்மையை
உரக்கச் சொன்னால்
மார்க்கம் மரணித்துப் போகும்

ஆசையே துன்பங்களின்
அடிப்படைக் காரணம்
அய்யோ வேண்டாம் பௌத்தம்

அனைவரும் சமம்
ஆன்மாவே கடவுள், பற்றற்றிரு,
என்றதனால் துரத்தினர் சமணத்தை

கற்பித்தவன் மக்கலி கோசாலர்
கல்வெட்டு ஆதாரமில்லை என்பதால்
கடைபிடிக்கவில்லை ஆசிவகத்தை

கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே என்றாலும்
கடவுள் அருளியதால் கடைபிடிக்கறோம்

என்னை நம்பு
நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை
என்னையன்றி ஓரணுவும் அசையாது

நால் வருணத்தை படைக்க
நான்முகன்
மூவுலகை காத்திட விஷ்ணு

படைக்கும் மந்திரத்தை படைத்தவன்
அழிக்கும் தொழிலின் நாயகன்
ஆனந்த தாண்டவமிடுபவன்

அண்டச் சராச்சரங்களை
ஆதியும் அந்தமமும் இல்லாதவன்
காத்திடும் பலகதைகள்

இந்துவாக ஒருங்கிணைந்தனர்
அதர்மம் தலைத்தூக்க
அவன் வருவானென காத்திருக்கிறார்கள்

பாவத்தின் சம்பளம் மரணம்
பாவிகளை மிரட்டினாலும்
பாவ மன்னிப்பு உண்டு

பரிசுத்த ஆவியால்
பிறப்பைக் கண்டவர்
மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்

பத்துக் கட்டளைகளை மறந்தாலும்
பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்
பக்தியோடு திருச்சபைக்கு வந்தால்

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்

வணக்கத்திற்குரியவன்
அல்லாவை தவிர
வேறு யாருமில்லை

அல்லா அனைத்தையும்
கவனித்துக் கொண்டிருக்கிறான்
தீர்ப்பு வழங்க வருவான்

தொழுகையும், நோன்பும்
மற்ற நற்காரியங்கள்
அல்லாஹ்வுக்கு விருப்பமானவை

துன்பத்தில் உழலும் போது
தேடி அழைப்பாயெனில்
வழி காட்டுவர்

தீய கருமங்கள்
தேவையைப் பொருத்தே
நிகழ்கிறது

எனவே தண்டனைகள்
இவ்வுலகில் கிடைத்தாலும்
மேலுலகில் மன்னிக்கப்படுகிறது
அனைத்தும் நானே
நம்பிக்கையோடு வா
நற்கதி அளிக்கிறேன்

நால்வகை மதங்கள்
நம்பிக்கையை விதைப்பதால்
நீண்டு வளர்கிறது மதம்

என்னையே கடவுளாய் ஏற்பாய்
இருக்கும் கிளைகளெல்லாம்
போலி என்றே உணருங்கள்

ஏமாறும் கூட்டம்
எண்ணிகையில்
பெருகிக் கொண்டிருக்கிறது

காசு உள்ளவன்
கடை திறக்கிறான்
கல்லா நிரப்ப மட்டுமல்ல

அதிகார வர்கமாய்
அய்யோ பாவங்களை
ஆட்டிப் படைக்க

ஆசையைத் துறப்பதும்
அவன் எனக்கு சமமா என்பதும்
அடிப்படையில் வேறு வேறு

ஆக
ஆசிவகம், பௌத்தம்
சமணம் சாமதியானது.





பாலஸ்தீனம் இஸ்ரேலாகிய கதை


















ஆபிரகாமின் புதல்வர்கள்
இஸ்ரவேலரின் குழந்தைகள்
கடவுளை ஒளியாய் கண்டவர்கள்
யூதர்களாம்

யூதனாய் பிறந்தவன்
இறைதூதன் என்றே வந்தான்
இறைவனாக்கப் பட்டான்
கிருத்துவனாக்கப்பட்டான்

அந்த மண்ணிலிருந்தே
அவதரித்த முகமது நபி
தானும் இறைதூதனென்றான்
அல்லாவே கடவுளென்றான்

யெருசலேம் என்பது
அமைதியின் உறைவிடமாம்
மும்மதத்திற்கும்
புனித இடமாம்

கிமு-வில்
கிரேக்கத்தின் அடிமையாய்
கிபி-யில்
இட்லரின் இரையாய் யூதர்கள்

1948 வரை
இஸ்ரேல் எனும் நாடு
உலக வரைபடத்தில்
ஒரு புள்ளியாகவும் இல்லை

நாடு கட்ட யூதர்கள்
பணம் கொடுத்து
பாலஸ்தீனர்களின் பாலையை
பட்டா நிலமாக்கினர்

பத்தாது என முடிவெடுத்து
படைத் திரட்டி ஆக்கிரமித்தனர்
அமெரிக்காவும் இங்கிலாந்தும்
ஆமோதித்தது

இஸ்ரவேலரின் பிள்ளைகள்
பத்துக் கட்டளைகளை
பரிதவிக்க விட்டு
இஸ்ரேலை உருவாக்கினர்

மேற்கு முனையும்
காசா துண்டும்
பாலஸ்தீனர்களின்
பற்றாக்குறை தேசமானது

ஐக்கிய நாடுகள்
ஆட்டத்தை வேடிக்க பார்க்குது
அரபு நாடுகள்
அரற்றிக் கொள்ளுது

பாலஸ்தீனியர்கள்
அவர்கள் மண்ணில்
அந்நியப் பட்டு நிற்கிறார்கள்
அனுதாபங்கள் வேண்டாம்

அகிலத்தின்
அறிவுஜீவி என்று
அரற்றிக் கொள்ளும் யூதன்
மனிதனைக் கொல்கிறான்

பணம் கொடுத்து வாங்கியவன்
பகட்டாய் வாழ்வதும்
பணத்தால் ஏமாந்தவன்
பரதேசியாய் வாழ்வதும்

மதங்கள் போதித்தவையா
மானுடம் மறந்தவையா
மண்ணின் மைந்தர்கள்
மனிதனாய் இருப்பதில்லையா?

