வியாழன், ஜூலை 10

சூட்சமம்

















காதல் சொல்ல வந்தேன்
காதுக் கொடுக்க மறுப்பதேன்
வாதம் செய்து வதைப்பது
வாகைச் சூடி மகிழவா
மோத லென்றும் தொடர்வது
மோகம் கொண்டக் காரணமா
மாதம் மும்முறை வருத்தினாலும்
மாயங்கள் செய்வது முத்தமா

ஆசையாப் பேச வந்தால்
அலட்சியம் காட்டு மன்பே
மீசைக் காரனின் பேச்சு
மீட்டும் வீணையா இல்லையா
ஓசை யின்றி இருந்தால்
ஓய்ந்து போக மாட்டேனடி
பூசைக் குரியது நானல்ல
பூவுல கெங்கும் தேடுமன்பே

ஏங்கும் என்னை வருத்தவா
ஏதோதோ சொல்லி வாட்டுற
தாங்கும் மனது என்றாலும்
தாக்குதலில் வீழ்த்திப் பாக்குற
எங்கும் எதிலும் வெற்றி
என்றே கனவில் மிதக்குற
பொங்கும் அன்பு இல்லாது
புன்னகை முகத்தில் மலராது

எதிர்த்துக் கேள்வி கேட்டிட
ஏனடி முகத்தச் சுருக்குற
அதித அன்பில் அப்படி
அதட்டி வைப்பேன் என்கிற
பதித்த பாவன சீதாராம்
பழகிக் கொள்ளப் பார்க்கிறேன்
சுதியினி சேர்ந்திசையில் மாறாத
சூட்சமம் அறிந்தே நடக்கிறேன்

புறக்கணிப்பு

 













புறக்காரணிகளைச் சொல்லி
புறக்கணிப்புக்குப்
பொழிப்புரை எழுதுகிறாய்
புகலிடம் கேட்டவனிடம்

முடிவுகளைத் தீர்மானித்துவிட்டு
அன்பை
ஆய்வுக்கு உட்படுத்துகிறாய்
ஆட்சேபனைகள் கூடாதென்கிறாய்

மென்னிதயம்
என்பொருட்டா மாறியது
அன்பை ஆறறிவால் பார்க்க
கல்லாக்கிக் கொள்ளச் சொன்னதோ

ஏனெதெற்கென
ஏதும் கேட்கமால்
ஆம் போடுவதாயிருந்தால்
ஆகட்டும் பார்க்கலா மென்கிறாய்

உடனிருக்கவும்
ஊர்ச் சுற்றவும்
உத்தரவுகளை நிறைவேற்றவும்
உமா பதியாயிருக்க வேண்டுகிறாய்

அசலனமற்று
அஞ்சலி செலுத்த
ஆயுத்தமாகிறாய்
அடைக்கலமும் மறுக்கிறாய்

கடந்துச் செல்லக்
காரணங்கள்
கண்டுப் பிடித்தப் பிறகு
காதலாவது கத்திரிக்காயவது


                                            அ. வேல்முருகன்  








திங்கள், ஜூலை 7

அரோகரா...................









சங்கிகளுக்கு
சளைத்தவர்களில்லை என
பழனியில் பட்டம் பெற்றவர்கள்
பதவிகாலம் முடிவடைவதால்

பதினாறு ஆண்டுகள் கழித்து
பக்தக் கோடிகளை
பரவசப் படுத்தப்
பரபரப்பாய் திருச்செந்தூரில்

அரோகரா...................
அவனென்னச் சொல்வது
அறநிலையத் துறை - அதிகாரம்
அடியேனிடமிருக்க

கோடிகளைப் புரளவிட்டு
கொள்கை வெங்காயத்தை
கொற்றவன் புறந்தள்ளி
கோஷத்தை மாற்றினான்

புனித நீரைத் தெளித்து
பாவப் பட்ட மக்களை
இரட்சிப்பதன்றோ ஆட்சியாளர்களின்
பகுத்தறிவு

அறுபடையில்
முதலாம் படை வீட்டை
முருக பக்தர்கள்
முற்றுகை யிட்டதால்

இரண்டாம் படைக்கு
இன்று குடமுழுக்கு
மற்றபடை வீட்டில்
மசூதியில்லை அவர்களுக்கு

குடமுழுக்கு
யாகசாலைகள்
தடங்கலின்றி ஆட்சியைத்
தக்க வைக்குமோ

பொற்றாமரைக் குளங்களும்
ஆறுகால பூஜையும்
ஆழித் தேரோட்டமும்
பொற்காலமென எழுதிட

திராவிட மாடலில்
இறங்காத விலைவாசியை
புறந்தள்ளி பம்மாத்தாய்
குமரனுக்கு அரோகரா .............


                                 அ. வேல்முருகன்

மண்ணாசை மரணங்கள்













பாலஸ்தீனக் குழந்தைகள்
பசியாறத் துடிக்கும்
ஓலமின்னும் ஞாலத்து
மக்களுக்கு கேட்கலியோ?

இஸ்ரேலிய ஏவுகணைகளின்
இரக்கமற்றக் கொலைகளை
ஆசீர்வதிப்பீரோ?... ஐயோவென
ஆர்ப்பரித்து எதிர்ப்பீரோ

மாண்ட மக்களுயிர்
அண்டை நாடுகளை
ஏனடாவெனக் கேட்காது
மோனநிலையில் வைத்தது யார்?

உதவிக் கரம்தனை
ஒடுக்கும் நெதன்யாகுவைத்
தடுக்கும்வழித் தெரியலையோ
தடுமாறித்தான் நிற்குரியோ

அமெரிக்காவின் ஐ. நா. வும்
ஆயுளோடிருப்பதாக அரற்றுது
ஹமாஸும், ஈரானும்
அவர்களிருப்பதாய் காண்பிக்குது

யாரிருந்து என்னசெய்ய
ஒருவேளைச் சோற்றுக்குப்
பெண்டுப் பிள்ளைகள்
போராடிச் சாகுதே

பட்டினிக் கொடுமைதனை
பதறும் காணொளிகளாய்
பாரெல்லாம் சுற்றினாலும்
பதறாமல் விடிகிறதே

அகதி முகாம்களும்
மருத்துவ மனைகளும்
கொலைகள இலக்காக
கூசும் பொய்களோடு

தொண்டு நிறுவனங்களின்
தொடர் உதவிகள்
தொடரக் கூடாதென
இஸ்ரவேலர்கள் தீர்மானிக்க

பிழைப்போமா எனவறியா
பின்னொரு விடியலில்
உழைக்கவும் கற்கவும்
உயிரைக் காக்குதே

மண்ணாசை மரணங்கள்
மகுடங்களை தக்கவைக்க
மரணங்கள் மகுடங்களை
மண்ணில் புதைக்காதோ

                                    அ. வேல்முருகன்

வியாழன், ஜூன் 19

வளமான வாழ்விற்கு














வளமிக்க வாழ்வில்
வசந்தத்தைக் கூட்டவும்
தளரும் பருவத்தில்
தண்டம் தவிர்க்கவும்
இளமையை நீட்டித்து
இனியதாய் மாற்றவும்
களமிறங்கு காலத்தே
காத்திடு ஊணுடலை

ஈரற்குலைக் கொழுப்பு
இதயத்தின் அடைப்பு
இரத்ததில் கொதிப்பு
இதனோடு நீரழிவு
சீராக்க அல்லாடும்
சிந்தனைச் சிற்பிகளே
வாராத போதல்லவா
வழிதனைத் தேடவேண்டும்

நச்சாகும் மாச்சத்து
நாற்பதைக் கடக்க
வஞ்சிரம் வவ்வாலு
வழமையானக் கோழியும்
பச்சைக் காய்கறியும்
பலன்தரும் புரதமாகும்
இஞ்சியோடு எலுமிச்சை
இளைமையைக் கூட்டும்

அஞ்சிடாது சூரியனை
அரைநிமிடம் நோக்கிட
வஞ்சமற்ற உயிரியல்
வழித்துணைக் கடிகாரமாம்
நெஞ்சை நுரையீரலைக்
நஞ்சாக்கா மலிருப்பது
சஞ்சிவினி உண்பதற்கு
சமமென அறிவதாம்

ஆண்டாண்டு காப்பீடு
ஆபத்திற்கு எடுப்பவரே
ஆண்ட பரம்பரையோ
ஆண்டி நிலையோ
பாண்டத்தின் குருதியை
பகுத்தாய பழகிடு
மாண்டப் பின்னே
மருத்துவம் உதவாது

இடைப்பட்ட உண்ணாவிரதம்
எட்டுமணி உறக்கமும்
நடையோடு உடலை
நெளித்து பழகிடு
கொடையாகும் வாழ்வு
கொஞ்சம் மூச்சுவிட
விடையிது மானிடா
விதிதனை மாற்றிட

                              அ. வேல்முருகன்

செவ்வாய், ஜூன் 10

நோய்

 










நோக்கும் கண்களால்
நோயைத் தந்தாய்
நீக்கும் மருத்துவம்
நீயேதான் என்றாய்
தூக்கம் கெடுத்து
துவளச் செய்தாய்
தாக்கும் நினைவுகளால்
தவிக்கவே விட்டாய்

மறதி வேண்டுமென
மனதிடம் கேட்டேன்
துறவுக் கொண்டாலும்
துரத்தும் என்றது
உறவு என்பது
உயிருள்ள வரைதான்
இறவுச் சொல்லும்
இனியில்லை வதைதான்

நினைவுகள் இன்பமென
நியதி ஏதுமில்லை
புனைவுகள் என்றாலும்
புலன்கள் அறிவதில்லை
தினையளவு வெறுப்பு
தீர்ப்பு அளிப்பதில்லை
அனைத்தும் புரிந்தாலும்
அன்புத் தோற்பதில்லை

                                   அ. வேல்முருகன்

புதன், ஜூன் 4

கடைசி வாய்ப்பு











இறுதி வாய்ப்பை
பயன்படுத்தவில்லை என்றால்
தேர்ச்சிப் பெற முடியாத
தேர்வு முற்றுப் பெறும்

பரவாயில்லை ....
வெற்றிப் பெறும் பாடத்தில் 
பயிற்சி எடு 
பாதைக் கூட மாறலாம்

கடைசி பேரூந்து
கைவிட்டால் அன்றிரவு
வனாந்தரத்தில்தான்
உறங்க முடியும்

ஆயினும், மறுநாள்
முதல் பேரூந்து
உங்கள் பயணத்தை
உறுதி செய்யும்

இறுதிச் சுற்று
வெற்றி வாய்ப்பு
யாருக்கு என்று
ஊருக்குச் சொல்லலாம்

தவறுகளிலிருந்து
மானுடம் கற்பது
மற்றுமொரு போட்டியில்
வெற்றிப் பெறத்தானே

கடைசி என்பது
முற்றுப் பெற்றதல்ல
அதற்காக
அலட்சியமாக இருப்பதுமல்ல

ஆயினும்
அகங்கரமாய்
இறுதி வாய்ப்பென்றால்
அடிபணியாதே

ஒவ்வொரு நொடியும்
எவருக்கும்  
புதிய வாய்ப்பை தரும்
ஏமாறாதே?!!


