செவ்வாய், ஜூலை 17

இந்தியனா


மனிதனாய் இருக்காதே
இந்தியனாயிரு

மனிதன்தான் என்றால் - நீ
தீவிரவாதி

மக்களை நேசிப்பவனா - நீ
மாவோயிஸ்டு

அரசுக்கு எதிராக கேள்வியா - நீ
நக்ஸலைட்

உனது மதம்
உனக்கான தேசத்தை உணர்த்தும்

ஜோதியில் ஐக்கியமாயிரு
தேச பக்தனாவாய்

சாதியில் இணைந்திரு
சனாதனம் காத்தவனாவாய்

எந்த சாமிய வணங்கினாலும்
இந்துவென அறியப்படுவாய்

ஆயிரம் வழியென்றாலும்
அரசியலமைப்பு தீர்மாணிக்கும்

தமிழை நேசித்தால்
தரங் கெட்டவனாவாய்

எதிலும் சேராதவனா
எங்கள் விரோதி

மனிதா?!  மனிதனாய் நீயிருந்தால்
இந்தியனில்லை

ஞாயிறு, ஜூலை 15

போ...... போயிட்டேயிரு

ஆயிரம் நடக்கும்
அவலம் உனக்கா
அதனாலென்ன
அடுத்த வேலையை பார்

ஏமாந்தாயா?
ஏமாற்றப் பட்டாயா?
எதுவாயினும்
என்ன செய்து விடுவாய்

நேர்மை, உரிமை
நேற்று இன்று நாளை
என்றும் இல்லை -ஆக
நடப்பதை ஏற்றுக் கொள்

அதிகாரம் அவர்களிடம்
பொதிக் கழுதைகள்
சுமக்க மட்டுமே
சொடக்கு போட்டால் ........ சினிமா

பாவ பரிகாரமாய்
பாராள்பவரின் திருபலிகள்
பதிய வைப்பதற்கே
மீண்டும் உயிர்தெழாதிருக்கவும்

காடுகள் மலைகள்
மடுவூம் அணைகளும்
காக்கும் மக்களுக்கா
காசாக்கும் மன்னர்களுக்கா

வரிச் செலவுகள்
எட்டு வழியாயிருக்கலாம்
எந்தவழி   சரியென்பதும்
எமது வசதி

அதிகாரம் எதுவென
அறிந்த மக்களுக்கு
அருஞ்சொற் அகராதி
அச்சமென்றே சொல்லும்

அடக்குமுறை  - அரச
அச்சத்தின் வெளிப்பாடு
வெடிக்கும் போராட்டங்கள்
வழிகாட்டும் விடிவெள்ளிகள்


செவ்வாய், மே 1

துடைப்பக் கட்டைகள்


வாரான் வாரான் பூச்சாண்டி
  வாரணாசி கோட்டை தாண்டி
தெருவ கூட்டிக் காட்டுறான்டி 
  திமிருதானே தினமும் செய்வானா 
எருமை சாணம் பொறுக்குவானா 
  எங்கள் சேரிக்கும் வருவானா 
உரிமை ஓட்டை போட்டதால 
  ஒருநாள் கூத்தை காட்டுறானா

எட்டுத் தெருவை பெருக்கும்
  எங்க குருவம்மா கொண்டையா
விட்டு விட்டு போனால்
   வீசும் வாசனை என்னய்யா
துட்டு வேணுமா தாறேன்
   துடைப்பம் பிடிச்சு பாரேன்
முட்டுச் சந்து தெருவில்
   மூச்சடக்கி வாழ்வோம் வாயேன்