பரிசுத்த வேதகாமம்
பாவிகளை உருவாக்குகிறது
தோராவும் குரானும்
குறுக்கே வாராது நிற்கிறது

பாவ மன்னிப்பு
பரலோகத்தில்
பார்த்துக் கொள்ளலாமென
யூதர்கள் யோசித்தார்களா

குழந்தைகளையும்
மருத்துவ மனையையும்
குறிப்பிட்டுத் தாக்கும்
இலக்கானதேன்?

நாடிழந்து
நட்டநடு காட்டில்
கூடாரத்தில் வாழும்
கற்காலச் சூழலேன்

அகதியாய் வெளியேறவும்
ஆங்கே வழியில்லை
எல்லைகளை மூடி
அப்பாவிகளை முடுக்குவதேன்

மானுடமென்பது
மனிதனை மனிதன் நேசிப்பது
மதங்கள் என்றும்
மனிதனை உலகில் பிரிப்பது

மூன்றடி மண் கேட்ட
புராணக் கதை தெரியுமா
இன்று இஸ்ரேல்
ஏவுகணைகளால் கேட்கிறது

ஞாயிறு, நவம்பர் 5

வாழத்தானே இணைந்தனர்

 



கண்கள் கனிய
காதல் அரும்பியது
கைப் பிடிக்க
கழுத்து அறுப்பட்டது

விரும்பிய உள்ளங்கள்
வீம்பான பெற்றோர்கள்
விலையானது உயிர்கள்
விளையுமோ அன்பு

விளைந்த அன்பை
வேரறுக்க நினைத்தது
வேண்டாத சாதியில்லை
வீரதீரமிக்க ஆணாதிக்கமே

வாழத்தானே பெற்றாய்
வாழத்தானே இணைந்தனர்
வழியில் வந்ததெது
வரட்டு கௌரவமா?

சிந்தனைகள் மாறிட
சிந்திய ரத்தங்கள்
சீராக்குமா சமூகத்தை
சீழ்பிடித்து மாளுமா?

சாதியும் கடவுளும்
சரிசமமா யில்லை
சக்ரவர்த்தியும் சமானியனும்
சம்பந்தி யாகுவதில்லை

சந்ததி தழைக்க
சரித்திரம் படைக்க
சமத்துவம் கொடாது
சாக்காட்டைத் தந்தானே

உலக இயக்கத்தின்
உன்னதம் காதலே
உலகறிவற்றவனே
உயிரைக் கொய்தானே

உயிர்கள் ஒன்றென
உணர்ந்திட முடியாதோ
உறவைக் கொண்டாட
உன்மதம் தடுக்குதோ

ஐந்தறிவும்
அன்போடு வாழுதே– உன்
அகங்காரம்
அக்காதலைக் கொல்லுதே

ஊரும் உறவும்
உருகி அழுகிறது
உருவ மழிக்க
ஊழென இருப்போமா

முயன்ற உள்ளங்களை
முகிழ விடாது
முக்கரம் கொன்றாலும்
மூளுமே காதல்தீ

செவ்வாய், அக்டோபர் 24

நெஞ்சமும், அவளும்

 




அறிவாய் தானே

அடைப்பட்டு கிடப்பதை
சிறிதும் கவலை
சிறைமீட்க இல்லையோ
முறிந்தது அன்பென
முகமெதிர் சொல்லி
குறிப்பை உணர்த்த
கூர்மதி நினைக்க

அன்பே என்று
அருகில் வந்தான்
இன்முகம் கண்டு
எனையே மறந்தேன்
புன்னை நிழலில்
பொழுதும் போனது
முன்னை நினைத்தது
முற்றும் மறந்தது

காலங் கடத்தும்
கள்வனைக் கண்டிக்க
ஏலாதோ நெஞ்சே
ஏசாமல் விட்டாய்
கோல முகத்தினை
கோணலாக்க மறந்தாய்
ஆலகாலச் சொல்மறந்து
அமுதமொழி மொழிந்தாய்

அத்தான் அருகிருக்க
அண்டம் சுழலுதே
பித்தான நெஞ்சமும்
பின்னாலே போகுதே
முத்தான சொல்லில்
மூச்சை நிறுத்தினானே
நித்தியம் இதுவென
நினைக்கயில் பிரிந்தானே


செவ்வாய், அக்டோபர் 17

காமம்





கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்

விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது

இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்

நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல

விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே

புதன், அக்டோபர் 11

பேசிப் பேசிப் பிரிவினையா?




பேசிப் பேசிப்
பேழையில் அமுதம் பருக
யாசிக்கு மிவனை
யாத்திரையில் தொலைத்த தேனோ
ஏசி உன்னை
என்குற்ற மில்லை என்றேனா
ராசி யாகி
ரட்சித்துக் கொள்ளடி என்றேனே


வந்து வந்து
வதைக்கும் எண்ண அலைகள்
பந்தம் தந்து
பலரும் வாழ்த்திய கதைகள்
சந்த நயம்
சரிசெய்ய காலம் அளித்தால்
இந்த உலகம்
இனியது என்று கதைப்பேனோ


உனது முடிவுகள்
உந்தன் தேவையின் பொருட்டு
எனது அன்பும்
எந்தன் தேவியின் பொருட்டு
மனதின் காயமோ
மாறுபடும் உறவின் பொருட்டு
வினாவின் நியாயமோ
விலகியே நிற்கும் இருட்டு


தேவியின் தேவைகள்
தேடிட கிடைத்திட வேண்டும்
புவியில் உள்ளவரை
பூரணநலத் தோடிருக்க வேண்டும்
குவியும் புகழ்தனில்
குதுகலித் திருக்க வேண்டும்
துளியும் என்நினைவு 
துளிர்விடா திருக்க வேண்டும்

செவ்வாய், அக்டோபர் 3

காதற்கணை

 



குறள் 1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

 



கனியக் கனியப் பேச
காதல் வளரா
தனித்தச் சொல்மொழிந் தாலும்
தவத்தில் கிட்டா
இனிய கண்க ளிரண்டு
இசைக்கும் மொழியில்
புனிதக் காதல் மலருமே
புவன மெங்குமே


