புதன், ஏப்ரல் 17

தேர்தல் 2024










நாட்டின் வளங்களை
நாலு பேருக்கு விற்க
நாடி வருகிறார்கள்
நாள் 19 ஏப்ரல் 2024

பத்தல பத்தல
பத்தாண்டுகள் என்றே
பகற்கனவோடு வருபவனை
பாராள அனுமதிப்பாயா?

அக்மார்க் இந்துக்கள்
ஆட்சிக் கட்டிலை
அயோத்தி இராமனிடம் கேட்காது
அர்பன் நக்சல்களிடம் கேட்பதேன்

பொற்கால ஆட்சியாளர்கள்
பொய்மானைத் தேடி
சரயு நதிக்கரைத் துறந்து
இராவண தேசம் வருவதேன்

கோயபல்ஸ் கொள்கை
பொய்களை உண்மையாக்குவதில்லை
உண்மையாய் இருக்குமோ என
உன் உள்ளுணர்வைத் தூண்டுவது

வாக்குறுதிகள்
வெற்றுக் கூச்சல்கள்
நிறைவேற்ற அவர்கள்
மக்களில் ஒருவரல்ல

மாட்சிமை தங்கிய
மன்னராய் வாழ்பவர்கள்
முடிச் சூட்டியப் பின்
மாக்களாய் உனை நடத்துபவர்கள்

பக்தியில் பசுவைத் தொழவும்
புத்தியில் அக்லக்கைக் கொல்லவும்
சிந்தனை உனக்கிருந்தால்
நந்தனை எரித்த வாரிசு நீயே

சனநாயகத் தூண்கள்
வீழ்ந்து கிடப்பதை
எழுப்புமோ உன்வாக்கு
சவக்குழியைதான் ஆழமாக்கும்

நோட்டாவைப் பலப்படுத்திட
நோஞ்சான் சனநாயகம்
விரீட்டெழுந்து
விடியலைத் தருமா?

பதிவாகாத வாக்கும்
பயனற்ற நோட்டாவும்
பெரும்பான்மை என்றானால்
பாசிசமே வெல்லும்

மின்சார விளக்கணைத்து
மெழுவர்த்தி ஏற்றியவர்களே
கைத்தட்டி கொரானாவை
கொல்ல வழிகாட்டியவர்களிடம்

மொழியொரு கருவி
முழக்கமிடும் இனத்தின் அடையாளம்
ஓட்டுக்கு முனகும் உனக்கோ
அவ்வுணர்வு புரியாதெனச் சொல்

வாங்கும் வரிகளை
வாரிவழங்கும் வள்ளலாய்
வடிவமைப்பட்ட கதைகள்
வந்த பெருமழையில் கரைந்தன

ஊழலற்ற உத்தமர் பட்டம்
உச்சநீதி மன்றம் உத்தரவிட
பாரத வங்கி
பல்லிளித்து வழங்கியது

கட்சிகளை உடைத்து
ஆட்சி அமைப்பது
அவர்களுக்கு அத்துபடியான பின்
ஐந்தாண்டு தேர்தல் ஏன்

கட்டளைகளுக்கு பணியாதவர்களை
காராகிரகத்தில் அடைக்க
பூஜ்ய மதிப்பெண்கள்
ராஜ்யத்தோடு ராசியாகி விட்டன

ஓய்வுப் பெற்ற நீதியரசர்கள்
உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கிறார்கள்
எதற்கென்று
யாருக்கும் தெரியவில்லை

ஈ.டி, ஐ.டி., சி.பி.ஐ
நிர்வாகங்கள்
நேர்மை துறந்ததை
நெஞ்சுயுர்த்தி சொல்கிறது

ஏறிய விலைவாசியை
தேடும் கருப்புப் பணத்தில்
வேலைவாய்ப்பை உருவாக்க
தேனாறும் பாலாறும் ஓடுமா

செய்தி ஊடகங்கள்
சப்பாணி ஆனதை
அண்ணாமலை அறிவிக்க
சமூக ஊடகங்கள்தானே மறுக்கிறது

இவையெல்லாம் அறிந்ததால்
“ஏப்ரல்”, “மே” யில்
ஏமாறாதே என்கிறேன்
ஏற்பவர் ஏற்க!! ஏற்காதவர்??!!!!

திங்கள், ஏப்ரல் 1

டி.எம். கிருஷ்ணா

 




கர்நாடக சங்கீதம்
கருவறை பொக்கிஷமா
காப்பாற்ற வேண்டுமென
கதறுதே ஓரு கூட்டம்

ரஞ்சினியும் சுதாக்களும்
ராக ஆலாபனையில்
ரசாபாசம் உள்ளதென்றா
ரசிகையாய் ஆட்சேபிக்கின்றனர்

சுருதிபேதம் உள்ளதாய்
துஷ்யந் ஸ்ரீதர் உரைப்பது
சுத்த கர்நாடகமாய் இல்லாது
சிந்தித்து செயல் படுவதா?

