திங்கள், மே 11

சனகன் மகளாயினும்











எனக்கு மாற்றென
யாரைத் தேடுகிறாய்?
வனப்பு குறைவென்றா
வடிகட்டப் பார்க்கிறாய்?

முன்பின் பழகாமல்
முந்தானையில் முடிச்சிட்டால்,
முதல் நாளே குழப்பங்கள்,
முரண்களின் அணிவகுப்புகள்.

சரியான இணையென
சந்தித்த நொடிகளில்
சாதகமாய் சொல்லுகின்ற
சந்தோஷங்கள் நிலைப்பதல்ல.

னகன் மகளாயினும்
சங்கடங்கள் உண்டு.
வினாக்களுக்கு விடையுண்டு
விவேகத்துடன் தேர்ந்தெடு

உனை இழக்க விரும்பாததால்
உரிமையோடு சொல்கிறேன்
உருவங்கள் மாறினாலும்
உள்ளக்கிடக்கை யாரறிவார்

முற்றிலும் வலியற்று,
முத்தங்களில் மூழ்கி,
மினுமினுக்கும் காதலெல்லாம்
புனைவுகளிலும் கனவுகளிலும்.

ஆகச் சிறந்த இணைகளாய்
திரைப்படங்களில் மட்டுமே
கற்பனைகள் அல்லவே காதல்;
வலிகளோடுதான் ஆரம்பம்.

முற்றும் முழுமையாய்
முகவரி அறிய
விலகிச் செல்லாது
கற்றுக் கொடு

அறிதலும் புரிதலும்
அந்த நொடியில் நிகழாது;
பரிவும் பற்றுமே
பாதை வகுக்கும்.

துள்ளி மகிழ்ந்திட
துணையிடம் பட்டியலிடு;
அள்ளிக் கொடுத்திட
ஆவணச் செய்கிறேன்.

எது உனை மகிழ்விக்கும்
என அறியா மடந்தையிடம்
எண்ணங்களை சொல்லிடு;
ஏற்றப்படி மாறிக் கொள்கிறேன்

அனைத்தையும் சொல்லாதே — நின்
அகம் மகிழும் விருப்பங்கள்
அறிந்துகொள்ள விழைகிறேன்;
அதற்கேற்றாற்போல் மாறிக்கொள்ள.

பேரிடிகள் வந்தாலும்
பின் நிற்பது நானென
பெரு நம்பிக்கை கொள்;
பேதலித்து விடாதே.

கடந்து செல்லாதே;
கடமையில் குறையிருப்பின்
கட்டியணைத்து பேசு—
கரையேறிட வழியுண்டு.

நான் கவனிக்காததை
நச்சென சுட்டிக்காட்டு- நின்
கணிப்புகள் மாறாது
கடைப்பிடித்து காட்டுகிறேன்.

பற்றாக்குறை காலத்தில்
பதுக்கி விற்பதல்ல;
பருவங்கள் மாறினாலும்
பாசங்கள் மாற்றமில்லாதது.

அத்தகைய காதலை
அருகிருந்து கட்டமைக்க
அன்னியோன்யம் பிறக்கும்;
அகவிருள் விலகும்.

உண்மையான காதல்
ஒன்றிணைந்து வளரும்;
ஒவ்வொருவரின் நிறைகுறைகளை
நிதர்சனமென ஏற்கும்.

அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

சனகன் மகளாயினும்

எனக்கு மாற்றென யாரைத் தேடுகிறாய் ? வனப்பு குறைவென்றா வடிகட்டப் பார்க்கிறாய் ? முன்பின் பழகாமல் முந்தானையில் முடிச்சிட்டால் , முதல் நா...