வனைந்த சொற்கள் பலவால்
வாராக் காதல்
சுனைபோல் சுரக்கும் கண்ணில்
சுழலும் பாரீர்
வினையாய் மாறிச் சொற்கள்
விளைவைச் சுருக்குமே
நினைத்த வுடனெழும் காதலில்
நீள்விழி இணையுமே

 

ன்பன்
அ. வேல்முருகன்

 

திங்கள், அக்டோபர் 2

ஐம்புலனின்பம்



அத்தனை இன்பமும்
அவனுட னிருக்க
நித்தமும் கிடைக்க
நிச்சய மேதுமில்லை
வித்தைக ளனைத்தும்
விளைந்திடும் பருவத்தில்
அத்துபடி யாகிட
அனைத்திலும் இன்பமே

ஐம்புல னின்பம்
அவனருகி லிருக்க
இம்மை யில்லல்ல
இளமையில் காணுவதே
கம்பன் வருணித்ததை
கண்களால் காண்பதும்
எம்மான் பேசிட
என்றென்றும் கேட்பதும்

வகைவகையா சமைத்து
வாலிபத்தில் உண்பதும்
திகைக்கும் வண்ணம்
திணரும் நறுமணத்தை
வகைக்கொன்றா வாழ்வில்
வரிசையாய் நுகர்வதும்
உவகை கொள்ளின்பம்
உடலுக்கு வேண்டுவதும்

இளமைப் பருவத்தின்
இயல்பான தேவைகள்
களவு மணத்தில்
களிப்புற்று வாழ்ந்ததை
தளர்ந்த பருவத்தில்
தள்ளி வைத்திடலாம்
வளர்ந்த உள்ளங்களே
வாழ்வை ரசியுங்கள்



செவ்வாய், ஆகஸ்ட் 15

கண்களின் ஆற்றல்




 
குறள் 1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து


அஞ்சனம் தீட்டிய
அவளின் கண்கள்
கொஞ்சி அழைத்து
குற்று யிராக்கியது
தஞ்ச மென்றேன்
தன்நிலவாய் குளிர்ந்த
வஞ்சியின் கண்கள்
வைத்தியம் பார்த்தது

பாவல னாகி
பல்லக்கில் போவதும்
கோவல னாகி
கொலைகளம் செல்வதும்
ஆவலர் அவரவர்
அன்பின் ஆற்றலே
ஆவதும் அழிப்பதும்
அழகிய கண்களே 


ஞாயிறு, மார்ச் 5

அகலிகை




அகலிகை, சீதை, திரௌபதி,
தாரை, மண்டோதரி - பஞ்ச
கன்னியரென மகாபாரதம் உரைக்க

அவர்களில் அகலிகை
கௌதம ரிஷியின்
மனைக் கிழத்தி

வால்மீகி, கம்பன், துளசி
எழுத்தச்சன், தொரவே
இராமாயணங்களின் அகலிகை

பம்ம, பௌத்த
ஜைன இராமாயணங்களில்
காணாதுப் போகிறாள்

இந்திரனின் இச்சையால்
இராமனின் கால்பட்டு
சாப விமோசனதிற்குக் காத்திருந்தவள்

பாற்கடலைக் கடையத்
தோன்றியக் காமதேனுவை
மகரிஷிகள் ஏற்றனர்

அடுத்து தோன்றியது
வெண்ணிறக் குதிரை
மாவலி மன்னன் கொண்டான்

வெள்ளை யானையையும்
பாரிஜாத மரத்தையும்
தேவேந்திரன் பெற்றான்

அதன் பிறகு
அப்ஸரஸ் புடைச்சூழ
மாகாலட்சுமி தோன்றினாள்

அவளையும் இரத்தின மாலையையும்
ஸ்ரீமன் நாராயணன்
ஏற்றுக் கொண்டார்

மயக்கும் மதுவின் தலைவியை
அரியின் ஆசிர்வாதத்தோடு
அசுரர்கள் கொண்டனர்

அதற்குப் பிறகும்
அவர்கள் கடைய
ஆங்கு தோன்றியது

பேரழகின் உச்சமாய்
வானில் ஒளிரும் நட்சத்திரமாய்
அகலிகைத் தோன்றினாள்

அழகெனில்
அடிதடியும் உண்டல்லா
அங்ஙனமே ஆனது

இந்திரன் இச்சைக் கெண்டான்
கௌதமன் கச்சைக் கட்டினான்
போட்டியில் முடிவென்றான் பிரம்மன்

தேவர்களுக் கிடையேயான
தேடல் போட்டியன்றோ
தேடினர் தேடினர்

இருபக்க தலைக் கொண்ட
கோமளத்தைக் காண்பவருக்கு
பாற்கடல் பெற்றெடுத்த பத்தினி

ரிஷியோ தியானத்தில்
இந்திரனோ உலகப் பயணம்
நாரதர் நன்மை பயத்தார்

கோ சாலைக்கு கூட்டிச் சென்றார்
ஆங்கொரு கன்றீனும் பசுவிற்கு
கன்றின் தலை முதலில் வர

நாரதர் ரிஷியை
அப்பசுவை மும்முறை வலம்வர
பணிக்கிறார்

அங்ஙனம் வலம்வருவது
உலகைச் சுற்றுவதற்கு சமமென
சாட்சி தானென்கிறான் நாரதன்

கைப்பிடித்தான் கௌதமன்
காமத்தீ அடங்காத இந்திரன்
காத்திருந்தான்

அத்தாட்சியாய் சதானந்தன்
அவர்களின் மகவாய்
பிறக்கிறான்

மோகத்தில் வீழ்ந்தவனுக்கு
தாகம் தீறுமட்டும்
அச்சமும் நாணமேது

அவரவர் கற்பனைத் திரனுக்றேப்ப
அகலிகை அலைகழிக்கப் பட்டாள்
மகாபாரத்திலும் மானபங்கப் பட்டாள்

இரங்கநாத, பாஸ்கர, வங்காளி
இராமாயணங்களில் இந்திரன் எனவறிந்தே
இசைந்தாள் எனக் கதைச் செல்கிறது