விளையாட்டு




ஒரு குடம் நீரூற்றி
ஒரு பூ பூக்க
ஒரு கூட்டம் சேர்ந்தது - அது
ஒரு காலமானது

ஆலமர ஊஞ்சலாடி
ஆங்கே தும்பி பிடிக்க
காயா பழமா என்று
ஓயாது விளையாடிய நீ

ஓடிப் பிடித்து
ஒளிந்து விளையாடியது
ஒரு காலமென
ஓய்ந்து போகாதே

தேடிப் பிடித்து
தேவையென அறிந்து
மனிதர்களோடு உறவாடி
மகிழ்ந்து விளையாடு

கூட்டாஞ் சோறு
மணல் வீடு
உப்பு மூட்டை
உனக்கானதே

கொலை கொலையா முந்திரிக்கா
திருடன் போலீஸ்
வகை வகையான விளையாட்டுகள்
வாழுமிட மெங்கே

மழைக் காலத்தில்
மடித்த காகிதம்
கப்பலேறி விட்டதோ
கனவாகி விட்டதோ
  
நூங்கு வண்டி
கில்லி தாண்டு
கோலி விளையாட்டு
காலியாகி போனதோ

மாஞ்சா நூலில்
மடுவங் கரையில்
மாலையில் விட்ட பட்டம்
மறைந்து போனதே

ஆறு குளமென்றும்
கிணற்று வெளியிலும்
குதித்து நீச்சலடித்தது
வரண்டதோ - காவேரியா

பலிஞ் சடுகுடு
குதிரை தாண்டுதல்
பம்பரம் சுற்றியது
நின்று போனதே

ஆடுபுலி யாட்டம்
தாயக் கட்டை
சொக்கட்டான்
பரமபத மடைந்ததோ

கைப்பந்து கால்பந்து
கூடை பந்து
கைப்பற்றியது
மட்டைப் பந்து

மல்லர்கள்
சிலம்பச் செல்வர்கள்
வில் வித்தையாளர்கள்
இராமனைத் தேடிச் சென்றனரோ
  
இளவட்ட கல்தூக்கி
மஞ்சு விரட்டி
வழுக்குமர மேறி
உரியவளை கைப்பிடிக்க

தட்டாங்கல், தாயம்
பல்லாங் குழி என
பாவை விளையாடியவை
நொண்டியானதோ

கிச்சு கிச்சு தாம்பளம்
குரவை யாட்டம்
கரகர வண்டியேறி
காணாமல் போனதோ

அக புற விளையாட்டுகள்
பருவ பாலினத்திற்கேற்ப
அந்தோ அவையாவும்
அன்ட்ராய்டு விளையாட்டாய்

செல்பேசி விளையாட்டில்
ஜெயிக்க முடியாதாம்
சிலிர்த்து கொண்டனர்
சிறுவனின் பெற்றோர்

டெம்பிள் ரன்
புளு வேல்
காம்பட் பைட்
கணிப்பொறியில் சிக்கியது

ஓட்டி உறவாடுவது
எட்டிப் போனது
சுட்டி டிவியும்
வெட்டிக் கதை பேசுது - ஆக

எல்லோரும் கூடி
எக்காளமிட்டு விளையாடும்
எங்கள் பண்பாடு
என்று மீளும்



வியாழன், மார்ச் 1

நீதி மய்யம்


அரிதார மய்யம்
அரசியல் மய்யமாகுமோ
பரிதாபக் கூட்டம்
பகல்கனவுக் காணுது

கருப்பும் சிவப்பும்
கலந்துச் செய்த
கலவைத் தானென
கட்டியம் கூறுகின்றான்

காவி அபாயமென்றால்
ஊழல் ஒழிப்பென்னென்கிறான்
எங்ஙனம் என்றால்
ஏதோதோக் கூறுகின்றான்

சம்பளம் பாக்கிக்காரன்
சினிமாவில் சம்பாதித்தானாம்
அரசியலில் சம்பாதிக்க
அவசியமில்லையாம்

ஊதிப் பெருக்கி
உத்தம வில்லனை
உங்கள் மனங்களில்
உரமிட்டாகி விட்டாச்சு

திங்கள் கழித்து
தீர்ப்பும் எழுதுவீர்கள்
தப்பித் தவறி
சிம்மாசனத்தில் அமர்ந்தாலும்

ஏ...... சமூகமே
ஏமாந்தது நீயாகதானிருப்பாய்
எதுவும் மாறாது
எடுப்பான முகம்தவிர

சின்னாள் கழிந்து
சித்ரகுப்தக் கணக்கில்
சிகரத்தில் என்பாய்
சீட்டுக் கட்டு விழும்போது

விஞ்ஞான ஊழல்லென்று
வியாக்கியானம் சொல்வாய் - ஆக
வேறுமுகம் தேடாதே
வேறுவழித் தேடு......

