சனி, மே 9

மறவா



மறவேன் மறவேன் என்றுரைத்தே
    மறந்தீரோ மறவர் குலமகனே
மறவா நானும் வாடுகிறேன்
    மதிமுகிலும் உனைத் தேடுகிறேன்
உறவாய் வருவாய் என்றே
    உள்ளத்திற்கு நாளும் சொல்கிறேன்
பறவை   உறவை  கண்டதும்
    பசலை நோயால் வாடுகிறேன்

மாலையில் மன்னா உனக்காக
    மருளமருள விழித்து நின்றபோது
வேளையில் வாராது என்னை
    வேதனை செய்ததை நினைக்கிறேன்
சோலையில் நீயும் நானும்
    சோடியாய் திரிந்ததை எண்ணுகிறேன்
பாலையில் வாடும் எனக்கு
    பன்னீர்  அதுதான் தெளிக்குதய்யா

கணையை தொடுத்து வீழ்த்திய
    கண்ணா உனைநான் தேடுகிறேன்
அணைத்து கண்ட இன்பத்தை
    அன்றே நீயும் மறந்தாயோ
சுனையில் இறங்கி நின்றாலும்
    சுடுதே  தேகம் தனலாக
மனையாள் நீயே என்றுரைத்த
   மன்னா மறையாது வருவீரோ





கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...