தேவேந்திரன் துப்பறிவாளனாகி
கௌதமனின் செயல்களை
நோட்டமிடுகிறான்

நாளொன்றைத் தேர்ந்தேடுத்து
கௌசிகனாய் உருமாறி
கருக்கலை விரைவாக்கினான்

மாசு மருவற்றப் பேரழகை
ஆசையாய் ஆராதிக்க
ஒருசாமம் போதுமென

சேவலாய் குரலெழுப்ப
கௌதமன் வெளியேற
ஆவலாய் காத்திருந்தான்

இந்திரன் கௌதமனாய்
அகலிகையை அணைத்தான்
கற்புக்கரசி ஏமாந்தாள்

மாயக் கருக்கலென
ஆயத் தெரியாதக் கௌசிகன்
ஆசிரமம் திரும்பினான்

கண்ட கோலத்தினால்
மூண்ட கோபத்தில்
கல்லாக சபித்தான்

உன்னுருவத்தில் வந்ததனால்
உடனிருக்க அனுமதித்தேன்
என்றாள் அகலிகை

பொல்லாப் பழி விலக
இராமனின் கால்பட
விமோசனமென விலக்களித்தான்

இந்திரா உன்னாசை அல்குலென்பதால்
உடலெங்கும் ஆயிரம் பெறுவாயென
சாபமிட்டான் கௌதமன்

விமோசனம் வேண்டினர் இந்திரனுக்கு
ஆயிரம் கண்ணாக
மாற்றம் பெற்றது சாபம்

வால்மீகி கம்பனென
வரிசையாய் அகலிகையை
வதை செய்த தொன்மத்தில்

வண்ணக் கற்பனைகள்
எண்ணற்றக் கதைகளோடு
கற்புக்கு காரணம் கற்பிக்கிறது

தொன்மம் என்பதால்
தோப்புக் கரணம் போடாதே
எள்ளளவும் ஏற்காதே

காமத்தில் கல்லாயிறு
காலகாலமாய் பெண்ணிற்கு
போதிப்பது ஆண்தானே

மானுடத்தின் கற்பு
மதம் கொண்டவர்களுகில்லை
மானினத்திற்கு மட்டுமே

சுயவரம்
பெண்ணின் விடுதலையா
ஆணின் அடக்குமுறையா

வீரதீர மென்பது
வில்லை உடைப்பதா
எல்லை யறிந்து நடப்பதா

கல்லாமை என்பது
கல் பெண்ணாக - இராமனின்
கால்பட வேண்டுமென்பதா

சீதையின் கற்பைச் சோதிக்க
தீப்புக வைத்தவனா
தீர்பெழுதச் சிறந்தவன்

மானுடத் தோற்றமென்பது
மையலில் தோன்றுவதா
பாற்கடலில் எழுவதா?

தவ வலிமையால்
புவனம் அறியவில்லை எனில்
அவணி ஏது

மலர் நாடும் வண்டாய்
சிலர் மட்டு மிருப்பது
மகரந்தச் சேர்க்கைக்கா

தேனருந்தும் வண்டு
தெவிட்டிட
தேடும் மலர்கள் இரைதானே

இருதலைக் கோமளம்
இகத்தில் இல்லாத போது
இருப்பதாய் பாவித்து

அஞ்ஞான உலகமிதை
அற்புதமென வடித்தே
அகிலத்தை ஏமாற்றுவது

மெய்ஞானமென்று
ஐந்தறிவாய் ஏற்காதே
ஐயுறவு கொள்


திங்கள், பிப்ரவரி 27

அருகிரு அன்பே










கடுப்பில் ஏனடி
கண்ணனை வாட்டுற
வடுக்களாய் வார்த்தையை
வண்டியாய் கொட்டுற
தடுத்தே அன்பின்
தரத்தைச சோதிக்கற
அடுகள மல்லவே
அன்புனை எதிர்த்திட

ஒருநாள் இருநாள்
உனையான் மறந்தேனா
விரும்பும் மனதிற்கு
விடுமுறை அளித்தேனா
அரும்பும் நினைவால்
அத்தானை வெறுத்தாயா
பொருமிக் களைத்திடாதே
பொல்லாங்கும் சொல்லாதே

பொருள்தேடிச் சென்றேன்
பொஞ்சாதி உனக்காக
இருள்விலக்க வந்தேன்
இரும்பாய் மாறாதே
அருள்வேண்டி நின்றேன்
அர்ச்சனைகள் செய்யாதே
மருள்கொண்டும் விலகாதே
மச்சான் மடலேறுவேன்

உருவத்தை பார்த்திட
உன்தாபம் அடங்குமோ
குரலதைக் கேட்டிட
குதுகலம் பிறக்குமா
பருவத்தில் பசலை
பாவையை வாட்டுமோ
சரணடைந் தேன்தேவி
சரசம் பயிலவே

பருகிடும் விழிதனை
பார்த்து நாளாச்சு
நெருங்கிட விலகிடும்
நெடுநாள் கசப்பு
உருகிடும் பேச்சில்
உண்மைகள் விளங்கிடும்
அருகிரு அன்பே
அத்தனையும் மறைந்திடும்

திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

காதலர் தினம்






மடலேறி
மடல் வரைந்து
மடந்தையைக் கவர்ந்தவர்கள்
மலரில் தஞ்சடைந்த நாளோ

களவொழுக்கம் கண்ட
தலைவன் தலைவிக்கா
கண்டதும் காதல்கொண்ட
தற்கால காதலர்களுக்கா

தூதாய் வரும் தோழியா
துருவங்கள் இணையும் மொழியா
துறவறம் போகும் வழியா
துன்பத்தில உழலும் ஆழியா

காற்றுமழை பருவத்தே வருவதுபோல்
காளைப் பருவத்தில் வருவதன்றோ
கூற்றுக் கிரையாகி போகாது
கூட்டணி பலமாகுவது இந்நாளோ

நொடிகள் நீள்கிறது
நாடித் துடிக்கறது
ஆடி மாதமாய்
அடுத்த நாள் தோணுது

இந்த துடிப்புதனை
இலாபமாய் மாற்றிட
இரத்தின கம்பளம் விரித்தவர்கள்
இரகரகமாய் விற்பவர்கள்

