திங்கள், மே 23

நூறு ரூபாய்



மூன்று, பனிரெண்டு
முப்பது ரூபாய்க்கு
சந்தையில் கிடைக்கும்
சக்திக்கு ஏற்ப

லண்டன் பணம்
நாலு ரூபாய்க்கு கிடைக்கும்
லட்சாதிபதி பணம்
நாள் வட்டிக்கு கிடைக்கும்

அம்பானிக்கு ஆறு ரூபா
"ஐடி" காரனுக்கு பனிரெண்டு ரூபா
ஐயோ பாவம் பொதுஜனத்துக்கு
18-24 ன்னு ஆளப் பார்த்து விலை

ஓடாய் உழைக்குது பணம்
ஓரிடம் சேருதே தினம்
'உபரி' என்றார் மார்க்ஸ்
'விலை' என்றான் வியாபாரி

புதன், மே 11

போங்காட்டம்




இது
பாசாங்கா
போங்காட்டமா
தோழர்களுக்கே வெளிச்சம்

அவனோ இவனோ
அடிப்பது கொள்ளைதானென
வேட்டையிலிருப்பவனே
வெடி போடுகிறான்

எல்லாம் தெரிந்த
ஏமாளி மக்கள்
ஏதோ கடமையென
எண்ணாது போகின்றனர்

“நூற்றுக்கு நூறு”
கள்ளத்தனமும் சேர்த்து
கணக்கு காண்பிக்க
கட்சிகளுக்கு ஆலோசனை

இது
பெரியாரின் மண்
பார்பனியமே எதிரி
பரவாயில்லை அவர்

பலவீனமாயிருக்கையில் தாக்குவது
அதர்மமென்றார் காந்தி
அவ்வேதத்தை அடியொற்றி
அவரை தாக்குவதில்லை

ஏழெட்டு கூட்டணி
எப்போ மாறுமோ
எல்லாமே லாவணி - அதுவே
ஜனநாயகம் என்பாயோ நீ

புறகணிப்பை
புறந்தள்ளு
போங்காட்மென்று
புதுக்கதை எழுது

தேர்தல் பாதை
டாஸ்மாக் போதை
போங்காட்டமாய் - அது
புறமுதுகிட்ட காதை

புரட்சிக்கு வாய்தாவா
மறுகாலணியாக்கம்
மடை திறக்குமோ
கழகம் தீர்மானிக்கும்

புரட்சி மலருமா
மக்கள் அதிகாரம்
மறுபடியும் சாக்கடைக்குள்ளே – அட

பாசாங்கு அல்ல இது

வியாழன், நவம்பர் 19

தேவதையின் துலாக்கோல்




கருப்பு அங்கிகளின்
கௌரவம் காக்கும்
தேவதையின் துலாக்கோல்
கண்கட்டு வித்தை

விருப்பு வெறுப்பின்றி
விறுவிறுப்பான வியாபாரம்
வியாக்கியானம் தேவையில்லை
அங்கீகரிக்கப்பட்டது

கொள்ளையர்களிடம் மனசாட்சியை
தட்டியெழுப்பும் துலாக்கோல்
இல்லாதவர்களிடம் இரக்கமின்றி
இ.பி.கோவை நீட்டி முழக்கும்

தில்லை நடராசனுக்கு
தீச்சட்டி வாரிசுகள்
தீட்சிதர்கள் மட்டுமேயென – ஆகம
விதியெழுதும் துலாக்கோல்

பளுவிற்கேற்ப
பணம் நிரப்ப
துல்லியமாய் நிற்கும்
துலாக்கோல் – கண்கட்டு வித்தையல்ல

பணம் குறைந்தால்
இ.பி.கோவை ஏற்றி
சட்டம் கடமையை
செய்ததாய் சப்பைகட்டும்

கௌரவ கொலைகள்
காணாத மலைகள்
தாதுமணல் குழிகள்
தப்பிக்கும்வழி – துலாக்கோல்

மாட்சிமை தங்கியவர்கள்
மரபுகளுக்குள் ஒளிந்தனர்
மாண்புகளை காக்கவேண்டுமென
வேதம் ஓதுகின்றனர்

தட்டில் நிறுத்தப்படுவது
குற்றமா? நீதியா?
பணமா? பதவியா?
நேர்மையா? குறியீடா?