தாளகதி மாறியதோ
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணம் வீசுமென்று
மேடையில் கலகக்குரலோ

இராமா ஏழுந்திருவென
அட்சர சுத்தமாய்
அவாள் மட்டும்தான்
ஆலாபிக்க முடியுமா

இசை மக்களுக்கா
இல்லை கலைக்கா
கோபுர வாதிகளுக்கா
கோபுரத்தின் உள்ளிருப்பவருக்கா

இராமனை பாட வேண்டியவன்
இராமசாமியை பாடியதாலும்
சலாத்துல்லா சலாமுல்லா என்று
இசையை இணைப்பதாலும்

சங்கீத கலாநிதி
அகௌரவம் ஆனது
சங்கீத வித்வத் சபை
சந்திக்கு இழுக்கப்பட்டது

சந்தைக்காக
அமெரிக்கா, பிரான்ஸில்
அரங்கேற்றம் செய்பவர்கள்
காசுக்குதானே விற்கிறார்கள்

கலை
வர்க்க பேதமற்றது
கடைக்கோடி ரசிகனின்
ரசனையை உயர்த்துவதும் அதுவே

பண்ணைபுரத்து ராசைய்யா
பாடியது மக்களிசைதானே
மாநிலமல்ல மண்ணுலகமெல்லாம்
மருகி உருகுதுதானே

உயர்குடி இசையை
ஊருசனம் ரசிக்கல
உன்சாதி மட்டுமே
ஒய்யாரமா நினைக்குது

ஒப்பாரி வைக்கும்
ஒன்றுமில்லா இசையை
ஒருவருக்கும் ஓதாது
ஒளித்து வைப்பதால் உயர்ந்ததா?

பொதுவெளியில்
பொற்காசு கிடைக்குமென்று
பிதற்றலை பரப்புவர்கள்
புனிதமென்று கூவுவதேன்

புறகணிப்பதால்
புனிதம் மீட்கப்படுமோ
புறகாரணிகள் வேறுவேறு
புறந்தள்ளுங்கள் இவர்களை

கற்றலுக்கு உரியவை
கலையும் அதன் நேர்த்தியும்
ஏகலைவன்
எப்போதும் கற்பவனே

ஏனோ
வர்ண பேதத்தை
வாழ்வில் நுழைத்து
வாராது காம்போதி என்றதை

ஆமோதிக்காது - கலை
ஆருக்கும் உரியது
அனைவரும் கற்கலாம்
அது கர்நாடகமாயிருந்தாலும்

இனப் படுகொலை
ஈவெரா வேண்டியதாய்
இட்டுக் கட்டும் காதைகள்
ஏராளமாய் கடந்தும்

பெண்ணடிமை விலக
போராடியப் பெரியாரை
பெண்ணே இழித்துரைப்பது
பேதமை எனினும் பொய்கள்தானே

ஆண்டைகளின் அதிகாரம்
ஆங்கு முடிவுற்றதால்
அவதூறுகளை
அள்ளித்தெளிக்கின்றனர்

அசாதாரணத் திறமையிருந்தும்
அங்கிகாரம் வேண்டி
அவாளாக வேடமேற்றதாய்…….
அதுவொரு விமர்சனம்

கொட்டு அடிக்க
கோமாதா தோல்
அக்லக்கை கொல்ல
கோமாதா புனிதமாகிறது

இந்த அரசியலை
இதுவரை பேசாதவர்கள்
சிந்திக்கச் சொன்னவர் என்றவுடன்
சினம் கொள்கின்றனர்

கலைஞர்களுக்குள்- இது
காலை வாரும் அரசியல்லல்ல
கற்றல் பரவலாக்குவதை
காயடிக்கும் அரசியல்

அ. வேல்முருகன்

 


புதன், மார்ச் 20

மேல்பாதி திரௌபதி




ஆறுகால ஆராதனையின்றி
அம்மன் அவதியுறுவதாய்
ஆங்கொரு புலம்பல்

அரவமில்லாது
ஆலயத்தை திறந்து
ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும்

பக்த கோடிகள்
பக்கம் வந்திடாது
பார்த்துக் கொள்ளவும்

காவல் தெய்வத்திற்கு
கட்டளையல்ல
காவலர்களுக்கு

மேல்பாதி திரௌபதி
நீதியரசருக்கு கட்டுப்பட்டு
சாதிசனத்தைக் கைவிட்டுவிட்டாள்

சூதாட்டத்தில்
சுற்றமும் நாடுமிழந்தாள்
பாண்டவரின் திரௌபதி

சாதிய வெறியட்டாத்தில்
சாத்தியக் கதவுகளைத் திறக்க
நீதிமன்றத்தையே நாடுகிறாள்

தீர்ப்பென்னவோ
வனவாசமாய்தான் இருக்கிறது
எக்காலத் திரௌபதிக்கும்

திறந்தவுடன் மூடி – யாரைத்
திருப்தி படுத்துகிறார்
நீதியரசர்

மாவட்ட ஆட்சியருக்கும்
காவல் கண்காணிப்பாளருக்கும்
தேர்தல் கவலைகள்

ஏற்றத் தாழ்வுகளை
மாற்ற முடியாத தெய்வங்கள்
நீதிமன்றத்தில் ஒளிந்து கொண்டு

தனக்கு பூசைகள் வேண்டுகின்றன
தங்களின் சமுகநீதியை 
தரமுயர்த்துவார்களா பக்தகோடிகள்?!

வெள்ளி, மார்ச் 1

மன்னிப்பு





மாறிடுமோ நடந்தைவைகள்
மன்னிப்பதால்
மறந்திடுவோமா

கொட்டிய வார்த்தைகள்
தேளின் வலியாக - சுண்ணாம்பு
விஷத்தை முறிக்குமோ

காயமோ வடுக்களோ
கண்களில் படும்போது
வலிகள் வந்துதான் போகும்

மனதும் மௌனமாகும்
கடந்து செல்லக்
கடினமாகும்

பகை வளர்த்து
பழியோடு வாழலாமா?
பண்பல்லவென மாறலாமா?