வெள்ளி, ஜனவரி 26

செக்சி துர்கா



முருகனை அழைக்க
அழகு நாமங்கள்
அவரவர் விருப்பமாய்
118 இருப்பதாயும்

சுடுகாட்டானை
சுட்டும் பெயர்கள்
சுமார் ஆயிரம்- ஆயின்
சொரூபம் ஒன்று

அகிலாண்டேஸ்வரியை
அன்பாய் அழைக்க
அவர்களிட்டப் பெயர்
ஆயிரமல்ல 150

குலம்காக்கும் எம்மவர்கள்
அய்யனாரென்றாலும்
எந்த அய்யனென்று
எடுப்பாய்ச் சொல்வர்

பேச்சி, இசக்கி
பச்சையம்மாள், முனியம்மாய்
இரட்சித்தவர்கள் என்பதால்
இரகரகமாய்ப் பெயரில்லை

விடுதலை, சுதந்திரம்
வேறுபாடின்றி
வைத்தப் பெயர்கள்
யாருக்குச் சிக்கல்

சுட்டும் பெயரொன்றை
சூட்டியக் காரணத்தால்
வெட்டும் கூட்டமொன்று
காட்டுக் கத்தல் கத்துகிறது
  
இல்லாததை இருப்பதாகவும்
சொல்லாததைச் சொன்னதாகவும்
நடக்காததை நடந்ததாகவும்
நாடகம் நடத்துகின்றனர்

பாத்திமா, மேரியை
பார்த்தாயா அப்படி
பாராள்பவளை – படமிட்டு
பார்க்கலாமா என்கிறான்

சௌந்தர்ய லகரியில் – சங்கரன்
சொக்கிப் பாடுகிறான் – சொக்கன்
சும்மாயிருந்தான் – பக்தாள்ஸ்
சனல் சசிதரனை வாட்டுவதேன்?!!...

செவ்வாய், ஜனவரி 2

சும்மா அதிருதில்ல


அந்த அறிவிப்பால்
சும்மாவாது
அதிர்ந்ததா?...

வாய்ச் சவடாலில்
வந்துட்டேனுச் சொன்னதால்
வாசல் திறந்திடுமா

ஏமாற்றும் கூட்டத்தின்
எண்ணிக்கைக் கூடியதாக
இனம்காண் தமிழகமே

ஜகத்குரு, நித்தி
ஜக்கியின் ஆன்மீகத்தை
ஜனநாயகமாய் கண்டோம்

மரபுகளை மாற்றி
தியேட்டரில் கேசட் விற்றவன்
கேப்பையில் நெய் வடியுமென்கிறான்

எதுச் சரி
எதுத் தவறென
ஏதும் அறிவிக்காமல்

இறங்கி வந்த
இறை தூதனா?!!
எதை மாற்றுவான்

கோடிகளில் புரண்டு
கேமராமுன் வசனம் பேசி
நாடாள வருவேனேன்றால்

சன்னி லியோனை
சட்டமன்ற உறுப்பினராக்க
சான்றொப்பம் அளிப்பாயோ?

ஓடுறக் குதிரையென
நோட்டைப் புடுங்கினவன்
ஓட்டைக் கேட்கிறான்

ஏலமெடுத்த டிக்கட்டை
எவனும் வாங்காததால்
எறிந்தாயேக் குப்பைத் தொட்டியில்

மறக்காத வடுவது........
கறக்கலாமென நினைத்தால்
காலமாவது நீதான்

புதன், ஆகஸ்ட் 2

காவி காதல்




அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
அம்மண மாக்கப்பட்டார்கள்
அவர்கள் தலித்தென்பதால்

கண்களால் கனிவது
காதல் உணர்வு
அம் மனஉறவை
அச்சப்படுத்துதல் முறையோ


அயோத்தி இராமனின் 
அக்கினி பரிட்சையில்
அவளுக்கு கிடைத்தது
கற்புக்கரசி பட்டம்

யோகி ஆதியநாத்
காவி ஆட்சியில்
காதலை கருக்கி
காப்பது சாதியை

மதங் கொண்டவர்கள்
மனித உயிர் வதைக்க - நீ
வேடிக்கை பார்க்கவா
வினை ஆற்றவா

மதங்களுக்கு மரணமும்
சாதிகளுக்கு சமாதியும்
காதலால்தான் சாத்தியம் - ஆக
காதல் செய்வீர்