புனிதமென்ன
புவனம் முழுதும் கொண்டாட
புனைந்த கதைகளோடு
வணிகம் மட்டுமே குறிக்காள்

அட்சய திரிதையன்று
அட்டிகை வேண்டுமென
அவளை கேட்க வைப்பதும்
அத் திருநாள்தான்

திருநாளில் மட்டும்
திகட்டும் அன்பை அளிப்பாயோ
மறுநாளில் திக்குத் தெரியாது
திசைமாறிச் செல்வாயா



சனி, பிப்ரவரி 11

பசுத் தழுவுதல்





காதலிப்போர்
கண்ணோடு கண்
காணும் நாளா
பிப்ரவரி 14

வேதத்தை மீட்டெடுக்க
வாஞ்சையோடு
பசுவைக் கட்டியணைக்க
பிப்ரவரி பதினாங்கா

காமதேனு என
கட்டிப் பிடிப்பாயா
கோமாதா என
கூம்பிட்டு நிற்பாயா

பசுவைத் தழுவு
அசுமேத யாகத்தில்
வேதமுரைத்ததை
வேட்கையோடுச் செயல்படுத்து

யாக முடிவில்
தசரதப் பத்தினிகளுக்கு
புத்திரப் பாக்கியம்
பிப்ரவரி 14 ல் உங்களுக்கு

உழைப்பைப் போற்றும்
உன்னத மரபில்
உடனுழைத்த மாட்டை
உயர்த்திப் பிடிக்கும் தமிழனே

வேத மரபை மீட்க
பசுவைத் தேடிக் கொண்டிருப்பாயா
காதல் உயிரினத்தின்
உன்னதமென போதிப்பாயா

வியாழன், பிப்ரவரி 9

பிராமணன் – பாஸ்கி






அறிவு
அவன் சாதிச் சொத்தொன்று
அரை வேக்காடு
பாஸ்கி அலறியது

வரலாறு அறியாத
வந்தேறியா அவன்
வடிக்கட்டியப் பொய்களை
வாரி வழங்குபவன்

பௌத்தமும் சமணமும்
தழைத்தோங்கிய நாட்டை
தனதாக்கிக் கொண்டு
ஒமம் வளர்த்து யாசித்தவர்கள்

கடல் கடந்து செல்ல
வேதத்தில் உத்திரவில்லை
விவேகானந்தன் சென்றான்
விவேகத்தால் பெயர் பெற்றான்

வேதம் உரைத்ததை
வேண்டியபடி மாற்றினான்
குடுமியை வெட்டினான்
குலத்தொழிலையும் மாற்றினான்

மொட்டைப் பாப்பாத்திகள்
கட்டைப் பொருளாகாது
ஏட்டைப் படித்ததால்
கூட்டை விட்டுச் சிறகடித்தனர்

அழுந்த அழுந்த
அவன் சாதிப் பெண்டீரே
அவனை மதியாது
அந்த சாஸ்திரங்களை மாற்ற

சூத்திரன் மட்டுமென்ன
சூப்பிக் கொண்டிருப்பானா
ஈயத்தை காய்க்கும் வரை
இளித்துக் கொண்டிருப்பானா

அறிவோ, சிந்தனையோ
ஆறறிவு மனிதனுக்கே
ஆயினும் ஆங்கொரு
அக்லக்கைக் கொல்வது

அவன் வகுத்த நீதியெனில்
அவ்வறிவை மெச்சுவதா
அகிலத்தில் இல்லாது செய்வதா
அறமறிந்தவர்கள் சொல்லுங்கள்

அச்சாதி வேதத்தை
அறவே தான் பின்பற்றாது
அடுத்தவகளிடம் திணித்தே
அகண்ட கனவை கண்டவர்கள் 

பின்நோக்கி இழுக்கும்
பிற்போக்கு கயவர்கள்
பிரித்தாளும் சூழுச்சிக்கு
பிராமண ஊதுகுழலாய்

பாஸ்கி அரற்றியது
பகல் கனவென்று
பாடம் புகட்டு - அறிவு
பாரினில் பொதுவென்றே







ஞாயிறு, பிப்ரவரி 5

அதானி இந்தியா









ஊதிப் பெருக்கிய
உலகப் பணக்காரனை
உருட்டித் தள்ளியது
ஹிண்டன்பர்க் ஆய்வு

ஆய்வொரு குப்பையென
அவர்கள் குதித்தே – இது
இந்தியாவின் மீதான
வளர்ச்சிக்குத் தாக்குதல் என்றனர்

ஊக வணிக வீழ்ச்சியில்
ஊமையானது அரசு
ஊதிப் பெருக்காத எதிர்கட்சியோடு
ஊடகமும் மௌனமானது

இந்தியாவும் அதானியும்
இணையென்ற கூற்றை
இறையாண்மை இந்தியா
ஏற்றுக் கொண்டதா?

இரண்டு இந்தியா
ஏற்றுக் கொண்ட மக்கள்
தேச பக்திக் கொண்டவர்கள்
ஏற்காதவர்கள் ????............

அதானி அம்பானி
ஆளும் இந்தியாவில்
ஆநிரையோ அந்நியரோ
ஆமைக்கறி உண்பவரோ

எட்டு இலட்சம் கோடி
எங்குச் சென்றதென
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில்
“எல். ஐ. சி” யும், “எஸ். பி. ஐ” யும் வந்தனர்


வீழ்ந்தாலும் பாதிப்பில்லை
வீரவசன அறிக்கயை
வீசி எறிந்தனர் – ஊடகங்கள்
பிரசுரித்து ஆசுவாசப் படுத்தின

ஆண்டிறுதி விற்பனை
அதோகதி யானது எல்.ஐ.சி க்கு
அவர்களின் பங்கும்
அடிப்பட்டு வீழ்ந்தது

கருப்புப் பணத்தை ஓழித்து
பலகோடி இலாபமீட்டி
சில நாட்களில்
உலகில் 2வது நபர்

மொரிசியஸ், பனமா
கேமன் தீவுகளில் தேடிய
அதானியின் இந்தியாவா
55 சதவீதத்தை தொலைத்தது

வங்கிக் கடன், எல்.ஐ.சி முதலீடு
அடமானப் பத்திரங்கள்
45 சத வீதமாய் மிஞ்சுமா
நாமம் மட்டுமே எஞ்சுமா