                                    அ. வேல்முருகன்







திங்கள், ஜூன் 2

அறிந்தும் அறியாதது

 









முற்பனிக் காலத்தில்
முத்தழல் பற்றியெரிய
முக்கனிச் சுவையை
முக்காலமும் தேடிட

இணையாய் வாழ
இசைந்தோர் ஒப்பந்தம்
இச்சையும் இடங்கொடுக்க
இடைக்கட்டு நெகிழ்ந்தது

இணக்கம் ஓரிரவா
இன்னுமின்னும் எனும்வரையா
பிணக்குத் தோன்றிட
பிரிவினை வழித்துணையா

எண்ணங்கள் வேறாகி
எதிர்பார்ப்புக் கூடிட
வண்ணங்கள் மாறியே
வருத்தங்கள் உருவாக

முத்தங்கள் பரிமாறி
முந்தானைப் பிடித்திட்ட
முத்தொழில் கற்றவனே
முற்றும் அறியாதாபோது

அம்மணம் அறிந்ததால்
அவள்மனம் அறிந்தாயோ
அங்ஙனமெனில் அவளால்
அங்கீகரிக்கப் படாதவனே

அகத்திணை அறிய
அன்போடு உறவாடு
அகதியாகா திருக்க
அளவளாவு ஆசையோடு

                                   அ.வேல்முருகன்

புதன், மே 21

நளினம்

 













கற்றைக் கூந்தலில் பூச்சூடி
கட்டுடலில் ஆடைச் சூடி
சிற்றிடை தன்னில் சிறையிட்டு
சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே
பற்றற்று வாழ்ந்த பாமரனை
பரிதவிக்க விட்ட பாவைநின்
கொற்றத்தில் ஆட்பட்ட என்னை
கொஞ்சிட தடைகள் ஏனடியோ


நளின அசைவுகளில் அதிர்ந்தது
நாடோ நிலமோ அல்ல
ஒளியின் அழகை ஒய்யாரி
ஒருத்தியால் பெற்ற நானே
களிறும் காளையுங் கடக்க
காதல் கொண்ட நானோ
துளிரு மன்பால் வேண்டுகிறேன்
துணையாய் வாடி வாழ்ந்திடவே

                                     அ. வேல்முருகன்


சனி, மே 10

அடையாளம்






ஆதி மனிதர்கள்
ஆதாம் ஏவாள் போல
அவர்கள் வாழ நினைத்தனர்

தேர்ந்தெடுக்க
தேவனுக்கும் தேவிக்கும்
வாய்பில்லாமலிருந்தது

ஆளுக்காருத் திசையில்
அவர்களின் பயணங்கள்
ஆயினும் சந்திப்பார்கள்

ஆக, அடையாளங்கள்
அநாகரிமென்று
அவர்களுக்குப் பட்டதால்

மோதிரமும் தாலியும்
மோதலின் போது
முன்னிருத்தும் ஆயுதமானதாலும்

மோகன இராகத்தில்
சட்ஜமும் பஞ்சமும் ரசித்தவர்கள்
அபசுரங்கள் கூடாதென்கிறார்கள்

கட்டுப்பாடுகளற்ற
காருண்யவாதிகள்
கலந்திருக்க நினைத்தனர்

கற்பனாவாதிகளுக்கு
காரியங்கள் சலிப்பூட்ட
கடையடைப்புச் செய்தனர்

சனாதானம் ஏற்படுத்தியச்
சடங்குகள்
சல்லி சல்லியா நொறுங்கியது

பொருளாதாரச் சுதந்திரம்
பொருட்சுவையைக் கூட்டாது
பொருட்சிதைவைக் உண்டாக்க

பொருந்தாமை உருவானது
பொருட்படுத்தாதோர் சிலர்
பொங்கியெழுந்தவர் சிலர்

அச்சமென்ன என
உச்ச நீதிமன்றம் சென்று
துச்சாதனன் அவனென்று

வழக்கான்றைத் தொடுத்து
வகை மோசத்திற்கு
வலி நிவாரணம் கேட்க

பொருள் ஆதாரமாக
இருளகற்றும் அறிவு
இல்வாழ்வை முறிக்குமோ

ஆட்சேபனையின்றி
அதிகரித்து வரும் போக்கை
ஆராய்சிதான் செய்ய முடியுமா

குறுக்கு விசாரணையில்
கிடுக்கிப்பிடிக் கேள்விகள்
சிறந்த தீர்ப்புக்கு வழிவகுக்குமா

தனக்கானப் பாதையை
தெளிந்த அறிவில்
வகுக்கத் தெரிந்தவர்கள்

எதற்கும் சம்மதமென
எடுக்கும் முடிவில்
ஏமாற்றப் பட்டால்

இரண்டாண்டுக்குள்
இடறுகிற போது
எடுக்கும் முடிவுகள்

பிரிவுதான் வழியென
அரிய வாழ்வுதனை
எரித்திடாது காத்திடவும்

திருமணம்தான் இலக்கெனில்
தீர்த்துச் சொல்லிக்
காத்திருங்கள்

அன்பு பிணைப்பில்
ஆண்டாண்டு காலம்
அன்றிலாய் வாழ்ந்திடலாம்

பலகாலம் வாழ்ந்தவர்
நிலவோடு உலவுவர்
ஓலமிடுவதில்லை

கண்ணே அமுதே என்றரற்றி
கனியுடன் பழமுண்டு
கசக்குதே என

பூவை நசுக்குவதும்
வண்டை மிதிப்பதும்
பொல்லாப்பில்தானே முடியும்

கற்பழிப்புக் கதையெழுதி
கட்டளை வேண்டுமென்றால்
கடைச்சாரக்கா நீதி

வியாழன், மே 8

பேரண்டத்தின் பேரழகி

 












கெண்டைக் கண்கள்
தண்டைக் கால்கள்
அண்டை அயலார்
அண்ட நினைக்கும்
பேரண்டத்தின் பேரழகி


சிவந்த அதரங்களால்
சிந்தியச் சொற்கள்
அட்சரச் சுத்தமாய்
ஆலாபனைச் செய்திட
ஆனந்தத் தாண்டவமாடினேன்

அலங்காரமா பிறையிலிட்ட
அத்திலகமும் நீரும்
அழகுதனைக் கூட்டவா
உலகம் மறந்து
உன்மத்தம் ஆக்கிடவா

எட்டு மடிப்பும் கலையாத
பட்டுச் ஜரிகைச் சேலையில்
கட்டுக் குலையாதவள்
கட்டுத்தறிக் காளைதனை
கட்டுப் படுத்திட

கால் கையசைத்து
கன்னக்குழி விழ
புன்னகையுடன் கதைக்கும்
கவித்துவ அழகை
கண்ணிமை மூடாது ரசித்திட

இளமையின் வளமையால்
களவுபோன எம்மனதை
கொள்ளைக் கொண்டவள்
உள்ளத்தில் உள்ளதாவென
ஊடுறுவிப் பார்த்திட

கலம்பகம் எழுதி
கலகங்கள் செய்து
காதலாய் பார்த்திட
செயற்கை நுண்ணறிவு
செதுக்கியச் சிற்பமாம்

 


ஞாயிறு, மே 4

கிழவி
















குமரனா நீ
கோபத்துடன்
கோமளவல்லி கேட்க

சுருக்கம் விழுந்ததாவென
சுறுசுறுவென
கண்ணாடியை தேடினவள்

பாட்டி வைத்தியத்தை
பலமுறைத் தேடி
பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தாள்

பப்பாளி, பாசிப்பயிறு
கசகசா என
எக்கச்சக்கமா சோதித்து

மாற்றம் தெரியுதா?
மறுவாரம் கேட்கிறாள்
என் கிழத்தி எனக்கு கிழவிதானே


                                         அ. வேல்முருகன்

முனீர் அகமது -மீனல்

 


மாநிலம் அறியா
மறைக்கப்பட்டத் திருமணம்
மாய வித்தைகளால்
கண்டங்கள் கடந்து அறியப்பட்டது

மாதராய் பிறப்பதற்கு
மாதவம் செய்திட வேண்டுமா
முனீரின் மீனல்
முத்தாய்ப்பாய் சொல்வாளா

பாரதியைக் கொண்டாடும்
பாரதப் புதல்வர்கள்
பாகிஸ்தான் பெண்ணை மணந்ததால்
பணிநீக்கம் செய்தனர்