மறப்போம் மன்னிப்போம்
மனதிற்கல்ல
மாறாதத் தேவைக்கு

நெருப்பு

 


 

.

 





 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்

தீயாண்டுப் பெற்றாள் இவள்

                                       குறள் 1104


தகதகவெனத் தகிக்கறாள்
தத்தையைப் பிரியும் பொழுதில்
அகலாது அருகிருக்க
அருஞ்சுனைக் குளிரைத் தருகிறாள்
தகனத் தட்பத்
தலைகீழ் நுட்ப மொன்று
இகத்தில் இவளுக்கு
இலகுவாய் வாய்த்த தெப்படி?

காதல் சின்னம்




ஷாஜகான் கட்டியக்
கல்லறையா
சகலரும் எண்ணும்
இதய வடிவமா?

கட்டி அணைத்து
கனன்ற வெப்பத்தை
கட்டிலில் தணித்து
தொட்டிலில் தாலாட்டுவதா?

கணையாழி அணிவித்து
காதல் சின்னமென
கல்லறை வரை
கழற்றாமல் காப்பதா?

ஒற்றைப் பூவை
ஒய்யராமாய் சூட்டி
ஒப்படைத்தேன் எனையென்று
ஒன்று படுதலோ?

எக்காலமும் நினைவிலிருக்க
எதிர்பாரா முத்தமொன்றை
ஏந்திழைக்கு அளிக்க
எண்யெண்ணி மகிழ்வதா?

அல்ல அல்ல
அர்பணிப்பாய்
ஆயுள் முழுவதும்
அவளோடு பயணிப்பது

மதம்






அடிமைகளை
அடிப்படையாகக் கொண்டு
அமைவது

பிரித்தாளும்
பிரித்தானிய கொள்கைகளை
பிரதானமாய் கொண்டது

மிட்டா மிராசுகள்
மிலேச்சர்களை
மிருகங்களாய் நடத்துவது

மானுட சமூகத்தை
நால் வருணமாய்
சாதிகளாய் பிரிப்பது

குலதெய்வங்களுக்கு
வாழ்வளித்து
குடிப்பிறப்பைக் காப்பது

நீதி
தராதரத்திற்கு ஏற்ப
தராசை ஏற்றி யிறக்குவது

வேதங்கள், ஸ்மிருதிகள்
புராணங்கள் உனக்கானதென்று
உடனிருந்து வேரறுப்பது

வராக அவதாரமென
வழங்கியக் கதைகள் – உனை
பன்றியாய் நடத்தவே

திருச்சபை
400 ஆண்டுகள் கழித்து
மன்னிப்பு கோருவது

நீ இன்னும் அடிமைதானென
அக்லக்கை
கொல்ல வைப்பது

ஆண்ட பரம்பரையென
ஆண்டாண்டு கால
அடிமைதனை உறுதிப்படுத்துவது

பழைய வழக்கமென்றும்
மரபென்றும் – கண்மூடி
பின்பற்ற வைப்பது

குடுமி வைத்தவர்கள்
குலத் தொழிலை விடுத்து – அயலானிடம்
குடியுரிமைக் கோருவது

பஞ்சம சூத்திரனுக்கு
படிப்பு வாராதென
பரப்புரைச் செய்வது

அழுக்கானவர்கள்
அறிவற்றவர்கள் சூத்திரனென்றே
அவாள்களை உயர்ந்தவனாக்குவது

பைபிளையும் குரானையும்
படிக்க கொடுக்கையில் – வேதங்கள்
காதில் ஈயத்தை ஊற்றுவது

கூட்டத்தின் பெயர்களும்
குலத்தெய்வங்களும் - குறியீடு
எச்சாதி என்பதற்கு

வேதத்தையும், வேள்வியையும்
தேவ பாஷையையும் மறந்தே
கைபர் போலனைக் கடக்கிறார்கள்

நீயோ ஹோமங்களை வளர்த்து
வேதவிற்பன்னர்களின் வாழ்வை
நீட்டிக்கிறாய்

மானுடச் சமூகமென்று
பாரதி தாசனைப் பின்பற்று
மரணிக்கட்டும் சாதியும் மதங்களும்

சனி, பிப்ரவரி 10

வலி

      




பார்வையால் வீழ்த்தி 
வார்தைகளால் வாட்டிடும்
ஏரார்ந்த கன்னியவளை
எங்ஙனம் பகைத்திடுவேன்

அத்தனை ஆசை
அவளிடம் கொண்டதால்
சித்திரத்தை பழிக்காது
சிரித்துச் செல்வேன்

ஊடல் கொண்டதில்
ஓர் இடைவெளி
வாடல் தொடராதிருக்க
ஐக்கியமாவதே வழி

அன்பைச் சோதிக்க
அவள் உதிர்ப்பவை
அறமற்றது என்பதால்
அமைதி காத்திடுவேன்

இடைவெளி காலத்தில்
ஏங்கிய நினைவுகளால்
கடைச்சங்கப் புலவன்
கன்னியிடம் ஏதோ உரைக்க

உண்மையா பொய்யா
உதடுகள் படபடக்க
ஓராயிரமுறை புலம்பியவளிடம்
ஒன்றுமில்லையென நகர்தேன்

வஞ்சியை வஞ்சிக்கல்ல
வலிதனை உணர்த்திட
வாடியவளுக்காக வாடினேன்
வாடாதிருக்க பாடினேன்.