நீரவ் மோடி
மல்லையாக்களின்
வரிசையின் எண்ணிக்கை
வரும் நாளில் தெரியுமோ

உலகம் சுற்றும் வாலிபனின்
உன்னதப் பயணங்கள்
உத்தமர் தேசத்தின்
உத்திரவாதமெனப் பொழிய

சந்தைதனை போட்டியின்றி
சகலமும் பெற்றவன்
சந்திச் சிரித்து நிற்கிறான்
சகாயனோ விக்கித்துப் போகிறான்

ஏவல் செய்யும்
அரசு யந்திரங்கள்
காவல் காக்கின்றன
கண்ணியம் காக்கப்படுகிறது

வீட்டுக் கடனுக்கு
வீடு ஜப்தி செய்யலாம்
ஜி.எஸ்,டி யால் மூடிய
சிறுநிறுவனங்களை ஏலம் விடலாம்

கொரானாவில் பரலோகம் சென்ற
பாமரனின் குடும்பத்தை
சட்டப்படி ஏலம் விட்டு
நிற்கதியாய் நடுத் தெருவில் நிறுத்தும்

வங்கி நடைமுறை
இந்தியர்களுக்கு மட்டுமே – ஆயினும்
அதானி இந்தியா
மேதினியில் வேறுதானே?

“இசட்” பிரிவு பாதுகாப்பில்
“செபி” யோ “சி.பி.ஐ “ யோ
உள் நுழைய முடியவில்லை
வங்கிகள் மூச்சு விடவில்லை

நீதி மன்றங்கள்
நிவாரணம் அளிக்குமோ
கடந்துச் செல்ல அவையும்
பழகிக் கொண்டனவோ

அமெரிக்க நீதிமன்றம் வா
ஆதாரம் தருகிறேன் என்கிறான்
ஆத்திரமோ, அவசரமோ இல்லை
அமைதிக் காக்கிறான்

தேசப் பக்தியால்
“ஆன்டி” இந்தியனாகாது
இருக்க பழகுவாயா?
எதிர்வினை யாற்றுவாயா?





ஞாயிறு, நவம்பர் 13

பிரிவின் வலி






திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி

நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ

அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்

தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி

புதன், நவம்பர் 2

தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா

 





தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா

ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே

ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ

பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்

திங்கள், அக்டோபர் 24

தீபாவளி





புராணமோ
புனைந்தக் கதையோ
பொய்களின் மூட்டையோ
பொறுமையாய் கேளுங்கள்

வராக அவதாரத்தில்
பூமாத் தேவியை
தொட்டதால்
பவுமன் பிறக்கிறான்

அரக்கர்களை வென்ற கையோடு
அவளைத் தொட்டதால்
அவதாரத் பிறப்பிற்கு
அரக்க குணமாம்

குணத்தால்
அரக்கனென அழைத்ததால்
அவனுக்கொன்றும்
அச்சமில்லை

பிரம்மனிடம் -சகா
வரம் கேட்க
திருத்தி அளிக்கப்படுகிறது
ஈன்றவளால் இறுதி முடிவென

வராக அவதாரத்தில்
வசதியாய் தொட்டது
கிருஷ்ன அவதாரத்தில்
சத்யபாமாவால் சரிசெய்யப் பட்டது

தனயனென அறியாது
தன்னிணை காக்க
அசுரனை அழித்தாள்
தேவர்களை காத்தாள்

கதை முடிந்ததென
கடுகளவும் நினையாதீர்
கற்பனைகள் தொடரும்
காசியும் இராமேஸ்வரமும் இணையும்

திரேத யுக நாயகன்
திரும்புகிறார் கானக வாழ்விலிருந்து
தீபமேற்றி மகிழ்ந்தனராம் – மக்கள்
தீப ஓளி கதைகள்

2500 ஆண்டுகளுக்கு முன்
ஆணும் பெண்ணும் சமம்
அகிம்சை வாய்மையென்றும்
பற்றற்றிறு பாலுணர்வு துறவென்றும்

வடித்துக் கொடுத்த வர்த்தமானர்
வீடு பேறடைந்த நாளை
தீபமேற்றி வணங்கியதால்
திருநாள் அவர்களுக்கு

போதிமர ஞானம் போதும்
நாடாள வாவென்று - சுத்தோதனன்
நாலுபேரை அனுப்ப
நால்வரும் ஞானம் பெற

காலோதயன் எனும் அமைச்சன்
கபிலவஸ்துவுக்கு
சித்தார்த்தனை
அழைத்து வர

வறியவரும் தீபமேற்றி
வாழ்த்தட்டுமென்று
இருப்பவன் கொடுத்தான்
இருள் விலக மகிழ்ந்தான்

புத்தனின் வருகை
புத்தொளி அளித்ததால் – நாடு
திரும்பிய நன்நாளை
தீபஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்

1577 ஓர் அடிக்கல் நட்டு
பொற்கோயிலை கட்டத் துவங்கினர்
அந்நாளை சீக்கீயர்கள்
தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர்

சக்தி சிவனோடு இணைந்து
அர்த்தநாரியாய்
காட்சி அளித்த நாள்
கேதார கௌரி விரதநாள்

மனிதனின் விழாவா
மதங்களின் விழாவா
மானுட வாழ்வில்
மகிழ்ச்சியுறு நாளா???? !!!!!!!!!!!

புதன், அக்டோபர் 5

செத்தப் பின்பு




கொள்ளிச் சட்டியும்
நெய் பந்தமும்
நீராட்டும் இல்லாது
நீத்த உடல் வேகாதா

எள்ளுத் தண்ணியும்
பிண்டமும்
படைக்காட்டா - பாவி
ஆவியா சுத்துவேனா

வாழும் போதே
வகைவகையாய்
யாகங்கள் செய்யாததால்
கர்மபலன்கள் கிட்டாதோ

நாளும் கிழமையும்
நம்மை நினைத்து
நாதியில்லா எனக்கு
திதி கொடுப்பார்களா

கதியற்று எனக்கு நானே
கயாவில் பிண்டமிட்டு
காசியில் காலமானால்
கண்டிப்பாய் மோட்சம் கிட்டுமோ

கடன் பட்டு
கல்விக் கற்று
அயல் தேசம் சென்றவன்
அன்னியமாகி போனான்

எடுத்து போடுவது
யாரென அறிவோமா? – ஆனா
அடுத்தடுத்து ஆசைகள்
நிறைவேறுமா?