சட்டமியற்றுபவன்
சட்டம் படித்தவனா
சமூக அக்கறையாளனா? – அட
ஓட்டுப் பொறுக்குபவன்

ஓட்டுப் பொறுக்கிகளின்
ஓட்டை உடைசலுக்கு
பேரிச்சம் பழமளிப்பது
துலாக்கோலின் வேலை

துல்லியமில்லா துலாக்கோலென
தூக்கியெறிய - பாராளுமன்றத்தில்
மூன்றில் இரண்டு
முணுமுணுக்க வேண்டும்

ஊழல் மேடையை
உடைக்கா சுத்தியலை
அடை காப்பதால்
எடையில் மாற்றமில்லை

குடி ஆட்சியில்
நீதி அரசர்கள்
குறுநில மன்னர்கள்
கப்பம் கட்டுகிறார்கள்

பிஆர்பி, வைகுந்தராஜன்
அம்பானி, வேதாந்தா அகர்வால்
டாட்டா பிர்லா இன்னும் பிற
கல்வி வள்ளல்கள்

சதவிகிதங்களில் பேரமென்பதால்
சதவிகிதங்களில் ஆமோதிப்பு – ஆம்
25 சதவிகிதம் ஊழல்
துலாக்கோல் ஒப்புதல்

விசாரணை – விலையென்ன?...
கேள்விதானே? – விலையா?..
கைது!!!! உடன்படுகிறாயா – இது
கட்டை துலாக்கோல்

கேள்விகள் கேட்கப்படும்
ஆம் இல்லையென்றே
அரற்ற வேண்டும் – இல்லையெனில்
புழலுக்கு செல்ல வேண்டும்

எதிர்கேள்வி துலாக்கோலை
எதிர்பதாகும்  - துல்லியமானதை
தென்றலும் தீண்டலாகாது – ஏனெனில்
புயலை உருவாக்கலாகாது

ஒய்யாரக் கொண்டையில்
ஊழலை மறைக்க
ஊரெல்லாம் நாறுதே
“உத்தமன்” வில்லனானே

மூப்பெய்தியது துலாக்கோலென
மரியதையாய் அனுப்புவோமா?
முச்சந்தியில் நிறுத்தி
முத்தான தீர்பளிப்போமா



வியாழன், ஜூன் 18

முத்தம்











அன்பு கொண்டதாலா
ஆசை மூண்டதாலா
ஆர்வம் வந்தததாலா
அவளிட்ட முத்தம்

சத்த மிட்டா
சட்டென்று தொட்டா
சாறு பிழிந்தா
சத்தான முத்தம்

கன்னத்தில் ஒத்தடமா
கனியுதடு பத்திரமா
காதல் வேகத்தில்
கண்டபடி முத்தமா

தேகத் தீண்டலில்
மோகம் தீருமா
முத்தக் கொள்முதலில்
மூச்சடக்க முடியுமா

தொட்டுக் கொள்ளவா
தொடர்பு நீளவா
தட்டு தடுமாறவா
தருகின்ற எண்ணிக்கையில்

ஞாபக முத்தங்கள்
நாயகன் நாயகிக்கிட்டதா
மோக தாகத்தில்
மொத்தமும் மறந்ததா

மறக்காத முத்தம்
திறக்காத புத்தகம்
சுரக்காத அன்பு
சுகம்தாரா முத்தம்

அன்பை  சொல்லவே
அகம் மகிழவே
ஆயுள் நீளவே
அந்த முத்தங்கள்

வையகத்தில் உள்ளவரை
வாழ்வின் சுவையை
வகைவகையாய் வழங்குங்கள்
வற்றாத முத்தங்களாய்


செவ்வாய், ஏப்ரல் 28

கருப்பு சிவப்பு


கருப்புதான் எனக்கு பிடிச்ச "கலரு"
கானா காண்பவனின் போதை பாடலு
இருப்பு இந்தியாவா அமெரிக்காவா சொல்லு
இனபேதம் இல்லையென வாயை மெல்லு

பள்ளுபறை சக்கிலி பஞ்சாயத்து தலைவனா?!
பாராண்ட பரம்பரை பணிவா இருக்கணுமா?
கருப்பின பெண்மணி நகரசபை தலைவரா?
சிவப்பினம் சேவகம் செய்ய தயாரா!