புதன், நவம்பர் 15

மரணமா மதங்களுக்கு





நிலையானது ஏதுமில்லை
ஆன்மா இல்லவே இல்லை
துன்பம் உண்டு

தோன்றியது மாறும்/மறையும்
எனக்கு மீறிய சக்தி
எதுவெனக் கேள்

ஆம். உண்மையை
உரக்கச் சொன்னால்
மார்க்கம் மரணித்துப் போகும்

ஆசையே துன்பங்களின்
அடிப்படைக் காரணம்
அய்யோ வேண்டாம் பௌத்தம்

அனைவரும் சமம்
ஆன்மாவே கடவுள், பற்றற்றிரு,
என்றதனால் துரத்தினர் சமணத்தை

கற்பித்தவன் மக்கலி கோசாலர்
கல்வெட்டு ஆதாரமில்லை என்பதால்
கடைபிடிக்கவில்லை ஆசிவகத்தை

கடமையைச் செய்
பலனை எதிர் பாராதே என்றாலும்
கடவுள் அருளியதால் கடைபிடிக்கறோம்

என்னை நம்பு
நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை
என்னையன்றி ஓரணுவும் அசையாது

நால் வருணத்தை படைக்க
நான்முகன்
மூவுலகை காத்திட விஷ்ணு

படைக்கும் மந்திரத்தை படைத்தவன்
அழிக்கும் தொழிலின் நாயகன்
ஆனந்த தாண்டவமிடுபவன்

அண்டச் சராச்சரங்களை
ஆதியும் அந்தமமும் இல்லாதவன்
காத்திடும் பலகதைகள்

இந்துவாக ஒருங்கிணைந்தனர்
அதர்மம் தலைத்தூக்க
அவன் வருவானென காத்திருக்கிறார்கள்

பாவத்தின் சம்பளம் மரணம்
பாவிகளை மிரட்டினாலும்
பாவ மன்னிப்பு உண்டு

பரிசுத்த ஆவியால்
பிறப்பைக் கண்டவர்
மூன்றாம்நாள் உயிர்த்தெழுந்தார்

பத்துக் கட்டளைகளை மறந்தாலும்
பாவிகள் இரட்சிக்கப்படுவார்கள்
பக்தியோடு திருச்சபைக்கு வந்தால்

வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே
என்னிடம் வாருங்கள்
இளைப்பாறுதல் தருகிறேன்

வணக்கத்திற்குரியவன்
அல்லாவை தவிர
வேறு யாருமில்லை

அல்லா அனைத்தையும்
கவனித்துக் கொண்டிருக்கிறான்
தீர்ப்பு வழங்க வருவான்

தொழுகையும், நோன்பும்
மற்ற நற்காரியங்கள்
அல்லாஹ்வுக்கு விருப்பமானவை

துன்பத்தில் உழலும் போது
தேடி அழைப்பாயெனில்
வழி காட்டுவர்

தீய கருமங்கள்
தேவையைப் பொருத்தே
நிகழ்கிறது

எனவே தண்டனைகள்
இவ்வுலகில் கிடைத்தாலும்
மேலுலகில் மன்னிக்கப்படுகிறது
அனைத்தும் நானே
நம்பிக்கையோடு வா
நற்கதி அளிக்கிறேன்

நால்வகை மதங்கள்
நம்பிக்கையை விதைப்பதால்
நீண்டு வளர்கிறது மதம்

என்னையே கடவுளாய் ஏற்பாய்
இருக்கும் கிளைகளெல்லாம்
போலி என்றே உணருங்கள்

ஏமாறும் கூட்டம்
எண்ணிகையில்
பெருகிக் கொண்டிருக்கிறது

காசு உள்ளவன்
கடை திறக்கிறான்
கல்லா நிரப்ப மட்டுமல்ல

அதிகார வர்கமாய்
அய்யோ பாவங்களை
ஆட்டிப் படைக்க

ஆசையைத் துறப்பதும்
அவன் எனக்கு சமமா என்பதும்
அடிப்படையில் வேறு வேறு

ஆக
ஆசிவகம், பௌத்தம்
சமணம் சாமதியானது.





பாலஸ்தீனம் இஸ்ரேலாகிய கதை


















ஆபிரகாமின் புதல்வர்கள்
இஸ்ரவேலரின் குழந்தைகள்
கடவுளை ஒளியாய் கண்டவர்கள்
யூதர்களாம்

யூதனாய் பிறந்தவன்
இறைதூதன் என்றே வந்தான்
இறைவனாக்கப் பட்டான்
கிருத்துவனாக்கப்பட்டான்

அந்த மண்ணிலிருந்தே
அவதரித்த முகமது நபி
தானும் இறைதூதனென்றான்
அல்லாவே கடவுளென்றான்

யெருசலேம் என்பது
அமைதியின் உறைவிடமாம்
மும்மதத்திற்கும்
புனித இடமாம்

கிமு-வில்
கிரேக்கத்தின் அடிமையாய்
கிபி-யில்
இட்லரின் இரையாய் யூதர்கள்

1948 வரை
இஸ்ரேல் எனும் நாடு
உலக வரைபடத்தில்
ஒரு புள்ளியாகவும் இல்லை

நாடு கட்ட யூதர்கள்
பணம் கொடுத்து
பாலஸ்தீனர்களின் பாலையை
பட்டா நிலமாக்கினர்

பத்தாது என முடிவெடுத்து
படைத் திரட்டி ஆக்கிரமித்தனர்
அமெரிக்காவும் இங்கிலாந்தும்
ஆமோதித்தது