பார்வைகள் பரிமாறி
பாரதத்தின் மருமகளாய்
பலதேசத்து மகளிர்
பாங்குடன் வாழ்ந்திட

பாகிஸ்தான் பகையானதால்
“பாரா மிலிட்டரி”க் காரன்
பாவம் செய்ததாய்
பஞ்சாயத்து முடிவு செய்தது

தாய்வழிச் சொந்தமென்றும்
தகுந்த ஆதாரத்தை
தக்கச் சமயத்தில் பகிர்ந்திருந்தும்
தண்டணை உறுதி செய்யப்படுகிறது

தேச அச்சுறுத்தலென
தேச பக்தர்கள்
தேசிய பத்திரிக்கைகள்
தேம்பி அழுதப்பின்

“பாரா மிலிட்டரி”க் காரனின்
பணிநீக்க உத்தரவு
பாரெல்லாம் அறிந்தபின்
பாதிக்கப்பட்டவனுக்கு அளித்தனர்

2017 -ல் பணியில் சேர்ந்து
2022 -ல் தகவல்கள் அளித்து
2024 -ல் அனுமதிப் பெற்றதாக
2025 -ல் போபாலில் கூறுகிறான்

வயிராற உண்ணவே
"பாரா மிலிட்டரி" பணி 
உயிர் போகுமென்றிந்து
ஒப்படைத்தவனின்  

தீராக் காதலை
தீவிரவாதிகளைப் போல்
தீர்த்து விடாதீர்கள்
தீர்ப்புகள் மாறட்டும்

தீவிரவாதம்
தேசத்தை மட்டுமா சீர்குலைத்தது
மேவிய காதலையும்
மூழ்கடிக்குதே

முனீர் – மீனலை
முடக்கி
மானுடத்தைக் கொல்லாதீர்
மனுநீதியென பிதற்றாதீர்


                                  அ. வேல்முருகன்

ஞாயிறு, ஏப்ரல் 20

தேடல்

 
















இருவருக்குள் இன்னும்
ஏதோதோ தேடல்
எனவே
இணைந்தே இருக்கிறோம்

அன்பிருக்கிறது
ஆயினும்
கொடுபடாதது கொஞ்சமிருப்பதால்
கொஞ்சல்கள் தொடர்கின்றன

அதுபோலவே
எடுப்பதற்கு இன்னுமிருப்பதால்
எதிர்பார்ப்புகள்
அதிகரித்துக் கொண்டிருக்கிறது

குறையொன்றுமில்லை என
கூடிக் களித்தப்பின் தோன்றினாலும்
கூட்டாஞ்சோறு
கூவி அழைக்கிறது

தேடலுக்கானத் தேவை
உன்னிடம் எனக்கும்
என்னிடம் உனக்கும்
முற்றுப் பெறாமல் தொடர்கிறது

நிறைவான வாழ்வென்று
நரைபருவத்தில் தோன்றினாலும்
குறையாத காதலே
கூட்டணியின் அச்சாணியானதே

திங்கள், ஏப்ரல் 14

தானமும் தர்மமும்


 






ஏற்றத் தாழ்வுகள்
ஈகைக்கு காரணமா
மாற்றும் நிகழ்வுகள்
மாயத்தில் நடக்குமா

உயர்வும் தாழ்வும்
உழைப்பில் என்றால்
வியர்வை சிந்தியும்
விடியல் இல்லையே

குவியும் சொத்து
கொடுத்துச் சிவக்கவா
புவியின் ராசாவென
புன்னகை பூக்கவா

ஆண்டா னடிமை
ஆண்டாண்டாய் தொடரவா
வேண்டா வெறுப்பா
விதியென் றிருப்பதா

கிடைத்தவன் பிழைக்கவா
கீழானோன் மரணிக்கவா
படைத்தவன் செயலென
பாமரன் ஏற்பதா

மரணத்தின் வாசல்
மாறச் சொல்லுதா
இரக்கத்தின் குணமா
இங்கவை வாழுதா

ஏற்பது இகழ்ச்சியென
எடுத்தியம்பிய ஆத்திசூடி
ஆற்றார் இல்லாத
அகிலம் வேண்டியே

தானமும் தர்மமும்
தரணியில் இல்லையெனில்
மானமும் அறிவும்
மாநிலத்தில் பரவுமே



                                 அ. வேல்முருகன்






செவ்வாய், ஏப்ரல் 8

தமிழ்நாட்டின் சூத்திரங்கள்


 









கேலிக் கூத்துக்கள்
காலிப் பெருங்காயமாச்சு
புலிச் சிங்கமில்லை
மலிவான மனிதனென்றே

உச்ச நீதிமன்றம்
எச்சரித்து விட்டப் பின்னும்
எச்சமாக ஏனின்னும்
வஞ்சித்துக் கொண்டிருக்கிறாய்

காவிச் சாயத்தில்
கல்வியை மாற்ற
கூவிக் கொண்டிருந்த
ஆர் என் இரவிக்கு

அரசியலமைப்புச் சட்டம்
அறைந்தே சொன்னது
ஆராய்ந்து கொண்டிருக்க
ஆகமமல்ல - மசோதாக்கள்

ஏற்புடையதில்லையெனில்
எடுத்தியம்பு முப்பது நாட்களில்
ஏவலாளிதான் நீயெனில்
என்னவென கேட்டுச்சொல்

வரையறைதனை வழங்கியதால்
வல்லூறுகளின் மூக்குடைந்தது
திரைமறைவு நாடகங்கள்
தெருவுக்கு வந்தது

திராவிடத் திருநாட்டில்
திரவியம் தேடி வந்தவர்கள்
ஆரியம் பயிற்றுவித்தால்
சூரியன் பகுத்தறிவைப் போதிக்கும்

வள்ளுவரோடு
வள்ளலாரையும் வைகுந்தரைவும்
வலிந்து வருணாசிரமத்திற்குள்
வரையறுத்த வஞ்சகத்தையும்

வெல்லும் தமிழ்நாடு
சொல்லும் சூத்திரங்கள்
எல்லா மாநிலத்திற்குமென
துல்லியமானது பாரடா

                                                அ. வேல்முருகன்


சிந்தித்துச் செயலாற்று














சிந்தித்துச் செயலாற்று
சிக்கலைச் சந்தித்தால்
சந்தித்த மனிதரில்
சான்றோனை நாடு

நாடும் யாவையும்
நன்மை கொடுக்கட்டும்
கொடுக்கும் தன்மையால்
கொஞ்சலும் மிஞ்சட்டும்

மிஞ்சும் வஞ்சியிடம்
மீளத் தஞ்சமோ
தஞ்சமெனில் தலையாட்டும்
தஞ்சாவூர் பொம்மையா

பொம்மையா மக்கள்
போக்கிரிகளை நம்பிட
நம்பிதான் ஏமாறுவர்
நாயகன் வருவானென

வருகின்றத் தலைவனோ
வரியால் வருத்திட
வருத்தத்தை மக்கள்
வாக்கால் மாற்றுவர்

மாற்றத்தை உருவாக்கும்
மக்களின் சீற்றம்
சீற்றம் அறிந்து
சிந்தித்துச் செயலாற்று

அ. வேல்முருகன்

சனி, ஏப்ரல் 5

பனிவிழும் மலர்வனம்















பனிவிழும் மலர்வனம்
பரிதியெழ மனங்கவரும்
இனியன நிகழும்
இணையென நீயாக

எனினும் ஏந்திழையே
எங்குனைக்  காண்பேன்
கனிவுடன் வந்தென்
கரம்தனைப்  பற்றுவாயா

தனித்திருக்கும் தலைவனோடு
தாம்பூலம் தரிப்பாயா
நுனிநாக்குச் சிவந்ததை
நுட்பமாய்  சொல்வாயா

பனிக்காலம் உன்மேனி
பரிபாலிக்க நானாச்சு
வேனிலான் வேட்கையுடன்
விளையாடிட விழாவாச்சு

பொழிப்புரை ஒன்றை
பொருட்சுவை யுடனுரைக்க
விழியோ வினவியது
விடைதனை அறிந்ததும்

செழித்த அதரங்கள்
செருக்குடன் சினந்து
பழிக்கும் அழகினை
பார்த்தால் பரவசமே!

                    அ. வேல்முருகன்


வெள்ளி, மார்ச் 28

விவசாயம் காப்போம்















காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு

வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்

சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்

இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே

கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு

கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்

வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது

அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க

மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க


                      அ. வேல்முருகன்







களவுமணம்

 















களவுமணம் கலக்கமே
காதல்களம் காண்போர்க்கு
காண்போர் யாவரும்
காதுபட பேசவே

பேசும் செய்திகள்
பெற்றோர் அறிந்திட
அறிந்தும் அறியாததாய்
அரண்தனை பலப்படுத்திட

பலப்படுத்திய செய்தியை
பரிதவிப்பாய் தெரிவித்திட
தெரிந்த தலைவன்
தேவியை மீட்டிட

மீட்டிய இராகத்தில்
மேளதாளம் முழங்கிட
முழங்கிய வேகத்தில்
முத்தங்கள் பரிமாறிட

பரிமாறிய முத்தங்கள்
பாற்கடலாய் உருமாற
உருமாறிய உத்தமி
ஊணுறக்கம் மறந்தாள்

மறக்க முடியுமா?
மன்னவன் பரிசை
பரிசின் காரணம்
பற்றிய களவுமணமே!