"டியூஸ் பைர்ட்" கருப்பின பெண்மணி
மிசௌரியின் பர்ம நகர தலைவராகிறார்
அசௌகரியமென பதவியேற்பு  உறுதிமொழி சொல்பவர்
அரசின் பதவியிலிருந்து விலகுகிறார்

ஒருவர் இருவரல்ல அனைத்து சிவப்பினமும்
ஓற்றுமையாய் பதவி விலகி சென்றனர்
திருமண வீட்டில் சீப்பை ஓளித்துவிட்டார்கள்
மணவிழா உண்டா இல்லையா? மக்களே!

இனப் பிரச்சினையோ? சிறுபான்மையின அதிகாரமோ?
"அதற்கும் மேலே" பாதுகாப்பின்மைதான் காரணம்!!!
அரசு செயல்படும் ரகசியம் அறியாதோர்
முரசு கொட்டும் இச்செயலை மூடியே வைப்பர்

மேல்தட்டென்பது -  நிறமா, பணமா, அதிகாரமா
தாழ்த்தப்பட்ட தலைமைக்கு இதுவும் காரணமா
மிசௌரியும் மதுரையும் பாரினில் ஒன்றானதா - ஆம்
அமெரிக்கா வல்லரசு இந்தியாவும் வல்லரசு


வெள்ளி, டிசம்பர் 26

ரஜினி நடிக்கிறாரா?........................................



இன்றைய தினகரன் மற்றும்  டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ரஜினிகாந்தின் மனைவி லதா -  மீடியாஒன் குளோபல் எண்டர்டைன்மெண்ட் லிட் என்னும் நிறுவனத்திற்காக வாங்கிய கடன் ரூ.22,21,85,865 திருப்பிச் செலுத்தவில்லை என அடமான சொத்தான திருமுடிவாக்கத்திலுள்ள 213 செண்ட் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது எக்ஸிம் பேங்க் ஆப் இந்தியா.

அடுத்தவர்கள் பணத்தில் நடிப்பதுதான் அவர் வேலை.  ஆனால் தன் மகளுக்காக ஒரு படம் எடுத்து இப்போது கடனில்.  அவரிடம் பணம் இல்லை.  ஏன் கடன் வாங்கி படம் எடுக்கிறார்.

ஒருபடத்தில் நடித்தால் ரூ.60 கோடி என்கிறார்கள். கணக்கில் இல்லாமல் எத்தனை கோடிகள்.

இப்போது லிங்கா திரைப்படம் வெளியிட்ட திரைப்பட அரங்க உரிமையாளர்கள், ரூ.40 கோடி திருப்பி கொடு என்கிறார்கள்.

ஏன்?

ரஜினி விலைபோகாத சராக்காகி விட்டாரா?

யாரும் இல்லாத அளவு 3000 முதல் 5000 பிரிண்டுகள் இவர் படத்திற்கு மட்டும்தானே பிறகு ஏன் இந்த நட்டக் கணக்கு

10 நாட்கள் 2 அல்லது 3 காட்சிகள் ஓடினால் எத்தனை கோடி திரளும்.  சந்தை கணக்கு மாறிவிட்டது.  முன்பு மாதிரி 100 நாட்கள் என்பதெல்லாம் கனவுதான்.  ஆனால் 10 நாட்கள் கூட ஓடாதென்றால்.............

ஏன் ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்கின்றார்கள்.  அப்போதுதான் வெளிநாட்டு உரிமையை விற்க முடியும்.  தமிழகத்தில் இந்தியாவில் வெளியிடுவதற்கு முன் வெளிநாட்டில் விற்கப்பட்டுவிடுகிறது. 

அங்கிருந்தே விடியோ சிடி வெளியாகிவிடுகிறது.  ஆயினும்

தியேட்டருக்கு வரும் கூட்டம். அது அப்படியேதான் உள்ளது. ஆயிரம் இரண்டாயிருந்திற்கு சீட்டு வாங்கும் கூட்டம் அதுவும் அப்படியேதான் உள்ளது.