இஸ்ரவேலரின் பிள்ளைகள்
பத்துக் கட்டளைகளை
பரிதவிக்க விட்டு
இஸ்ரேலை உருவாக்கினர்

மேற்கு முனையும்
காசா துண்டும்
பாலஸ்தீனர்களின்
பற்றாக்குறை தேசமானது

ஐக்கிய நாடுகள்
ஆட்டத்தை வேடிக்க பார்க்குது
அரபு நாடுகள்
அரற்றிக் கொள்ளுது

பாலஸ்தீனியர்கள்
அவர்கள் மண்ணில்
அந்நியப் பட்டு நிற்கிறார்கள்
அனுதாபங்கள் வேண்டாம்

அகிலத்தின்
அறிவுஜீவி என்று
அரற்றிக் கொள்ளும் யூதன்
மனிதனைக் கொல்கிறான்

பணம் கொடுத்து வாங்கியவன்
பகட்டாய் வாழ்வதும்
பணத்தால் ஏமாந்தவன்
பரதேசியாய் வாழ்வதும்

மதங்கள் போதித்தவையா
மானுடம் மறந்தவையா
மண்ணின் மைந்தர்கள்
மனிதனாய் இருப்பதில்லையா?

பரிசுத்த வேதகாமம்
பாவிகளை உருவாக்குகிறது
தோராவும் குரானும்
குறுக்கே வாராது நிற்கிறது

பாவ மன்னிப்பு
பரலோகத்தில்
பார்த்துக் கொள்ளலாமென
யூதர்கள் யோசித்தார்களா

குழந்தைகளையும்
மருத்துவ மனையையும்
குறிப்பிட்டுத் தாக்கும்
இலக்கானதேன்?

நாடிழந்து
நட்டநடு காட்டில்
கூடாரத்தில் வாழும்
கற்காலச் சூழலேன்

அகதியாய் வெளியேறவும்
ஆங்கே வழியில்லை
எல்லைகளை மூடி
அப்பாவிகளை முடுக்குவதேன்

மானுடமென்பது
மனிதனை மனிதன் நேசிப்பது
மதங்கள் என்றும்
மனிதனை உலகில் பிரிப்பது

மூன்றடி மண் கேட்ட
புராணக் கதை தெரியுமா
இன்று இஸ்ரேல்
ஏவுகணைகளால் கேட்கிறது

ஞாயிறு, நவம்பர் 5

வாழத்தானே இணைந்தனர்

 



கண்கள் கனிய
காதல் அரும்பியது
கைப் பிடிக்க
கழுத்து அறுப்பட்டது

விரும்பிய உள்ளங்கள்
வீம்பான பெற்றோர்கள்
விலையானது உயிர்கள்
விளையுமோ அன்பு

விளைந்த அன்பை
வேரறுக்க நினைத்தது
வேண்டாத சாதியில்லை
வீரதீரமிக்க ஆணாதிக்கமே

வாழத்தானே பெற்றாய்
வாழத்தானே இணைந்தனர்
வழியில் வந்ததெது
வரட்டு கௌரவமா?

சிந்தனைகள் மாறிட
சிந்திய ரத்தங்கள்
சீராக்குமா சமூகத்தை
சீழ்பிடித்து மாளுமா?

சாதியும் கடவுளும்
சரிசமமா யில்லை
சக்ரவர்த்தியும் சமானியனும்
சம்பந்தி யாகுவதில்லை

சந்ததி தழைக்க
சரித்திரம் படைக்க
சமத்துவம் கொடாது
சாக்காட்டைத் தந்தானே

உலக இயக்கத்தின்
உன்னதம் காதலே
உலகறிவற்றவனே
உயிரைக் கொய்தானே

உயிர்கள் ஒன்றென
உணர்ந்திட முடியாதோ
உறவைக் கொண்டாட
உன்மதம் தடுக்குதோ

ஐந்தறிவும்
அன்போடு வாழுதே– உன்
அகங்காரம்
அக்காதலைக் கொல்லுதே

ஊரும் உறவும்
உருகி அழுகிறது
உருவ மழிக்க
ஊழென இருப்போமா

முயன்ற உள்ளங்களை
முகிழ விடாது
முக்கரம் கொன்றாலும்
மூளுமே காதல்தீ

செவ்வாய், அக்டோபர் 24

நெஞ்சமும், அவளும்

 




அறிவாய் தானே

அடைப்பட்டு கிடப்பதை
சிறிதும் கவலை
சிறைமீட்க இல்லையோ
முறிந்தது அன்பென
முகமெதிர் சொல்லி
குறிப்பை உணர்த்த
கூர்மதி நினைக்க

அன்பே என்று
அருகில் வந்தான்
இன்முகம் கண்டு
எனையே மறந்தேன்
புன்னை நிழலில்
பொழுதும் போனது
முன்னை நினைத்தது
முற்றும் மறந்தது

காலங் கடத்தும்
கள்வனைக் கண்டிக்க
ஏலாதோ நெஞ்சே
ஏசாமல் விட்டாய்
கோல முகத்தினை
கோணலாக்க மறந்தாய்
ஆலகாலச் சொல்மறந்து
அமுதமொழி மொழிந்தாய்

அத்தான் அருகிருக்க
அண்டம் சுழலுதே
பித்தான நெஞ்சமும்
பின்னாலே போகுதே
முத்தான சொல்லில்
மூச்சை நிறுத்தினானே
நித்தியம் இதுவென
நினைக்கயில் பிரிந்தானே


செவ்வாய், அக்டோபர் 17

காமம்





கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்

விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது

இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்

நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல

விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே

புதன், அக்டோபர் 11

பேசிப் பேசிப் பிரிவினையா?