                     அ. வேல்முருகன்


செவ்வாய், மார்ச் 11

மெல்லியலாள் மேதினியை ஆளட்டும்






விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் சிறந்திட

சிறந்த கல்வியால்
சிந்தனை பெருகட்டும்
அறத்தின் வழியே
அன்பு பரவட்டும்

பரவும் செய்தியால்
பந்தங்கள் உருவாகட்டும்
அரசும் விழித்து
ஆற்றலை மெச்சட்டும்

மேச்சிடவே மெல்லியலாள்
மேதினியை ஆளட்டும்
அச்சாணி அவளென்றே
ஆன்றோர் வாழ்த்தட்டும்

வாழ்த்தில் மயங்காது
வாழ்க்கை தொடரட்டும்
ஏழ்மையை எதிர்கொள்ள
எல்லையை வகுக்கட்டும்

வகுக்கும் திட்டங்களால்
வாழ்வை மாற்றிடு
மகுடமாகும் உனக்கது
மகிழ்ச்சியாகும் மக்களுக்கு


                                  அ. வேல்முருகன்



தன்னிலை மயக்கமேன்














தன்னிலை மயக்கமேன்
தண்ணீரில் மிதப்பதேன்
உன்நிலை மறக்கவா
உயிரைதான் மாய்க்கவா

இன்னிலை வாடாதோ
இளங்குருத்து கருகாதோ
நன்னிலை உயர்வன்றோ
நாநிலமும் மதிக்குமன்றோ

ஈட்டிய வருமானம்
ஈரற்குலை எரிக்கவா
வேட்டி அவிழ்ந்திட
வெட்கமின்றி சரியிற

நாட்டியம் ஆடுற
நாயோடு உறங்குற
போட்டியான உலகில்
பொறுப்பின்றி திரியுற

ஆறுகால பூசையிலே
அயர்ந்துறங்கும் கடவுளும்
ஊருலகம் உறவுமுறை
உன்நலம் காக்காது

கருவூலம் நிறைந்திட
கப்பம்தனை கட்டாதே
அருமையான வாழ்வுதனை
அறைகுறையா வாழாதே

                             அ. வேல்முருகன்

புதன், மார்ச் 5

விழித்தெழு பெண்ணே











விழித்தெழு பெண்ணே
வித்தைகள் பழகிட
பழகிடும் வேளையில்
பகுத்தறிவை வளர்த்திடு

வளர்ந்திட்ட அறிவால்
வானத்தை களமாக்கு
களத்திலே சனிதனை
கோளென கொண்டாடு

கொண்டாட ஏழரை
கோலெடுத்து தண்டிக்கலாம்
தண்டிக்க எதிர்திடு
தரவுகளால் நிறுவிடு

நிறுவிட இராகுகேது
நிலவிற்குள் உறங்காது
உறங்கும் யாரையும்
உணர்வுட்டி எழுப்பிடு

எழுந்தால் சோதிடம்
எங்கும் வாழாது
வாழாத எதுவும்
வழக்கொழிந்து போகும்

போனபின் அறிவியலாய்
போலிகள் சான்றிடுவர்
சான்றுகள் சாட்சியின்றி
சாக்காட்டை நோக்கட்டுமே


அ. வேல்முருகன்



திங்கள், மார்ச் 3

விழித்தெழு பெண்ணே

 


விழித்தெழு பெண்ணே
வித்தைகள் கற்றிட
செழித்திடும் அறிவிலே
செல்லுமிடம் வெல்லடி

ஊழியல்லக் கண்ணே
உளவுறுதிக் கொள்ளடி
வாழியென வையகம்
வாழ்த்தும் பாரடி

கற்பெனப் பெண்மையை
கடைவீதிச் சரக்காக்கி
விற்பனைக் கென்றே
விதவிதமாய் அலங்கரிப்பர்

அற்பமென ஒதுக்கிடு
அறிவின் துணைகொண்டு
கற்பனையை விலக்கிடு
காரியத்தில் சிறந்திடு

பேரண்டப் பால்வீதியில்
பேரிளம் பெண்வசிக்க
ஆரத்தில் முத்தொன்றை
ஆசையா கேட்பாயோ

தாரமாகி தாம்பத்தியம்
தக்கதென இருப்பாயோ
பூரணமாகி பூவுலகின்
புலரியா ஒளிர்வாயோ

சூழ்ந்திடும் சூழலின்
சூட்சமத்தை அறிந்திடு
வாழ்வு ஒன்றென
வாய்மையுடன் இருந்திடு

வீழ்வதோடு முடிவதல்ல
விருப்பமுடன் எழுந்திரு
வாழ்வதற்கு வழியுமுண்டு
வானமதை பிடித்திடு


                                அ. வேல்முருகன்


ஞாயிறு, பிப்ரவரி 23

முத்தத்தில் முழ்கடிடா













மோகத்தில் திளைப்போமடா
மெய்மறந்து கற்போமடா
ஏகாந்த வேளையில்
ஏழிசைதனை இசைத்திடடா

தாகத்தினைத் தணித்திட
தண்ணிலவா குளிர்ந்திட
யாகத்தினை நடத்திடு
யௌவனம் விழிக்குமடா

சொற்சுவை தன்னில்
சொக்கிட வைத்தவனே
பொற்புடை அரிவையை
போற்றத் தெரியாதோ

காற்றின் மொழிதனில்
காதலை அறியலையோ
பாற்கடல் அமுதத்தை
பரிமாற விரும்பலையோ

சித்தத்தில் நிறைந்தவளை
சிணுங்க வைக்காதே
புத்தனாகிப் புலனொடுக்கிப்
பூவையை வருத்தாதே

பித்தம் தெளிவதற்குள்
பிரபஞ்சம் முடிவதற்குள்
மொத்தத்தில் கைப்பற்றி
முத்தத்தில் முழ்கடிடா


                                 அ. வேல்முருகன்

திங்கள், பிப்ரவரி 17

மும்மொழிக் கல்வி












மும்மொழிக் கல்வி
மூத்தக்குடி தமிழனுக்காம்
முட்டாள்கள்
முகாரி பாடுகிறார்கள்

ஏட்டுக் கல்வி
இந்தி பேசுபவர்களுக்கு
இரண்டா? ஒன்றா?
கேட்பது யார்?

அமெரிக்காவில்
அகன்ற மார்புள்ளவர்களின்
அறிவார்ந்த பதில்களை
அகிலமே வேடிக்கை பார்த்தபின்

கயமையோடு
கல்விக்கு காசு மறுப்பவன்
காட்டுமிராண்டியா
கல்வித் துறைக்கு ............

தேசியக் கல்விக் கொள்கை
தேசிய இனத்தை அழிக்கவா?
தேமதுரத் தமிழை
தேசங் கடத்தவா?

சிங்கப்பூர், மலேசியா
இலங்கை, மொரிசியஸ்
இங்கிலாந்து கனடா - என
சிறக்கும் தமிழை

இங்கிருக்கும் கட்சிகள்
இனவுணர்ச்சியற்று
இராமா இராமா - என
இறைஞ்சுவார்களா?

மொழியொரு கருவியே
எனினும் வழிவழி வந்த
இனத்தின் அடையாளமே
எனவே உரிமையுமானதே

அறிவல்ல
அத்தனை மொழி அறிவது
நெறியல்ல
நெற்றிகண் திறப்பினும்.....

கற்பது நன்றென
கயவர்கள் கதைத்தால்
வீழ்வது தமிமெனில்
வேடிக்கைப் பார்ப்பாயா?

தமிழனாய் இருப்பதனால்
தரணியில் இந்தியனானாய்
இந்தி படிப்பதனால்
இங்குநீ யாராவாய்?

தேவையெனில் - எவரும்
தேர்ச்சியுறுவர்
ஜெர்மன், ஜப்பான்
சீன, கொரிய மொழிதனில்

செயற்கை நுண்ணறிவு
சில நொடிகளில்
பெயர்க்கும் மொழிதனை
சிரமத்திலேன் கற்க வேண்டும்

புரணாங்களையும்
வரலாற்று திரிபுகளையும்
புதிய கல்வி என்றால்
புறம் தள்ளுவோம்

கழுத்தறுத்துக் கொண்டே
காருண்யமிக்கவானாய்
கபடநாடகம் நடத்துவது
காசி தமிழ் சங்கமமன்றோ

நிதி மறுத்து
நிராதரவாய் நிறுத்தினாலும்
நிராகரிப்போம்
மும்மொழித் தாக்குதலை

கூட்டாட்சியில்
கூழைக் கும்பிடுபவனுக்கும்
உரிமைக் குரலெழுப்பவனுக்கும்
நீதி வேறு வேறானால்

ஒன்றியத்தில்
உனக்கென்ன வேலை
உம்மென்று இருப்பாயா?
உலகம் கவனிக்க ஓங்காரமிடுவாயா?

சனி, பிப்ரவரி 15

அழகெனும் மாயை

 












கட்டழகு என்றே
காளைகள் தடுமாற
தொட்டுப் பழகிட
தொலைந்தன மாயை

வெண்ணிலவு அழகென்ற
விளக்கவுரை கற்பனையே
எண்ணங்களில் ஏற்படும்
எழில்யாவும் சொற்சுவையே

நிறத்தில் தேடுவதும்
நிகரென உரைப்தும்
அறமென அறியாது
அழகை ஆராய்வது

மாயப் பிசாசென்று
மாதரை பழித்து
காயம் பொய்யென
கதைத்ததை மாற்றிட

மானமும் அறிவும்
மனிதருக்கு அழகென
ஊனச் சமூகத்தில்
ஊட்டிய பகுத்தறிவால்

விழைவு ஏதென்று
வீதியில் காணீர்
அழகெனும் மாயை
அகன்றது பாரீர்

                                    அ. வேல்முருகன்

வெள்ளி, பிப்ரவரி 14

பிப்ரவரி - 14















ஐம்பதிலும் ஆசை வரும்
அந்நாளில் பாடியதை
அத்தான் "ஐ லவ் யூ" என்றாள்
அத்தியாயம் தொடரட்டுமென்றேன்

பிப்ரவரி - 14
பிரபஞ்சத்தின் பிரமோற்சவமென
பிரகடனப்படுத்த
பிராட்டியின் கோரிக்கை

ஆகட்டும் தேவி
அடியேனின் காதல்
ஆயுள் உள்ளவரை
அர்பணிக்கப் பட்டதென்றேன்

காதல் மட்டுமா
கட்டியவள் கண்நோக்க
கன்னத்தில் முத்தமொன்று
கமுக்கமாய் வைத்தேன்

பற்றாக்குறை கணக்கொன்றை
பட்டியலிட்டாள்
தீர்க்க கூடியதுதான் - ஆயினும்
திருப்தி அடைவாளா?