செவ்வாய், அக்டோபர் 4

காதல் - நிலையானதா?




பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்

எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி

நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்

புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது

முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது

நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்

வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்

பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல

திங்கள், அக்டோபர் 3

என்ன செஞ்ச





காதலி
கட்டிய மனைவி
பெற்றெடுத்த பிள்ளை
சட்டென்று கேட்கும் கேள்வி

அவளுக்கு
அது பிடிக்குமென்று
ஆசையாய் வாங்கிக் கொடுத்திருந்தாலும்
என்ன பெரிசா செஞ்சிட்ட

கல்யாண நாளென்று
கல் வைத்த அட்டிகையும்
கையளவு ஜரிகைச் சேலையும்
கட்டியவளோ - முகம் சுழிச்சிட்டா

கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தும்
பட்டம் படிக்க அனுப்பி வைத்தும்
இஷ்டம் போல் சுற்றிய
மகன் இக்கேள்வி கேட்டா

ஆணாதிக்க நாயகன்
சாதித்துதான் என்ன
தன்னாசைக்கு வாழ்ந்தா
தவிக்கவிட்டான் இவர்களை

இன்னும் இன்னும் என
எதிர்பார்க்கும்
இவர்களை
எதிர் கொள்ளவதெப்படி

ஞாயிறு, அக்டோபர் 2

காதல் நிலை




நித்திரையில்
சித்திரவதையில்லை
புத்தியும் பேதலிக்கவில்லை – இது
சத்தியமடி

ஒவ்வொருச் சொல்லுக்கும்
பல்வேறு அர்த்தம் கற்பித்து
பாடாய் படுத்தியவளே
திடமாய்தான் இருக்கிறேன்

உச்சரிக்கும் தொணியில்
உடைந்தே போவேன்
சஞ்சரிக்கும் ஆசையில்
சகித்துக் கொள்வேன்

உன் ஒவ்வொரு கோணலுக்கும்
என் வாடிய மனது
துறவறம் நாடாது
துன்பமின்றி இருக்குது

நினைவுகள் வாராமலில்லை – அவை
வினையாற்றுவதில்லை
ஏனைய எச்சங்கள்
எனை வாட்டுவதுமில்லை

இந்நொடியே
என் முன்னாடி
நீ தோன்ற நினைத்தக் காலம்
கடந்தக் காலங்களாயின

சந்தித்தே
சற்றேறக் குறைய
சிலபல காலமாயினும்
சஞ்சலமில்லை மனதில்

அவரவர் வாழ்க்கை என்றே
அன்னியப் பட்டு விட்டோம்
அன்றுனைப் பார்க்க நேரிட
அழகாய்தான் ஒளிந்துக் கொண்டாய்

கண்ணாமூச்சி ஆட்டங்கள்
காலங் கடந்தாலும்
காதலில் அழகுதான்
கணநேர மகிழ்ச்சிதான்

ஆர்பரித்த அன்பு
அடங்கிதான் போனதோ - அல்ல
ஆவல் இருக்கத்தான் செய்கிறது
ஆயினும் அவசரமில்லை

உனை நிந்தனைச் செய்ய – இக்
கவிதை வடிக்கவில்லை
நினை நினைத்த மனதை
ஆற்றுப் படுத்தும் நிலை







நமக்கு மீறின சக்தி






கடவுளா
கட்டிய மனைவியா
காலகாலமாய் தேடியும்
கண்டுபிடிக்க முடியாததா

என்னால் இயலாததை
அவனால் முடியுமாயென சிந்தியாது
ஏதோவொரு சக்தியென
ஏன் தீர்மானித்தேன்

புயல் மழையெனில்
பூட்டிய வீட்டைத் திறப்பதில்லை
வெயில் உச்சமெனில்
வீதியில் நடப்பதில்லை

மழைப் பொழிய
குடையோடு நடக்க
விடைக் கண்டவன்
மின்னலில் மாண்டால்

நமக்கு மீறின சக்தியென்றே
மூளை மழுங்கியிருப்பானா
நாளையே வேறொருவனை
மின்னலில் சாகக் கொடுப்பானா

அளவுக்கதிகமான
வெயிலும் மழையும்
பருவநிலை மாற்றமென
பகுத்தறிந்த மனிதன்

ஜடாமுடியில்
கங்கையை சுமப்பவன்
கமண்டலத்தில் சிக்கிய
காவேரியைத் திறப்பவனின்

கட்டுக்கதைகள்
புத்தியெல்லாம் நிறைந்திருக்க
நமக்கு மீறின சக்தியென
நயமாய் சொன்னானா?

ஐம்பூதங்களைக் கடவுளாய்
அச்சத்தில் ஏற்றாயா
அங்குசத்தில் அடங்காததால்
நமக்கு மீறின சக்தியென்றாயா

பெயரிட்டு அழைத்த புயலில்
சர்வ வல்லமையுள்ளவன்
நமக்கு மீறின சக்தியென
சாக்குச் சொல்லியாப் போனான்

கருந்துளைக்குள் நடப்பதை
கற்றறிந்தவன் தேடுகிறான் – அத்
தேடலின் ஈர்ப்பு விதியால்
கடவுள் காணாமல் போகிறான்

மானுட ஆற்றலுக்கு
பிரபஞ்ச இயக்கவியல்
நமக்கு மீறியதல்ல என்றே
நாளும் சொல்லுது









சனி, செப்டம்பர் 24

இலவசம்





வாக்குறுதியை வாரியிரைத்து
வாக்குச் சாவடியைக் கைப்பற்றி
வாகனப் படையோடு
வலம் வருபவனுக்கு

ஆட்சி அதிகாரம்
அத்தாட்சி பத்திரமா
ஆள்பவர் முடிதரித்ததும்
ஆலகால மாவதா

மறைமுக வரியாய்
மனிதனிடம் வசூலித்ததை
மானுடச் சமூகத்திற்கு
மடை மாற்றுவதா

அறுதிப் பெரும்பான்மை
அரசியல் கட்சிக்கில்லையெனில்
மக்கள் பிரதிகள் மொத்தமாய்
பச்சோந்தியாய் மாறுவதா

திறைச் செலுத்தும்
திடீர் பெருமுதலாளிகளுக்கு
வரியின் வரையறை
சரியில்லை எனக் குறைப்பதா

சமச்சீரற்ற சமூகத்தில்
சரிச்சமாய் உயர்ந்திட
பொருளாதாரத்தில் வீழ்ந்த
உயர்சாதிக்கு இடஒதுக்கீடு அளிப்பதா

அன்றாடங்காச்சி
ஐந்துக்கும் பத்துக்கும்
அன்றாடம் உழைத்தும்
அதோகதியாய் நிற்பதா

அதானி அம்பானியின்
5 இலட்சம் கோடி
10 இலட்சம் கோடியாய்
ஓராண்டில் மாறுவதா?