அப்புறம் என்ன

எக்கனாமி ரொம்ப டவுண்

ஆமா இது மோடி ஆட்சியல்லவா

திங்கள், டிசம்பர் 15

திங்கள், நவம்பர் 24

ஒரு சொல் கூறு


தத்தையே
தனித்திருக்கும் எந்தன்
பிணி நீக்கும் – ஒரு
சொல் கூறு

பஞ்சவர்ண கிளியே
பலசொல் அறிவாய்
பாவையான் மகிழ – ஒரு
சொல் கூறு

அன்னம் இணையோடு
என்ன பெருமிதம் பார்
எனினும் தத்தையே– ஒரு
சொல் கூறு

அலைபேசியோ
தொலைபேசியோ
அடியவள் வேண்டுவது
ஒரு சொல்

“ஸ்கைப்” பில்
“லைப்பை” ஓட்டும்
“வைப்” யான் வேண்டுவது
ஒரு சொல்

ஆற்றங் கரையில்
பெண்மான் துயில – ஆண்
கண்விழித்து காவலிருக்கு
அதனால் யான் வேண்டுவது

“வருவார்” இன்று
அருகிருப்பார் என
உவகை யூட்டும் – ஒரு
சொல் கூறு

வியாழன், அக்டோபர் 23

தருமி: 794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?

தருமி: 794. தமிழ்மணம் மாறுமா ... மாற்றுவோமா?: பல முறை தொடர்ந்து எழுதியும் இது வரை தமிழ்மண பொறுப்பாளர்கள் எந்த வித எதிர்வினையும் செய்யவில்லை. ஒரு அடிப்படை நாகரீகம் கருதியாவது ஏதாவது ஒரு பதிலோ, பதிவோ கொடுத்திருக்கலாம். அந்த அளவு basic courtesy கூட காண்பிக்காமல்  பதிவர்களுக்கு அவர்கள் கொடுக்கும் ‘மரியாதைக்கு’  மிக்க நன்றி. அந்த அளவில் தான் நமது உறவும் இருந்து வந்திருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய

செவ்வாய், அக்டோபர் 21

ஆங்கிலம்












அறிவா அற்புதமா
அறிவியலா அஞ்ஞானமா
புரியாச் சொற்பதமா
புரியயவை சாதகமா
தெரியா மொழிகள்
தேவையா சுமையா
சராசரிக்குச் சரியாகுமா
சாப்பாட்டின் பொருளாகுமா

ஆறாயிரம் மொழியில்
ஆண்ட மொழியானதால்
தராதரம் வந்ததா
தமிழும் தாழ்ந்ததா
திராவிட வேராய்
திகழும் தமிழ்மொழி
பரவட்டும் திக்கெட்டும்
பழகிடுவோம் செம்மொழி

மொழியொரு வழியே
மானுடத் தொடர்புக்கு
மொழியா யாவும்
மூடிவைத்தப் பாலாகும்
இழிவா உயர்வா
இதுவென் மொழியென்றிட
தெளிவாய்ப் பகர்வாய்த்
தேன்தமிழ் நம்மொழியென

சிந்தனை மொழிக்கல்ல
சீர்தூக்கி ஆயும் மனிதனுக்கே
நிந்தனை வழியல்ல
நினது மொழியும் வாழட்டுமே
நந்தனை எரித்து‘
நாயன்மா ராக்க வேண்டாமே
நம்தமிழை வளர்க்க
நாமொன்றும் நாண வேண்டாமே

கண்மூடித் தாய்தமிழில்
கண்டதும் இல்லையெனத் தூற்றாமல்
கண்டுபிடிக் கல்வியறிவில்
காணும் பொருளின் சொற்பொருள்
சென்றுபடி மேலதேயம்
சிறப்பான எதையும் கற்றுவா
கற்கண்டுத் தமிழ்மொழியில்
கற்றதைப் பரப்பு வெற்றிபார்