மணக்கும் மல்லிகை
மன்னவனின் ஆசையென்றாலும்
மந்தைகளின் தேர்வாக
ஒற்றை ரோசா

நிலவரம் தானறிந்து
நிபுணர்கள் பலரிணைந்து
நினைவு பரிசென்று
நிறைத்திருந்தனர் நாளங்காடிதனை

அது இதுவென்று
அத்தனையும் வேண்டுமென்று
அட்டவணை தயாரிக்க
அனாதிகாரணம் அறிவாயா?

பித்தாக நானிருக்க
புதிராக அவளிருக்க
முத்தாய்ப்பா வர்த்தகம்
முன்னேற்றம் காணுது

ஓவ்வொரு நாளும்
ஒன்றாய் அமர்ந்து
ஓராயிரம் கதை பேசி
ஒட்டி உறவாடுதன்றோ காதல்

இன்றினிய நாள் மட்டும்
இலக்கணப் போலியாய்
ஏனிந்த ஏற்பாடு
ஏக்கத்துடன் வாழவா

காசிருக்கோ இல்லையோ
கண்மணி - நின்
கண்ணசைவில் பிறக்கும்
காதல் தினம் தினமே

                                அ. வேல்முருகன்

வியாழன், பிப்ரவரி 6

ஊழ்துணை










வாட்டி வதைக்கும்
வஞ்சிக் கொடியே
ஆட்டிப் படைக்க
அஞ்சி இருப்பேனோ
ஈட்டிச் சொற்கள்
ஈர்க்கம் பாகிட
நீட்டிக்குமோ உறவு
நீயே கூறடி

பாட்டின் இராகம்
பாடுபவர் அறிவர்
ஏட்டின் கருத்தை
எவரும் தெளிவர்
ஊற்றின் கண்ணில்
ஊசியை நுழைக்காதே
கூட்டின் இனிமையை
கூத்தாடி உடைக்காதே

ஊழ்துணை நீயென
உலகம் அறியும்தானே
வாழ்வின் சுவையை
வர்த்தகமா பார்க்காதே
தோழனின் துணையை
தொடுதலோடு இணைக்காதே
சூழல் எதுவாகினும்
சூன்யத்தை நாடாதே


அ. வேல்முருகன்

காரணங்கள்
















காதல் வேண்டி
கட்டியவளிடம் கோரிக்கை
காதில் வாங்கவில்லை

ஆண்டு முழுதும்
ஆண்டனுபவிக்க
அருள் கேட்க

பட்டத்தரசி
பட்டியலிட்ட காரணங்கள்
பட்டினிக்கே வழி வகுக்க

எட்டூர் பஞ்சாயத்தார்
ஏதேனும் தீர்த்திருந்தால்
எடுத்தியம்ப சரிசெய்யலாம்

ஆடிக்கொன்று
அம்மாவாசைக் கொன்றென
ஆபத் பாந்தனவள்தான்

ஆயினும் பால்நிலவு
ஆசையை தூண்டுவதால்
ஆறுகால பூஜையை வேண்டினேன்

அவளோ, ஆசைக்கு
அளவு வைத்து
ஆட்டிப் படைக்கிறாள்

வேண்டாம் என்று
வேடிக்கைக்காக அல்ல
வேண்டுமென்றே உரைக்கிறாள்

அயர்வாக இருக்கிறதென
அந்தபுரத்திற்கு
அனுமதி மறுக்கிறாள்

ஊதக் காற்று வீசுகையில்
உறக்கம் வருகிறதென
உருட்டுகிறாள்

ஆலாபிக்க ஆரம்பித்தேன்
அர்த்த சாமமாகி விட்டதென
ஆட்சேபிக்கிறாள்

அமுதகானம் பாடி
ஆலிங்கனம் செய்ய
ஆர்வமில்லை என்கிறாள்

எப்போது பார்த்தாலும்
இதே ஞாபகமாக
எட்டி நில்லென எச்சரிக்கிறாள்

வெண்சாமரம் வீசி
விண்ணப்ப மெழுதினேன்
வெக்கையா இருக்கென வெகுள்கிறாள்

என்ன அவசரம்
இவ்வளவு சீக்கிரம்
இம்சை ஆரம்பம் என்கிறாள்

இன்பம் துய்க்க
இத்தனை தடைகளை
எங்ஙனம் தகர்ப்பது

ஒன்றா, இரண்டா
உண்மைதானென உணர்ந்து
ஒதுங்கிச் செல்ல

அடுக்கும் காரணங்களுக்கு
ஆம் என்றிருந்தால்
அடங்கி போவதாகாதா

ஆயினும், அன்பு கிடைக்குமெனும்
அந்த நம்பிக்கையில்தான்
அகிலம் இயங்குது

சனி, பிப்ரவரி 1

தடுதாட்கொள் புராணம்







 

தனித்தீவா நானிருந்தேன்
தடுத்தாட் கொள்ளவந்தாய்
இனியென்ன என்றபோது
இதயமதை தந்தாய்
பனிபடர்ந்த பொழுதிலும்
பாற்கடல் அமுதளித்தாய்
எனினும் ஏனின்று
ஏசிச் செல்லுகிறாய்

அன்பிலே விளைந்ததை
அறிவினால் ஆய்திடாதே
துன்பத்திலே வீழ்வதற்கு
தூபத்தை போடாதே
இன்னலில் விடுபட
இசைவோடு வாழ்ந்திட
கன்னலே கனிவோடு
கண்ணாளனை காத்திடு
 
ஆழிப் பேரலையாய் நீவந்தாய்
ஆடிய தாண்டவ தானறிந்தேன்
ஆழி விரலிட்ட கணையாழியை
ஆலகால மென்றே வீசுகிறாய்
நாழிகை நாளென்ன தேவி
நற்றுணை நானுனக்கு வாராய்
வாழிய தலைவி என்றே
வையம் வாழ்த்திட வாழ்ந்திடவே


                                      அ. வேல்முருகன்


வெள்ளி, ஜனவரி 31

செயற்கை நுண்ணறிவு




செயற்கை நுண்ணறிவு
செல்லாக் காசாக்கியது
செருக்குடனிருந்த அமெரிக்காவை

51 இலட்சம் கோடி
அங்கு காணாமல் போனது
ஆரெடுத்தனர் அத்தனை கோடிகளை

கொள்ளை நிகழவில்லை
எல்லைக்கு வெளியில்
ஏதோவொரு கண்டுபிடிப்பு

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தை
உடைத்துப் போட்டது

தென்னையில் தேள் கொட்ட
பெரும்பண்ணை அமெரிக்கா
பேயறைந்தது போல் தடுமாறுது

"டீப் சீக்"
டிராகன் தேசத்து
திடீர் வெளியீட்டால்

திருக்குறளாய்
திக்கட்டும் தீர்க்கமானதால்
உலகப் பொதுமறையானது

உள்ளூர் சரக்கைக் காட்டிலும்
உசத்தி யனாதால்
உச்சி மோந்தனர்

அறிவை
அள்ளியணைக்க
அமெரிக்கர்கள் முன்வரிசையில்

"டீப் சீக்" செயலி
தீப்பற்றி எறிய
சிலிக்கான் வேலி உருகியது

எவரும் அறிந்திடவும்
எளிய வழிகளால்
வடிவமைக்கப்பட்டதாலும்

கொள்ளும் சிலவு
கொஞ்சம் என்பதாலும்
கொஞ்சுகிறது அகிலம்

மானுட உழைப்பு
மனிதரில் சிலருக்கு மட்டுமல்ல
பேரண்டத்திற்கும் அல்லவோ?!

வியாழன், ஜனவரி 30

அழிவற்றதோ ஆன்மா

 



அழிவற்ற ஆன்மா
அகிலத்தில் உண்டோ
எழில்மிக்க மானுடத்தில்
எதுவென்று உரைப்பீரோ
மொழியற்று இருக்குமோ
மெய்யற்று வேறாகுமோ
வழிவழியாய் ஆன்மா
வந்ததை யாரறிவார்

உலராது எரியாது
உன்புத்திக்கு எட்டாது
புலன்கள் அறியாதது
புவனத்தில் நிலையானது
கலங்கிட வேண்டாம்
கண்டிப்பாய் மறுமையில்லை
புலம்பாதே புண்ணியாத்மா
பூநாகமா யிருக்கலாம்

புல்பூண்டின் ஆன்மா
புவியில் உண்டுறங்குமோ
அல்லலுடை நரகத்தின்
ஆயுதங்கள் சிதைக்காதோ
சொல்கேட்டு இயங்குமோ
சொர்கத்தில் தங்குமோ
வல்லுனர் எவருண்டு
வகுத்து சொல்லிட

சாந்தி அடைந்தால்
சாதுவாக இருக்குமோ
ஏந்திழையின் ஆன்மா
ஏமாந் திருக்குமோ
வேந்தன் என்றால்
வேற்றூரில் சஞ்சரிக்குமோ
சீந்து வாரின்றி
சீவனை இழக்குமோ

பூதஉடலில் நீங்கிட
புகலிடம் கொடுப்பதாரோ
ஆதாமின் ஆன்மா
அன்றிருந்த வாரிருக்மோ
சாதனையா நியூட்டனை
சந்திக்க வழியுண்டா
ஆதார மில்லையென
ஆருடம் சொல்வோமா

செவ்வாய், நவம்பர் 12

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி


 

 








ஏற்றத் தாழ்வில்லா
ஏட்டுக் கல்வி
எண்பதாண்டு கடந்தாலும்
எட்டாக் கனியா
கற்றலின் கடவுளும்
நீட்டைத் தடுக்காதோ
ஐஐஎம், ஐஐடி
அயலாகி வாராதோ

விருப்பமுள்ளக் கல்வியில்
விண்ணைத் தொடலாம்
ஒருங்கிணைந்தக் கல்வியில்
உலகை அறியலாம்
பருந்தாப் பறக்கையில்
பலதும் காணலாம்
பொருந்தாக் கல்வியில்
புலராது மானுடமே

ஆரியமோ திராவிடமோ
அடிப்படைக் கல்விக்கு
போரிட்டு போனவுயிர்
போகட்டும் என்பீரோ
கோரிக்கை வைப்பதா
குடிகளின் உரிமை
பேரிகையை முழக்கு
பேதமற்ற கல்விக்கு

சனி, நவம்பர் 9

அத்தானின் ஆசை

 
















அடியே உனைபார்க்க
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது


அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா


கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்

செவ்வாய், நவம்பர் 5

தெவிட்டாத இன்பம்




 








குறள் 1328:

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
    கூடலில் தோன்றிய உப்பு.