வெள்ளி, டிசம்பர் 2

“தேச விரோதிகள்”




கால விரயத்தில்
கருப்பு பணத்தை
காயடிப்பதாக கூறியவன்
கஷ்டப்படும் எங்களுகிட்ட பெயர்

பதினைந்து இலட்சம்
ஐம்பது நாட்கள்
அறுபத்தாறு பிணங்கள்
அவர்கள் இட்ட பெயர்

“கேமன்” தீவுகள்
“கேத்தன் தேசாய்கள்”
பக்த கோடிகள்
பாமரன் எங்கள் பெயர்

“ரிலையன்ஸ் பிரஷ்”
“பிக் பஜார்”, “ஃபண்டலூன்”
பாரத் மகான்கள்
சில்லரை வணிகனின் பெயர்

“கார்பரேட்” மருத்துவமனைகள்
சுயநிதி கல்லூரிகள்
“ரியல்” எஸ்டேட் நல்லவர்கள்
சவாலில் வைத்த பெயர்

இம் என்றால் சிறைவாசம்
ஆம் என்றால் பக்தவிலாசம்
“ஹே ராம்” என்றேன்
ஆயினும் அவர்களிட்ட பெயர்

பாடுபட்டு உழைத்தது கருப்பாம்
“பனாமா” என்றால் வெளுப்பாம்
“P” நோட்டு பக்தன்
எனக்கிட்ட பெயர்

ஆயிரம் ஐநூறு கருப்பா
நூறும் ஐம்பதும் வெள்ளையா
நூறு கேள்வி எழுப்ப
நோகாமல் வழங்கப்பட்ட பெயர்

சனி, ஆகஸ்ட் 27

குலத் தொழில்



செம்படவனோ
செம்மீன்
மரைக்காயாரோ அல்ல
எஸ் & எஸ், ஸ்ரீராம்
அக்மார்க் அய்யர்கள்
அயிரையைப் பிடிச்சு வித்தவங்க

கூறு 5 ரூபாவென்று
கூவி வித்தவன்
குப்பனோ, சுப்பனோ இல்லீங்க
பனியாக்கள்
ரிலையன்ஸ் பிரெஷ், பிக் பஜார்
பியானி, அம்பானி

நாலுபேர் தலைமுடி வெட்டி
நானூறுக் கோடிப் பொருளீட்ட
நாவிதனோ நான்
நேட்சுரல்ஸ், கீரின் ட்ரென்ட்
கார்ப்ரேட் முதலைகள்

வெள்ளன எழுந்து
வெளுத்துக் கொடுத்தவனை
வண்ணாரெனப் பெயரிட்டாய்
பிக் லாண்ட்ரி, லாண்ட்ரி பாய்
கடைத் திறந்தாயே
நீ என்ன சாதி

சப்பாத்தி முள் தைக்காதிருக்க
செருப்புத் தந்தவனை
சக்கிலி என்றாய்
மாட்டுத் தோலை இறக்குமதிச் செய்து
செருப்பு செய்யும் – நீ யார்
வெட்கமின்றிச் சொல்
  
சூத்திர பஞ்சமனின் வேலை
சுகமா இருந்தா வா
சாக்கடையைச் சுத்தம் செய்வோம்
கோடிகள் கிடைக்காவிட்டாலும்
குமட்டும் வாசனைப் பெறுவாய்

எனக்கோ எம்பெருமானின் கடாட்சம்
கருவறைக் குள்ளிருந்தால் கிட்டுமென
ஆகம விதிப்படிக் கற்றிருக்கிறேன் – ஆம்
அடியேன் பூசாரியாக வேண்டும்
அவனருளின்றிக் கோடிகள் வேண்டேன்

கிராமத் தேவதைகள்
அரவணைத்து வளர்ந்தவனென்பதால்
மதுரையம்பதியிலோ, காஞ்சியிலோ
மயிலைக் கபாலியோ அல்ல
அரங்கனோ அடியேனை ஏற்க வேண்டும்