பேசிப் பேசிப்
பேழையில் அமுதம் பருக
யாசிக்கு மிவனை
யாத்திரையில் தொலைத்த தேனோ
ஏசி உன்னை
என்குற்ற மில்லை என்றேனா
ராசி யாகி
ரட்சித்துக் கொள்ளடி என்றேனே


வந்து வந்து
வதைக்கும் எண்ண அலைகள்
பந்தம் தந்து
பலரும் வாழ்த்திய கதைகள்
சந்த நயம்
சரிசெய்ய காலம் அளித்தால்
இந்த உலகம்
இனியது என்று கதைப்பேனோ


உனது முடிவுகள்
உந்தன் தேவையின் பொருட்டு
எனது அன்பும்
எந்தன் தேவியின் பொருட்டு
மனதின் காயமோ
மாறுபடும் உறவின் பொருட்டு
வினாவின் நியாயமோ
விலகியே நிற்கும் இருட்டு


தேவியின் தேவைகள்
தேடிட கிடைத்திட வேண்டும்
புவியில் உள்ளவரை
பூரணநலத் தோடிருக்க வேண்டும்
குவியும் புகழ்தனில்
குதுகலித் திருக்க வேண்டும்
துளியும் என்நினைவு 
துளிர்விடா திருக்க வேண்டும்

செவ்வாய், அக்டோபர் 3

காதற்கணை

 



குறள் 1100

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

 



கனியக் கனியப் பேச
காதல் வளரா
தனித்தச் சொல்மொழிந் தாலும்
தவத்தில் கிட்டா
இனிய கண்க ளிரண்டு
இசைக்கும் மொழியில்
புனிதக் காதல் மலருமே
புவன மெங்குமே


வனைந்த சொற்கள் பலவால்
வாராக் காதல்
சுனைபோல் சுரக்கும் கண்ணில்
சுழலும் பாரீர்
வினையாய் மாறிச் சொற்கள்
விளைவைச் சுருக்குமே
நினைத்த வுடனெழும் காதலில்
நீள்விழி இணையுமே

 

ன்பன்
அ. வேல்முருகன்

 

திங்கள், அக்டோபர் 2

ஐம்புலனின்பம்



அத்தனை இன்பமும்
அவனுட னிருக்க
நித்தமும் கிடைக்க
நிச்சய மேதுமில்லை
வித்தைக ளனைத்தும்
விளைந்திடும் பருவத்தில்
அத்துபடி யாகிட
அனைத்திலும் இன்பமே

ஐம்புல னின்பம்
அவனருகி லிருக்க
இம்மை யில்லல்ல
இளமையில் காணுவதே
கம்பன் வருணித்ததை
கண்களால் காண்பதும்
எம்மான் பேசிட
என்றென்றும் கேட்பதும்

வகைவகையா சமைத்து
வாலிபத்தில் உண்பதும்
திகைக்கும் வண்ணம்
திணரும் நறுமணத்தை
வகைக்கொன்றா வாழ்வில்
வரிசையாய் நுகர்வதும்
உவகை கொள்ளின்பம்
உடலுக்கு வேண்டுவதும்

இளமைப் பருவத்தின்
இயல்பான தேவைகள்
களவு மணத்தில்
களிப்புற்று வாழ்ந்ததை
தளர்ந்த பருவத்தில்
தள்ளி வைத்திடலாம்
வளர்ந்த உள்ளங்களே
வாழ்வை ரசியுங்கள்



செவ்வாய், ஆகஸ்ட் 15

கண்களின் ஆற்றல்




 
குறள் 1091

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து


அஞ்சனம் தீட்டிய
அவளின் கண்கள்
கொஞ்சி அழைத்து
குற்று யிராக்கியது
தஞ்ச மென்றேன்
தன்நிலவாய் குளிர்ந்த
வஞ்சியின் கண்கள்
வைத்தியம் பார்த்தது

பாவல னாகி
பல்லக்கில் போவதும்
கோவல னாகி
கொலைகளம் செல்வதும்
ஆவலர் அவரவர்
அன்பின் ஆற்றலே
ஆவதும் அழிப்பதும்
அழகிய கண்களே 