ஊடிய பிறகு

கூடியதால்
நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்


மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!

சனி, நவம்பர் 2

நிலையானது?!!!

 








பணம் புகழுக்கு
பகீரத பிரயத்தனம்
பலகாலம் நிலைத்திருக்குமோ?

ஆண்டாண்டு கால
அதிகாரம் அப்படியே
அடுத்த தலைமுறை தொடரவா?

இழப்பதற்கு துணிவில்லை
இறப்பதற்கு எண்ணமில்லை
எனினும் நடப்பதென்னவோ

ஆர்டிக் உருகுது
ஆங்கொரு புல்லினம் மடியுது
ஆலமரமும் அடியோடு சாயுது

நிரந்தரத்தைத் தேடுவதும்
நினைத்ததை தக்க வைப்பதும்
தேக்கமடைய வைக்கிறது….

வாழ்க்கை
வற்றாத நதி போல
வழிகளை உருவாக்கி ஓடட்டும்

மேடு பள்ளங்கள்
காடுகள் மலைகள்
கலங்கி நிற்பதில்லை

வாழ்வும் அப்படிதான்
சாசுவதத்தை தேடாது
சஞ்சரிக்க பழகுங்கள்

திங்கள், அக்டோபர் 14

பங்குச் சந்தை

 












யாரோ
யாருடையப் பணத்தையோ
திருடிக் கொண்டிருக்கிறார்கள்

பதினாறு இலட்சம் கோடி
பங்குச் சந்தையில் காணவில்லையாம்
பதறாமல் விற்பனை தொடருகிறது

கொண்டுச் சென்றவர் யாரென்றோ
கொள்ளையடித்தவர் யாரென்றோ
பணத்தை பறிக் கொடுத்தவர் கேட்கவில்லை

ஹிண்டன்பர்க் அறிக்கையோ
இழந்த உயிர்களோ
ஏதும் செய்ய முடியாது

சட்டம் அங்கீகரித்த
பட்டவர்த்தன  பகற்கொள்ளை
இலாபமெனப்படுகிறது

உலக மயமாக்கலில்
அயலக நிறுவனங்களின் முதலீடு
உன்னைச் சுரண்டவா  

ஒழுங்கமைப்பட்ட திட்டத்தின்
கீழுள்ள முதலீடுகளின் உத்திரவாதம்
கள்ளத்தனமிக்க ஓர் ஒப்பாரி

ஹர்சத் மேத்தாக்கள்
கேத்தன் பரேக்குகள்
நேற்றைய இராசாக்கள்

சித்ரா இராமகிருஷ்ணன்
மாதபி புச்
இன்றைய இராணிகள்

ஊதிப் பெருக்கப்படும்
ஊக வணிகம்
உலகிற்குத் தேவையா

உழைப்பின்றிக் கிடைப்பதால்
உபரியென்று முதலீடு செய்கிறாய்
உள்ளதும் போனபின் ஏன் அழுகிறாய்

ஞாயிறு, அக்டோபர் 6

எட்டாம் பொருத்தம்

















ஏழெட்டுப் பொருத்தம்
எனக்கும் அவனுக்கும்
வாழட்டும் என்றே
வழியனுப்பி வைத்தது
பாழும் கிணரென்று
பாதகத்தி அறிந்தாலும்
சூழல் இல்லையே
சுற்றத்திடம் சொல்லியழ

மனப்பொருத்தம் இல்லாத
மணவாழ்வு இனிக்குமோ
என்வருத்தம் எதுவென்று
எனையீன்றோர் அறிவாரோ
சினமிருந்தும் கட்டியவனின்
சிறகொடிக்க மனமில்லை
வனவாசம் என்றானபின்
வாழ்விற்கு காரணமில்லை

பொருந்தா வாழ்வுதனில்
பொலிவுற வழியில்லை
இருந்தாலும் கனவுகள்
இருளகற்ற போராடுது
வருந்தாத இணையோ
வளையவளைய வருகுது
திருந்தாத மடங்களுக்கு
திசைக்காட்டியும் விளங்காது

ஆசையா நெருங்கவும்
அன்பேயென அரற்றவும்
யாசகமா கேட்பது
இயற்கைக்கு முரணானது
வேசையென பட்டமளித்து
வேண்டாத பொருளாக்க
காசினியில் இருந்தென்ன
காலனிடம் சென்றாலென்ன

வளரும் பிள்ளைக்காக
வசந்தத்தை மறக்க
உளரும் ஊருக்காக
ஒருவேடம் தரிக்க
தளரும் இளைமைக்கு
தண்டணை கிடைக்க
துளங்கா வாழ்வில்
தூண்டுதல் தானாரோ

சுவர்க்கம் தேடினேன்
சூன்யம் சூழ்ந்தது
சுவாசம் நிறுத்திட
சுவரொன்று தடுத்தது
விவாக ரத்தென்றாலும்
விமோசனம் மறுத்தது
உவர்நில மென்றாலும்
உயிரோடு இருக்கிறேன்

எனக்கான வாழ்வு
என்றுதான் கிட்டுமோ
அனலான நெஞ்சமது
அமைதி அடையுமா
புனலாக புதுவாழ்வு
பூரிப்பை தருமோ
வினாவிற்கு விடையுண்டு
விகற்பத்திற் கேதுமில்லை



சனி, அக்டோபர் 5

பனிபடர்ந்த தேசத்தில் பாவையுன்னைத் தேடுகிறேன்






பனிபடர்ந்த தேசத்தில்
பாவையுன்னைத் தேடுகிறேன்
கனியுதட்டின் காயத்திற்கு
கப்பம்கட்டப் போகிறேன்
இனிதென்று வாங்கியதை
இளஞ்சூட்டில் தருவாயோ?
நனியென்று நாயகனை
நாள்முழுக்க கொஞ்சுவாயோ?

பள்ளத்தாக்கின் பசுமையும்
பாய்தோடும் நீரோடையும்
கொள்ளையிடும் காட்சியால்
கொண்டல் பரவசமாக்க
துள்ளிடும் இளமையோ
தூதொன்றை ஏற்குது
உள்ளங்கள் ஒன்றாகி
உருகிதான் போகுது

முடிவில்லா மலைமுகட்டை
மூடிடும் மேகங்கள்
வடிவழகில் மையலுறும்
வண்டுகளாய் நின்றிட
கொடியொன்று அசைந்து
குழப்பத்தை விளைவிக்க
நொடியொன்றை வீணக்காது
நெஞ்சோடு சாய்ந்தாளே

வெள்ளி, அக்டோபர் 4

வெற்றிக் கழகம்

















கூத்துக் கட்டியவன்
குறைகளை களைவதாய்
கூட்டத்திடையே சூளுரைத்தான்

வசனங்கள் வசீகரிக்க
விண்ணதிர கைத்தட்டல்
மகிழ்ந்தது மக்கள் மட்டுமல்ல

கனவு வளர்த்தான்
கறுப்பை செலவளித்தான்
காசுக்கு கூட்டம் சேர்ந்தது

பலம் வாய்ந்தவனென
பத்திரிக்கைகள் புல்லரித்தன
பகற்கனவு தொடர்கதையானது

புதிய வரவாய்
வெற்றிக் கழகம்
போற்றிப் பாடுமா தமிழகம்

அரிதாரங்களாய்
அவையடக்கம் அறிந்து
அமைதி காத்தவர்கள்

புயலாக வருவதாய்
புழுதியை கிளப்ப
புலிகள் உறுமுகின்றன

மக்களுக்கு
தையல் இயந்திரமும்
தரை டிக்கெட்டும் கொடுத்த

வள்ளல்
ஊழல் பெருச்சாளிகளிடம்
ஒரு சீட்டுக்கு மண்டியிடுவாரா?

கழகங்களில் ஒன்றாய்
கடைச் சரக்கை விற்க
கபட நாடகம் நடத்துவாரா?

ஜோசப்பின் தேசமல்ல
என்றபோது
ஓசன்னா என முனுமுனுக்காதவனா

உழைக்கும்
உங்களை இரட்சிக்க
ஓடோடி வருவான்

ஆட்சி அதிகாரம்
அன்னமிடும்
அட்சய பாத்திரமா

அவர்கள் சொத்தை
நூறாயிரம் மடங்காய்
மாற்றும் தந்திரமா

என்ன செய்வான்
எப்படிச் செய்வான்
ஏதாவது சொன்னானா?