அம்மொழியில் பேசிடவே
ஆனந்தமா அல்ல பெருமையா
செம்மொழித், தமிழுனுக்கு
சேந்தேள் விஷமா கூறுமைய்யா
பன்மொழிப் புலமை
பண்படுத்த வேண்டுமே உன்னை
என்மொழிப் பெருமை
எவரும் பேசிடப் பெருகுமே

ஆங்கிலமொரு மொழிதான்
அதுபோலவே கிரேக்கமும் சீனமும்
இங்கிதமாய்க் கூறாதே
இகலோகம் சுற்றிட உதவாதென
எங்கெல்லாம் போவாய்
எதற்காய்ப் போவாயென சொல்லிடேன்
அங்கெல்லாம் நீபேசும்
ஆங்கில அழகைப் பார்த்திடுவேன்

புதன், அக்டோபர் 8

ஊடல்





வேல்விழியால் வேதனை
   வேண்டா என்பதா வேலவனை
வீண்பழியால் சோதனை
   விண்ணப்பமே மன்னிப்பாயா காவலனை
இல்வாழ்வில் ஊடலே
   ஏனிந்த தண்டனை ஏந்திழையே
ஏனென்று கேட்டாலே
   என்மனம் ஆறுமே மாறுமே

மெளனமா உனதுமொழி
    மடைதிறந்த மார்கழி சங்கீதமே
பௌதிக பார்வைதானே
   பாவையுனை பற்றிட வைத்தது
கெளதமனா ஆசைதுறந்து
   காசிராமே ஸ்வரம் சென்றிட
ரௌத்திரம் வேண்டாமடி
   ராசியாகி ராஜசுகம் தேடுவோமடி

செவ்வாய், அக்டோபர் 7

இதழின் கேள்வி



பற்றி இழுத்திட
  பாவையிதழ் பணித்திட
கற்றிடக் காமம்
 கலையெனத் தொடர்ந்திட
பெற்றச் சுகமோ
  போதையா மயங்கிட
வற்றா ஆசையோ
   வாழ்வைச் சுகமாக்கிட

முல்லை இதழாள்
  மூச்சடக்க முடியாது
எல்லை இதுவென
  இவனிடம் சொல்லிட
சொல்லை மதித்து
   சும்மா இருந்திட
"கல்லா"  மாமனே
  கருத்தாய் கேட்கிறாள்

திங்கள், அக்டோபர் 6

அச்சம் தவிர்


நாளொருமேனி
பொழுதொரு வண்ணம்
போராட்டம் தொடர

ஏனென்றோ
எதற்கென்றோ – எவரும்
கேட்பாரில்லை

இதுவொரு வழிகாட்டியென
இருக்கும் கட்சிகள்
ஏதும் சொல்லையோ

எரியும் கொள்ளியில்
நல்ல கொள்ளி தேடும்
ஏமாந்த மக்களே

தனியார்மயம்
தாராளமயம் – தந்த
அச்சத்தை பாருங்களேன்

தனியார் பேரூந்துகள் ஓடவில்லை
தனியார் பள்ளிகள் இயங்காதாம் – இவை
பயத்தில் நடக்கிறதோ

வணிகர் கடையடைப்பு
வரத்தை எதிர்பார்த்தா
வரும் கும்பலுக்கு பயந்தா

திரையுலக விரதம்
திரண்ட சொத்தை காக்கவா
தனித்து விடப்படும் அச்சத்திற்கா

பத்திரிக்கையாளர் விரதம்
கொடுக்கும் விளம்பரத்திற்கா
கோபக்கணையில் தப்புவதற்கா

காவேரி தாயை
கர்நாடகத்தில் சிறைவைத்தது
காலத்தின் கோலமா?