திங்கள், ஆகஸ்ட் 15

காதல் செய்யும் காலம்



கார்காலம் கண்ணாளா
  காதல் செய்யும் காலமடா
கூதிர்காலம் மன்னவா
  கூடிக் களிக்க வரமடா
போர்கோலம் பஞ்சணையில்
   புதியன தேடும் ஆர்வமா
நீர்கோலம் கன்னத்தில்
   நீயெனை பிரிய பாரமடா

பொருளீட்டும் பயணத்தில்
   பொலிவி ழந்ததென் மேனியடா
காரிருளில் புல்லினம்
   கலகலக்க வேதனை பெருகுதடா
ஏரிக்கரை பூங்காற்றும்
   ஏகாந்தமும் உனையே நினைவூட்ட
கோரிக்கை தலைவா
   கோலமயில் எனைகாண திரும்பிவா

பொருளா புன்னகையா
   பூவா தலையா வேண்டாமடா
அருகிருந்தால் தானடா
   ஆனந்த அன்பைச் சொல்லும்
பருகாத இளமை
   பஞ்சத்தில் பட்டினியால் மடியுமடா
சருகான முதுமையில்
   சதிராடுமோ சல்லாப காமமடா

கால்வயிற்று கூழானாலும்
   கண்ணாளா இணைந்தே குடிப்போம்
மேல்தட்டு வாழ்வானாலும்
   மேன்மையுடன் இணைந்தே வாழ்வோம்
யௌவனத்தில் பொருள்தேடி
    ஏந்திழையை பிரிந்து செல்வாயோ
கவனத்தில் கொள்ளடா
    கட்டியவள் காத்திருப்பேன் இளமையல்ல

வளைகுடா நாடோ
   வல்லரசு அமெரிக்க தேசமோ
வைஃபை வசதியோ
   ஸ்கைப்பில் பேசிப் பழகியோ
வாழும் வாழ்வில்
   வசந்தம் ஏதடா, கூறடா
நாளும் ஊடிகூடி
   நடத்திடும் வாழ்வே மகிழ்ச்சியடா

திங்கள், மே 23

நூறு ரூபாய்



மூன்று, பனிரெண்டு
முப்பது ரூபாய்க்கு
சந்தையில் கிடைக்கும்
சக்திக்கு ஏற்ப

லண்டன் பணம்
நாலு ரூபாய்க்கு கிடைக்கும்
லட்சாதிபதி பணம்
நாள் வட்டிக்கு கிடைக்கும்

அம்பானிக்கு ஆறு ரூபா
"ஐடி" காரனுக்கு பனிரெண்டு ரூபா
ஐயோ பாவம் பொதுஜனத்துக்கு
18-24 ன்னு ஆளப் பார்த்து விலை

ஓடாய் உழைக்குது பணம்
ஓரிடம் சேருதே தினம்
'உபரி' என்றார் மார்க்ஸ்
'விலை' என்றான் வியாபாரி

புதன், மே 11

போங்காட்டம்




இது
பாசாங்கா
போங்காட்டமா
தோழர்களுக்கே வெளிச்சம்

அவனோ இவனோ
அடிப்பது கொள்ளைதானென
வேட்டையிலிருப்பவனே
வெடி போடுகிறான்

எல்லாம் தெரிந்த
ஏமாளி மக்கள்
ஏதோ கடமையென
எண்ணாது போகின்றனர்

“நூற்றுக்கு நூறு”
கள்ளத்தனமும் சேர்த்து
கணக்கு காண்பிக்க
கட்சிகளுக்கு ஆலோசனை

இது
பெரியாரின் மண்
பார்பனியமே எதிரி
பரவாயில்லை அவர்

பலவீனமாயிருக்கையில் தாக்குவது
அதர்மமென்றார் காந்தி
அவ்வேதத்தை அடியொற்றி
அவரை தாக்குவதில்லை