மக்கள் சேவை
மகுடம் தரித்த
தொழிலாக மாறியதாலும்

கொள்ளையடித்தாலும்
குற்றமில்லை என்று
நீதியரசர்கள் தீர்ப்பெழுதுவதாலும்

வெற்றுக் கூச்சலோடு
வெற்றிக் கழகமென வருகுது
விழிப்பாயிரு தமிழா…

வியாழன், செப்டம்பர் 12

திருட்டு

 


ரூ,1500

ரூ. 5000 ஆனது
விலைவாசி அல்ல

28 டாலர்
72 டாலராக மாறியது
இலாபமல்ல

ரூ.1500
மின்சார கட்டணமல்ல
72 டாலர்
நிலக்கரியின் விலையுமல்ல

ரூ.61832 கோடி கடனில்
ரூ.15977 கோடி மட்டுமே
வங்கியால் வசூலிக்க முடிந்தது

10 பேர் வாங்கியதை
ஒருவர் மட்டும் தீர்த்த கதை
தீர்ப்பாயம் மட்டும் அறிந்தது

மூலதனம் குவிந்தாலும்
முதலிடத்தை தவற விட்டான்
ஹிண்டன்பார்க் அறிக்கையால்

களவாடப்படுகிறது
களவெனஅறியாது – மக்கள்
கவலைக்கடமான நிலையில்

வாக்கு அரசியலில்
வாய்கரிசி மக்களுக்கு
ரூ,500 அல்லது ரூ,1000

மக்களாட்சியில்
இராசராசன் குவிப்பது
கோடிகளில்

கட்டணங்கள் உயர்வது
கார்ப்பரேட்டுகள் கொழிக்க
கட்டாயமாக்கப் பட்டவை

சட்டங்கள்
சாமனியர்களின்
சமதர்ம வாழவிற்கல்ல

சட்டப்படி கொள்ளையிட
சமூகம் வேடிக்கைப் பார்க்க
சரித்திரம்

அதிகார அமைப்புகள்
ஜனநாயக தூண்கள்
அனைவருக்குமானதல்ல

திருட்டு தொடர்கிறது
உபா, குண்டர் சட்டங்கள்
ஒன்றும் செய்யவில்லை

அது அப்படிதானென
அவரவர் ஏற்றுக் கொண்டனரா
அதை மாற்றுவதெப்படி

                                        என யோசிக்கும்



புதன், செப்டம்பர் 4

முப்பாட்டன் முருகன்
















தென்னாடுடைய சிவன்
எந்நாட்டவருக்கும் இறைவனானதால்
முப்பாட்டன் முருகனுக்கு
முத்தமிழ் மாநாடு

சொக்கனுக்கு முக்கண்ணிருந்தாலும்
அக்கக்காய் ஆய்ந்த
நக்கீரனுக்கு ஈடில்லை என்பதால்
தக்கதொரு வாய்ப்பிழக்க

இயலிசை நாடகமென
இகலோகத்திற்கு வாழ்வளிக்கும்
சரஸ்வதியை - சபதமெடுக்கும் போது
சமாளித்துக் கொள்ளலாமென்று

சிந்தையில்லா அரசு
சந்தையில் இராமனுக்கெதிராய்
தந்தை சிவனைத் தவிக்க விட்டு
கந்தனைக் கவசமாக்கிக் கொண்டது

அரசியல் சாசன
அடியொற்றி
ஆரம்பித்தனர் மாநாடு – ஆம்
அறுமுகனை வணங்காதவரெல்லாம்
                                    …………….. தமிழரல்ல

சொல் வழக்கு
சொலவடையில்
செந்தமிழ் செழித்திருக்க
சேயோனும் வாழ்ந்திருந்தான்  

கல்லில், ஏட்டில்
எழுத்தாணிகள்
எழுதி வளர்த்த தமிழ்
காணாது போமோ

அசை, சீர், சொல்லென
அலசி ஆய்ந்த
தொல்காப்பியனுக்கு
தொகைகளை கற்றுத் தந்ததாரோ

சுடலை மாடனும், ஐயனாரும்
இசக்கியும், பேச்சியும்
மாரியம்மனும், பச்சைம்மாளும்
ஊருக்கு வெளியில் உக்கிரமாய்

கருப்பசாமி, முனியாண்டி
நீலியும், வேடியப்பனும்
தமிழெனும் ஆகமத்திற்குள்
அடைபடாத காரணத்தால்

ஆயிரம் கோடிகள்
அறநிலையத் துறையிடம்
எங்ஙனம் சிலவழிப்பதென
எழுதிய தீர்ப்பு

தமிழரைப் பிரிக்கவேத்
தடத்தினை உருவாக்கியது
தர்க்கம் ஏதுமின்றி
தந்தனத்தோம் என்றது அரசு

பார்பனரல்லா இயங்கங்கள்
பல்லிளித்து எழுதியப்
பொழிப்புரையில் ஒன்று
ஒன்றே குலம் ஒருவனே தேவன்

இட ஒதுக்கீடு
உள் ஒதுக்கீடு
கோவணாண்டிகள் கேட்க
முருகனடிமை என்கிறது அரசு

இறை தூதனாய்
இயேசும் அல்லாவும்
இதயங்களை கவர்ந்தாலும்
அவர்கள் தமிழரில்லை

பறையடித்து
இறையாண்மை கொன்ற
திராவிடத் திரிபுகளை
தீர்க்கமாய் எதிர்த்திட

தமிழ் கடவுள்
உலகைச் சுற்றி
ஒருபழத்திற்கு ஏமாந்ததை
உணரும்படிச் சொல்லுங்கள்

மாட மாளிகைகள்
அதிகாரத்தின் குறியீடு
மானுடம் ஏமாற
அம்மதங்கள் தேவையா?



புதன், ஜூன் 12

உன் பார்வையின் பொருள்

 



தொல்காப்பியத்தில்
தேடத் தொடங்கினேன்
இலக்கண விதிகள் – பார்வைக்குத்
தட்டுப்படவில்லை

சங்க இலக்கியத்திலும்
சதுரகராதியிலும்
சுழன்றுத் தேடினேன்
சரியான விளக்கங்களில்லை

வள்ளுவன், கம்பன்
வகைவகையாய் வர்ணித்ததை
பாரதிதாசன் - புதுக்
கவிதையில் வடித்திருந்தாலும்

ஒவ்வொரு பார்வைக்கும்
ஓர் ஒற்றுமையுமில்லாது
ஓராயிரம் பொருளிருப்பதாய்
உள்ளுணர்வு உரைத்ததால்

புதையலைத் தேடுவது போல்
பார்வையின் இலக்கணத்தையும்
பாவலரின் விளக்கத்தையும்
பலவிடங்களில் தேடினேன்

மாயகோவ்ஸ்கியும்
பாப்லோ நெருடாவும்
தேடித்தேடி எழுதியும்
தேடிக் கொண்டிருக்கிறேன்

பலநூறாண்டுகள்
பார்வை பரிமாற்றம்
பல்பொருள் அளித்திருக்கலாம்
ஆயினும்

உன்விழித் தாக்க
என்னுள் அதிர்வுகள்
ஏழெட்டு ரிக்டரென
காதல் கடவுள் கணித்ததால்


தடுமாறும் அன்பன்
அ. வேல்முருகன்


சனி, ஜூன் 1

ரஃபா









அவர்கள்
எங்க வீட்டை
குண்டுகளால் அழித்து விட்டார்கள்

புழுதிப் படிந்த உடலோடு
குருதி வழிய
புலம்பிச் செல்பவள்

அயலகத்து குழந்தை யென்று
தியானத்திலமர்ந்து
கடந்துச் செல்லாதீர்கள்

எதற்காக எனவறியாது
யாராலெனப் புரியாது
குழந்தைகள் மரணிக்கின்றன

அதே மதவாதம்
எதேச்சையாக
எங்கும் நிகழலாம்

அதிகார போதையில்
ஆங்காங்கு பிரித்தாளும்
ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்

வேட்டுச் சத்தம்
கேட்டுக் பழகியிருக்கலாம்
வாழ்ந்து பாருங்கள்

சிறுச் சத்தத்திற்கு
மரணத்தை எதிர் நோக்கி
திடுக்கிட்டெழும் சிறார்கள்

ஐந்து இலட்சம் குழந்தைகள்
ஐயோ……….
ஆரும் கேட்பாரில்லை

ஐக்கிய நாடுகள் சபை
ஆட்சியாளர்கள் சார்பாக
இரைஞ்சுவதாக நடிக்கிறது

ஹார்வர்ட் பல்கலை மாணவர்கள்
பாதகை தாங்கி – உலகை
பார்க்கத் தூண்டுகிறார்கள்

விடுதலை தாகத்தோடிருந்தவனா
கொலைகளத்தை விரிவுப்படுத்தி
சாத்தானாக மாறிவிட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இந்த இனம் - யாருக்கு
இறப்பைக் காணிக்கையாக்குகிறது

அகதியாய் முகாம்களில்
ஆயினும் வான்தாக்குதலில்
ஆயிரமாயிராய் கொல்லப்பட

நிலத்தின் எல்லையா,
மதத்தின் தேவையா
இனத்தின் மீதான வெறுப்பா

குற்றம் புரியாத
குழந்தைகள் கொலையாக
குற்றம் புரிந்தவன் யார்?