கோடநாடே
கர்நாடக சிறையென
நீதி சொல்ல

பிரதிவாதியோ
நீதிக்கு தண்டணையா
நீயெனக்கு சரிசமமா என்கிறான்

உண்ணாவிரத போராட்டம்,
மனித சங்கிலி போராட்டம்,
ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை

வேள்வி யாகம் நடத்துதல்,
பால்குடம் எடுத்து வழிபடுதல்,
அங்கபிரதட்சனம் செய்தல்

மொட்டையடித்தும்
முட்டி போட்டும்
கோயில்களில் நேர்த்தி கடன்கள்

உச்சநீதிமன்றமே
உத்தமியை விடுதலை செய்யென
உதார்கள் (பேனர்கள்)

இத்தனையும் எதற்கு
இன்னும் கொள்ளையடிக்கவா
ஏமாந்தவன் தமிழனென்று சொல்லவா

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல் என்றவன்
ரௌத்திரமும் பழகு என்றிருக்கிறான்

திங்கள், செப்டம்பர் 15

சிவன் சொத்து குலநாசம்



நூற்றிருபந்தைந்து பேருக்கு
இட்ட சாபம்
குலநாசம்

செந்தில் வேலவன் பெயரில்
செய்திதாளில் விளம்பரம்
சிவனின் மைந்தனாயிருக்கலாம்

அக்னி செரூபமான
அண்ணாமலையாரை
அவர்கள் ஏமாற்றினார்களாம்

பிள்ளையின் தலையை கொய்தவன்
பக்த பிள்ளைகள் – உங்களை
மொய் எழுத சொல்கிறான்

தாயும் சேயுமானாலும்
வாயும் வயிறும் வேறுதானே – அதனால்
வாய்தா கொடுத்திருக்கிறான்

ஆறுகால உணவின்றி
அவனை வாடவிட்டால்
ஆறு’கால’ செய்திவரும்

மெய்யான உலகில்
மெய்யான உங்களை
மொய் எழுதி வாழச் சொல்கிறான்

பிட்டுக்கு மண் சுமந்தவனை
பிள்ளைகள் ஏமாற்றலாமோ?
பிடி சாபமென்கிறான்

சாபத்திற்கு
சன்மானம் அளித்தால்
சாப விமோசனம்

எட்டாயிரத்திற்கும்
இரண்டு கோடிக்கும்
சமத்துவமாய் சாபம்

முக்கண் நாயகனே
உமக்கு பட்டா அளித்த
வட்டாச்சியர் யார்?

உமக்கு முன்
உரிமை கொண்டாடிய
பட்டாதாரர் யார்?

ஆதியும் அந்தமுமில்லா
ஆறுமுகனின் தகப்பனே – உரூரின்
ஆதிதான் யாதோ?

பட்டா மாற்ற – நான்
பட்டபாடு – நீயும்
பட்டாயோ?

காஞ்சி காமாட்சி
மதுரை மீனாட்சி
மயிலை கபாலியோடு

மூவடியில் உலகலந்தவனுக்கும்
பூவுலகில் நிலமெதற்கு
கோடிகளில் புரள்வதற்கா?

ஆண்டையா? ஆண்டவனா? – அல்ல
அடுத்தவன் உழைப்பில் வாழும்
தஞ்சாவூர் மிராசா?

ருத்ரபூமி பொறம்போக்கு
மாத்திரமே – உனது
சொத்தென் றிருந்தேன்

சுடலையை விட்டு
சுற்றி சுற்றி – வளைத்த
சொத்தின் விபரம் இதுதானோ

தலையாறு கொண்டவனுக்கும்
தலையை கொய்தவனுக்கும்
எல்லையில்லா சொத்திருப்பதால்

அவ்வை பள்ளி – உன்
பிள்ளைக்கு பிடிக்குமென
நடத்துகிறோம்

அதற்கு கோடிகளில்
பங்கு கேட்பதா?
சங்கரனே உமது குலமென்ன?





செவ்வாய், ஆகஸ்ட் 12

ஒரு வாரக் கொண்டாட்டம்



இறந்தவனுக்கு திவசம்
இரத்த சம்பந்தக்காரன்
ஒருநாள் செய்வான்

முடியாட்சி மன்னனெனில்
குடிமக்கள் அனைவரும்
கூடி அழுவர்

இன்றுதான் இறந்தான்
என்றிருந்தாலோ
ஏழுநாள் துஷ்டிக்கலாம்

பாட்டன் காலத்தில்
பாடையில் சென்றவனை - இன்று
சுடலையில் தூக்கி நிறுத்தலாமா

கருவறை தன்னில்
கல்லறை ஆனதை
கடபாரையால் எழுப்பலாமா

மறைந்திருந்து கொன்றான்
மாரீச மாயமான் என்றறியா
அயோதிராமன் – வாலியை

சுற்றறிக்கை அனுப்பியே
சுத்திரனையும் சமமாக்கி
சமஸ்கிருதம் படியென்கிறான்

திரேதா யுகமோ
கலியுகமோ – சமஸ்கிருதம்
உனக்கு புரியுமோ?!