கணக்கு வழக்கு
பிரதம நிதிக்கா
உனக்கு தேவையில்லாதது என
உரக்க சொல்வதா

நிதியை நிர்வகிக்க
பதியாய் வந்தவர்கள்
குதியாய் குதிக்கறார்கள்
பணம் அவர்களுடையதாம்

ஆதாரை இணை - எரிவாயு
மான்யம் கிடைக்குமென்றார்கள்
விட்டுக்கொடு என்றார்கள்
விலையேற்றமே கண்டோம்

ரோட்டோரக் காய்கறிக் கடையும்
டிஜிட்டிலில் பளபளப்பதாய்
பே – ட்டி - எம், போன் பே யும்
பேட்டி அளிக்கின்றன

இரண்டு சட்டைக்கு
ஒரு சட்டை இலவசம் - இது
வியாபாரத் தந்திரம்
வீழ்வது விட்டில்கள்

குடிக் காப்பது
அரசின் கடமை
குடிக்கக் கொடுத்து
வருவாய் பெருக்குவது

வரி வசூலை
பிரித்தளிப்பது உன்வேலை
தரித்திரனாய் மக்களை
பிரித்து வைத்திருப்பதோ

சுகாதாரமாய் வாழ
மருத்துவ வசதி
சுயமரியாதையோடு வாழ
யாரிடமும் கையேந்தாமல்

ஒண்டக் குடிசையும்
கற்கக் கல்வியும்
உழைக்க வேலையும்
ஒவ்வொருக்கும் இருந்தால்

தாலிக்குத் தங்கம்தான் கேட்போமா
தமிழகம் அரசிடம்
காட்டில் ஒரு வீடுதான் கேட்போமா
ஒன்றிய ஆட்சியிடம்

ஞாயிறு, செப்டம்பர் 18

மரணம் எந்த நொடி



எந்த நொடி
எந்த நிமிடம்
எந்த நாள்
எங்ஙனம் அறிவேன்

மரணத்தை யோசிக்கிறேன்
மாறும் உலகில் - மாறுமோ,
மறுதலிக்குமோ
மானுட வாழ்வு

மன அழுத்தங்கள்
மரணத்தை யாசிக்கின்றன
ஆசைகளின் ஓட்டத்தில்
மாத்திரைகள் நீட்டிக்கின்றன

சுகமான மரணம்
எங்ஙனம் நிகழும்
சுவாச வலியின்றியா
சுற்றியிருப்பவர்களுக்கு வலியின்றியா

உடல் உபாதைகளும்
திடமற்ற மனதும்
கடமைக்கு வாழாது
கானகத்தை நாடுதோ

போதுமா வாழ்க்கை
மோதுகின்ற கேள்வியில்
வாதிடுகின்றன – வாழ்வு
உனக்காகவா அல்ல குடும்பத்திற்கா

நீயில்லா உலகில்
நீடித்திருக்கும் குடும்பம்
தீயில் வெந்திட
தேடுகிறாயோ காரணங்கள்

நீதியும் நேர்மையும்
உனக்கானதல்ல
சாதிச் சமூகத்தின்
ஆதிக்கச் சொல்லாடல்கள்

சேர்த்தச் சொத்துக்கள்
சோர்ந்திராதே எனச் சொல்லுமோ
ஆர்பரித்த அன்பு
அடுத்த வேளையை நோக்குமோ

போதித்தப் புத்தனும்
பூமிக்குள்ளே
சாதித்த மன்னனும்
சமாதிக்குள்ளே

அறிவியல்
அறிவை வளர்க்குமா
அறியா மரணத்தை
ஆராய்ச்சி செய்யுமா

நாற்பதாண்டு வாழ்வை
எழுபதாண்டிற்கு நீடித்தது
ஏற்பதா மறுப்பதா
யார் தீர்மானிப்பது

உலகின் முதல் செல்வந்தனா
உலகின் முதல் ஏழையா
அவரவர் மனமெனில்
அவர்களின் மனநிலை

மனநிலைக் காரணிகள்
மரணத்தை யாசிக்கின்றன
புறநிலைக் காரணிகள்
பூபாளத்தை நேசிக்கின்றன

பருவநிலை மாற்றங்கள்
பாடம் நடத்துகின்றன
உருவமற்ற, உருவமுள்ள
கடவுளும் மாண்டு போகின்றன

மூப்பது வந்திட
முடங்குவது உடலா
கடந்து செல்லும் வாழ்வில்
காப்பதும் கடவுள்ளில்லையா

உற்ற உறவுகள்
உறுதுணையா
பற்றற்றிரு எனும்
பட்டினத்தான் போதனையா

மரணத்தின் சிந்தனைகள்
மாறி மாறி வந்துச் செல்ல
இரணங்களா
இல்லாத காரணங்களா

இயங்கும் உலகில்
இவை மனப்பிறழ்வென
இனம் காணுவோமா
எக்கேடுக்………… செல்வோமா

கற்றதனால் ஆன பயன்
கடவுளைத் தொழுவதா
மற்றதனால் மரணத்தை
மாற்ற முயல்வதா

தேடல் முடிந்ததா
தேவை முடிந்ததா
வாடிய உனைக் கண்டு
வாட ஒருவருமில்லையோ

நூறாண்டு வாழ்வு
நூலாகி போனதே
ஐம்பதை தாண்ட
அவ்வாழ்வும் சலித்ததே

பங்குச் சந்தை

  யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...