அமெரிக்காவை
ஐநா சபையை ஆட்டுவிக்கும்
இஸ்ரேலியர்கள்

உளவில், சிந்தனையில்
உயர்ந்தவனாய் வேடமிடலாம்
ஆயினும் மானுடத்தின் எதிரிகள்

நீதி வேண்டுவது
“ரஃபா” வுக்கு மட்டுமல்ல
மானுடத்திற்கு



அ. வேல்முருகன்

ஞாயிறு, மே 19

வல்லினக் காதல்


 

ன்னியின் வேண்டுதல்
காளையால் கைகூடுமோ
ந்த காதல்
காக்க வழிகாட்டுமோ
கண்வுடன் அழைத்து
காதலி கைப்பற்றுமோ
கலந் மனங்கள்
களிப்புற்று வாழ்ந்திடவே
கட்டுப்ட்ட காளையாய்
காதலன் வருவானா
காதல்பற் மெல்லினத்தை
கலப்பானோ வல்லினமாய்

சனி, மே 18

கண்மூடும் வேளையிலே





கண்மூடும் வேளையிலே
கனவில் வந்தவளே
பண்பாடி அலைந்தோம்
பசுமைச் சூழ்வெளியில்
தண்நிலவு நீண்டிருக்க
தந்தநின் முத்தங்கள்
மண்ணுலகில் உன்னிடமே
மறுபடியும் வேண்டுகிறேன்

தண்டையிடும் சத்தம்
தளிர்நடை என்றானதே
சண்டையிடும் மனதும்
சங்கமத்தை வேண்டுதே
தொண்டுச் செய்ய
தோழமையை விரும்பும்
வண்டு பூவிடம்
வனைந்த பாவிது

கண்விழிக்க கலைந்தன
கண்மணி யாரென
அண்டை அயலகத்தில்
ஆர்வமாய் தேடிட
எண்ணிய வண்ணம்
எவரும் இல்லை
கண்ணூறுப் பட்டிருக்கும்
காத்திரு காதலிக்க

செவ்வாய், மே 14

ஜெய்ஸ்ரீராம் - நல்லகாலம் பொறக்குது




ஹிஜாப் – மதஉரிமை
திருநீறு – இந்துத்துவம்



வெறுப்பை விதைக்கும்
வேத விற்பன்னர்களோ
வேண்டாத மதவாதிகளோ
மேற்கூறியவை

நாலு வரியில்
நால் வர்ணத்தையல்ல
நாட்டை பிளவுபடுத்த
முகநூலில் வெளியிட்டவை

பொய்யும் புனைச்சுருட்டும்
பிழைப்பாய் கொண்டவர்கள்
வாழ்வை அழிக்க
வதந்தியை பரப்பினாலும்

ஆய்ந்தறியும் திறன்
அறிவுடைத் தமிழனுக்கு
ஆதியிலிருந்து உண்டென்பதால்
அடியிற் காணும் விளக்கங்கள்

மடிசார், பஞ்சகச்சம்
கொடியிடை மறைக்க
குற்றமேதுமில்லை

கலாச்சாரத்தின் அடையாளமாய்
காணும் ஆடைகளை
கலவரமாய் மாற்றுவதேன்

ஜப்பான், பூட்டான் ஆடைகளை
சீர் செய்ய கிளம்பாமல்
ஹிஜாப் –ல் நுழைவதேன்

பிடி சாம்பலாய்
பிணமான பின் மாறும் உடலில்
தரிக்கும் திருநீறு

சைவத்தின் அடையளாமாம்
இந்துத்துவம் – இங்கே
வந்துதிப்பது எதற்காக

திருமண், சந்தனம்
குங்குமம் குறியீடுகளாய் இருக்கலாம்
குழப்பம் விளைவிக்கவல்ல


புர்கா – மதஉரிமை
காவித்துண்டு – மதவாதம்



பூணூல், உச்சிக்குடுமி
சர்வாதிகார சாதியாய் இருக்கட்டும்
சமுகத்தை பிரிக்காத வரை

மங்களூர் கலவரம்
மானுடத்தின் நிலவரமா
மதவாதத்தின் எதிர்வினையா?

கருப்பு திரவிடமாய்
சிகப்பு கம்யூனிசமாய்
பச்சை விவசாயமாய்

மஞ்சள் மங்களமாய்
மாநிலத்தில் இருக்கையில்
காவி கலவரமாவதேன்?

ஹலால் உணவு - மதஉரிமை
வெஜிட்டேரியன் உணவு – பார்பனியம்



கிடைத்ததை உண்டு
காலத்தை வென்றவன்
ஹலால் அசைவமென்கிறான்

கனியோ காய்கறிகளோ
மனிதன் உண்ண
மண்ணில் விளைந்தவை

குதிரைகளை கொன்று
அசுவமேத யாகம் வளர்த்தவர்கள்
அக்லக்கை கொன்று – தாங்கள்
அசைவமல்ல என்கிறார்கள்

ஆடு, மாடு, கோழிகள்
அறுத்து ஏற்றுமதி செய்பவர்கள்
அவாள்களாக இருக்க

அடுத்தவன் உண்பதை
அவமானமாக சொல்பவனின்
அழுக்கை யார் சொல்வது

மச்ச, கூர்ம, வராகம்
அவதாரங்களா….. மாமிசமா ......
கொல்கத்தா பிராமணனுக்கும்
ஆமைக்கறி சீமானுக்கும் தெரியாதா


அல்லாஹூ அக்பர் – மதஉரிமை
ஜெய்ஸ்ரீராம் – தீவிரவாதம்


இறைவனே மிகப் பெரியவன் எனும்
இஸ்லாத்தின் அல்லாஹூ அக்பரை
இவர்கள் ஏன் சீண்டுகிறார்கள்

ஓம்….
ஓங்காரமாய், பிரணவமாய்
ஒலிக்க ஒரு உபவத்திரமில்லை

ஹரஹர மகாதேவ
அரோகரா, கோவிந்தா ஒலிகளில்
பக்தியே தவழ்ந்தது

புத்தம், சரணம், கச்சாமி
பரலோகத்திலுள்ள பிதாவே
அல்லாஹூ அக்பர்
ஒன்றிணைந்தே இருந்தோம்

மகமாயி, மாரியாத்தா
முருகன், சிவனை
முடக்கவா ஜெய்ஸ்ரீராம்

ஜெய்ஸ்ரீராம் ஒலித்தவுடன்
ஜெக்கம்மா
கெட்டகாலம் பொறக்குது என்றாளே?

புதன், ஏப்ரல் 17

தேர்தல் 2024










நாட்டின் வளங்களை
நாலு பேருக்கு விற்க
நாடி வருகிறார்கள்
நாள் 19 ஏப்ரல் 2024

பத்தல பத்தல
பத்தாண்டுகள் என்றே
பகற்கனவோடு வருபவனை
பாராள அனுமதிப்பாயா?

அக்மார்க் இந்துக்கள்
ஆட்சிக் கட்டிலை
அயோத்தி இராமனிடம் கேட்காது
அர்பன் நக்சல்களிடம் கேட்பதேன்

பொற்கால ஆட்சியாளர்கள்
பொய்மானைத் தேடி
சரயு நதிக்கரைத் துறந்து
இராவண தேசம் வருவதேன்

கோயபல்ஸ் கொள்கை
பொய்களை உண்மையாக்குவதில்லை
உண்மையாய் இருக்குமோ என
உன் உள்ளுணர்வைத் தூண்டுவது

வாக்குறுதிகள்
வெற்றுக் கூச்சல்கள்
நிறைவேற்ற அவர்கள்
மக்களில் ஒருவரல்ல

மாட்சிமை தங்கிய
மன்னராய் வாழ்பவர்கள்
முடிச் சூட்டியப் பின்
மாக்களாய் உனை நடத்துபவர்கள்

பக்தியில் பசுவைத் தொழவும்
புத்தியில் அக்லக்கைக் கொல்லவும்
சிந்தனை உனக்கிருந்தால்
நந்தனை எரித்த வாரிசு நீயே

சனநாயகத் தூண்கள்
வீழ்ந்து கிடப்பதை
எழுப்புமோ உன்வாக்கு
சவக்குழியைதான் ஆழமாக்கும்

நோட்டாவைப் பலப்படுத்திட
நோஞ்சான் சனநாயகம்
விரீட்டெழுந்து
விடியலைத் தருமா?

பதிவாகாத வாக்கும்
பயனற்ற நோட்டாவும்
பெரும்பான்மை என்றானால்
பாசிசமே வெல்லும்

மின்சார விளக்கணைத்து
மெழுவர்த்தி ஏற்றியவர்களே
கைத்தட்டி கொரானாவை
கொல்ல வழிகாட்டியவர்களிடம்

மொழியொரு கருவி
முழக்கமிடும் இனத்தின் அடையாளம்
ஓட்டுக்கு முனகும் உனக்கோ
அவ்வுணர்வு புரியாதெனச் சொல்

வாங்கும் வரிகளை
வாரிவழங்கும் வள்ளலாய்
வடிவமைப்பட்ட கதைகள்
வந்த பெருமழையில் கரைந்தன

ஊழலற்ற உத்தமர் பட்டம்
உச்சநீதி மன்றம் உத்தரவிட
பாரத வங்கி
பல்லிளித்து வழங்கியது

கட்சிகளை உடைத்து
ஆட்சி அமைப்பது
அவர்களுக்கு அத்துபடியான பின்
ஐந்தாண்டு தேர்தல் ஏன்

கட்டளைகளுக்கு பணியாதவர்களை
காராகிரகத்தில் அடைக்க
பூஜ்ய மதிப்பெண்கள்
ராஜ்யத்தோடு ராசியாகி விட்டன

ஓய்வுப் பெற்ற நீதியரசர்கள்
உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கிறார்கள்
எதற்கென்று
யாருக்கும் தெரியவில்லை

ஈ.டி, ஐ.டி., சி.பி.ஐ
நிர்வாகங்கள்
நேர்மை துறந்ததை
நெஞ்சுயுர்த்தி சொல்கிறது

ஏறிய விலைவாசியை
தேடும் கருப்புப் பணத்தில்
வேலைவாய்ப்பை உருவாக்க
தேனாறும் பாலாறும் ஓடுமா

செய்தி ஊடகங்கள்
சப்பாணி ஆனதை
அண்ணாமலை அறிவிக்க
சமூக ஊடகங்கள்தானே மறுக்கிறது

இவையெல்லாம் அறிந்ததால்
“ஏப்ரல்”, “மே” யில்
ஏமாறாதே என்கிறேன்
ஏற்பவர் ஏற்க!! ஏற்காதவர்??!!!!

சூட்சமம்

காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...