ஞாயிறு, மார்ச் 5

அகலிகை




அகலிகை, சீதை, திரௌபதி,
தாரை, மண்டோதரி - பஞ்ச
கன்னியரென மகாபாரதம் உரைக்க

அவர்களில் அகலிகை
கௌதம ரிஷியின்
மனைக் கிழத்தி

வால்மீகி, கம்பன், துளசி
எழுத்தச்சன், தொரவே
இராமாயணங்களின் அகலிகை

பம்ம, பௌத்த
ஜைன இராமாயணங்களில்
காணாதுப் போகிறாள்

இந்திரனின் இச்சையால்
இராமனின் கால்பட்டு
சாப விமோசனதிற்குக் காத்திருந்தவள்

பாற்கடலைக் கடையத்
தோன்றியக் காமதேனுவை
மகரிஷிகள் ஏற்றனர்

அடுத்து தோன்றியது
வெண்ணிறக் குதிரை
மாவலி மன்னன் கொண்டான்

வெள்ளை யானையையும்
பாரிஜாத மரத்தையும்
தேவேந்திரன் பெற்றான்

அதன் பிறகு
அப்ஸரஸ் புடைச்சூழ
மாகாலட்சுமி தோன்றினாள்

அவளையும் இரத்தின மாலையையும்
ஸ்ரீமன் நாராயணன்
ஏற்றுக் கொண்டார்

மயக்கும் மதுவின் தலைவியை
அரியின் ஆசிர்வாதத்தோடு
அசுரர்கள் கொண்டனர்

அதற்குப் பிறகும்
அவர்கள் கடைய
ஆங்கு தோன்றியது

பேரழகின் உச்சமாய்
வானில் ஒளிரும் நட்சத்திரமாய்
அகலிகைத் தோன்றினாள்

அழகெனில்
அடிதடியும் உண்டல்லா
அங்ஙனமே ஆனது

இந்திரன் இச்சைக் கெண்டான்
கௌதமன் கச்சைக் கட்டினான்
போட்டியில் முடிவென்றான் பிரம்மன்

தேவர்களுக் கிடையேயான
தேடல் போட்டியன்றோ
தேடினர் தேடினர்

இருபக்க தலைக் கொண்ட
கோமளத்தைக் காண்பவருக்கு
பாற்கடல் பெற்றெடுத்த பத்தினி

ரிஷியோ தியானத்தில்
இந்திரனோ உலகப் பயணம்
நாரதர் நன்மை பயத்தார்

கோ சாலைக்கு கூட்டிச் சென்றார்
ஆங்கொரு கன்றீனும் பசுவிற்கு
கன்றின் தலை முதலில் வர

நாரதர் ரிஷியை
அப்பசுவை மும்முறை வலம்வர
பணிக்கிறார்

அங்ஙனம் வலம்வருவது
உலகைச் சுற்றுவதற்கு சமமென
சாட்சி தானென்கிறான் நாரதன்

கைப்பிடித்தான் கௌதமன்
காமத்தீ அடங்காத இந்திரன்
காத்திருந்தான்

அத்தாட்சியாய் சதானந்தன்
அவர்களின் மகவாய்
பிறக்கிறான்

மோகத்தில் வீழ்ந்தவனுக்கு
தாகம் தீறுமட்டும்
அச்சமும் நாணமேது

அவரவர் கற்பனைத் திரனுக்றேப்ப
அகலிகை அலைகழிக்கப் பட்டாள்
மகாபாரத்திலும் மானபங்கப் பட்டாள்

இரங்கநாத, பாஸ்கர, வங்காளி
இராமாயணங்களில் இந்திரன் எனவறிந்தே
இசைந்தாள் எனக் கதைச் செல்கிறது

தேவேந்திரன் துப்பறிவாளனாகி
கௌதமனின் செயல்களை
நோட்டமிடுகிறான்

நாளொன்றைத் தேர்ந்தேடுத்து
கௌசிகனாய் உருமாறி
கருக்கலை விரைவாக்கினான்

மாசு மருவற்றப் பேரழகை
ஆசையாய் ஆராதிக்க
ஒருசாமம் போதுமென

சேவலாய் குரலெழுப்ப
கௌதமன் வெளியேற
ஆவலாய் காத்திருந்தான்

இந்திரன் கௌதமனாய்
அகலிகையை அணைத்தான்
கற்புக்கரசி ஏமாந்தாள்

மாயக் கருக்கலென
ஆயத் தெரியாதக் கௌசிகன்
ஆசிரமம் திரும்பினான்

கண்ட கோலத்தினால்
மூண்ட கோபத்தில்
கல்லாக சபித்தான்

உன்னுருவத்தில் வந்ததனால்
உடனிருக்க அனுமதித்தேன்
என்றாள் அகலிகை

பொல்லாப் பழி விலக
இராமனின் கால்பட
விமோசனமென விலக்களித்தான்

இந்திரா உன்னாசை அல்குலென்பதால்
உடலெங்கும் ஆயிரம் பெறுவாயென
சாபமிட்டான் கௌதமன்

விமோசனம் வேண்டினர் இந்திரனுக்கு
ஆயிரம் கண்ணாக
மாற்றம் பெற்றது சாபம்

வால்மீகி கம்பனென
வரிசையாய் அகலிகையை
வதை செய்த தொன்மத்தில்

வண்ணக் கற்பனைகள்
எண்ணற்றக் கதைகளோடு
கற்புக்கு காரணம் கற்பிக்கிறது

தொன்மம் என்பதால்
தோப்புக் கரணம் போடாதே
எள்ளளவும் ஏற்காதே

காமத்தில் கல்லாயிறு
காலகாலமாய் பெண்ணிற்கு
போதிப்பது ஆண்தானே

மானுடத்தின் கற்பு
மதம் கொண்டவர்களுகில்லை
மானினத்திற்கு மட்டுமே

சுயவரம்
பெண்ணின் விடுதலையா
ஆணின் அடக்குமுறையா

வீரதீர மென்பது
வில்லை உடைப்பதா
எல்லை யறிந்து நடப்பதா

கல்லாமை என்பது
கல் பெண்ணாக - இராமனின்
கால்பட வேண்டுமென்பதா

சீதையின் கற்பைச் சோதிக்க
தீப்புக வைத்தவனா
தீர்பெழுதச் சிறந்தவன்

மானுடத் தோற்றமென்பது
மையலில் தோன்றுவதா
பாற்கடலில் எழுவதா?