ஏழெட்டு கூட்டணி
எப்போ மாறுமோ
எல்லாமே லாவணி - அதுவே
ஜனநாயகம் என்பாயோ நீ

புறகணிப்பை
புறந்தள்ளு
போங்காட்மென்று
புதுக்கதை எழுது

தேர்தல் பாதை
டாஸ்மாக் போதை
போங்காட்டமாய் - அது
புறமுதுகிட்ட காதை

புரட்சிக்கு வாய்தாவா
மறுகாலணியாக்கம்
மடை திறக்குமோ
கழகம் தீர்மானிக்கும்

புரட்சி மலருமா
மக்கள் அதிகாரம்
மறுபடியும் சாக்கடைக்குள்ளே – அட

பாசாங்கு அல்ல இது

வியாழன், நவம்பர் 19

தேவதையின் துலாக்கோல்




கருப்பு அங்கிகளின்
கௌரவம் காக்கும்
தேவதையின் துலாக்கோல்
கண்கட்டு வித்தை

விருப்பு வெறுப்பின்றி
விறுவிறுப்பான வியாபாரம்
வியாக்கியானம் தேவையில்லை
அங்கீகரிக்கப்பட்டது

கொள்ளையர்களிடம் மனசாட்சியை
தட்டியெழுப்பும் துலாக்கோல்
இல்லாதவர்களிடம் இரக்கமின்றி
இ.பி.கோவை நீட்டி முழக்கும்

தில்லை நடராசனுக்கு
தீச்சட்டி வாரிசுகள்
தீட்சிதர்கள் மட்டுமேயென – ஆகம
விதியெழுதும் துலாக்கோல்

பளுவிற்கேற்ப
பணம் நிரப்ப
துல்லியமாய் நிற்கும்
துலாக்கோல் – கண்கட்டு வித்தையல்ல

பணம் குறைந்தால்
இ.பி.கோவை ஏற்றி
சட்டம் கடமையை
செய்ததாய் சப்பைகட்டும்

கௌரவ கொலைகள்
காணாத மலைகள்
தாதுமணல் குழிகள்
தப்பிக்கும்வழி – துலாக்கோல்

மாட்சிமை தங்கியவர்கள்
மரபுகளுக்குள் ஒளிந்தனர்
மாண்புகளை காக்கவேண்டுமென
வேதம் ஓதுகின்றனர்

தட்டில் நிறுத்தப்படுவது
குற்றமா? நீதியா?
பணமா? பதவியா?
நேர்மையா? குறியீடா?

சட்டமியற்றுபவன்
சட்டம் படித்தவனா
சமூக அக்கறையாளனா? – அட
ஓட்டுப் பொறுக்குபவன்

ஓட்டுப் பொறுக்கிகளின்
ஓட்டை உடைசலுக்கு
பேரிச்சம் பழமளிப்பது
துலாக்கோலின் வேலை

துல்லியமில்லா துலாக்கோலென
தூக்கியெறிய - பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு
முணுமுணுக்க வேண்டும்

ஊழல் மேடையை
உடைக்கா சுத்தியலை
அடை காப்பதால்
எடையில் மாற்றமில்லை

குடி ஆட்சியில்
நீதி அரசர்கள்
குறுநில மன்னர்கள்
கப்பம் கட்டுகிறார்கள்

பிஆர்பி, வைகுந்தராஜன்
அம்பானி, வேதாந்தா அகர்வால்
டாட்டா பிர்லா இன்னும் பிற
கல்வி வள்ளல்கள்

சதவிகிதங்களில் பேரமென்பதால்
சதவிகிதங்களில் ஆமோதிப்பு – ஆம்
25 சதவிகிதம் ஊழல்
துலாக்கோல் ஒப்புதல்

விசாரணை – விலையென்ன?...
கேள்விதானே? – விலையா?..
கைது!!!! உடன்படுகிறாயா – இது
கட்டை துலாக்கோல்

கேள்விகள் கேட்கப்படும்
ஆம் இல்லையென்றே
அரற்ற வேண்டும் – இல்லையெனில்
புழலுக்கு செல்ல வேண்டும்

எதிர்கேள்வி துலாக்கோலை
எதிர்பதாகும்  - துல்லியமானதை
தென்றலும் தீண்டலாகாது – ஏனெனில்
புயலை உருவாக்கலாகாது

ஒய்யாரக் கொண்டையில்
ஊழலை மறைக்க
ஊரெல்லாம் நாறுதே
“உத்தமன்” வில்லனானே

மூப்பெய்தியது துலாக்கோலென
மரியதையாய் அனுப்புவோமா?
முச்சந்தியில் நிறுத்தி
முத்தான தீர்பளிப்போமா



இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...