நந்தனுக்கு திறக்கா வாயிலும்
தமிழுக்கு கிடைக்கா சிற்றம்பலமும்
ஒருவாரத்தில் கிடைக்க வைப்போமோ?

மூத்த தமிழ் காத்திடவே
மூக்கறுப்போம்
ஸ்ரீதேவி ஆனாலும்




புதன், ஆகஸ்ட் 6

“மிஸ்டு கால்”


நீயோ நானோ
நினைவுகளில் வாழ்பவர்கள் – ஆம்
நினைக்காத நாளில்லை

மறவா
மறந்தாய் – எனவெழுதும்
மடலல்ல இது

உறவா
உருகிடுவேன்
உனதருகாமையில்

சிறகோ – இச்
சிறியவளுக்கில்லை
சிந்தனை மட்டுமே

நாளும்
அழைப்பாய் – பல
கதை கதைப்பாய்

அழைக்க மறந்தாயென
அறிவிப்பில்லை – இதுவென்
அகமகிழ்ச்சிக்கொரு கோரிக்கை

உழைப்பின் வேகத்தில்
உன்னையே மறப்பவன் நீ
ஒருநொடி எனை நினைத்திட

கைப்பேசியில்
எனக்கான அழைப்பை
தவற விடு

வாய்பேசிட நினைத்ததை
கைபேசியின் பாடல்
காற்றாய் ஒலித்திடும்

காலமும் கனவும்
கரைந்திடும்
உன் நினைவில்




ஞாயிறு, ஜூன் 22

திருமணமாம் திருமணமாம்



கந்தர்வ மணத்தில்
கவர்ந்த இணையின் – கை 
கோர்த்துக் கொள்ளுதல்

பொன்னும் பொருளும்
புகையும் மந்திரமும்
கன்னிகா தானத்தில்

எண்ணும் எழுத்தும்
கண்ணே நீதானென – உறுதி
ஏற்பதொரு சீர்திருத்ததில்

ஊட்டி வளர்த்தவள்
உறுதிமொழி கூறிட – மன்றல்
நடப்பதொரு சமூகத்தில்

மாலை மட்டுமே மாற்றி
தாலியை மறுத்து
இணைவது தன்மானத்தில்

நட்பில் நால்வர்
நல்லதொரு சாட்சியாக – இணைவது
பதிவு மணத்தில்

தேகமிணைய - நேரம்
தோஷமில்லையென
இணைந்தது ராகுகாலத்தில்

இணையாய் சேர்ந்திருப்போம்
இனிதாய் இருக்கும்வரை
இன்றைய தினத்தில்
  
கூட்டத்திற்கு ஒருவழியென
கூறிடுவர் பலவழி – ஆயினும்
கூடுதலே குறி என்பதனால்

வைதிக வழியென்றும்
வழிவழியான தொன்மையென்றும்
பழமையை தொடராது

எளிய நிகழ்வாய்
எவர் காலிலும் வீழாது
எதிர்காலம் தொடங்கு

தந்தை மடியிலமர்ந்து
தாரை வார்த்து
தந்த கன்னியனாலும்

மணமக்கள் சந்திக்காமல்
நிக்காஹ் நிறைந்ததாய்
ஜமாத் அறிவித்தாலும்

மோதிரம் மாற்றி
முத்தமிட்டு வாழ்வை
வித்திட்டுக் கொண்டாலும்

அருமைக்காரர்
அந்தணன், சாத்தாணி
வள்ளுவன், சைவக் குருக்கள்

நாவிதர், அம்பட்டர்
நாட்டாண்மைகாரர்
நடத்தி வைத்தாலும்

இருவர் இணையும்
இல்லற விழாவன்று – இணைவை
இவ்வுல மேற்கும் விழா

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...