தவ வலிமையால்
புவனம் அறியவில்லை எனில்
அவணி ஏது

மலர் நாடும் வண்டாய்
சிலர் மட்டு மிருப்பது
மகரந்தச் சேர்க்கைக்கா

தேனருந்தும் வண்டு
தெவிட்டிட
தேடும் மலர்கள் இரைதானே

இருதலைக் கோமளம்
இகத்தில் இல்லாத போது
இருப்பதாய் பாவித்து

அஞ்ஞான உலகமிதை
அற்புதமென வடித்தே
அகிலத்தை ஏமாற்றுவது

மெய்ஞானமென்று
ஐந்தறிவாய் ஏற்காதே
ஐயுறவு கொள்


திங்கள், பிப்ரவரி 27

அருகிரு அன்பே










கடுப்பில் ஏனடி
கண்ணனை வாட்டுற
வடுக்களாய் வார்த்தையை
வண்டியாய் கொட்டுற
தடுத்தே அன்பின்
தரத்தைச சோதிக்கற
அடுகள மல்லவே
அன்புனை எதிர்த்திட

ஒருநாள் இருநாள்
உனையான் மறந்தேனா
விரும்பும் மனதிற்கு
விடுமுறை அளித்தேனா
அரும்பும் நினைவால்
அத்தானை வெறுத்தாயா
பொருமிக் களைத்திடாதே
பொல்லாங்கும் சொல்லாதே

பொருள்தேடிச் சென்றேன்
பொஞ்சாதி உனக்காக
இருள்விலக்க வந்தேன்
இரும்பாய் மாறாதே
அருள்வேண்டி நின்றேன்
அர்ச்சனைகள் செய்யாதே
மருள்கொண்டும் விலகாதே
மச்சான் மடலேறுவேன்

உருவத்தை பார்த்திட
உன்தாபம் அடங்குமோ
குரலதைக் கேட்டிட
குதுகலம் பிறக்குமா
பருவத்தில் பசலை
பாவையை வாட்டுமோ
சரணடைந் தேன்தேவி
சரசம் பயிலவே

பருகிடும் விழிதனை
பார்த்து நாளாச்சு
நெருங்கிட விலகிடும்
நெடுநாள் கசப்பு
உருகிடும் பேச்சில்
உண்மைகள் விளங்கிடும்
அருகிரு அன்பே
அத்தனையும் மறைந்திடும்

திங்கள், பிப்ரவரி 13

தீட்டு





பழனியாண்டவா
படியேறி உன்
பாதம் தொட்டால்
பற்றிக் கொள்ளுமா

குறத்தி வள்ளியை
துரத்தி விளையாடியவனே
பிறழ் சாட்சியாய்
பிராணனை வாங்குவதேன்

தேனும் திணைமாவும்
திகட்டியதா?
நானும் அவனும்
நாயும் பேயுமானோமா

அர்த்த மண்டபம் வரை
அடியேன் நடை பயில
அள்ளி அணைக்காது
ஆகமமெனத் தள்ளி வைத்தாயே

ஆகமம் என்ற அட்டவணை
ஆருக்காக எழுதினாய்
பாகம் போட்டு
பத்திரம் எழுதிக் கொடுத்தாயா

தீட்டு விதிகள்
தீயதாய் உள்ளதென்று
தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்
தீவிர பக்தர்கள் நாங்கள்

அனைத்தும் அறிந்தவன்
உலகை இரட்சிபவன்
ஓரவஞ்வனை செய்கிறான்
சனாதனமென்று ஏமாற்றுகிறான்

முருகென்றால் அழகாம்
உருகி உனைத் தொழுதவனை
அருகில் வாராதே என்பது
முருகா…… உனக்கழகா?

தமிழோடு இணைந்தவனே
அமிழ்தை குருக்களுக்கும்
உமியை எங்களுக்கு அளிக்கவா
சாமி ஆனாய்

யாகம் வளர்க்க
யான் நுழைந்த தீட்டு
யுகத்தில் தீருமென்றால்
யுகயுகமாய் தொடுவேனே

யாக பலன் - உனக்கா
யாசித்து வாழென
வேதம் போதித்ததை
யோசித்து மாற்றியவனுக்கா

சக்தி இழந்தாயோ - நினை
சந்தித்ததால் ….
செத்து வீழ்வாயோ
சந்ததம் உடனிருந்தால்

இழந்த சக்தியை
ஓதும் மந்திரங்கள்
காதும் காதும்
வைத்தாற்போல் மீட்குமெனில்

நானே உச்சாடனம் செய்கிறேன்
நாயகனே வா வா
எங்கும் நிறைந்திருப்பவனே – எனை
ஏமாற்ற மாட்டாயே

தெய்வம் வெளியேறி
தேவதை வீட்டிற்குச் செல்லுமா
தேடிப் பிடிக்க
குருக்களால் மட்டும் முடியுமா?

ஆய்வோம்
ஆநிறையோடு வாழந்த போது
குரும்பாடும் சேவலும்
படைத்ததை மறந்தாயா

வெறியாட்டு நிகழ்வில்
வேலோடு உடனிருந்தவனே
வேசி மகனென வைபவனின்
வேள்வியில் மயங்கினாயோ

ஆசியெல்லாம் வேண்டாம்
அடிபணிந் திருப்பவனுக்கு
தாசி மகனென்றவனை
தரணியில் இல்லாதாக்கு

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...